Monday, 9 February 2009

காதலர் தினம்- ஸ்பரிசம்3

மண்ணில் காதல் இன்றி யாரும் கிடையாது என்பது மனதில் காதல் இன்றி யாரும் கிடையாது என்பதன் பொருளே..

காதலிக்கும் முன் யாரும் நம்மைக் கண்டுகொள்ளாத போது வரும்
வெறுப்பு...காதலிக்கும் போது எல்லோரும் நம்மையே கண்டு கொள்வதாக வரும் தவிப்பு...இந்த இரண்டு விஷயங்களும் யாருடைய வாழ்க்கையையும் புரட்டி போட்டு விடும்..

காதல் என்று சொல்லும் போது அங்கு காமத்தைப் பற்றியும் பேசி ஆக வேண்டும்..
ஏனெனில் குறிக்கோளில்லாத வாழ்க்கை மட்டுமல்ல காமமில்லாத காதலும் துடுப்பில்லாத படகைப் போன்றது தான்..

காதலை ஆராதிப்பவர்களை காதலும் ஆராதிக்கும்...காதல் நிலைத்து நிற்பது காமத்தில் அல்ல... புரிதலில்.. புரிதல் சிலந்தி வலை பின்னுவது போலானது..
அறுந்தறுந்து விழும் போதெல்லாம்... சோர்வின்றி சிலந்தி எச்சிலை உதிர்ப்பதை போல ....இடைவெளிகளை புரிதலில் இட்டு நிரப்பிக் கொண்டால்
காதல் வாழ்க்கை களிப்பாக இருக்கும்.

காதலர் தினம்- ஸ்பரிசம்2

காதல் நம்மை சந்தோசப்படுத்தும்..எப்போது தெரியுமா?... புரிதலுடன் இருக்கும் போது..இந்த காதலுக்குத் தான் எத்தனை சக்தி இருக்கிறது தெரியுமா?...
காலமும் காதலும் கைகோர்த்துக் கொண்டு சிறந்த காதலை இந்த உலகத்தில் தேடிக் கொண்டே இருக்கிறது யுகம் யுகமாய்.. இந்த தருணத்தில் ஒரு கவிதை என் நினைவில் வந்து போகிறது...

"உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
கண்டுகொண்ட
நிமிடங்களில்
காதல் கைதட்டி
சிரித்தது..
சிறந்த காதல்
இணையினைக்
கண்டுவிட்டதாக..."

உண்மைதான்.. உண்மையான காதலை நாம் உணர்ந்து கொள்ளும் போது
எந்த பிரச்சினை வந்தாலும் அதை தாங்கும் சக்தியை அந்த காதலே நம் கைகளில் கொடுத்து விட்டுப் போகும்...அதே போல் கண்டுகொள்ளப்படாமல் போகும் காதல் அலைந்து கொண்டு இருக்கும் இந்த மண்ணில்...இன்னொரு விஷயம்.. மண்ணும் காதலும் ஒன்று.. எப்படி என்று கேட்பது புரிகிறது?

மண் காலில் ஒட்டிக் கொண்டிருக்கும்போது கண்டு கொள்ளாத நாம்
கண்ணில் பட்டு விட்டால் கலங்கிப் போகிறமே...அப்படிதான் இந்தக் காதலும் ...
நம்மைத் தாண்டி செல்லும்போதெல்லாம் விமர்சிக்கும் நாம் நமக்குள் வந்து அமரும் போது அந்த வலியோடு கூடிய சுகம் இருக்கிறதே அதை உணரத்தான் முடியும்..வார்த்தைகளால் உரைக்க முடியாது...மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?

காதலர் தினம்- ஸ்பரிசம்-1

காற்றைப் போல் இந்த காதல் எப்போதும் நம்மைச் சுற்றித்தான் இருக்கும்..
நாம் அதை தனித்து உணருவது எப்போதோ ஒருமுறைதான்.
காதலைப் பற்றி பலரும் பலவாறு சொல்லி இருக்கிறார்கள்..ஆயினும் புதிதாய் சொல்வதற்கு ஏதோ ஒரு விஷயம் இருப்பதால்தான் இன்னும் இனிக்கிறது இந்த காதல் என்னும் வார்த்தையும்..அதன் ஸ்பரிசமும்..

