Tuesday, 3 February 2009

இது விளையாட்டு

வேடிக்கைதான்
பார்க்க முடிகிறது..
சிலரால்..

விளையாட்டையும்...
வெடிகுண்டு போடுவதையும்...

கர்ணா..

பணத்தின் பின் சென்ற
இனமழிக்க துணிந்த
வரலாற்றுத் துரோகியே...

நீ உயிர் துறந்திருந்தால்
உலகமே உன்னை கொண்டாடிஇருக்கும்..
உயிருக்கு பயந்து
எதிரிக்கு ஏவல் செய்யப் போனா(நா)யே ...

பூமித்தாய் உன்னை சுமந்ததிற்கே
தலைகுனிகிறாள்..
இரட்டையர்களில் ஒன்று
இதயமற்றுப் பிறந்ததை
காலம் அவளுக்கு தாமதமாய்
உணர்த்த நிலைகுலைந்த
அவளைத் தாங்கிப்
பிடித்துக் கொண்டிருக்கிறேன்
என் தாய் மாமன்..

ஒன்று கேள்
ஈனப் பிறவியே...

காலத்தால்
யூதாஸ்
இயேசுவால்
மன்னிக்கபடலாம்..

எட்டப்பன்
கட்டபொம்மனால்
மன்னிக்கப்படலாம்...

காட்டிகொடுத்த கர்ணாவே..
ஆயிரம ஆண்டுகள்
கடந்த பின்னும்
காலமும் மன்னிக்காது..
தமிழினமும் மன்னிக்காது...

அழிந்து போ
அடியோடு அழிந்து போ..

என்ன செய்ய?

நான்கு விக்கெட்
எடுத்ததற்கே
கல்லெறிகிறாய்...

நாற்பது ஆண்டுகளாக
ஆயிரமாயிரம் உயிர்களை
கொல்லும்
உன்னை
என்ன செய்ய வேண்டும்?...

அணி

காதணி
கையணி
காலணி
கழுத்தணி
யாவற்றையும்
கழற்றி வைத்து விட்டு
விளக்கணைக்கிறேன்..
உருவக அணி
உவமை அணி
சொல்பொருட்பின்வருநிலையணி
தற்குறி பெற்றணி
வரிசையாக அணிவகுத்து
நிற்கிறது..

தொலைக்காட்சியும் தொல்லையும்...

சின்னத் திரை மோகம் பிடிபட
சிந்தனையின் வேகம் தடைபடும்..

காய்கறிச் சந்தையில்
விலையினை தெரிந்துகொள்வதை விடவும்
சீரியல் நடிகைகளின்
நிலையினை தெரிந்து கொள்ளவே முனைவர்..

வீட்டிலிருந்தே திருவண்ணாமலை
தீபம் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வர்..
பக்தியாய் முக்தி நோக்கி சக்தி கேட்பார்..

விளம்பரங்கள் பார்த்தே
விடிந்தது முதல்
விழிகள் தூங்கும் வரை
அதனை பொருட்களும் வாங்கப்படும்
பலவீடுகளில் ...
வேண்டாதவற்றையும் வாங்கி நிறைப்பார்
சிலவீடுகளில் ...

அடுத்த தலைமுறையில்
இதெல்லாம் நடக்கும்..

உயிர்கொல்லும் குளிர்பானங்கள்
குளிர்சாதனப் பெட்டியில் குவிப்பார்..
உடல்நலம் குன்றம் போது
இளநீரில் இருந்தோ நொங்கிலிருந்தோ
தயாரிக்கப்பட்டு
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும்
மருந்துகள் அதிக பயன் தரும்..

எட்டுமணியானால்
மின்வெட்டானாலும்
கண்ணில் தாரை தாரையாய் நீர் வழியும்..

அறிவியல் அப்போது சொல்லும்
குறிப்பிட்ட நேரத்தில்
தொடர்ச்சியாய் பார்த்த
தொடர்கள் முடிந்த பின்னும்
முடிவிலியாய் தொடரும் கண்ணீர்
பரிணாம வளர்ச்சிஎன்று...

கணவன் மனைவிக்கிடையேயான
பரஸ்பரம் குறைந்து மாதத்தில் ஒருநாள்
பேசுவதற்காகவே
ஒருநாள் தேர்ந்தெடுக்கப் பட்டு
கொண்டாடப்படும் நாளாக
வெளியில் எங்காவது சந்தித்துப் பிரியும்
நிலை வரும்..

ஒரு வீட்டின் அத்தனை
அறைகளையும்
கண்ணாடி, துணிமணிகள் போல
தொலைக்காட்சிப் பெட்டிகள்
அலங்கரிக்கும்...
ஆளுக்கொரு அறையில்
தொலைகாட்சியில்
முகம் புதைத்திருப்பர்கள்...

தனிக்குடும்பம்
கூட்டுக்குடும்பம் மறைந்து
ஒரு நபர் வீடுகளாக
அறைகள் மாறும்..

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
வீதிக்கொரு பள்ளி கட்டுவோம் என்பது போல...
ஊருக்கொரு கட்சித் தலைவார்கள்
ஈசல்களாய் சேனல்கள் தொடங்குவார்கள்..

நிகழ்ச்சிகளுக்கிடையே
விளம்பரங்கள் வருவது போய்
விளம்பரங்களுக்கிடையே
நிகழ்ச்சிகள் வந்து போகும்..

மட்டைப்பந்து
அதாவது ஆங்கிலத் தமிழில்
கிரிக்கெட்...
கைப்பந்து
கால்பந்து மறந்து
மட்டைப்பந்தோடு
மந்தையாய் திரிவார்கள்...
குழந்தைகள்..மாணவர்கள்..

சிலம்பாட்டம்-சிம்புவின் படமல்ல...
தமிழரின் கலை
சிலம்பாதாம் ஒரு படத்தின்
பெயராக மட்டுமே அறியப்படும்..

திரையரங்குகள்
மூடப்பட்டு
கடித முகவரிகளிலோ
முகவரி தேடி வரும்
புதியவர்களுக்கோ
திரையங்குகள் பெயர்கள்
அடையாளப்படும்..

திரைத்துறை அடியோடு
சின்னத்திரைக்கும் புலம் பெயரும்..
புரட்டுவாரின்றி
புத்தகங்கள் தெம்பும்..

தொடர்ந்து சீரியல்
பார்பவர்களின் சங்கம்
தொடங்கப்படும்..
அதுவும் கூட்டப்படாமலே
இருக்கும்...
கூட்டப்பட்டாலும்
விட்டுப்போன நாட்களில்
நடந்த நிகழ்ச்சிகளை
அசைபோடவே அது பயன்படும்..

அண்டை வீடு
அண்டார்டிகாவில் இருக்கும்..
அண்டார்டிகா
அடுக்களைக்குள் அலறும்..

சேனல்களில் செய்திகள் மாறுபடும்..
உண்மைகள் வேறுபடும்..
சிலர் NDTV,BBC களில்
உள்ளூர் செய்திகளை அறிவார்கள்..

உறவுமுறைகள் கேள்விக்குறியாகும்..
ஒரு குழந்தை தன் தாயைக்
கண்டறிவதே பெரிய கின்னஸ்
சாதனையாகப் பேசப்படும்...

சந்திராயன் விண்ணிலிருந்து
நிலவோடு பூமியையும்
புகைப்படம் எடுத்து அனுப்புகையில்
ஒயர்களால் மரங்கள்
கட்டப்பட்டிருப்பதாக
காட்சிகள் சொல்லும்...
அங்கே
உறவுகள் அறுபட்டிருக்கும்...


Tuesday, 20 January 2009

பெண்ணே

துரியோதனர்களும்
துச்சாதனர்களும்
அதிகரித்து விட
கண்ணன்களும் கூட
மாறிப் போயினர்..

கண்ணன்கள்
கண்டு ரசிப்பதில்
அதி ஆர்வமாய்..

கர்ணன்கள்
கயவர்கலாகி
சுண்டு விரல் மோதிரத்தையும்
சுட்டு விடுவதில்
வல்லவர்களாய்..

சகுனிக்கும்
கூனிக்கும்
அரசாட்சி..

துர்வாச முனிவரும்
விஸ்வாமித்திரரும்
அடுக்கு மாளிகையில்
தொலைக்காட்சி முன்..

இங்கே இதில்
உனைக் காப்பாற்ற
உன்னை விட்டால்
வேறு யாருமில்லை...

கலியுகம்

ராமன்களுக்கு
மண்டோதரிகள்
தேவைப்படுகிறார்கள்..

வால்மீகிகளின்
புராணப்படைகள்
புரட்டப்படுகின்றன..

லட்சுமணன் சீதையின்
குளியலறை வழியே
குளிர்காய்கிறான்..

இருளல்லாத சூழலில்
பார்வைப் பின்னலில்
அகளிகைகலாகும் சிலர்..

கர்ணன்
துரியோதனின் ஆட்சியைக்
கைப்பற்றுகிறான்...

அர்ஜுனன்
கண்ணனோடு
போரில் எதிர் நிற்கிறான்..

குந்தி தேவியை
திருமணத்திற்கு பிறகும்
தொடரும் சூரிய தேவன்...

பாண்டியன் மாதேவி
நெடுஞ்செழியன்
சிதைக்கு தீ வைக்கிறாள்..

கட்டை விரலோடு
கைகளையும் சேர்த்துக்
கேட்கும் துரோணாச்சாரியர்கள்...

மனுநீதி சோழர்கள்
ஆராய்ச்சி மணி
அடிப்பவர்களைத்தான்
தேர்க்காலிலிட்டு
நசுக்குகிறார்கள்..

இப்படியாய் இன்னும்
தொடர்கிறது சில...

