Saturday, 27 June 2009

இரவு முத்தம்...

அவ்வளவு நிசப்தத்துடன்
நிகழ்த்தப்பட்ட முத்தத்தில்
இரவு மூர்ச்சையிழந்து
இருந்தது...

மீண்டும் நிகழ்ந்த
முத்தத்தின்
சிறு சத்தத்தில்
விழித்துக் கொண்டது இரவு..
.

காலியான இருக்கை...

ஞாயிற்றுக் கிழமையில்
நிரம்பியிருக்கும்
காலியான இருக்கைகளுடனான
பயணம் இதமானது..

எல்லா சன்னலோர
இருக்கையின் வழியேயும்
நானே தெரிகிறேன்..

வழித்தடங்களெங்கும்
விடுமுறையின் பிரதிபலிப்பு..
சிறுவர்களுக்கு விளையாட்டுகளாகவும்
பெரியவர்களுக்கு பேச்சாகவும்
பெண்களுக்கு எவ்வித மாற்றமின்றியும் ..

பண்பலை வரிசை
விரல்நுனியில் மாறிக்கொண்டிருக்க
என் காதுக்குள்
காற்று ஏதோ சொல்ல முயன்று
தோற்று கொண்டிருந்தது..

பேருந்து...

*உப்புப் பெறாத சண்டைக்கு
அதிகாலையில்
கோபித்து
காலியான
பேருந்தில் ஏறினேன்...

கண்கள் ஊறியது
அவன் தேடி வருவானென..?
நேரம் கரைந்தது..
பேருந்தின் சக்கரங்கள்
சுழன்றதில்
என் காதல் நசுங்கி உப்பியது.
.

என் உயிரின் பார்வைக்கு..

நலமாகத்தானிருந்தேன்..
உன்னை சந்திக்காத வரையில்..
பறந்து திரிந்து தானிருந்தேன்..
உன்னிடம் பழகாத வரையில்..
எதிர்பார்ப்புகள் ஏதுமற்று இருந்தேன் ..
உன்னை எதிர்கொள்ளாத வரையில்..

சிறகுகளை சுருக்கியதில்லை..
உன் நிழலை பார்த்திராத வரையில் ..
சிந்தனைகள் செரித்தபடிதானிருந்தன..
உன் அறிவை உண்ணாத வரையில்..
நினைவுகள் சலனமற்று இருந்தேன்....
உன்னை தரிசிக்காத வரையில்..

என் பூமியில் மழையும் வெயிலும்
மாறி மாறித்தான் தழுவியது..
உன் சுற்றுவட்டப் பாதையில் நுழையாத வரையில்..
என் கதிர்கள் ஒளி பாய்ச்சியபடி தானிருந்தன..
உன் எண்ணங்கள் குறுக்கிடாத வரை..
என் இரவுகள் விடியலை நாடித்தான் இருந்தன..
உனது இமைகளுக்குள் உட்புகாத வரையில்..

எனதிரப்பைக்கு பசித்து தானிருந்தது..
உன் இதய நிழலில் இளைப்பாராத வரையில் ..
எனது பார்வைக்கு தடை இருந்ததில்லை..
உன் காட்சி கடந்து போகாத வரையில்..
எனது விரல்களுக்கு வலி தெரிந்ததில்லை..
உனது கைகளுக்குள் சிறைப்படாத வரையில்..

எனது நுரையீரலில் சுவாசம் தடைபட்டதில்லை..
உன்னிலிருந்து கசியும் மதுவின் வாசம்
நாசி துளைக்காத வரையில்..
என் கனவுகள் தேங்கி நின்றதில்லை
உன் வார்த்தைகளில் உறையாத வரையில்..
என் உயிர் சொட்டு சொட்டாய் உதிர்ந்ததில்லை..
உன் நிஜம் கண்டு திடுக்கிடாத வரையில்..

நானெப்போதும் என்னை நொந்ததில்லை..
உன் அன்பின் வெப்பம் சுடாத வரையில்..
நானெப்போதும் சோர்ந்ததில்லை..
உனது பதிலின் பதிவை பெறாத வரையில்..
நானெப்போதும் அழுததில்லை..
உனது ஆளுமையினில் அடிமையாகாத வரையில்..



ஆலமரம்..