காதலைக் காதலிக்காத உள்ளமும் கிடையாது..காதலை மீறிய உணர்வும் கிடையாது..காதல் தித்திக்க காரணம் நாம் காதலிப்பதால் இல்லை..நாம் காதலிக்கப் படுவதால்...இதை எத்தனை உள்ளங்கள் உணர்ந்திருக்கும்?...காதலித்துப் பார்.. என்பதை விட.. காதலிக்கப் பட்டுப்பார்.. என்று சொல்லலாம்.. நம்மை புரிந்து கொள்ள நம்மை மனதார நேசிக்க ஒரு உயிர்
இருக்கிறது என்ற எண்ணமே நம்மை சந்தோசப் படுத்தும்...இந்த சந்தோசம் இன்னும் தொடரும்... காதல் நம்மை தொடர்வதைப் போல்..

பனிரெண்டு மணி அய்ம்பத்தேழு நிமிடம்...

இரண்டு இரவு..
இரண்டு பகல்..
இரண்டு காலை...

இயற்கையின் குடைக்குள்
இயல்பான பகிர்தல்..
மென் தூரிகையில்
நின் ஓவியங்கள்..
சுவாசத்தில் சுகம்..
சிந்தனையின் தெளிவு...

நகம் ...

நீ
முதன் முறை
வெட்டி விட்ட
நகங்களை
வளர வளர வெட்டுகிறேன்...

அது
நம்
காதலைப் போல
வெட்ட வெட்ட வளருகிறது..

Wednesday, 4 February 2009

நானாக நீ...

எப்படி
எனக்குள்
வந்தாய்..?
சொல்லத் தெரியவில்லை..

நானாகவே
நீயிருந்தாய்..
நான் நினைப்பதெல்லாம்
நிகழ்த்தியிருந்தாய்..

தானாக யாவும்
சொல்வாய்..
சமயத்தில்
என்னை வெல்வாய்...
மௌனத்தில்
பாதி கொல்வாய்..

திசைகளைத் திறந்தவன்..

சிரிக்கிறாய்..
சிதறடிக்கிறாய்...

புன்னகைக்கிறாய்..
புதைக்கிறாய்..

அரவணைக்கிறாய்..
அழ வைக்கிறாய்..

நிற்கிறாய்..
நிறைக்கிறாய்..

கற்பிக்கிறாய்..
கற்கிறாய்..

அறிகிறாய்..
ஆராதிக்கிறாய்..

ஆள்கிறாய்..
வீழ்கிறாய்..

திசைகளைத் திறக்கிறாய்..
தீண்டாமை வெறுக்கிறாய்..
தித்திப்பாய் இருக்கிறாய்..

சோகங்கள் புதைக்கிறாய்..
சுகங்கள் விதைக்கிறாய்..
தாகங்கள் தீர்க்கவே
தருணங்கள் பார்க்கிறாய்...

காலக் கண்ணாடியாய்
கண்முன்னே நடக்கிறாய்..
பிம்பமாய் தொடர்கிறேன்..
உன் திசைஎங்கும்..

காதல் சுமந்து..

வாரி வாரி
இறைக்கிறாய்..
காதலை
வாங்கும் திறனின்றி
திரும்பிச் செல்கிறேன்..
என் முன்னே
அலை வருகிறது
உன் காதலைச் சுமந்து..

அழிக்கிறேன்.

சுவடுகளை
அழிக்கிறேன்..
அழிப்பதும்
சுவடுகளாகிறது...

பூனை..

மௌனப் பூனை
உலகைச் சுற்ற விரும்பி
ஒரு மதிய நேரத்தில்
வெளிக் கிளம்பியது...

இதமான
பயணம்
இறுக்கமாக ஆரம்பித்தது..
அவனைச் சந்தித்ததிற்குப் பின்..

பூனையைத்
தடவிக் கொடுத்தவன்
மெல்ல மடியிலிட்டு
வருடினான்..

பூனை எழ
முயற்சிக்க
வாலையும் காலையும்
ஒரு சேர பிடித்து
சுழற்றும்
பாவனையில் வைத்திருந்தான்..

பூனையின் மிரண்ட கண்கள்
வழி ரத்தம் கசிய
இரக்கமே இல்லாமல்
அதன் வாலைக் கடித்துத் துப்பி
தூக்கிஎறிந்தான்..

திரும்பி வந்த பூனை
பின் ஒருபோதும்
மதியத்தில்
வெளிக்கிளம்பியதில்லை...

காணாத போது..

உன்னைக்
காணாத போது
எழுவதும்..
உன்னைக்
கண்டவிடத்து
அடங்குவதுமான
உன்னால்
மட்டுமே
பதில் தரக் கூடிய
கேள்விகள் சில
காத்திருக்கின்றன..
எப்போது
எதிர் கொள்ள சம்மதம்?

மௌனம்

என்
வார்த்தைகளுக்கே
விளக்கம் கேட்கும்
பலருக்கு மத்தியில்
என்
மௌனத்தையும்
மொழி பெயர்க்க
உனக்கு மட்டுமே
தெரிந்திருக்கிறது தோழா...