காதல்

காதல் ஒரு போதை
காட்டு வழி பாதை
கல் தடுக்கி விழுந்தேன் -உன்
கண் தடுக்க புதைந்தேன்

காதல் ஒரு நீரு
தாகம் அதில் நூறு
மூழ்கடித்து போகும் -அதில்
மூச்சும் திணறிப் போகும்

காதல் ஒரு யானைப்பசி
வாழைப்பழம் எல்லாம் தூசி
அள்ளக் குறையாத அட்சயமே
அணைக்கும் பசியை நிச்சயமே..

கல்லூரியில் பாடம்
கற்றுக் கொள்ளும் நேரம்
காதல் வந்து கலைத்தது
கவிதையாலே வளைத்தது..

தீண்ட வந்த காதல் என்னைத்
தின்று போனதேன்?
வானம் பறந்த சிறகுகள்
கூண்டில் அடைந்ததேன்?

போதும் போதும் லீலைகள்
பொய்தான் காதல் வேலைகள்

கால்கள் இரண்டும் நடக்கும் -அதில்
காதலின் தடம் கிடக்கும் -என்
கண்கள் இரண்டும் பார்க்கும்-அதில்
காதல் முத்துக் கோர்க்கும்

அமைதியில் என் மனம்
நூலகத்தின் அடுக்காய்..
அதிரடியாய் காதல்
புரட்டியது துடுக்காய்..

சாய்ந்து கொள்ள தோள்கேட்டு
காதல் என்னை கெஞ்சியது..
சரியென்று ஒத்துக் கொள்ள
சாய்த்து விட்டு துள்ளியது..

உன்னை நான் மீண்டும்
பார்க்கவும் வேண்டாம்..
உயிரினை நீயும்
உருக்கவும் வேண்டாம்..

காதல் ஒரு தொல்லைதான்
கண்கள் அதற்கு இல்லைதான்
காமம் அதன் எல்லைதானே

காதலுக்கு இல்லை வேலி
காதல் காலம் எல்லாம் போலி
கண்ணீர் துளி அதன் கூலி

சொல்லிக் கொண்டும் வரவில்லை
சொல்லிவிட்டும் செல்ல வில்லை
காதலின் லீலையில்
கவிழ்ந்தேன் மூலையில்

Monday, 29 December 2008

தெரியாதா?..

கண்ணிமையோரம்
கசியும் ஈரம்
காற்றுக்குத் தெரியாதா?

கனவுகள் தோறும்
காணும் உருவம்
நினைவுக்கு தெரியாதா?

துப்பாக்கி...

உன்
துப்பாக்கி ரவைகள்
சீறுவது...
ஆணவத்தின் வெளிப்படுத்த..

என்
துப்பாக்கி ரவைகள்
சீறுவது...
அமைதியை நிலைப்படுத்த..

காரியம் ஒன்றுதான்..
நோக்கம் வேறானது....
----------------------------

வேர்கள்...

எனது
வேர்களை
அசைத்து
பிடுங்கிவிடயெண்ணி...
கிளைப்பூக்களை
உதிர்க்கிறாய்...

புரிந்து கொள் எதிரியே..
பூக்கள் உதிர்க்கும்
ஒவ்வொரு
விதையும்...
பற்பல வேர்களைச்
சுமந்தே
விழுகின்றன ...
இம்மண்ணில்...

------------------------

ஒற்றைப்புள்ளி

ஏதேதோ
புத்தகங்களையும்
எத்தனையோ
பக்கங்களையும்
புரட்டினாய்...
என்னை
ஓரத்தில்
உட்கார வைத்து விட்டு....
-----------------------------
உனக்கான
இரண்டுகோடுகளின் மீது
ஒற்றைப் புள்ளியையும்
உனக்கான
ஒற்றைப் புள்ளியின் மீது
இரண்டுகோடுகளையும்
வரைகிறேன்...
ஒரு பாதி
பாம்பாகவும்..
மறு பாதி
மீனாகவும்...
மாறுகிறது..

தேவாவுடன்....


தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் 'இவள்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணத்தின் பதிவு...

தூங்கு...

தூங்கிய
என்னை எழுப்பி
'நன்றாய் தூங்கு'
என சொல்லிய பிறகுதான்..
தொலைந்து போனது
என்
தூக்கம்..
------------------------------
எண்ணும்மையாக
'ம்' மறைத்து
பேசுகிறாய்...
உம்மைத் தொகையாக
எப்போது பேசுவாய்...?
---------------------------

உதிர் சொற்கள்



நீ
உதிர்த்த
சொற்களை
முதலில் கோர்த்துப்
பார்த்துத் தோற்றுப் போனேன்...
மீண்டும் மீண்டும்
முயற்சித்ததில்
சில சொற்கள் விடுபட
மற்றதெல்லாம்
கோர்த்து
நீர் தெளித்து
மூடி வைத்து
மறுநாள் பிரித்தேன்...
ஒவ்வொன்றும்
இரட்டை வாக்கியங்களை
பிரசவித்தது...
உன்
சொற்கள் வீரிய விதைகள்..
என்
மனம் தாங்கும் நிலம்..

இதமான...

உன்

இதமான பார்வையிலே

என் இமைகள் நிறைத்தாய்...

உன்

பதமான வார்த்தையிலே

என்

இரவுகள் கரைத்தாய்...

உன்

ஓவியக் கைகளால்

சில கவிதைகள் பரப்பினாய்...

உன்

விதவிதமான கையெழுத்தை

அவ்வெள்ளைதாளில் நிரப்பினாய்...
--------------------------

Sunday, 28 December 2008

சின்ன சின்னதாய்..


உன்
ஓவியத்தின் அருகில்
ஒரு கவிதை
எழுத முடிந்தது...

உன்
கவிதையின் அருகில்தான்
ஒரு ஓவியம்
வரைய முடியவில்லை..

------------------------

உன் எழுத்துகளை
அள்ளி விழுங்குகிறேன்....
ததும்புகிறதென்
விரல்கள்...

------------------------
நீ
சென்ற பின்பு
எட்டி எட்டி பார்க்கிறது
என்னோடு
நீ
பாதி வரைந்து போன
ஓவியமும்...
------------------------

Wednesday, 17 December 2008

இந்த வாழ்வு

நிச்சயமற்ற
எதிர்பார்ப்புகளினூடே
நாளை பற்றிய
எவ்வித சேமிப்புமின்றி
நகர்கிற நொடிகளில்...

எந்த நொடியிலும்
கவ்விக் கொள்ள
காத்திருக்கும்
மரணத்தின் தூறல்..

இந்த கோப்பைச்சோற்றை
தின்று முடிக்கும் வரை
நீடித்திருக்குமா...
இந்த வாழ்வு?

நீயும் நானும் வேறு வேறு

உனக்கும்
எனக்கும்
தாய்மொழி ஒன்றுதான்
தொணிதான் வேறு..

உனக்கும்
எனக்கும்
தேவைகள் ஒன்றுதான்
காரணம்தான் வேறு..

உனக்கும்
எனக்கும்
ஊர் ஒன்றுதான்
இருப்பிடம்தான் வேறு..

நீயும் நானும்
வேறு வேறுதான்
ஆனால்
வேர் ஒன்றுதான்...

Monday, 1 December 2008

ஒற்றை சிறகு..

ஒற்றைச் சிறகாய்...ஒற்றைச் சிறகாய்..
காற்றில் பறந்தேன்..
கைப்பிடித்தாய்...

ஒற்றை வரியாய் ஒற்றை வரியாய்
ஏட்டில் இருந்தேன்..
நீ படித்தாய்..

உன் பெயரை சொன்னாலே
உயிரணுக்கள் சலசலக்கும்...
உன் குரலை கேட்டாலே
உதிரத்தில் அலையடிக்கும்..

வித்தகரே வித்தகியே

வித்தகரே வித்தகரே
விதை கற்றுத் தர தயக்கமென்ன...
உத்தமரே உத்தமரே
என்னை ஏற்றுக் கொள்ள கலக்கமென்ன..

உன்னில் என்னைக்
காணும் நேரமிது..
என்னில் உன்னை
காணும் நேரமெது?..

விபரங்கள் தெரியவில்லை இதில்
விரசங்கள் ஏதுமில்லை

பூவுமொன்று தேடி வர
வண்டுக்கென்ன ரோசமிங்கு?
தீவைப் போல தனித்திருந்தால்
தீர்ந்திடுமா ஊடலிங்கு?

சாயம் போகா வானவில்தான்
காயம் பட்டுத் துடிக்கிறதே ..
நீயுமிங்கு விலகி நின்றால்
தேயுமிந்த பிள்ளை நிலா..

உன்னை நெஞ்சில் எண்ணித்தான்
உண்மை எல்லாம் சொல்லினேன்...
உளறிக் கொட்டி விட்டேன்
போய் வரவா...

என் ஆயுளின் அந்திவரை...

என் ஆயுளின் அந்திவரை
அன்பின் அடைமழையாய்
வருவாயா...?

என் வேரினை நனைத்திடவே..
உன் கடைசி மழைத்துளியைத்
தருவாயா..?

நெடுந்தூரப் பயணம் போய் வரலாம்..
நெடுங்கதை பேசி மனம் ஆறலாம்..
தொடர் வண்டி தடதடக்கும்..
மலைச்சாரல் சிலுசிலுக்கும்..

பேசாத கதைகள் பேசிடலாம்..
ஓயாத அலையாய் பேசிடலாம்..

நிலக்கடலை கொறித்து நடைபோடலாம்..
நிலம் பதிக்கும் பாதத்தை எடைபோடலாம்..
மழை வந்து தொணதொணக்கும்..
மரக்கிளையும் முணுமுணுக்கும்..