இப்படியெல்லாம்
நடக்குமென்று தெரியாது..

அந்த
ஆலமரம் சரிந்த பின்னே
அதனின் நிழலில் இளைப்பாறிய
அந்த நான்கு பறவைகளும்
திசைமாறி போகுமென்று..

அவை முன்னர்
உணர்ந்ததுமில்லை..
ஆலமரத்தினால்
தான்
வேர்கொண்டுள்ளோமென..

இப்போது வருந்துகின்றன..
வேரினை இழந்த பின் ..
விதை தேடி..

என்னால் முடியாது..

எப்போதும் என்னால் முடியாது..
ஒரு துரோகத்திலிருந்து
நம்பிக்கையை பெற..
ஒரு ஏமாற்றத்திலிருந்து
எதிர்பார்ப்பை பெற..
எப்போதும் என்னால் முடியாது..

ஆனபோதிலும்
நம்பிக்கையின் பின்னே
ஒளிந்திருக்கும் துரோகத்தையும் ..
எதிர்பார்ப்பின் பின்னே
ஒளிந்திருக்கும் ஏமாற்றத்தையும்
என்னாலறிய முடிகிறது ..
அதை சூடி வரும்
நிஜங்களின் நிழல் பார்த்தே..

சொந்தமாக முடியாத உறவுதான் அது..

அந்த பறவைக்கும்
எனக்குமிருக்கும் புரிதலை
யாரால் புரிய முடியும்?

தன்னுணவினை
பகிரவும்
தன்னுணர்வினை
வெளிப்படுத்தவும்
யாரிடமிருந்து கற்றுக் கொண்டது?
மனிதனைப் போன்றவனிடம்
நிச்சயமாய் இருக்காது..

வெளிசெல்லுகையில்
நிழலாகவும்
உறங்கச் செல்கையில்
கட்டிலின் கீழாகவும்
எப்போதும் என்னை
வட்டமிடும் அந்த பறவை
சொந்தமாக முடியாத
உறவுதான்...

வைகை நதி..

கடல் போய்
சேர்வதற்குள்ளே
வற்றிவிடுகிற அல்லது
பயன்பட்டு விடுகிற
வைகையின்
கரையிலிருந்து
வந்தவள் நான்..

கனவுகளை
செயல்படுத்துகையில்
எதிர்ப்படுகிற
தடைகளால்
எண்ணங்களை வற்றிப்போகவோ
திரும்பப் பெறவோ
ஒருபோதும் சம்மதமில்லை..
அது சாத்தியமுமில்லை...

தான் உருவான இடத்திலேயே
கலக்கும் நதியாயின்றி
இந்த நதி
புது கடலையே உருவாக்கும்..
இன்னும் பிற நதிகளோடு..

காதலின் அடியில்..

யாவற்றிலிருந்தும்
மீட்டெடுக்க
வல்லமையுள்ள
உன்னால்தான்
இப்போது வீழ்ந்து கிடக்கிறேன்
யாதொன்றாலும்
மீட்டெடுக்க இயலாத
காதலின் அடியில்...

Saturday, 13 June 2009

ஒரு கொலைக்கான ஐந்து காரணங்கள்...

பாரதியின் அடுத்த கதை விரைவில்...........

Wednesday, 15 April 2009

பரமபதம்

ஏணியின் உச்சியை
தொடும் வேளையில்
பாம்பொன்று கொத்தி
சடாரென விழுகிறேன்..

நட்பென்னும்
பரமபதத்தில்
வீழ்வதும் எழுவதும்
உருட்டப்படும் கட்டைகளின்
தாயத்தை பொறுத்தமையும்..

தயங்களும் காயங்களும்
எப்போது விழுமென்று
யாராலும் யூகிக்க
முடிவதில்லை..

வெற்றி பெறவோ
தோல்வியுறவோ
தயாரான நிலையில்
பூச்சியத்திலிருந்து
ஆட்டத்தை துவங்குகிறேன்
மீண்டும்...

Friday, 3 April 2009

காதலின் தடயங்கள்...

உனது காதலின்
எல்லைகள் விரிவடைந்தபடி...

எனது காதலோ
எல்லைக்குள்ளே...

உலகின்
ஒவ்வொரு மூலையிலிருந்தும்
தொடங்கிய உன்
காதல் பயணம்
கரைசேரும் நேரமென்றாய்..