கிளிசரின்

உன்
வார்த்தைகளில்
கிளிசரின்
தடவியிருப்பாய் போலும்..

அது
என்
கண்களில்
கண்ணீரைக்
கண்டுவிட்டுத்தான்
ஓய்கின்றது..

நேசம்..

உன்
மீதான
நேசத்தை
நிரப்பி வைத்திருக்கிறேன்..
நினைவுக் குப்பிகளுக்குள்..

நீ
தட்டி விட்டுச்
செல்லும் அதனை..
மீண்டும் நிரப்புகிறேன்
பழைய நேசத்துடன்...

கனவுகள்

கனவுகள்
காத்திருக்கின்றன
சலனமற்ற
என் தூக்கதிற்க்காய்...

தூக்கம்
காத்திருக்கின்றது ..
வரமறுக்கும்
கனவுகளுக்காக...

இந்த இரவு
எதை பரிசளிக்க
போகிறதோ?

பூமிகள்.

இன்று
உச்சிவெயிலில்
சோப்பு நுரைகளால்
காற்றுத் திரைகளால்
நிறைய பூமிகளை
பிரசவித்தபடி இருந்தேன்..

நிழல் கடந்த
பூமிகள் சில
சூரியன்களாய்
மாறிப் போயின..

அக்கம் பக்கமிருந்த
சின்னஞ்சிறார்கள்
ஓடி வந்து தங்களது
சிறு கைகளால்
பூமிகளை
உடைக்க ஆரம்பித்தனர்..

சளைக்காமல்
பூமிகள்
என் வாயிலிருந்து
பிரசவமாக
அவர்களின் கைகளில்
உடைபட்டு
மறைந்த படி இருந்தன....

வேறு வேறு
உலகமாயிருந்த
அவர்களுக்கும்
எனக்கும்
புது உலகம் உருவானது..

Tuesday, 3 February 2009

முத்தம்

பணியினிடுக்குகளில்
சோர்வுற்ற
அந்தி மலரைப் போல
வரும் என்னை
புதுப்பிக்கிறது...
உன் ஸ்பரிசமும்..
எச்சில் முத்தமும்...

உன் பிஞ்சுக்
கைகளில்
எப்போதும்
சிறைபடக்
காத்திருந்த
பொழுதுகள் ஆயிரம்...

நீ
வீடு மாற்றி
சென்றதிலிருந்து
வெறுமையாய்
இருக்கிறது
என் பொழுதுகள்..

அவ்வப்போது
நீ
முன்னர் கொடுத்த
முத்தங்களே
மீட்டெடுக்கின்றன...
அவசர காலங்களில்...

நீ...

காலைப் பனியினை
தரிசித்த
இயற்கையின்
சத்தங்களை
பதிவு செய்த
அனுபவம் சொல்லி
படுக்கையில்
புரண்டு கொண்டிருக்கும்
என்னை விழிக்க செய்கிறாய்...
விலக்குகிறேன்
போர்வையோடு..
சோர்வையும்..

நான் செய்ய
நினைப்பவற்றை
செய்து முடித்து விட்டு
விழி விரிய செய்கிறாய்...
சிந்தித்து
செயல் படாமலிருக்கும் என்
நிலையினை
நகையாடுகிறது உன் செயல்..

கடக்க வேண்டிய எல்லைகளை
கண்டு பிரமித்து நிற்கையில்
எனக்கு முன்னே சென்று
கைதூக்கிவிட காத்திருகிறாய்..
என் இதயம்
சிறகு முளைத்து
பறக்கிறது உனக்கு முன்னால்..

எல்லோருக்குமானவனகா
நீயிருந்த போதும்
உணர்கிறேன்
சில நேரங்களில்...
எனக்கானவனாக ...

நமக்கிடையேயான
வார்த்தை பரிமாற்றங்களின்
மத்தியில்
சம்மணமிட்டு எழுகிறது
மௌனம்...

அது உடை படும் போது
விடை தெரியும்..
எல்லாக் கேள்விகளுக்கும்...

காத்திருப்பு படர்கிறது...
நம் வெளியெங்கும்..

புன்னகை

வழியில்
எங்காவது
சந்தித்தால்
உதிர்த்துப் போக
புன்னைகையாவது வேண்டும்...

இப்போதே
விதைத்துப்
போகலாம்
அதற்கான
துவக்கப் புன்னகையை...

புத்தகங்கள்- சிறுகதை

சிரித்தபடியே சொன்னான்...'நீ இன்னும் கடக்க வேண்டிய எல்லைகள் எவ்வளவோ இருக்கிறது. ..' என்று. தலையாட்டியபடியே 'அந்த எல்லைகளை அறிமுகம் செய்து வை' என்றபடி விடைபெற்று வந்துவிட்டேன்..