ஊடலில் உன்னைக் கிடத்திடுவேன்..
கூடலில் என்னை படுத்திடுவாய்...

====================================


உன்னால் முடியாதா ....

முடியாதா உன்னால் முடியாதா
விடியாதா இரவு விடியாதா
யார் சொன்னது? -உனக்கும்
வேர் உள்ளது
வா வா வா
வாழ்வை வாழ்வாய் வாழ்வோம்...

முட்டி மோது முயற்சிகள் செய்..
நெட்டித் தள்ளு..
விட்டில் அல்ல விளக்கில் சாக
விண்மீன் நீயே..

வெற்றி கிடைக்கும் வரை
உறவுகள் சொல்லும் வீண் முயற்சி..
வெற்றி கிடைத்த போது..
உலகமே சொல்லும் விடாமுயற்சி..

இயங்கு இயங்கு இதயமாய்...
இமயத்தை விடவும் உயரமாய்..

பிறைநிலா தேய்வதில்லை..

வெள்ளை இரவே
பிள்ளை உறவே
கொள்ளை போனது
எந்தன் மனதே

பச்சை நிலவே
இச்சை கிளியே
பிச்சை புகினும்
காதல் சிறப்பே..

எழுதப்படா கவிதை நான்
உழப்படா நிலம் நான்-அன்பே
கலப்படம் ஏதுமில்லை -அதனால்
நிழற்படம் தேவை இல்லை...

சிறகில்லா பறவை நான்
உறவில்லா பாவை நான்-அன்பே
குறைகள் ஏதுமில்லை -ஆயினும்
பிறைநிலா தேய்வதில்லை...

உன் குரல் போதும்..

கண்ணே என் கண்ணே
உன் குரல் போதும்..
உயிரின் அணுவும் அதிரும்..

அன்பே என் அன்பே
நீ அருகிருந்தால்
எனது பூமி சுழலும்..

வானம் அது நம் வீடு..
வாழ்வோம் இரு சிறகோடு...
நிலவில் ஒரு திரை போடு- இந்த
உறவில் இனி பிரிவேது..

புத்தம் புது பூக்கள் மலரும்
நிதம் அது பூமியில் உலரும்..
முத்தமொன்று மேனியில் படரும்..
சத்தமின்றி உயிரணு மலரும்..

ஒருமுறை..

ஒருமுறை ஒருமுறை போதும் - என்
தலைமுறை வரைக்கும் தொடரும்..
மறுமுறை மறுமுறை கேட்டால் - சில
வரைமுறை கடந்திட தொடரும்..

சொல்லிவிட வா..
சொல்லி விட வா..

என் காதும் உனக்கு கருவறை..
உன் குரலைச் சுமக்கும் பலமுறை..
என் கனவும் எனக்கு கருவறை..
உன் வரவைச் சுமக்கும் பலமுறை...

மென் இதயம் தந்தேன் போய்விடு..
கீழ் இமைகளில் கொஞ்சம் ஓய்வெடு..
என் விதையில் மழையாய் தூறிடு..
புது வித்தைகள் கற்றுத் தேறிடு..

நான் உன் வாசகி

நான் உன் வாசகி
என்னில் வா சுகி..
நான் உன் தேவியே
நீ என் தேவையே..

இன்னும் சொல்லுவேன்-
உன் கன்னம் கிள்ளுவேன்
நெஞ்சில் அள்ளுவேன்-உயிர்
நேசித்தே கொல்லுவேன்..

உன் பார்வை என்னில் மேயும்...
தாக வேர்வை ஆறாய் பாயும்..
உன் மோகம் கொஞ்சம் ஓயும்...
என் தேகம் மெல்லத் தேயும்..

என் காதில் காதல் பாடு..
உன் இதழால் இதழை மூடு..
என் உயிரில் உயிரைத் தேடு...
உன் பிரிவில் மரணம் ஈடு..

======================

மௌனம்..

மௌனத்தை உடைப்பது...
எவ்வளவு கடினமொன்று..
அறியாதவன் அவன்

அவனுக்கும்
அவளுக்குமான
மௌனத்திரையைக் கிழிக்கும்
சில செயல்களைச் செய்தேன்...

மௌனம் விலக்கி
புன்னைகையை பிரசவித்து
அவள் போனபின்
அவன் சொல்கிறான்..

எங்களுக்கிடையேயான
மௌனத்தை
கிழித்துவிட்டதால்
நமக்கிடையேயான
சில கோடுகளை
வரைகிறேன்..
விலகி நில் என்கிறாய்...

இன்னும் நீடிக்கிறது..
அவர்களுக்கிடையேயான
நலவிசாரிப்புகளும்..
எங்களுக்கிடையேயான
மௌனப் பொறிகளும்...

புது வாசனை

தீப்பிடிக்கும்
வார்த்தைகளில்...
நீர் தெளித்து கோர்க்கிறேன்....
புதிய வாசனையோடு...
பூக்கிறது சில சொற்கள்..

பரம்பரை கனவுகள்...

எனக்கும்
சில பரம்பரை கனவுகள்
இருக்கின்றது..

அதிலொன்று
அகலமான நீளமான
ஐந்தறை கொண்ட
வீடொன்றில்

வரவேற்பறை
கழிவறை
குளியலறை
புத்தக அறை தவிர
ஐந்தாவதாய்..

அடிமைக்கான
ஆதியாயிருந்த
சமையலறையை
வெற்றாகவே
வைத்திருப்பேன்..

என் பிள்ளைகளுக்கு
அந்த அறையின்
சில கதைகளைச் சொல்வேன்...

அனுமதி

மழை
வரும்போது
அனுமதி கேட்கவில்லை
போகும் போதும் அப்படியே...

வாசனை

மண்ணுக்குள் புதைந்திருக்கும்
வாசனையை
வெளிக் கிளப்புகிறது..
சிறு மழை...

வாசனை
மண்ணுக்கானதா?
மழைக்கானதா?

Friday, 28 November 2008

ராகமும் சுகமும்..

நீ தந்த
சுகமும் ராகமும்
என்னை விட்டுப் போகும்
மோகமும் காமமும்
ஒருநாள் போகும்..
ஒருநாள் நீயும்..

ஒருபோதும்
உன்னாலேற்பட்ட
துயரம் மட்டும்
நீங்கப் போவதில்லை...

அவனும் பசியும்..

எத்தனையோ இரவுகள்
என் கதவுகளைத்
திறந்து விட்டிருக்கிறேன்..
அவன் இளைப்பாறலுக்காய் ...

அவன் பல கதவுகளைத்
தட்டியதையும்
பிற வீட்டு
சன்னல்களைத் திறந்ததையும்..
குடிசையின் பொந்துகளில்
உற்றுப் பார்த்ததையும்
நானுமறிவேன்..

எந்தக் கதவுகளையும்
நான் தட்டியதில்லை
பலமுறை பசியெடுத்த போதும்...

தானே வரும் உணவுகளையும்
ஏற்றுக் கொண்டதில்லை..
வற்புறுத்தியபோதும்..

புலி பசித்தாலும்
புல்லைத் தின்னாதாம்..
பசு பசித்தாலும்
எலும்பைத் தீண்டாது..!

முதன் முதலில்

முதன் முதலில்
உன் காதலைச் சொல்லிய
இளநீர்க் கடை...

முதன் முதலில்
முத்தம் பெற்றுக் கொண்ட
பேருந்து பயணம்..

முதன் முதலில்
மழைக்கு ஒதுங்கிய
நிழற்குடை..

முதன் முதலில்
மணமாகி கலந்து கொண்ட
தோழியின் திருமண வரவேற்பு...

யாவற்றிற்கும்
தெரிய வாய்ப்பில்லை..
விவாகரத்துக்கு நாம்
அனுமதி கோரியிருக்கும் மனுபற்றி...

காலமும் காதலும்..

நான்
நெருங்கும் போதெல்லாம்
விலகிப் போயிருக்கிறாய்..

நீ
நெருங்கும் போதெல்லாம்
நானும் விலகிப் போயிருக்கிறேன்..

ஒருநாள்
நம்மை விட்டு
வெகுதூரம் விலகிப் போயிருக்கும்..
காதலும்...காலமும்...

வலியுடன்..

சிறகுகளைப்
பிய்த்தெறிவதில்
அந்த ஆர்வமுடையவனே
ஏன் சிந்தனைகள்
சிறகுகள்அல்ல..

கயிறுகளை
இறுக்கி முடிச்சிடுவதில்
விருப்பமுடையவனே
என் சுதந்திரம்
கயிறுகளல்ல ...

சன்னல்களை
சாத்துவதில்
சுகம் காண்பவனே
என் எண்ணங்கள்
சன்னல்களல்ல..

ஊசிகள் கிழிசலைத்
தைத்தால்
வலியிருப்பதில்லை..
உணர்வுகளை
வார்த்தைகளால்
தைத்தால்
வலி பொறுப்பதில்லை...

வலியோடு..

அவனென்னை
அதிகமாய் நேசித்தான்..
சில சமயம்
நானும் கூட...

நிறைய முத்தங்களைப்
பரிசளித்தான்
சில நேரங்களில்
ஒன்றிரண்டு நானும்...

பிரிந்து போவதில்
மும்முரமாய் இருக்கிறான்..
சில போதில்
எனக்கும்...

உறவிற்கும்
பிரிவிற்குமான
ஊடாடலை
எப்படி சொல்ல?

வரிகளால்
வலிகளைச் சொல்ல முடியாது...

மழையே

அந்த மேகம்
விதைத்த
மழையை இந்த பூமி
அறுவடை செய்கிறது...

&&&&&&&&&&&&&&&&&&&&&

விடிய விடிய பெய்த மழை..
விடவே இல்லை
மறுநாள் விடியலிலும்...