முந்தைய உனது
காதலின் எச்சங்கள்
எனது காதலை
தின்று தீர்க்கிறது...

அறிதலுக்காய்
திறந்திருக்குமென்
ஜனக்குழி
ஒருபோதும் மூடியதில்லை..
உன் வருகை யறிந்து...

நீ
விழுந்தெழுந்த
குழிகள் பற்றி
கவலை இல்லை எனக்கு..
என்னிலும் அதற்கான
தடயங்கள் உண்டு என்பதாலே..

Wednesday, 25 March 2009

சாம்பல் துகள்கள்..

சிறிது உலர்ந்த முத்தங்கள்
காய்ந்த கண்ணீர் சுவடுகள்
அப்போதுதான்
முளைவிட்ட காயங்கள்...
இவற்றோடு
உடைத்து போன
சில காதல் துண்டுகளையும்..
சேகரித்து வெளியேறுகிறேன்...

என் சுவடுகளெங்கும்
உன் பிம்பங்களே தெரிய
சேகரித்த யாவற்றையும்
எரிக்கிறேன் அந்நிலவொளியில்..
பேருந்து நிலையத்தின் பலத்த
சத்தங்களுக்கிடையில்..

சாம்பல் துகள்கள் மிஞ்சுமென
பார்த்திருக்க
வெந்தும்
வேகாததுமான
கட்டையாக
கிடக்கின்றன அவைகள்..

அங்கிருப்பவர்களின்
அதட்டலுக்கும்
அன்னியப் பார்வைக்கும்
கரையொதுங்கி
பாதி கரியான
கட்டையோடு தொடர்ந்து
சுழல்கிறது என் காலச்சக்கரம்,...

நிர்வாணம்...

நிர்வாணம்
நிர்பந்தங்களால்
வேறு வேறாய் அறியப்படுகிறது...

குழந்தையின் நிர்வாணம்
குற்றமானதல்ல..
பெண்ணின் நிர்வாணம்
குற்றமற்றதல்ல...


பிற பெண்களின்
நிர்வாணத்தை ரசிப்பவன்
இழிவுபடுத்துகிறான்..
தன் தாயையும்..
மனைவியையும்..


தன் தவறை
ஒத்துக் கொள்பவர்களைவிட
நியாயம் கற்பிப்பவர்கள்
பெருகிவிட்ட
தேயிலை பூமியில்

தேகங்கள்
சிதைக்கப்படுவதற்கும்
கொடூர புணர்வுக்குமே ..


என் சகோதரிகளின்
யோனிகளில்
கொட்டப்படும்
ரத்தங்கள் கறையானவை...

துளிர்க்கும்
கருக்கள்
சிங்கமென்று கொக்கரிப்பவனே...
கேள்...
ஒருபாதி சிங்கமெனில்
மறுபாதி...


காத்திரு
அந்த உறுமல் சத்தத்தினூடே..
அது புலிக்கு சொந்தமானது ....



அனுபவங்கள்..........

புறப்பட்ட இடத்திற்கே
திரும்புகிறேன்...

குறுகிய கால
அனுபவமெனினும்
அதுபோதும்
வாழ்நாள்முழுமைக்கும்..

கசப்பானவையோ
இனிப்பானவையோ
அவை அனுபவங்கள்தான்..

உணர்வுகளையும்
உரிமைகளையும்
அடகு வைக்க நேருகிறது.
மீட்டெடுக்க முடியாத
நேரத்தில்....

இழப்புகளோடு
புறப்பட்ட இடத்திற்கே
திரும்புகிறேன்...

புதிய வலிகளை
ஏற்றுக்கொள்வதிலும்
பழைய வலிகளோடு
ஒத்துப் போய் விடலாம்.. என
திரும்புகிறேன்
புறப்பட்ட இடத்திற்கே...

Tuesday, 24 March 2009

இசைக்கும் வீணை..

இசைப்பதை நிறுத்திய கலைஞனும்
இசைக்க மறுக்கிற வீணையும்..
இயற்கையின் நிழலில் ...

மீட்டப்படாத வீணையில்
சில நரம்புகளை
ஒழுங்கு படுத்துகிறான் ..