வரும் வழியெங்கும் அதைப் பற்றியே அசைபோட்டேன்...நான் இதுவரை எண்ணியவை குறுகிய எல்லைகளை கொண்டதா? எனது வாசிப்புத்தளம் இன்னும் விரிவடையவில்லையா? அவன் சொன்ன அந்த கடக்க வேண்டிய எல்லைகள் எவை? ..இந்த பத்து வருடத்தில் நான் இன்னும் சிறுபகுதிக்குள்ளே நின்று கொண்டுதான் சுற்றி வந்திருக்கிறேனா? ஏன் என்னிடம் எனக்கு தெரிந்த யாரும் சொல்லவில்லை...சொன்னால் அவர்களுக்கு இணையாக நானும் வளர்ந்து விடுவேனா?.. அல்லது அவர்கள் சொல்லியும் அதற்கான தேடல் என்னிடம் இல்லாமல் இருந்ததா?..இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வது..?ஒரே குழப்பமாக இருக்கிறதே ..சரி அவன் நாளை சந்திப்பதாக சொல்லி இருக்கிறான்.. அவனிடமே கேட்டு விடலாம்..

மறுநாள் குறித்த நேரத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது..ஒரு சிறிய ஆனால் கனமான பையொன்றை என்னருகில் வைத்துவிட்டு தன்னுடைய கால்சட்டையை லேசாக தூக்கிக் கொண்டு மணலில் அவன் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான்..

நான் கால்களை நீட்டியபடியிருந்தது அவனுக்கு எரிச்சல் தரவில்லையென்று
உணர்ந்தேன்..அவன் தந்த பையைத் திறந்து ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் பார்த்தேன்... இதுவரை நான் கேள்விப்படாத எழுத்தாளர்கள் .. நாவல்களாக, கதைகளாக,கவிதைகளாக கைகளில் கனத்துக் கொண்டிருந்தனர்.. அவனே ஆரம்பித்தான்..

ஒவ்வொரு எழுத்தாளர்களின் செல்வாக்கு பற்றியும், அவர்களின் பின்புலம் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தான்...அதுமட்டுமன்றி அந்த புத்தகங்களின் ஒரு சிறு சாராம்சத்தையும் பகர்ந்தான்..நான் விழிவிரிய
ஆச்சர்யத்துடன் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. இவ்வளவு நாள் இவனைப் பற்றி அறியாமலிருந்து விட்டோமே என்ற ஏக்கத்தை தூவியபடி இருந்தது அவன் பேச்சு...

அவனிடம் கேட்பதற்கென்று சேர்த்து வைத்த கேள்விகளுக்கும் அவனது வார்த்தைகள் பதில் சொல்வதாக இருந்தது...அந்த பையை வீட்டுக்கு கொண்டு வந்து எனது அறையெங்கும் பரப்பி வைத்துக் கொண்டு ஆச்சரியங்களோடு பார்த்திருந்தேன் .. எவ்வளவு மிகப் பெரிய எழுத்தாளர்களெல்லாம் இன்று என்னோடு..

ஒவ்வொரு புத்தகங்களையும் எடுத்து லேசாக புரட்டி பார்த்து விட்டு பக்கத்திலேயே வைத்தபடி இருந்தேன்..சிறிது நேரத்தில் எனது அறையெங்கும் பரவி இருந்த புத்தகங்கள் ..என்னை சுற்றி அடுக்கப் பட்டிருந்தது போல இருந்தது.. ஒவ்வொரு எழுத்தாளர்களிடமும் மிக நெருங்கிய நட்பை பெற்று விட்டேன்.. இப்படியே நாட்கள் நகர்ந்து போனது...நான் புத்தகங்களுக்கிடையில் ஊர்ந்து கிடந்தேன்..தீராத தாகத்துடன் வரிகளை வலிகளை விழுங்க கற்றுக் கொண்டு விட்டேன் ..அந்த அறையை விட்டு வெளியே எங்கும் நகர்ந்த பாடில்லை..யாரும் என்னைதொந்தரவும் செய்ய வில்லை.. பூட்டப்பட்ட அந்த அறையின் ஜன்னல் வழியே வெளியே யாரவது முக்கியமான நபர்கள் எங்கள் வீட்டிற்கு வருகிறார்களா? என்று பார்த்துக்
கொள்வதோடு சரி...

