Friday, 27 February 2009
மூன்றாவது பக்கம்..
இணக்கமும் பினக்கமுமற்ற உறவு..
சிரிப்பும் அழுகையுமற்ற உணர்வு..
நகர்ந்தும் நகராத காலம்..
புரிந்தும் புரியாத சூழல்..
யாதொன்றுக்கும்
இரண்டு பக்கமென்று யார் சொன்னது?
மூன்றாவது பக்கமொன்றை
முன்னிறுத்துகிறேன்..
என் வாழ்வினூடே...
Saturday, 21 February 2009
காதல் கடிதம்
சொல்வதை செய்..
செய்வதை சொல்..
சொல்லி விட்டு செய்யாதே..
செய்து விட்டு சொல்லாதே..
சொல்வதை செய்யாமல்
சொல்லி சொல்லி கொல்வாய் உனது கடிதத்தில்......
நல்ல வரிகள்தான் இல்லையா?
காதலனும் காதலியும் சேர்ந்து எழுதிய வரிகள் என்று...
சொல்லாமலே புரியும்...
கடிதம் என்பது அருகில் இருக்கும் ஒரு காகித உறவு....
நம்மை நேசிப்பவர் அருகில் இல்லாத நேரத்திலும்...
தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் போதும்..
பிரிந்த நேரத்திலும்..நம்மை ஆற்றுப்படுத்துகிற அற்புதம்...
Friday, 20 February 2009
ஒரு கடிதம் எழுதினேன்..
என்று யார் சொன்னது? கடிதம் உணர்வு சொல்வதை மனசின் உயிர் திரவம் படர்த்தும் விந்தை.
கடிதம் குறுஞ்செய்தி போல உடனே அழித்து விடக் கூடியதல்ல..
மனம் சோர்வுறும் போதெல்லாம் நமக்கு அன்பானவர் எழுதிய கடிதத்தை எடுத்து படிக்கும் தோறும் புத்துணர்வு பிறக்கும்..வார்த்தைகளுக்கு புது விளக்கம் கிடைக்கும்..எந்த வார்த்தை எந்த பொருளில் எப்படி பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று எண்ணி எண்ணி பார்க்கையில் இன்னும் இன்னுமாய் காதலும்...காதலைப் பற்றிய புரிதலும் மேலோங்கும்...
Wednesday, 18 February 2009
வெள்ளை மாளிகை...
சூழப்பட்ட
உயரமான
பளிங்கு அறையினை..
அமைதி
தன் ஆளுகைக்கு
உட்படுத்தியிருந்தது...
சூரிய வெளிச்சம் மட்டுமே
புள்ளியாய் ஊடுருவ
அங்கு அனுமதிக்கப் பட்டிருந்தது...
அந்த ஒற்றை சூரியப்புள்ளி
ஆயுதப் புள்ளியாய்
அடையாளப்பட்டது..
பால்வெளியில்
உலவுவது போலான
உணர்வினையும்...
அண்டத்தில் மிதப்பதான
அதிர்வுகளையும்
தோற்றுவித்தது...
அந்த வெள்ளை மாளிகை..
முட்டைக்குள்
தனித்து மிதக்கும்
மஞ்சள் கருவினைபோல்
மனசுக்குள்
மறைந்து கிடக்கும்
மாசுகளை
தனியே மிதக்க வைக்கும்
அந்த வெள்ளை மாளிகை...
தாமரையின்
வடிவத்தையொத்த
தங்க முலாம் பூசப்பட்ட
வெள்ளை அறையினை
நிறைத்திருக்கிறது...
பேரண்டத்தின் அமைதி...
சற்று முன்...
எடுத்த இம்முடிவு
குறித்து எனக்குள்
எந்த சலனங்களும் இல்லை..
முடியப் போகும்
ஒரு பயணம் குறித்தோ
துவங்க இருக்கும்
புதிய பயணம் குறித்தோ
எவ்வித ஆற்றாமையுமில்லை...
விழப் போகும்
ஒரு மர வேரின் பெருத்த
ஓலமும்...
விதையொன்றின்
முளைவிடுதலில்
துளிர்த்த நிசப்தமும்...
உச்சி வெயிலில்
காலுக்கடியில்
விழும் நிழலை யொத்தது...
நேசத்திற்குரிய காதலனுக்கு...
காதல் என்றாலே காத தூரம் ஓடும் எனக்குள்ளும் காதல் இருக்கிறது என்பதை உணர வைத்தவனே...சிரிப்பாய் இருக்கிறது சில சமயம்.. அழுகையாய் இருக்கிறது சில சமயம்...ஏன் என்றுதானே கேட்க நினைக்கிறாய்..சொல்கிறேன்...