&&&&&&&&&&&&&&&&&&&&&

முதல் நாள் மழையாலான
வெள்ளம்
வடியவே இல்லை..
அதற்குள் இன்னுமொரு மழை...

&&&&&&&&&&&&&&&&&&&&&&

மழைத்துளிகள்
ஓடிப் பிடித்து
விளையாடுகின்றன..
பெருகுகிறது ஆறு...

&&&&&&&&&&&&&&&&&&&&&&

தூறல் நின்றதால்
அழுகின்றன..
இலைகள்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சொல்லித் தரும்....

வெளிச்சம்
என்ன சொல்லித் தரும்..
இருளை அறியாத வரையில்...

உறவு
என்ன சொல்லித் தரும்..
பிரிவை உணராத வரை..

புத்தகம்
என்ன சொல்லி தரும்..
புரட்டாத வரை..

வாழ்க்கை
என்ன சொல்லித்தரும்
நீயில்லாத ஒன்றை...

ஆண் பெண்..

ஆணுக்கும்
பெண்ணுக்கும் பிறந்து..

ஆணிலோ
பெண்ணிலோ இணைந்து...

ஆணையோ
பெண்ணையோ பெறுவதைத்தவிர....
என்ன இருக்கிறது
இந்த வாழ்க்கையில்...?


உனக்குள் நான்..

உனதசைவுகளில்
தொடக்கி விடுகிறது
எனக்கான இளைப்பாறல்...

*************************************

வரமும் கோபமும்
ஆளுக்கொரு திசையில்
நம்மை இழுத்துப் போடும் போதும்..
எங்கிருந்தோ
வருடி விட்டுப் போகிறது...
கண்களின் குறும்புன்னகை..

*****************************************

எந்தத் திசையிலிருந்தாலும்
நேர்க்கோட்டில்
சந்தித்துக் கொள்ளும்
கண்கள் சொல்லி விடுகின்றன...
ஒருவரை ஒருவர் தேடியதை..

**********************************************

முத்தமிடத் துடிக்கும்
உனது உதடுகளுக்கு
எப்படிச் சொல்லுவேன்...
இமைக்கும் தோறும்
மொத்தமாய் உன்னை
முத்தமிடுவதை...

**************************************

கண்களுக்குள் இதயமும்
இதயத்திற்குள் கண்களும்
சில சமயங்களில்...

உனைப் பார்த்தவுடன்
இதயம் படபடப்பதும்
கண்கள் துடிப்பதும்...

*************************************

நேரங்காலமற்ற
பணி உளைச்சலிலிருந்து
மீட்டெடுக்கும்
முயற்சியில்
புதைந்து போகிறேன்...
நானும் உளைச்சலுக்குள்...

***********************************************

சொல்லி விட்டுப்
போவதை விட
சொல்லிக் கொள்ளாமல்
போகும் தருணங்களில்
சுமையாகின்றன..
உன் நினைவுகள்..

********************************************

இமைகளும் சுமையாகின்றன...
உன்னைக் காணாத போதுகளில்
நீரும் மோராகின்றது
உன்னைக் கண்டதில்...

*********************************************

நமக்குள் நேரும்
சண்டைக்குப் பிறகு
பூக்கின்றன..
என்னிடம் கை நிறைய
கவிதைகளும்..
உன்னிடம் நேசம் வழியும்
கண்களும்...

******************************************

உயிரோடோ
மெய்யோடோ
சேராமல்
துணைக்காலாய்
தனித்திருக்கிறேன்...
பொருத்தமான
உயிர் மெய்யாய்
நீ இருந்தால்..

***********************************

நமக்கான
விஷயங்களில்
ஏற்படும் முரண்களை விட
பிறரால்
தோற்றுவிக்கப்படும் முரண்கள் ...
இமயமாய்...

**************************************************

தொடர்பு எல்லைக்கு
அப்பாலிருக்கையில்
புரட்டுகிறேன்
நமது முதல் சந்திப்பின்
பக்கங்களை....

*******************************************************

நீ அணைக்கத் தவறும்
அழைப்பினை
என்னுடையதென
அறிந்ததும்
ஒரு குறுஞ்செய்தி மூலம்
குதூகலப் படுத்துகிறாய்..

****************************************************

எதேச்சையாய்
கன்னம் கிள்ளிப் போனாய்..
ஒவ்வொரு முறை
கடக்கும் போதும்
உனக்குள் கிள்ளிப் போடுகிறேன்
சிறு நெருப்பை..

*****************************************************






மழை மழை

மழையே பொழியாதே
பாவம்
வீடற்ற மனிதர்கள்..

*****************************

யாரைத் திட்டித் தீர்க்கிறாய்
பெரு மழையே..

******************************

வெயிலைத் தாங்க முடிகிறது..
இந்த மழையைத் தான்
தாங்க முடியவில்லை...

உன் கோபத்தைத் தாங்க
முடிந்த என்னால்...
உனதன்பை தாங்க முடியாதது போல...

***********************************************

மழைக்குப் பிந்திய
சாலையைப் போல்..
உன் சந்திப்பிற்குப் பிறகான
என் மனது..

**********************************************

மழை
வரும்போது அனுமதி
கேட்கவில்லை..
போகும் போதும்
அப்படியே...

****************************************

விடாமல் தூறுகிறது
மழை...
விட்டுத் விட்டுத்
தூறுகிறாய்..
உள்ளுக்குள் நீ..

***********************************

மண்ணுக்குள்
புதைந்திருக்கும்
வாசனையை
வெளிக் கிளப்புகிறது
சிறு மழை..

*********************************

அந்த மேகம் விதைத்த
மழையை
இந்த பூமி அறுவடை
செய்கிறது...

*********************************

விடிய விடிய பெய்த
மழை..
விடவே இல்லை
மறுநாள் விடியலிலும்..

************************************

முதல் நாள் வெள்ளம்
இன்னும் விடியவே இல்லை..
அதற்குள் இன்னுமொரு மழை...

***************************************

மழைத்துளிகள்
ஓடிப் பிடித்து
விளையாடுகின்றன...
பெருகுகிறது ஆறு...

********************************************

தூறல் நின்றதால்
அழுகிறது
இலைகள்...

********************************************



வலி

வலிக்கிறது...
கொட்டும் மழையை
எப்படித் தாங்குவார்கள்
அவர்கள்?

**********************

அழுது விடாதீர்கள்
அது கண்ணீர்த் துளிகள் அல்ல..
உள்ளத்தைக் கொத்தும் உளிகள்..

**************************************

மாடுகளை விட்டு விட்டு
நாடு கடந்து வந்தோம்...
மூக்கணாங்கயிறுகளின்..
முடிச்சுகள் கைகளை
இறுக்குகிறது...

*************************

விடை பெற்று
கொண்டு வரவில்லை..
வினாவோடு
வந்திருக்கிறோம்..

*************************
முகவுரை
எழுதும் முன்னே
முடிவுரைக்கு வழி சொல்லும்
இந்த வாழ்வு என்ன வாழ்வு?

*********************************

அலையலையாய் வருகிறாய்..
துளித் துளியாய் குதிக்கிறோம்..

*********************************

கரையில் கால் வைக்கிறோம்..
கொட்டு மழையிலும்
ஆதி மண் சுடுகிறது...

********************************

தொலைத்த..

என் பெயரைத் தொலைத்த..
தருணத்தில்
உன்னை சந்திக்கிறேன்...

எனக்கு என்ன பெயர்
சூட்டுவாய்?

உன்னைப் போலத்தான்..

உன்னைப் போலத்தான்
இந்த மழையும்...

அடிக்கடி ஈரமாக்கி
ஆடை மாற்ற வைக்கிறது..

உன்னைப்போலத்தான்
இந்த மழையும்

சேறு இறைக்கவும்..
கழுவவும்போல்
அடிக்கவும்..
அணைக்கவும்..

உன்னைப் போலத்தான்
இந்த மழையும்...
முடுக்கி விடவும்..
முடக்கி விடவும்..

மழையே

சொல்லித்தான் ஆக வேண்டும்
உன்னாலேற்பட்ட
தாக்கத்தை..
ஊக்கத்தை..
ஏக்கத்தை..


மழையின் வரவு

ஈரம் காயாத துணிகள்
மரம் குளிக்கும் காலம்
இல்லை பேசும் ரகசியம்
கோலம் காணாத வாசல்
தலை குளிக்காத காலை
மழையின் வரவில்...

**********************

எங்கோ இருக்கிறாய்
மழை விசாரித்துவிட்டுப்
போகிறது...
உன் அருகாமையை...

***********************

கரிகாலன் கலங்கி இருப்பான்
வீணாய் போகும்
மழை நீர் கண்டிருந்தால்..

**************************

இந்த மழைக்கு
கொஞ்சிப் பேசவும் தெரிந்து இருக்கிறது
மிஞ்சிப் போகவும் தெரிந்திருக்கிறது..
மனிதர்களைப் போல...

************************

மழையை
வழியனுப்பி விடாதீர்கள்...
நான் ஊன்றிய விதை
இன்னும் துளிர் விட வில்லை...

*********************************

மண்ணை மட்டுமல்ல
என்னையும் அரித்துப் போன
மழை நீ..

**********

என்னதான் சோகம்
கொஞ்சம் அழுவதை
நிறுத்தி விட்டுச் சொல்லேன்
மழையே....

*************

இந்த மழைத் துளிகளை
யாரும் மிதித்து விடாதீர்கள்..
உங்கள் பாதத்தை
கிள்ளி விடப் போகிறது...

****************************

மழை மழையாய்..

இலைகளோடு
இந்த மழைத் துளிகள்
இரவு பகலாய்
அப்படி என்னதான்
பேசித் தீர்க்கிறதோ?