ஒரு கட்டத்தில் புத்தகங்களின் பக்கங்களில் குடியேற ஆரம்பித்தேன்.. சில தாள்களோடும் ..சில எழுதுகோல்களோடும் .. குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். அந்த குறிப்புகள் ஒரு பக்கம் தாள்களாக பரவி ஒரு குவியலை உருவாக்கிஇருந்தது..இப்போது புத்தகங்கள் தன் எடையை இழக்க ஆரம்பித்தது.. நான் புரட்டிப் படித்த புத்தகங்கள் காற்றில் மிதந்தன..ஒரு காகிதத்தைப் போல.. இப்படியே அந்தரத்தில் நான் படித்த புத்தகங்கள் காகிதத்தை போல மிதக்க ..நான் எடுத்த குறிப்புகள் தரையோடு தரையாய் கிடந்தது..

புத்தகங்களோடு படுத்துக் கிடந்த இரவுகளில் பசியறியாது..
உடல் இயக்க வெளிப்பாடுகள் ஏதுமின்றி இருந்தது ஆச்சரியமாய் இருக்கிறது..

ஒருவேளை அந்த கதைகளில் வரும் கதாபாத்திரங்களோடு நானும் உண்டு , கழித்து ,ஊர் சுற்றியது காரணமாய் இருக்கலாம்..
சில நாட்கள் கழித்து எனக்கு புத்தகங்கள் பரிசளித்தவன் வந்தான்..என் அறையை திறந்து மூடினேன்.. உள்ளே வந்து பார்த்தவன் வியந்துபோனான்.. அப்போது அவன் தந்திருந்த புத்தகங்கள் காற்றில் மிதப்பதை விட்டு ஒவ்வொன்றாய் தரையில் விழ.. எனது குறிப்புகள் இப்போது அந்தரத்தில் மிதக்க ஆரம்பித்தது..

அவன் வேறு புத்தகங்கள் எதாவது கொண்டு வந்திருக்கிறானா என்றுக் கேட்க அவன் நூலகத்திலிருந்து வந்ததாக ஒரே ஒரு புத்தகத்தை நீட்ட அதையும் வாங்கி அவசர அவசரமாக பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.. எனது தாகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்ததே யொழிய அடங்கவில்லை..எனது நாட்கள் இப்படியே நகர்வதை அருகிருந்து பார்த்த அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.. இப்படியே விட்டால் நான் பைத்தியமாகி விடுவேனென்று அவனிடம் என் வீட்டில் உள்ளவர்கள் சொல்லவும் அவன் அந்த முடிவை எடுத்திருக்கக் கூடும்..

தீராத தேடலுடன் படித்தபடி இருந்த என்னை தான் படிக்கப் போவதாக சொன்னான்.. அதிர்ச்சியுடன் நிமிர்ந்த போது எதையும் கண்டு கொள்ளாதவனாக வேக வேகமாக புரட்டினான்...

அதற்கு பிறகு நான் எதையும் படிப்பதே இல்லை..எங்கேயாவது எழுத்துக்கள் தெரிந்தாலே எரிச்சலைடைகிறேன்..என் பார்வையிலிருந்து எழுத்துகள் ஓடி ஒளிய வேண்டும் என விரும்புகிறேன்.. வீட்டிற்கு வாங்கி வரும் பொருட்களைச் சுற்றி இருக்கும் தாள்கள் கூட கடுங்கோபத்தை உண்டாக்குகின்றன.. அவன் இன்னும் என்னைப் படித்துக் கொண்டிருக்கிறான்......

தூத்துக்குடி முத்து

முத்துக்கு பெயர் பெற்றது
தூத்துக்குடி...
தூத்துக்குடியே பெற்றெடுத்த
முத்து நீ...

உன் தீக்குளிப்பை
ஈனர்கள் சிலர்
ஏளனமாய் பேசலாம்..
அது எப்போதும்
நடப்பதுதானே...

உன் தியாகம்
ஏராளமானோரை
உசுப்பி விட்டிருக்கிறது...

இருட்டை கொளுத்திப்
போட்ட வெளிச்சமே...
பல முகத்திரைகளை
கிழித்தெறிந்த தீவி(வீ)ரனே

வரலாற்று நாயகன் நீ...
வரலாற்றை புரட்டும் நாயகன் நீ...

உன் வெளிச்சத்தில்
பலரின் முகங்களும்
வெட்ட வெளிச்சமாயின..

நீ இட்ட தீ
புகைகிறது உலகமெங்கும்...
இனத்தீயாய்..

இது விளையாட்டு

வேடிக்கைதான்
பார்க்க முடிகிறது..
சிலரால்..

விளையாட்டையும்...
வெடிகுண்டு போடுவதையும்...

கர்ணா..

பணத்தின் பின் சென்ற
இனமழிக்க துணிந்த
வரலாற்றுத் துரோகியே...