வீணை
அபரிமிதமான இசையை
வெளிப்படுத்தி
கலைஞனுக்குள்ளிருந்த இன்னொரு
பரிமாணத்தை
அறிமுகப்படுத்த ..

அவ்விசையில் மருகும்
அவன்
மீண்டும் மீண்டும் வாசிக்கிறான்..
ஒரே ராகத்தை..
வீணை ஒவ்வொருமுறையும்
புதிய பாவத்தை..

இருள் விலகிய பின்னும்
இசைத்தபடி அவன்..
இசைந்தபடி வீணை...

யாதுமானவனே..

யாதுமானவனே
யாதுமானவலாய்
இசைகிறேன்
மீட்டெடு ....
கடந்தகாலத்தின்
துயரச் சுவடுகளிளிருந்தும்
நிகழ் காலத்தின் தத்தளிப்புகளிலிருந்தும்..

எதிர்காலத்தின்
வெற்றிப் பதிவிற்காக...

விடிவதற்கான சாத்தியங்கள்...

இருக்கை தேடியலைந்த
களைப்பில்
சோர்வுறுகிறது..
கனவுகளின் எதிர்பார்ப்பு..

சுமைகளையும்
சுகங்களையும்
ஒருசேர தைத்து
பயணப்படும் மனது..

உறங்குவதற்கு சாத்தியமற்ற
இப்பொழுதுகள்
தூவியபடி இருக்கிறது..
உறக்கத்தின் விதைகளை..

ரயிலின் கடைசிப் பெட்டிடில்
ஜன்னலோர ஒற்றை இருக்கையில்
எதிரெதிர் துருவங்களில்
புன்னகையில் எண்ணங்கள் கோர்த்து
ஒரு பாதையில் நாம்...


விடிவதற்கான சாத்தியங்களோடு
இரவு கரைகிறது...
தண்டவாள ஓசைகளிலும்
பயணிகளின் பேச்சரவங்களிலும்...

எதையும் உள்வாங்காமல்
எதிரிருக்கும் நீ மட்டுமே
நிறைந்திருக்கிறாய்..
என் சுவாசமெங்கும்....

கனவுகள் மெய்ப்பட..

சூரிய ஒலி எட்டிப்பார்க்க
வாய்ப்பில்லா சிற்றறைக்குள்
எனது புதிய வாசம்..

அறையெங்கும் அடுக்கபட்டிருந்தது
உன் ஆளுமை..
தேடல் மட்டுமே இயக்கத்தில்..

உணர்வுகள்
ஓடியாடி விளையாட
செய்வதற்கு ஒன்ற்மற்றவர்களாய்..
உருமாற்றியிருந்தது நிகழ்வுகள்...

இயல்புக்கு மாறான
இமைகளுக்கு நேரான
இதயத்திற்கு கூரான
ஒன்றை கண்டெடுத்தேன்..

நீயறியாது பத்திரப்படுத்தி
வெளியேறுகிறேன்..
நீயுமறிந்த ஒன்றை...

'கனவுகள் மெய்ப்பட'
வாழ்த்துகிற தேவதைகளுக்காக
மட்டுமல்ல...

எந்நொடியும் சிந்தித்தபடியிருக்கிறேன்...
நாமிணைந்து பணியாற்றி..
பரபரப்பாகும் கனவோன்றையும்..
பரவசமாகும் இரவொன்றையும்..

இரவின் கண்ணீர்..

அந்த இரவு
அத்தனை சுலபமானதாய்
இருக்க வில்லை..

அந்த இரவின் கண்ணீர்
அத்தனை கரிப்பாயும்
இருந்ததில்லை...
அதற்கு முன்னதான நாட்களிலும்
இனி வரும் பொழுதுகளிலும் கூட...

எனக்கு முன்
இரண்டே விஷயங்கள்தான்
கையழைத்தது..

ஒன்று வலிகளைச் சுமக்கும்
இதயமும்..
மற்றொன்று வலிகளை
பரப்பும் உறவும்...

இந்த இரண்டு வலிகளும்
இமைகளை தானே திறந்து
வந்தமர்ந்து கொண்டன...


மீள்வதற்கு வழியற்று
மீட்ட ஆரம்பித்தேன்..
வலிகள் சுமைகளாக இல்லை..
சுகங்களாகவும் இல்லை...

வலிகள்
மரத்துப் போயிருந்தன....


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?