*********************

நட்சத்திரங்கள்
ஊருக்குப் போகட்டும்..
மழைத் திருவிழாவிற்கு
மனிதர்களே போதும்..

**********************

மரங்கள் அழிந்த
சோகத்தில்
ஆறுதலடையா மேகம்
அழுதழுது தீர்க்கிறது
மழையாய்..

************

மேகம் உருகி
மழை பொழிய...
மழை உருகி
மண் தொட...
மண் உருகி
விதை துளிர்க்க...
விதை உருகி
விருட்சமாகிறது...

*****************

Wednesday, 26 November 2008

ஊதா நிற உடை

உனக்குப் பிடித்தமானதென
தெரிந்து
ஊதா நிற உடையணிந்த போதும்
எனக்காகத் தானென
இறுமாப்புக் கொள்கையில்
கண்கள் காட்டிக் கொடுத்துவிடுகின்றன...
மறைக்கும் எனது சொற்களை...

காவிரி

எடுத்துக்காட்டாய்
உன்னைக் கைகாட்டும் நேரங்களில்
காவிரியாய் பொங்கும்
நெஞ்சம்...

ஏதேனும் ஒன்றில்
'க்கு' வைத்துப் பேசுகையில்
அதே காவிரியாய்
வறளும்....

நட்பு

வடக்கிருந்து
உயிர் நீத்த நட்பு
கோப்பெருஞ்சோழன்
பிசிராந்தையாருடையது ...

அருகிருந்து
துயர் நீக்கும் நட்பு
நம்முடையது..

முரண்பாடு

முரண்பாடுகளால்
பின்னப்படும் வலைகளில்
சினம் விடுவிக்கப்பட்டு
சிரிப்பு அடைபடுகிறது...

அப்பொழுதுகளில்
உடன்பாட்டுக்கான
ஆயத்தமாய்..
ஒரு கண் சிமிட்டலை
உணர்கிறேன்....

சாபக்கேடு

அலைபேசியில்
பேசிக் கொண்டிருக்கையில்
எழும் பெரும்மூச்சினை
மொழிபெயர்க்கத் தெரிந்த போதும்..

அருகிருக்கையில்
எழும் எண்ணங்களை
அறிந்து கொள்ள முடியவில்லையென...
பிதற்றுவதை
நீ நம்புவது
சாபக்கேடுதான்..

அரவணை

என் ப்ரிய மழையே
இப்போதே
என்னுள் விழுந்து விடாதே..

ஆறாகி
உன் போக்கிலே சென்று
இறுதியில் வந்து சேர்
கடலாய் உன்னை
அரவணைத்துக் கொள்கிறேன்...

விலகு

கண்கள் வலைபின்னியவுடன்
இரண்டு நிகழ்வுகள்
அரங்கேறுகின்றன...

ஒன்று
அனைத்தையும் மறந்து விடுகிறேன்...
இரண்டு
என்னையே தொலைத்து விடுகிறேன்...

தயவு செய்து
'விலகிப் போ' வென சொல்லவில்லை..
'விலகி நில்' என்பதே என் வேண்டுகோள்...

அல்லி புல்லி

எண்ணங்கள் ஒத்துப் போன
போதிலும்...
இணக்கம் இருந்த போதிலும்
பிணக்கிற்கு பஞ்சமில்லை...
ஒரு பூவின் அல்லிபுல்லி
இதழ்களைப் போல...

நீ

என் உதடுகள் திறந்து
பேசுகிறாய்..

என் விழிகள் திறந்து
பார்க்கிறாய்..

என் உணர்வுகளை அழித்து
வாழ்கிறாய்...

நறுக்குகள்....

பேசக் கற்றுக் கொள்..
அல்லது
பேசாமலிரு...

**************

என்னை
நகர்ந்திருக்கச் சொல்கிறாய்...
விலகிஇருக்கவா?
விலகாதிருக்கவா?

********************

புத்தகமெங்கும்
உன் வாசனை
நிரம்பி இருக்கிறது....
எப்போது புரட்டினாய்..
நானறியாமல்..

****************

இன்னும் தொடங்கவே இல்லை
அதனாலென்ன...
முடித்துக் கொள்ளலாம்
இந்த வாழ்க்கையை...
இன்னுமோர் தொடக்கதிற்காக..

*********************************

இவ்வெற்றுத் தாளில்
கிறுக்க பலருக்கும் ஆசைதான்..
கவிதைக்காகக்
காத்திருக்கிறது இந்த தாள்....

******************************

அறுந்துபோன
உறவுகளை..
முடிச்சிட முனையப்
போவதில்லை...
முடிச்சுகள்
இறுக்குமெனில்...
அறுந்தே இருக்கட்டும்..

இசைக்கருவி..

நான்
இசைக்கருவியாக பிறக்க விரும்புகிறேன்...

நீ மட்டும்
இசைக்கும் கருவியாக...

யாராலும்
கவனிக்கப் படாத இசைக்கருவியை
மீட்டும் நாளொன்றில்
பேரிரைச்சலொன்று...
எரிச்சல் தரலாம்..

தொடந்து மீட்டு
தூய ராகங்கள் உயிர்த்தெழும்...

மீட்டுவதை நிறுத்தும் போது
வேறாரும் மீட்ட இயலாத
வினோத இசைக்கருவி இது...

இசைகிறேன்..
இசை...


இருவாழ்வி

மழைக்கால தவளைகளை
பிடிப்பதில்லை..
சத்தத்தினூடே கூடுவதால்..

வேகத்தடை

வேகத்தடையை
நீக்கினார்கள்..
பள்ளமானது பாதை
இப்போதும்
அது வேகத்தடையாகவே
இருக்கிறது...

கேள்வி கேட்காதே

மடி மீதிடு...
முடி கோதிடு...
முகம் துடைத்திடு..
அகம் பேசிடு..
விரல் தீண்டிடு..
கேள்வி கேட்காதே...

நீர்

உன்னை நினைக்கையில்
ஆறாய்ப் பெருகும் எண்ணங்கள் ...
அருவியாய் கொட்டும் ஆசைகள்...

உன் அருகாமையில்
வற்றித்தான் போகிறது...
சின்ன தீண்டல் போதும்..
உயிரூற்றுப் பெருக்கெடுக்க....

நிழல்

உனது நிழலாய் தொடரும்
வாரம் கொடு..

மறுத்தால்
மரமாக சாபமிடு..

உனக்கு நிழல் தருவேன்
என்னை தேடுகையில்....

ஒரு வார்த்தை

வண்ணத்துப் பூச்சிகள்
பரிசளிக்க வேண்டாம்...

ஓவியங்கள்
வரைந்து தர வேண்டாம்..

பாடல்கள்
பாட வேண்டாம்..

முகம் புதைத்தழ
மடி வேண்டாம்...

கவிதைகள் எழுத
எழுதுகோல் தர வேண்டாம்..

விரும்புகிறேனேன
ஒரு வார்த்தை போதும்...
வாழ்ந்திடுவேன்...
ஏழு ஜென்மங்களையும் ஒன்றாகவே...

காதலும் நட்பும்

காதல்
உரிமை எடுத்துக் கொள்வது..
நட்பு
உரிமையாகவே இருப்பது...

காதல்
அன்பை முன்னிலைப் படுத்துவது..
நட்பு
அன்பாகவே இருப்பது...

காதல்
மீறலுக்கு மன்னிப்புக் கோரும்..
நட்பு
மன்னிப்பையே மீறலெனக் கருதும்..

காதல்
ஆழமாகும் அல்லது அகலமாகும்
நட்பு
ஆழத்தில் அகலமாகும்..

காதலும் நட்பும்
ஒரு பூதமென குப்பிக்குள்
அடைபட்டிருக்கிறது..
திறப்பவரின் தேவையைப் பொறுத்து
இரண்டிலொன்று இதயம் கவ்வும்...

நட்பும் காதலும்

நட்பும் காதலும்
நூலிழை வித்தியாசத்தில் தான்
பிரிக்கப்படுகின்றன..

நூலிழை தான் அளவுகோலா?
எதைக் கொண்டு அளப்பது..?
சொல்லா..? செயலா?

சொல்லெனில்
தவிர்க்கப்பட வேண்டியதென்ன?
செயலெனில்
விலக்கப் பட வேண்டியதென்ன?

உடலா? உள்ளமா?
உடலெனில்
எவ்வளவு தூரம் தள்ளி இருக்கலாம்?
உள்ளமெனில்
எவ்வளவு தூரம் இடம் கொடுக்கலாம்?

யாரும் புரிந்து கொள்ள முடியாத
நூலிழையை
நண்பர்களோ,காதலர்களோ
உணர்ந்திருப்பார்களோ?

காதலர்களை நண்பர்களென
அங்கீகரிப்பதும்
நண்பர்களை காதலர்களென
அடியாயாலப் படுத்துவதும்
ஒரு நூலிழைதான்...

மழை மழையாய்...

யாருமற்ற நெடுஞ்சாலையில்
தனித்து நடக்கிறேன்..
எங்கிருந்தோ பின் தொடர்ந்த மேகம்
அனுப்பி இருக்கிறது...மழையை..

**********

புனைவற்ற புன்னகையாய்
பூத்துக் கொட்டுகிறது
மழை...

**********

மழை இரவு
வீட்டில் உன் இருப்பு
வேறென்ன வேண்டும்?

**********

கை நிறைய கவிதைகளை
மழை தருகிறது
கதவடைப்பு செய்து
காகிதத்தோடு அமர்ந்திருக்கிறேன்..

**********

மண் மீது மழைத்துளி
என்ன எழுதி எழுதி
அழிக்கிறதோ?

**********

நொடிநேரப் பூந்தொட்டிகளை
படைக்கிறது
ஒவ்வொரு மழைத்துளியும்...