நீ உயிர் துறந்திருந்தால்
உலகமே உன்னை கொண்டாடிஇருக்கும்..
உயிருக்கு பயந்து
எதிரிக்கு ஏவல் செய்யப் போனா(நா)யே ...

பூமித்தாய் உன்னை சுமந்ததிற்கே
தலைகுனிகிறாள்..
இரட்டையர்களில் ஒன்று
இதயமற்றுப் பிறந்ததை
காலம் அவளுக்கு தாமதமாய்
உணர்த்த நிலைகுலைந்த
அவளைத் தாங்கிப்
பிடித்துக் கொண்டிருக்கிறேன்
என் தாய் மாமன்..

ஒன்று கேள்
ஈனப் பிறவியே...

காலத்தால்
யூதாஸ்
இயேசுவால்
மன்னிக்கபடலாம்..

எட்டப்பன்
கட்டபொம்மனால்
மன்னிக்கப்படலாம்...

காட்டிகொடுத்த கர்ணாவே..
ஆயிரம ஆண்டுகள்
கடந்த பின்னும்
காலமும் மன்னிக்காது..
தமிழினமும் மன்னிக்காது...

அழிந்து போ
அடியோடு அழிந்து போ..

என்ன செய்ய?

நான்கு விக்கெட்
எடுத்ததற்கே
கல்லெறிகிறாய்...

நாற்பது ஆண்டுகளாக
ஆயிரமாயிரம் உயிர்களை
கொல்லும்
உன்னை
என்ன செய்ய வேண்டும்?...

அணி

காதணி
கையணி
காலணி
கழுத்தணி
யாவற்றையும்
கழற்றி வைத்து விட்டு
விளக்கணைக்கிறேன்..
உருவக அணி
உவமை அணி
சொல்பொருட்பின்வருநிலையணி
தற்குறி பெற்றணி
வரிசையாக அணிவகுத்து
நிற்கிறது..

தொலைக்காட்சியும் தொல்லையும்...

சின்னத் திரை மோகம் பிடிபட
சிந்தனையின் வேகம் தடைபடும்..

காய்கறிச் சந்தையில்
விலையினை தெரிந்துகொள்வதை விடவும்
சீரியல் நடிகைகளின்
நிலையினை தெரிந்து கொள்ளவே முனைவர்..

வீட்டிலிருந்தே திருவண்ணாமலை
தீபம் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வர்..
பக்தியாய் முக்தி நோக்கி சக்தி கேட்பார்..

விளம்பரங்கள் பார்த்தே
விடிந்தது முதல்
விழிகள் தூங்கும் வரை
அதனை பொருட்களும் வாங்கப்படும்
பலவீடுகளில் ...
வேண்டாதவற்றையும் வாங்கி நிறைப்பார்
சிலவீடுகளில் ...

அடுத்த தலைமுறையில்
இதெல்லாம் நடக்கும்..

உயிர்கொல்லும் குளிர்பானங்கள்
குளிர்சாதனப் பெட்டியில் குவிப்பார்..
உடல்நலம் குன்றம் போது
இளநீரில் இருந்தோ நொங்கிலிருந்தோ
தயாரிக்கப்பட்டு
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும்
மருந்துகள் அதிக பயன் தரும்..

எட்டுமணியானால்
மின்வெட்டானாலும்
கண்ணில் தாரை தாரையாய் நீர் வழியும்..

அறிவியல் அப்போது சொல்லும்
குறிப்பிட்ட நேரத்தில்
தொடர்ச்சியாய் பார்த்த
தொடர்கள் முடிந்த பின்னும்
முடிவிலியாய் தொடரும் கண்ணீர்
பரிணாம வளர்ச்சிஎன்று...

கணவன் மனைவிக்கிடையேயான
பரஸ்பரம் குறைந்து மாதத்தில் ஒருநாள்
பேசுவதற்காகவே
ஒருநாள் தேர்ந்தெடுக்கப் பட்டு
கொண்டாடப்படும் நாளாக
வெளியில் எங்காவது சந்தித்துப் பிரியும்
நிலை வரும்..

ஒரு வீட்டின் அத்தனை
அறைகளையும்
கண்ணாடி, துணிமணிகள் போல
தொலைக்காட்சிப் பெட்டிகள்
அலங்கரிக்கும்...
ஆளுக்கொரு அறையில்
தொலைகாட்சியில்
முகம் புதைத்திருப்பர்கள்...

தனிக்குடும்பம்
கூட்டுக்குடும்பம் மறைந்து
ஒரு நபர் வீடுகளாக
அறைகள் மாறும்..