காதல் பற்றி நான் படித்த கவிதைகளும், கதைகளும் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை..ஏனெனில் அந்த சமயங்களில் நான் காதலின் வருகைக்கு வேலியிட்டு இருந்தேன்..இப்போது நான் படிக்கிற கவிதைகளும்,பார்க்கிற உலகப் படங்களும் எனக்குள் உன் நினைவுகளை பாத்தி கட்டி செல்கின்றன..
ஒரு உதாரணம் சொல்கிறேன்..கேளேன்.. " இயற்கை " படத்தில் ஒரு வசனம் உண்டு..ஷேக்ஸ்பியர் சொன்னதாகா..
" காதலுக்கு காரணம் இருக்க முடியாது..
காரணம் இருந்தால் அங்கு காதல் இருக்க முடியாது"
என்ற வசனம் என்னை அடிக்கடி திரும்ப வைக்கும்... அதே போல் அறிவுமதியின் ஒரு கவிதையும்...
"அணு அணுவாய்
சாவதற்கு முடிவெடுத்தபின்
காதல்
சரியான வழிதான்..."
அடிக்கடி கண்ணாடி பார்த்துக் கொள்ளும் ஆர்வத்தைபோல்
அவ்வப்போது இந்த இலக்கியங்கள் உன்னை எனக்குள் விதைத்த படி இருக்கிறது...
"எனக்குள்
இருக்கும்
காதலை
அறுவடை செய்ய முடியாது..
ஆயிரமாயிரம்
ஆண்டுகளான பின்னும் " ...
இந்த வார்த்தை என் காதலின் ஆழத்தை சொல்லும்...நமக்குள் ஏற்பட்ட சந்திப்புகளை அடிக்கடி அழைத்து விசாரித்துப் பார்க்கிறேன்...
அவை உனக்குள் நானும் எனக்குள் நீயும் ஒளிந்து கொண்ட ரகசியங்களை பறைசாற்றி சிரிக்கிறது..புன்னகை புரிந்தவாறே யோசித்து கொண்டிருக்கிறேன்... ரசனையோடு நம் காதலைப் பற்றி....
ஒரு தோழியின் கடிதம்....
தொலைபேசியில் மட்டுமே பேசிப் பழக்கப்பட்டிருக்கும் நாம் முதன்முறையாக உணர்வுகளை எழுத்துக்களாக பிரதிபலிக்கும் கடிதம் வழியாக பேசுகிறோம்...இல்லை நான் பேசுகிறேன்..நீ கேட்கிறாய்..இரண்டு, மூன்று நாட்களாகவே நீ என்னிடம் சரியாக பேசவில்லை என்பது எனக்குத் தெரியும், நீ ஊருக்கு வந்துவிட்டு போனதிலிருந்து உன்மனது சரியில்லை என்று நீ சொன்னவுடன் எனக்கு லேசாக பொறி தட்டியது.சில நினைவுகள் உன்னை அலைக்கழித்திருக்கும் என்பதை நானே புரிந்திருக்கிறேன்..
உனது மனம் மட்டுமல்ல.. எல்லோருடைய மனமும் முதல் காதலை மறந்துவிடாதுதான்..அதிலும் தான் விரும்பிய ஒருத்தி தன் கண்முன்னே கண்டுகொள்ளாமல் செல்லும்போது அந்த வலி எத்தகையது என்பதை எந்நாளும் உணரமுடியும்..உன் தோழியாக அல்ல.. நானும் ஒருவருக்கு மனம் விரும்பிய ஒருத்தியாக இருந்திருக்கிறேன் என்பதாலே..
பதின் பருவம் எல்லோருக்கும் குறிப்பிடத்தக்க ஒன்றுதான்..பள்ளியில் படிப்போருக்கு அது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்...நட்பு, காதல் என்று வாழ்க்கையின் மறுபகுதியை ஒரே சமயத்தில் க(பெ)ற்றுக்கொள்ளும் பருவம்..
அதில் எது நட்பு?எது காதல் என்று புரிந்து கொள்ள முடியாத ,அப்படியே உணர்ந்தாலும் சிலவற்றை ஏற்றுக் கொள்ள இயலாத மனம் ..அது பிசைந்த மாவைப் போல் எதற்கும் இசைந்து கொடுக்கும் வகையில் சூழலின் கைப்பிள்ளையாய் சுழலும் பருவம்... நட்பைக் கூட காதலென்று ஒத்துக் கொள்ளும்.. ஆனால் காதலை ஒருபோது நட்பாக ஒத்துக் கொள்ளாது...