**********

குடை தவிர்த்து
நடக்கலாம்
கேள்வி கேட்பவர்களுக்கு
விடை சொல்ல இந்த
மழை இருக்கிறது..

**********

இந்த மழையில்
கொஞ்சம் நனைந்து கொள்ளலாம்
நம்மை நனைக்கும் துளிகளாவது
சங்கமமாகட்டும்..

**********

ஒவ்வொரு துளிகளையும்
முடிச்சிட முயன்று
தோற்றுப் போகும் மழை...

**********

மேகத்தையே
வானமாகக் காட்டும்
சாகச மழை ...

**********

தொணதொணக்கும் மழை
முனுமுனுக்கும் இலை
என்னதான் பேசித் தீர்க்கிறது?

**********

மௌனத்தை உடைக்க
முயற்சிக்கிற இந்த மழையை
என்ன செய்வது?

**********

வீட்டிற்குள் வருமிந்த காற்று
மழைத்துளிகளை பொறுக்கி
எடுத்து வருகிறது...

**********

விடாது தூறும் மழை
எதை விமர்சிக்கிறது?

**********

நில் மழையே
சொல் மழையே
யாரை சந்திக்க வந்தாய்?

**********

சில்லென்ற மழை
சில நேரங்களில் பிழை..

**********

மாலை நேரமும்
மழைக்கால நாட்களும்
அள்ளி தந்த கவிதைகளை
தள்ளி வைத்து விட்டு
காத்திருப்பு தொடர்கிறது
சாரல் காற்றினூடே...

***********

Friday, 21 November 2008

துளித்துளியாய்...

#சிறைஎடு..
முறையிடு..
மறுத்தால்
முரண்டுபிடி...
உறக்கம் களை
உணர்வளி ..
உயிர்ப்பி..

# புரட்டி எடு..
புத்துயிர் கொடு..
அரற்று..
மிரட்டு..
அடக்கு..
அகழ்ந்தெழு..
அணுவில்
அணுவாய்
ரசி
புசி...

# வியர்க்க வை
விசிறி விடு
பதமாய் கடி
இதமாய் வருடு..
அழுத்தம் கொடு
அனலில் இடு..

# கரைத்திடு..
கரைந்திரு..
நுரைத்துப் பொங்கு..
மடி மீது
முடி கோது
இடைவேளை
இனியேது?

# சிக்க வை
சிறக்க வை
நிற்க வை
நிறைக்க வை
மக்க வை
மலர வை..

#திறந்து படி
கறந்து குடி
விரட்டி பிடி
விழியால் திரி..

# தீவாக்கு
திரியாக்கு
பூவாக்கு
புயலாக்கு...
சுற்றம் மற
சொர்க்கம் திற..

உரமாயிரு..
உறவாயிரு..
உலகாயிரு..
உயிராயிரு..

#மூர்ச்சையாக்கு
முழுமையாக்கு..
மூச்சில் கல
மூர்ச்சை இழ..
நிம்மதி எழ..
நினைவை இழ..
புதைந்திரு
புகைந்திரு...

#மழையால் பொழி..
பிழையால் அழி..
இருட்டாக்கு
ஒளியூட்டு...
திரைகிழி..
நிறையளி ..
குறை தள்ளு..
குறுக்கள்ளு..

#மலை மோது
கிளை தாவு..
கனி பறி..
பூ நுகர்..
உயிர்வெளி..
உயர்வளி..

#என்னை உயிராக்கு
எனக்குள் உயிராகு...

பட்டாம்பூச்சி

நெடுஞ்சாலை பயணத்தில்
உரசிச் செல்லும்
பட்டாம்பூச்சியாய்..
என்னைக் கடக்கிறாய்..

தக்க வைத்து விரும்பி
திரும்பிப் பார்க்கிறேன்
காணவில்லை சுற்றிலும்..

பாதி வழியில்
படபடக்கிறது என்
சட்டைப் பையில்
உன் இறக்கைகள்...

ஈர்ப்பு

எழுதி எழுதி தீர்க்கிறேன்
தீர்ந்துவிடவில்லை
உன் மீதான ஈர்ப்பு..

தூரத்து மழை

தூரத்து மழையை
ரசிக்கிற மனமும்
உச்சிமோந்து
பாராட்டும் குணமும்
சிலருக்கு இருந்தாலும்..
உன்னிடம் கண்டுகொண்டேன்..
உற்சாகப் பெருவெளி நீ..
உறையா ஊற்று நீ..
நீக்கமற நிறைந்திரு..
நினைவுகளின் வெளியில்...

பத்தோடு ஒன்று..

பத்தோடு பதினொன்று எனக்
கேட்கிறாய்
என்ன சொல்ல..
கண்ணோடு மணி என்றா?
மண்ணோடு விதை என்றா?
இல்லை தோழா..

ஒற்றைச் சிறகுள்ள எனக்கு
மற்றொரு சிறகு தந்து
பறக்கக் கற்றுக் கொடுத்தது
நீதான் தோழா...

அவரவர் பாதையில்

வெட்ட வெளியில்
பொட்ட வெயிலோ
கொட்டும் மழையோ
ஒட்டும் மணலோ
தொட்டு விடும் தூரத்தில்
விட்டுவிலகாமல் பயணிக்கிறோம்...

இருவர் செல்லும் அளவுள்ள
இந்த பாதை
ஒத்தையடி பாதையாக மாறி
முடிவடைந்துவிடாது ..
மீண்டும் இருவழிப் பாதையாக
மாறுகிறது..

அவரவர் பயணத்தை தொடர்கிறோம்..
சஞ்சலமற்று!

அடுக்கிய எண்ணங்கள்

என்னுள்
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
எண்ணங்களை
கலைத்துப் போட்டது
உன் சொற்கள்...

மீண்டும் அடுக்கும் முயற்சியில்
கலைந்து போனது
நமக்கான இடைவெளி ..

இப்போது அந்த அடுக்குகளில்
ஒன்றில் மேல் ஒன்றாய்
நாம்...

நீ என்னில்

நீ என்னில்
கரைந்து போகலாம்..
உறைந்தும் போகலாம்..

நான் உன்னில்
புதைந்து மறையலாம்..
புணர்ந்தும் பிரியலாம்...

என் அதிர்வுகளை
உள்வாங்கும் பக்குவமும்..
உன் தேடலை
கண்டுணர்ந்த துடிப்பும்...
நமக்குண்டு

இந்த தகுதி போதும்
யாவற்றுக்கும்..

நட்பு காலம்

நட்புக் காலத்திற்குள்
பாலமமைத்து
பாதம் தாங்கி
வரவேற்கும் உன் அன்பை
எப்படி தாங்கிக் கொள்வேன்?
சின்ன மனதுக்குள்...

கவிதை கேளுங்கள்

உன் வார்த்தைகளை
அசைபோடும்
ஒவ்வொரு முறையும்
கண்கள் வழி கசியும்
காமத்தை எப்படி மறைப்பது?

அது சரி
ஏன் மறைக்க வேண்டும்?

Wednesday, 22 October 2008

இது பிரிவின் காலம்

கோபத்தில் உன்னால்
உதிர்க்கப்படும்
சிற்சில செயல்கள்தான்
சமருக்கான
அழைப்பாக இருக்க்கிறது...
-------------------------------
போர்க்களத்தில்
நிற்குமென்னை
பூச்சூடி அலங்கரித்து வரச்
சொல்கிறாய்...

எனக்கான அணிகலனே
தைரியம் என்பதை
மறந்து போகாதே...
----------------------
பிரிவுகள்தான்
எனதிருப்பினை
உனக்கு
எடுத்தியம்புமென
பிரிந்து போனேன்..

உணர்த்திவிட்டது
உன் அருகாமையை
எனக்கு...
-----------
முதுகுக்குப்பின்
வார்த்தைகளால் அடிக்கும்
உன்னை விடவும்
நேருக்கு நேராய்
பார்வையால் அறையும்
என் எதிரி மேலானவன்..
----------------------------
உனது
சின்னக் கிறுக்கல்
பெரிய சறுக்கலை
தருவிக்கிறது...

சில சந்தர்ப்பங்களில்
எதிர்பாராத கிறுக்கல்கள்
சின்ன அதிர்வலையைத்
தோற்றுவித்து அடங்குகிறது..
-----------------------------------
நிகழ்வுகளை
பதிவு செய்வதற்காகவே
பயணப்பட்டதில்
காலம் முன்மொழிய
சூழல் வழிமொழிய
புதிய அனுபவமொன்று
அந்நிகழ்விற்கு தலைமை ஏற்றது...
----------------------------------------

கண் பேசும் கவிதைகள் -3

பார்வையாலே
சொட்டுச் சொட்டாய்
நனைத்து
வெப்பமூட்டுகிறாய்...
-------------------------
நீ முட்டாள்
என்பதற்காகவே
அறிவிலியாய்
அறியத் தருகிறேன் என்னை...
-----------------------------------
உனது நினைவுகள்
பௌர்ணமியாய்
தொடங்கி
பௌர்ணமியாய்
முடிகின்றன..
வளராமலும்...
தேயாமலும்...
----------------
வியர்ப்பதற்கே
காரணமானவனே
விசிறியும் விடுகிறான்...
----------------------------
இப்போதெல்லாம்
கவிதை என்றாலே
நினைவுக்கு
வந்துவிடுகிறது..
உனக்கு என் முகம்...
------------------------
நண்பர்களிடம்
கெஞ்சிக் கூத்தாடிக்
கைபேசி கட்டணத்தைக்
கட்டி விடுகிறாய்...