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
வீதிக்கொரு பள்ளி கட்டுவோம் என்பது போல...
ஊருக்கொரு கட்சித் தலைவார்கள்
ஈசல்களாய் சேனல்கள் தொடங்குவார்கள்..

நிகழ்ச்சிகளுக்கிடையே
விளம்பரங்கள் வருவது போய்
விளம்பரங்களுக்கிடையே
நிகழ்ச்சிகள் வந்து போகும்..

மட்டைப்பந்து
அதாவது ஆங்கிலத் தமிழில்
கிரிக்கெட்...
கைப்பந்து
கால்பந்து மறந்து
மட்டைப்பந்தோடு
மந்தையாய் திரிவார்கள்...
குழந்தைகள்..மாணவர்கள்..

சிலம்பாட்டம்-சிம்புவின் படமல்ல...
தமிழரின் கலை
சிலம்பாதாம் ஒரு படத்தின்
பெயராக மட்டுமே அறியப்படும்..

திரையரங்குகள்
மூடப்பட்டு
கடித முகவரிகளிலோ
முகவரி தேடி வரும்
புதியவர்களுக்கோ
திரையங்குகள் பெயர்கள்
அடையாளப்படும்..

திரைத்துறை அடியோடு
சின்னத்திரைக்கும் புலம் பெயரும்..
புரட்டுவாரின்றி
புத்தகங்கள் தெம்பும்..

தொடர்ந்து சீரியல்
பார்பவர்களின் சங்கம்
தொடங்கப்படும்..
அதுவும் கூட்டப்படாமலே
இருக்கும்...
கூட்டப்பட்டாலும்
விட்டுப்போன நாட்களில்
நடந்த நிகழ்ச்சிகளை
அசைபோடவே அது பயன்படும்..

அண்டை வீடு
அண்டார்டிகாவில் இருக்கும்..
அண்டார்டிகா
அடுக்களைக்குள் அலறும்..

சேனல்களில் செய்திகள் மாறுபடும்..
உண்மைகள் வேறுபடும்..
சிலர் NDTV,BBC களில்
உள்ளூர் செய்திகளை அறிவார்கள்..

உறவுமுறைகள் கேள்விக்குறியாகும்..
ஒரு குழந்தை தன் தாயைக்
கண்டறிவதே பெரிய கின்னஸ்
சாதனையாகப் பேசப்படும்...

சந்திராயன் விண்ணிலிருந்து
நிலவோடு பூமியையும்
புகைப்படம் எடுத்து அனுப்புகையில்
ஒயர்களால் மரங்கள்
கட்டப்பட்டிருப்பதாக
காட்சிகள் சொல்லும்...
அங்கே
உறவுகள் அறுபட்டிருக்கும்...


Tuesday, 20 January 2009

பெண்ணே

துரியோதனர்களும்
துச்சாதனர்களும்
அதிகரித்து விட
கண்ணன்களும் கூட
மாறிப் போயினர்..

கண்ணன்கள்
கண்டு ரசிப்பதில்
அதி ஆர்வமாய்..

கர்ணன்கள்
கயவர்கலாகி
சுண்டு விரல் மோதிரத்தையும்
சுட்டு விடுவதில்
வல்லவர்களாய்..

சகுனிக்கும்
கூனிக்கும்
அரசாட்சி..

துர்வாச முனிவரும்
விஸ்வாமித்திரரும்
அடுக்கு மாளிகையில்
தொலைக்காட்சி முன்..

இங்கே இதில்
உனைக் காப்பாற்ற
உன்னை விட்டால்
வேறு யாருமில்லை...

கலியுகம்

ராமன்களுக்கு
மண்டோதரிகள்
தேவைப்படுகிறார்கள்..

வால்மீகிகளின்
புராணப்படைகள்
புரட்டப்படுகின்றன..

லட்சுமணன் சீதையின்
குளியலறை வழியே
குளிர்காய்கிறான்..

இருளல்லாத சூழலில்
பார்வைப் பின்னலில்
அகளிகைகலாகும் சிலர்..

கர்ணன்
துரியோதனின் ஆட்சியைக்
கைப்பற்றுகிறான்...

அர்ஜுனன்
கண்ணனோடு
போரில் எதிர் நிற்கிறான்..

குந்தி தேவியை
திருமணத்திற்கு பிறகும்
தொடரும் சூரிய தேவன்...

பாண்டியன் மாதேவி
நெடுஞ்செழியன்
சிதைக்கு தீ வைக்கிறாள்..

கட்டை விரலோடு
கைகளையும் சேர்த்துக்
கேட்கும் துரோணாச்சாரியர்கள்...

மனுநீதி சோழர்கள்
ஆராய்ச்சி மணி
அடிப்பவர்களைத்தான்
தேர்க்காலிலிட்டு
நசுக்குகிறார்கள்..