தோழா இந்த நேரத்தில் உனக்கொன்று சொல்கிறேன்.. உனது எல்லா இன்பங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு துன்பம் காலத்தின் முந்தானையை பிடித்துக் கொண்டு தொடரும்...அப்போது மனம் தளராதே..
இப்போது நீ எடுக்க இருக்கும் முடிவுகளே உன்னை எதிர்காலத்தை நோக்கி நகர்த்தும்.. நீ தேடிப் போன காதலை விட உன்னை தேடி வரும் காதல் முக்கியமானது என்பார்கள்.. அதை விட நீயும் தேடி உன்னையும் ஏற்றுக் கொண்ட காதலே உன்னை வாழ வைக்கும்.. ஆதலினால் காதல் செய் சிறுது காலத்திற்குப் பின்..
அதாவது உன் கல்வி முடித்து வேலைக்குப் போன பின்...அதற்குள் காதல் உன்னை தேடி வந்தாலும் உதட்டோரம் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு உன் வேலையில் கவனமாஇரு... இனி வரும் காலம் நலமே அமையட்டும்...
Friday, 13 February 2009
காதலர் தினம்- ஸ்பரிசம்6
காமம் காதலின் எச்சம்..
காதல் இதயத்தின் நான்கு அறைகளையும் ஆக்கிரமித்து ...அதிர்வையும் ..அசைவையும்.. அலையையும்..
ஏற்படுத்தி விடும் என்றால் அது மிகை இல்லை..
இயங்கச் செய்வதும்...இயக்கம் மறுப்பதும் காதலின் வெளிப்பாடு...
புரிதலில் நிலைத்து நிற்கும் காதல் சந்தேக புயலில் சாய்ந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்..
இந்த காதலர் தினத்தில் மட்டுமல்ல.. ஒவ்வொரு நாளும் காதல் ஆராதிக்கப்படும்
நாளாகவே இருந்து விட்டால் எல்லா நாளும் நல்ல நாளே...
காதலர்களுக்கு எனது அன்பும் ..ஸ்பரிசமும்..
காதலர் தினம் - ஸ்பரிசம்5
காதலுக்கு அணை போட முடியாது...ஆனால் காதல் அணை போடும்..
எல்லா காதலும் நம்பிக்கையில்தான் கட்டப்படுகிறது..அல்லது நம்பிக்கையில் கட்டப்படுவதுதான் காதல்..எத்தனை காதலர்கள் காதலுக்கு உண்மையாய் இருக்கிறார்கள்.?.இந்த காலத்தில் அரிதுதான் ...உண்மையாய் இருக்கும் காதலர்கள் காதலுக்கு மரியாதை செய்பவர்கள்.. காதலுக்கு மரியாதை செய்பவர்களை காதலும் மரியாதை செய்யும்..
உணர்வுகள் எல்லாமே வெளிப்படுத்தக்கூடியதுதான்..ஆனால் காதல் உணர்வு மட்டும் கவனமாக கையாளப் பட வேண்டும்.. அது ஒரு கண்ணாடி மாதிரி.. எப்போதும் பிரதிபலிக்கும்.. கூடவே அதை புதுப்பித்துக் கொண்டே இருந்தால் நம்மை அது புதுப்பிக்கும்.. நம்மை எல்லா விதத்திலும் அழகாக்கும் ஆற்றல் காதலுக்கு உண்டு.. உள்ளத்திலும் உடலிலும் உற்சாகமடைய செய்யும் காதல்...
காதல் எனும் வார்த்தையே வசீகரமானது..காதலும் வசீகரமானது..
காதலர் தினம்-ஸ்பரிசம்4
காதல் ஒரு மனிதனை அணுவேனும் முன்னேற்றனுமே ஒழிய
இருக்கும் நிலையிலிருந்து கீழே தள்ளி விடக்ககூடாது..
ஈர்ப்பில் ஆரம்பிப்பதுதான் காதல்.. ஆனால் காதல் ஈர்ப்பாகவே இருக்க சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்..இருவருக்குமிடையே காற்றை தவிர வேறு எதுவும் சுலபமாக நுழைய அனுமதிக்கக் கூடாது..முக்கியமாக மூன்றாம் நபரின் தலையீடு இருக்கவே கூடாது..ஆயிரம் பேர் ஆயிரம் விஷயங்களை சொல்லும் போதும் நம் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்ய துணிவு வேண்டும்...