உனது அழைப்பை
நான் பெறவும்..
எனது அழைப்பை
நீ ஏற்கவும்...
---------------


தேனூறும் எண்ணம்

ஒருமுறை
கன்னத்தில் ஒன்று கேட்டு
நீ அடம்பிடித்த போது
என் உதட்டில்
பட்டம்பூச்சியொன்று
நொடியில் அமர்ந்து போனது...

நான் உனக்கு தராததைவிட
அது என்னிடம் பெற்றுச்
சென்றதாகக்
கோபித்து நாள் முழுவதும்
தோட்டத்தில் அதனைத்
துரத்தினாய்...

பின் எப்பொழுதாகினும்
எங்கேனும் அதன் இனத்தைப்
பார்க்க நேர்ந்தாலே
நமது எண்ணங்களில்
தேனூருகிறது...

கண் பேசும் கவிதைகள் -2

பயணங்கள்
கவிதைகளின்
தாய் வீடு போலும்...

குதூகலத்துடன்
வந்து ஒட்டிக்
கொல்கின்றன...

எத்தனையோ நட்புகளுக்கும்
எத்தனையோ காதலுக்கும்
களம் அமைத்த
இரயிலின் இருக்கைகள்
புனிதப்படும்...

கிளைகளுடன்
மீண்டும் பயணிக்கையில் ...
---------------------------------
காத்திருப்புகளில் கூட
பருவம் தோன்றுகிறது...

காதலின் காத்திருப்பு
கோடையாயிருக்கும்...

நட்பின் காத்திருப்பு
வசந்தமாயிருக்கும்...
-------------------------
ஆடை மாற்றி ஆடை மாற்றி
அழகு பார்த்த போதில்
மனமும் தன் ஆடையைக்
கழற்றிக் கொள்ள ...

பாய்ச்சலுக்குப் பதுங்கும்
புலியாய் நரம்புகள் முறுக்கிக்
கொள்ள வேகம் பீறிட்டது...

சற்று நேர
அடங்குதலுக்குப் பின்...
ஒளியுண்டு நிமிர்ந்தாய்
கவியத் தொடங்கியது
என் மீது இருள்...
-----------------------
*முதன் முதலாய்
நாம் பயணித்த
ரயில் கடந்து போகிறது
இரைச்சலுடன்...

உள்ளுக்குள்
நிசப்தமாய்
நம் நெருக்கம்...
-------------------------

கண் பேசும் கவிதைகள்-1

*உனது விரலின்
வெளிச்சத்தில்
என் வெட்கங்கள்
எல்லாம்
கண்ணாமூச்சி ஆடின..

வெட்கம் வடியத்
தொடங்கியதில்
மீறப்பட்ட எல்லைகள்
வெளியின்றியே திரிகின்றன
இன்னமும்...
------------------------
*இரவுக்கும்
விடியலுக்குமான
இடைவெளியில்
தொலைகிறது
நம்பிக்கையின் கணம்...

நிறைவிற்கும்
நிறைவின்மைக்கும்
இடையிலான ஊசலில்
அலைகிறது மனம்...
---------------------
*காற்றில்
விதைத்திருக்கிறேன்
உன் நினைவுகளை

நீயோ நானோ
இல்லாத போதுகளில் கூட
நம்மைப் பற்றி
பேசியபடி இருக்கும்
எந்த ஜன்னலோர
பயணியிடமாவது...
--------------------------------
*ஒருமுறை
விதைக்கப்படுவதில்லை
நம்பிக்கை..
ஒவ்வொரு முறையும்
வளர்க்கப் படுவதே
நம்பிக்கை...

ஒருமுறை
ஊற்று எடுப்பதல்ல
காதல் ..
ஒவ்வொருமுறையும்
பிரவகிப்பதே காதல்...
------------------------

Tuesday, 21 October 2008

பண்டிகை

பண்டிகை நாட்களின்
முன்பாக
அலைஅலையாய்
திரளும் மக்களில் நானுமோர்
புள்ளியாய் நகர்கிறேன்...

விலையை விசாரித்து
விலகிப் போகும்
கடைகளின் எண்ணிக்கை
ரூபாய் நோட்டுக்களை விட
அதிகம்..

சாலையோரக் கடையில்
மலிவாய் சிலதை
பொறுக்கியபடி
ஆறுதலைடையும்
ஆர்வம்...

பட்டாம்பூச்சி

நெடுஞ்சாலையின்
எந்த திசையிலிருந்து வருமென்று
யூகிக்க முடியாத தருணத்தில்
பட்டென்று சிறகுகளால்
தட்டிப் போகும்
பட்டாம்பூச்சிகள் ...

பரவசப்பட இயலாத
பதட்டத்தில்
பாதுகாப்பாய் வண்டியோட்டுவதில்
கவனம் குவிய
ஆழ்மனதில் சில கேள்விகள்
தேங்குகிறது...

நகரச் சாலைகளில்
கட்டிட இடுக்குகளில்
எங்கே சேகரிக்கும்
தனக்கான உணவை...
உறைவிடத்தை..

கரை ஒதுங்கிய
கேள்விகளுக்கு
வெவ்வேறு பட்டாம்பூச்சிகளின்
உரசல்கள் உணர்த்துகிறது...
இவ்வெளியில் யாவர்க்கும்
வாழ ஒரு இடமுண்டு...

தவறுகள்

தவறுகள்
யாவர்க்கும் தவறுகளாய்த்
தெரிவதில்லை...

தவறுகளை
செய்தவர்களும் தவறுகளை
உணர்வதில்லை ...

தவறுகளை
சரியாக பார்க்கிற தவறும்
குறைந்தபாடில்லை..

தவறுகள்
புரிகிற தவறுகளில்
தப்பிப் பிழைக்கிறது
சில உண்மைகள்...

சந்தேகம்தான்...
அந்த உண்மையிலும் தவறுகள்
உயிரோடிருக்கலாம்..

நேசிப்பின் பரிமாணம்

படித்தபடியிருந்த
புத்தகத்தின் முனையில்...

தானே வந்தமர்ந்த
சின்னஞ்சிறிய பூச்சியொன்று
உற்றுப் பார்க்குமுன்னே
பறந்து சென்றது...
பக்கங்களையும்
பார்வையையும் கடந்து..

என்ன தேடி வந்திருக்கும்?
எனது உற்றுநோக்குதல்
அதற்கு உயிர்பயம்
தந்திருக்குமோ?

இருக்கலாம்...
நேசிப்பு கூட சில நேரங்களில்
யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது..

நேசிப்பு

நேசிப்பதைக் குறைத்துக்
கொள்ளலாம்..

ஒன்றன் பின் ஒன்றாய்
வீசிஎரியப்படும்
வாசனையற்ற சொற்கள்
மிதக்கின்றன..
கருக்கொள்ளவிருக்கும்
மேக தூசுகளாய் ..

உருண்டு திரண்டு
எந்நேரமும் பொழியக்
காத்திருக்கும் அது..

மென்மையுடன்
வன்மையுடன்
மேகம்
சட்டென்று கொட்டிவிடும்
உனது எல்லையற்ற
எதிர்பார்ப்பின் விளிம்பு வெடித்து..



Saturday, 18 October 2008

காதல் நிஜமானதுதான்..

உன் காதல்பொறாமைப் படும்..

எரிச்சல் படும்..கோபப்படும்..

என் காதல்அன்பைத்தரும்..

கனிவைத் தரும்..பொறுமை தரும்..

இரண்டுமே இருப்பதால்நம்

காதல் நிஜமானதுதான்..

Wednesday, 1 October 2008

தனிமை

அந்த ரயில் நிலையத்தில்
என்னைத் தவிர யாருமில்லையென
சொல்ல முடியாது...

நடுநிசியில்
பொது இடத்தில்
தனியே இரவைக் கழிக்கும்
வெறுமை யாருக்கும் வாய்க்கக் கூடாது...

எங்கேயோ இருந்து கேட்கும்
நாய்களின் ஓலமும்...
அனைத்துப் போட்ட
சிகரெட் துண்டுகளாய்
சிதறிக் கிடக்கும் மனித உருவங்களும்...

நன்றாகத் திருகி மூடியும்
சொட்டுச் சொட்டாய் ஒழுகும்
நீர்க்குழாயும்..
மின்னொளிகளும்..

ஆங்காங்கே
நடமாடுகிற அறிமுகமற்ற ஆட்களும்
ஊசிமுனை கொசுக்களும்
துர்நாற்றம் வீசுகிற கழிவறைகளும்
போக்கி விடவில்லை
என் தனிமையை..

பேட்டரியில் சார்ஜ் இல்லாத
அலைபேசியும்...
காகிதம் ஏதுமில்லாத நேரத்தில்
அழகாய் எழுதும் பேனாவும் கூட..

கைப்பையின்
கடைசித் திறப்பில்
கைவிட்டு எடுத்தேன் ...
என் தனிமையை நீக்குகிற
அந்த புத்தகத்தை...

Tuesday, 30 September 2008

விளையாட்டு

விளையாட்டாய்
அழுதிருக்கிறேன் சில நேரங்களில்..

விளையாட்டாய்
சிரித்திருக்கிறேன் சில நேரங்களில்..

விளையாட்டாய்
பேசியிருக்கிறேன் சில நேரங்களில்..

ஒருமுறை கூட
விளையாடியதில்லை
விளையாட்டை
விளையாட்டாய்...

காதுகள்

சுவர்களுக்கும்
காதுகள் உண்டு
நீ சொன்ன பின்தான்
புரிந்தேன்...

நம் வார்த்தைகளின்
வேகம் தாளாமல்
விரிசல் விழுந்த
சுவற்றைப் பார்க்கையில்!

ரசம்

என் முகம் பார்த்து
கண்ணாடி ரசம்போய் விட்டதென
சொல்லிப் போனாய்...