காதல் போல எளிமையான விஷயம் எதுவும் கிடையாது..
காதல் போல கடினமான விஷயமும் இல்லை..
அதனால் சிந்தித்து செயல் படுங்கள்..செயல்பட்டுவிட்டு சிந்திக்காதீர்கள்...
காதல் எதிர்பார்ப்பில் தொலைகிறது...காதல் சந்தேகத்தில் கலைகிறது..
காதல் புரிதலில் வாழ்கிறது..காதல் புன்னைகையில் பிரசவமாகிறது..
Wednesday, 11 February 2009
கையகப்படுத்திய...காதல்.
சில
ஞாபங்களை
நினைவோடும்
பொருள்களோடும்
கையகப்படுத்திய
வந்துவிட்டேன்.
இதோ
என் முன்
பரப்பி வைக்கப்பட்ட
பொருள்கள்
நிரப்புகிறது
உன் மீதான
நேசத்தை...
*
மூச்சு முட்டுகிறது..
இந்த
ஜன்னலோரக்காற்று
உனதன்பைப்போல்..
*
உன்
விரல்கள்
கரும்பின்
வேராய்
இருந்திருக்குமோ..
முன் ஜென்மத்தில்..
நீ
அனுப்பும் சொற்கள்
இப்படி
தித்திக்கிறதே...
*
உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
கண்டுகொண்ட
நிமிடங்களில்
காதல்
கைதட்டி சிரித்தது..
சிறந்த காதல்
இணையினை
கண்டுவிட்டதாக...
கசியும் காதல்..
உச்சிவெயிலில்
காய்ந்து கொண்டிருக்கும்
கூழாங்கற்கள்
பிரதிபலிக்கிறது..
இனிய தருணங்களின் பதிவை...
அதன் கீழே
வலியோடு
முனகுகிறதென் காதல்...
*
இலைகளற்ற
மரங்கள்தான்
அவை
வேர்களற்றவையல்ல..
இணக்கமற்ற
மனத்தான்
எனக்கு
காதலற்றவையல்ல..
*
என்
கண்ணீரின்
கரிப்பு
உனக்கு
சுவைஎனில்
நதியாய்
பெருகட்டும்..
*
உன்
என்னுள்
வந்து சென்ற
நிமிடங்கள்
இயற்கை
எனக்களித்த
பரிசு
அதை
பதியமிடுகிறேன்...
என் பயணமெங்கும்
அவை பூத்து
மணம்பரப்பும்
நம் காதலை சுமந்து...
காதல் துளிகள்..
உன்
இதழ்களில்
சிறு புன்னகை
தவழ்வதை
ஒளிந்திருந்து பார்க்க
இவளிடம்
அனுமதி
இவனிடம்
வந்திருக்கும்
என் பெயர்
காதல்...
*
உனதன்பின்
துளிகள்
என்னை
மூழ்கடிக்கிறது
காதல் கடலில்..
*
அலையும் மனசு
அடங்கிட
வழி சொல்லு
அலையே...
கலையும் கனவு
நிலைத்திட
வழி சொல்லு
நிலவே..
*
உதட்டின்
ரேகைகள்
அழியும் வரை..
உயிரின்
தேவைகள்
முடியும் வரை
இந்த காதல்
தீரப்போவதில்லை...
Tuesday, 10 February 2009
இயற்க்கைக்கு எழுதும் கவிதை..
இதயத்தோடு
இறுக அனைத்து
வரவேற்ற
காடுகளுக்குச் சொல்ல
நிறையவே இருக்கிறது..
எனக்கும்
இயற்கைக்குமான
காதலை...
வானளாவ
வஞ்சனையின்றி
வளர்ந்திருக்கும் மரங்கள்..
பெயரில்லா
பூக்களை
சுமந்திருக்கும்
கிளைகள்..
இலைகளும் பூக்களுமாய்
உரமாகக் காத்திருக்கும்
அடி மரத்தின் சலசலப்பு...
காடுகள்
காற்றுக்கு மட்டுமே
கதவைத் திறந்து வைத்திருந்தது
காதலுக்கான
அனுமதியோடும்..
வெகுமதியோடும்..
வெற்றுத்தாளாய்
பறக்கும்
காற்றை..
அதன் போக்கிலேயே
சென்று
இயற்கை
எழுதி எழுதி தீர்த்த
கவிதைகள்
பாதை தோறும்
பளிச்சிடுகின்றன..
ஓரிடத்தில்
காற்றின் மேல்
எழுதப்படும் யாவையும்..
நகர்தலின் போது..
மறைந்து
மற்றோரிடத்தில்
புதுப்பிக்கப் படுகிறது
நொடிதோறும்...
வெற்றுத் தாள்களாக
விரையும்
நாம்
இயற்கையிடம்
எதை பதிவு செய்ய
அனுமதிக்கிறோம்..?
காதல் வானிலை..
மறுபாதி நிழலும்
வாய்த்த
மாலைப் பொழுதில்
தாய்ப்பறவையின்
கதகதப்பிற்குள்ளிருக்கும்
சிறுகுஞ்சைப் போலவும்..
சிப்பிக்குள்
முத்தாக இருக்கிற
நீரின் உந்துதலைப் போலவும் ..
கீழிருந்த மேற்பரப்பின்
எல்லைகளைத்
தொட்டுப் போன
உன் பார்வையில்
கசிந்தது..
நிழலும்
வெயிலுமுள்ள
காதலும்
காமமுள்ள..
வெளிச்சப்புள்ளிகள்...
உமிழ் நீர்
ஊற்றி
மூடி வைக்கப்பட்டுள்ள
குப்பிகளை
பத்திரப்படுத்துகிறேன்..
புறச்சூழலில்
அகப்பட்டு
அதன் அகச்சூழல்
கெட்டுவிடாமல்
பாதுகாக்கிறேன்
உனக்கான
அந்த குப்பிகளை...
வெவ்வேறான
மண்ணின் நீரினை
நிரப்பி
குப்பிகளின் அழகையும்
மேன்மையையும்
திறம்படக் கையாளும்
உனக்கு
குப்பிகள் பரிசளிக்கும்
எப்போதும்
உனது வருகைக்கான
வரவேற்பையும்...
புகுவிழாவிற்கான
வாசத்தையும்.. .. ..
Monday, 9 February 2009
காதல் தாவரம்..
பாறை
எந்நேரமும்
நனைந்தபடியே
இருப்பது
உனது
காதல் மழையில்
இதயச் சிறகுகள்
நனைந்த பறவையாய்
என்னை நினைவூட்டுகிறது..
தொடர் ஈரத்தின்
பிரதிபலிப்பில்
பாறை மீது
பூத்திருக்கும்
சிறுதாவரங்கள் ...
உணர்த்துவது
என்னவெனில்
தொடர் காமத்தின்
நிரந்தர எச்சமாய்..
பூத்திருக்கும் காதலை...
அவை
சூரிய ஒளிபட்டும்
அலையடித்தும்
வளரும்
பாசிபடிந்த
சிறுதாவரத்தைப் போல்..
எனக்குள்
எப்போதும்
பூத்திருக்கச் செய்யும்
புரிந்துணர்வின் மீது
கட்டப்பட்டுள்ள
நம் காதல் தாவரத்தை.. .. ..
சுமந்து..
காதலைச்
சுமந்து
நடப்பது
எவ்வளவு பெரிய
சுகமான சுமையாய்
இருக்கிறது...
நத்தையின் நகர்வைப் போல்..
நதியின் நகர்வைப் போல்..
காதலர் தினம்- ஸ்பரிசம்3
காதலிக்கும் முன் யாரும் நம்மைக் கண்டுகொள்ளாத போது வரும்
வெறுப்பு...காதலிக்கும் போது எல்லோரும் நம்மையே கண்டு கொள்வதாக வரும் தவிப்பு...இந்த இரண்டு விஷயங்களும் யாருடைய வாழ்க்கையையும் புரட்டி போட்டு விடும்..
காதல் என்று சொல்லும் போது அங்கு காமத்தைப் பற்றியும் பேசி ஆக வேண்டும்..
ஏனெனில் குறிக்கோளில்லாத வாழ்க்கை மட்டுமல்ல காமமில்லாத காதலும் துடுப்பில்லாத படகைப் போன்றது தான்..
காதலை ஆராதிப்பவர்களை காதலும் ஆராதிக்கும்...காதல் நிலைத்து நிற்பது காமத்தில் அல்ல... புரிதலில்.. புரிதல் சிலந்தி வலை பின்னுவது போலானது..
அறுந்தறுந்து விழும் போதெல்லாம்... சோர்வின்றி சிலந்தி எச்சிலை உதிர்ப்பதை போல ....இடைவெளிகளை புரிதலில் இட்டு நிரப்பிக் கொண்டால்
காதல் வாழ்க்கை களிப்பாக இருக்கும்.
இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..
அமைதி,அழகு,தனிமை