எண்ணிப்பார்க்கிறேன்
ரசத்துக்கு உப்பு,மிளகு போதுமாவென
யோசித்தே
என் சிந்தனை மழுங்கிப்
போனதை அறியாயோ?

பிடித்த புத்தகத்தை
படிக்க விரித்த மாத்திரத்திலே
பிடுங்கி வைக்கும் உன்
செயலும் ரசம் போனதுதான்...

படுக்கை விரிப்பை சுருட்டி
வைப்பதில் தொடங்கும் என் காலை
படுக்கை விரிப்பை விரிக்கும்
என் இரவு வரை
உனக்காகவே செய்யப்படும்..
என் செயலும் ரசம் போனதுதான்...

ரசம்போன செயல்களில்
ரசம்போன வார்த்தைகளில்
ரசம்போய்க் கொண்டிருக்கிறது
வாழ்க்கை...

Monday, 29 September 2008

மாறிவிட்டது

மொட்டைமாடி
மறந்திருக்க வாய்ப்பில்லை
இரவின் மடியில்
நிலவின் பிடியில்
நெடுநேரம் பேசியதை...

ரோஜாச் செடிகளும்
நம் நட்பின்
அடையாளமாய்
மொட்டுக்களை
பூக்களாக்கி இருக்கிறது...

சிறகில்லாமல்
அடைக்கலமாய் வந்த
சின்னக் கிளிக்கும்
சிறகுகள் விரியத்
துவங்கியிருக்கிறது...

பருவகால மாற்றங்களுக்கு
பக்குவப்படுத்தப்பட்ட
கற்றாழைச் செடிகளும்
கிளைகள் விட்டிருக்கிறது...

கஷாயத்துக்காய்
அந்தியில் சேகரித்த
வேப்பம்பூக்களில் மீதம்
வேப்பம்பழங்கள் ஆகிப்போனது ..

கருவேப்பிலையும்
முருங்கையும்
காய்க்கத் தொடக்கி விட்டது...

எல்லாமே மாறிவிட்டது
பருவத்தில்..
நம் நட்பைப் போல ..

போதும்

இதுவரை
பேசி கழித்தது போதும்...
கூடிச் சிரித்தது போதும்...
பாடி மகிழ்ந்தது போதும்...
பழகிக் களித்தது போதும்...
என்று கட்டளையிடுவதில்லை
நட்பிற்கு
உன்னைப்போல் யாரும்
காரணமின்றி....

சுபாவம்

என் பூமிக்கு
மழையாக வந்தாய்..
தாங்கிக் கொன்டது
என் பிழையல்ல சுபாவம்..

என்ன செய்ய
என் சுபாவத்தை
பிழையென கருதுவது
சமூகத்தின் சுபாவம்...

விதிவிலக்கல்ல

கலைத்துப்போட்டாய்
மனதோடு என் நினைவுகளையும்...

விதைத்து சென்றாய்
ஆசையோடு என் ஆர்வத்தையும்...

மிச்சமேதுமில்லை
உன்னிடமிருந்து எனக்குள்
என் நேரங்களை
நொறுக்குத் தீனியென
நொடி நொடியாய்
நீ தின்றதைத் தவிர...

அனுமதியின்றி கலைத்து
அனுமதியின்றி விதைத்து
அனுமதியின்றியே
அமைதியாய் சென்றுவிட்டாய்...

என் ஆயுளின்
அர்த்தங்கள் மொத்தமாய்
கரைந்தது உன் பிரிவில்...

என் பெண்மையினை
அர்த்தப்படுத்திய உன் உறவே
என் ஆண்மையினை
சோதித்து பிரிவதில்
எனக்குள் கோபங்கள் ஏதுமில்லை..

பெண்மையும் ஆண்மையும்
ஒவ்வொரு அணுவுக்குள்ளும்
ஆட்சி செய்கிறது ...

நீயோ நானோ
விதிவிலக்கல்ல...


மதன் நேர்காணல்

மதன் அவர்களுடனான சந்திப்பு திடீரென நிகழ்ந்த போதிலும் அதிக நேரம் ஒதுக்க முடியாத அவரது சூழல் காரணமாகவும் நடந்த சந்திப்பில் இருந்து...


எத்தனை வயசில இருந்து கார்ட்டூன் பரிச்சயம் ஆனது?
நான் ஒரு நாலு வயசில இருந்து கார்ட்டன் போடுறேன்? எனக்கு இயற்கையாகவே வந்த ஒரே திறமை கார்ட்டூன் போடுறதுதான்..
மத்த எல்லா திறமைகளும் உங்களைப் போல ஒரு வட்டத்துக்குள்
வந்த பின்னால கத்துக்கிட்டதுதான்...இளஞர்கள் இந்த துறையில் ரொம்ப குறைவா இருக்காங்க..இந்தியாவில் இந்த துறையில நிறைய வாய்ப்பிருக்கு.. ஆனால் எத்தனை இளைஞர்கள் தயார் நிலையில இருக்காங்க?

உங்களுடைய கார்ட்டூன் திறமை வளர உதவியாய் இருந்தது எது?நாமேதான் செய்து கொள்ள வேண்டும்..இயற்கையான திறமைன்னு சொல்வாங்கல்ல எப்டினா ஒரு மொசார்ட் மாதிரி.. பாரதி மாதிரி.. இவங்கல்லாம் பிறவி கலைஞர்கள்...அப்டின்னு சொல்வாங்க.. திறமை அப்டிங்கறது நிறைய பேர்கிட்ட இருக்கும்..மைக்கேல் ஏஞ்சலோ மாதிரி ஆர்ட்டிஸ்ட் பாத்தீங்கன்னா அவங்களுக்கு நிஜமாவே இறைவன் கொடுத்த வரம்னு தோணும்..அவ்ளோ ஆச்சர்யம் .. அதை நாம இறைவனு சொல்லிடுறோம் .. நிறைய இளைஞர்களுக்கு திறமை இருக்கு..ஒருத்தருக்கு ஓவியம் நல்ல வரும்.. உங்களுக்கு குரல்வளம் இருக்கு பாடுறீங்க .. பேசுறீங்க (நிஜமாவா ? ஹி ஹி ).. சில பேர் மாடலிங் பண்ணுவாங்க...அதை வளர்த்துக் கொள்வது எப்படி அப்டிங்கற அடிப்படையில தான் உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியும்?

நான் கார்ட்டூன் பண்ணும் போது எல்லாம் இந்த மாதிரி எல்லாம் கோர்ஸ் கிடையாது..ஒருவேளை இருந்திருந்தால் முறைப்படி படிப்படியா படிச்சு இருக்கலாம் ..அப்டி படிச்சு இருந்தால் சிறந்த மாணவன்னு பேர் வங்கி இருப்பேனோ? இல்ல மக்குன்னு பேர் வங்கி இருப்பேனோ தெரியாது...இப்ப இருக்குற மாதிரியான வாய்ப்புகள் அப்பலாம் கிடையாது..அதனால நான் இயற்பியல் படிச்சேன்...என்னோட நோட் புக்ஸ்ல பாத்திங்கன்னா முதல்ல இருக்குற பக்கங்கள்ல ஃபார்முலா இருக்கும்.. கடைசி இருபது பக்கங்கள் என்னோட கார்ட்டூன் தான் இருக்கும்.. பேராசிரியர்கள் பாத்துட்டு கிழிச்செல்லாம் போட்டது கிடையாது... அவங்க என்ன நினைப்பாங்கன்னா எங்கேயோ தப்பான இடத்துல தப்பான ஆள் வந்து உக்காந்திருக்கனே அப்டின்னு 'யப்பா கொஞ்சம் பாடத்தையும் கவனிப்பா'ன்னு சொல்லுவாங்க...(ரொம்ப நல்ல ஆசிரியர்கள் கிடைச்சு இருக்காங்க..) ஏனா கார்ட்டூன்ஸ் நல்லா இருக்கும்..

நீங்க வரைஞ்ச கார்ட்டூன்ல மறக்க முடியாத கார்ட்டூன் இல்ல வரைய ரொம்ப முயற்சி செஞ்ச கார்ட்டூன் பத்தி சொல்லுங்களேன்?
கார்ட்டூன் அப்டிங்றது விஷுவல் திங்.அத பாத்தாதான் புரிஞ்சுக்க முடியும்..அதை வானொலில விளக்க வேண்டி இருக்கும்..அதுல நாம ஒரு செய்தி சொல்றோம்..கார்ட்டூன்ங்றது சாதரண காமிக்ஸ் படம் கிடையாது.கார்ட்டூனுல தேச,மாநில தலைவர்கள் வராங்க..அதுல வந்து தலையங்கம் மாதிரி..ஒரு நிகழ்வு நடப்பது பற்றி ஒரு கருத்து சொல்றேன்.இது பத்திரிக்கைக்கும் எனக்கும் ஒரு உடன்பாடா செய்துக்கிறதுதான்.. .கார்ட்டூனுக்கு பல திறமைகள் தேவைப்படுது..அது எப்டிங்றது பெரிய விசயம்..அதை இவள்ல மட்டும் சொல்லிட முடியாது..

புஷ்பவனம் தம்பதி நேர்காணல்..


புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி அவர்களுடன் ஒரு நேர்காணல்..

கிராமிய பாடல்களை கிராமத்திலிருந்து நகரத்து வீதிகளுக்கு எடுத்து சென்ற நாட்டுப்புற கலைஞர்களில் குறிப்பிடத்தக்க பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமியும் அனிதா குப்புசாமியும்...

அவர்களை எதிர்பாரா ஒரு தருணத்தில் ஹலோ பண்பலையில் இவள் நிகழ்ச்சியில் சந்தித்ததில் இருந்து உங்களுக்காக...



இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?