இப்படியாய் இன்னும்
தொடர்கிறது சில...

காதல்

காதல் ஒரு போதை
காட்டு வழி பாதை
கல் தடுக்கி விழுந்தேன் -உன்
கண் தடுக்க புதைந்தேன்

காதல் ஒரு நீரு
தாகம் அதில் நூறு
மூழ்கடித்து போகும் -அதில்
மூச்சும் திணறிப் போகும்

காதல் ஒரு யானைப்பசி
வாழைப்பழம் எல்லாம் தூசி
அள்ளக் குறையாத அட்சயமே
அணைக்கும் பசியை நிச்சயமே..

கல்லூரியில் பாடம்
கற்றுக் கொள்ளும் நேரம்
காதல் வந்து கலைத்தது
கவிதையாலே வளைத்தது..

தீண்ட வந்த காதல் என்னைத்
தின்று போனதேன்?
வானம் பறந்த சிறகுகள்
கூண்டில் அடைந்ததேன்?

போதும் போதும் லீலைகள்
பொய்தான் காதல் வேலைகள்

கால்கள் இரண்டும் நடக்கும் -அதில்
காதலின் தடம் கிடக்கும் -என்
கண்கள் இரண்டும் பார்க்கும்-அதில்
காதல் முத்துக் கோர்க்கும்

அமைதியில் என் மனம்
நூலகத்தின் அடுக்காய்..
அதிரடியாய் காதல்
புரட்டியது துடுக்காய்..

சாய்ந்து கொள்ள தோள்கேட்டு
காதல் என்னை கெஞ்சியது..
சரியென்று ஒத்துக் கொள்ள
சாய்த்து விட்டு துள்ளியது..

உன்னை நான் மீண்டும்
பார்க்கவும் வேண்டாம்..
உயிரினை நீயும்
உருக்கவும் வேண்டாம்..

காதல் ஒரு தொல்லைதான்
கண்கள் அதற்கு இல்லைதான்
காமம் அதன் எல்லைதானே

காதலுக்கு இல்லை வேலி
காதல் காலம் எல்லாம் போலி
கண்ணீர் துளி அதன் கூலி

சொல்லிக் கொண்டும் வரவில்லை
சொல்லிவிட்டும் செல்ல வில்லை
காதலின் லீலையில்
கவிழ்ந்தேன் மூலையில்

Monday, 29 December 2008

தெரியாதா?..

கண்ணிமையோரம்
கசியும் ஈரம்
காற்றுக்குத் தெரியாதா?

கனவுகள் தோறும்
காணும் உருவம்
நினைவுக்கு தெரியாதா?

துப்பாக்கி...

உன்
துப்பாக்கி ரவைகள்
சீறுவது...
ஆணவத்தின் வெளிப்படுத்த..

என்
துப்பாக்கி ரவைகள்
சீறுவது...
அமைதியை நிலைப்படுத்த..

காரியம் ஒன்றுதான்..
நோக்கம் வேறானது....
----------------------------

வேர்கள்...

எனது
வேர்களை
அசைத்து
பிடுங்கிவிடயெண்ணி...
கிளைப்பூக்களை
உதிர்க்கிறாய்...

புரிந்து கொள் எதிரியே..
பூக்கள் உதிர்க்கும்
ஒவ்வொரு
விதையும்...
பற்பல வேர்களைச்
சுமந்தே
விழுகின்றன ...
இம்மண்ணில்...

------------------------

ஒற்றைப்புள்ளி

ஏதேதோ
புத்தகங்களையும்
எத்தனையோ
பக்கங்களையும்
புரட்டினாய்...
என்னை
ஓரத்தில்
உட்கார வைத்து விட்டு....
-----------------------------
உனக்கான
இரண்டுகோடுகளின் மீது
ஒற்றைப் புள்ளியையும்
உனக்கான
ஒற்றைப் புள்ளியின் மீது
இரண்டுகோடுகளையும்
வரைகிறேன்...
ஒரு பாதி
பாம்பாகவும்..
மறு பாதி
மீனாகவும்...
மாறுகிறது..

தேவாவுடன்....


தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் 'இவள்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணத்தின் பதிவு...

தூங்கு...

தூங்கிய
என்னை எழுப்பி
'நன்றாய் தூங்கு'
என சொல்லிய பிறகுதான்..
தொலைந்து போனது
என்
தூக்கம்..
------------------------------
எண்ணும்மையாக
'ம்' மறைத்து
பேசுகிறாய்...
உம்மைத் தொகையாக
எப்போது பேசுவாய்...?
---------------------------

உதிர் சொற்கள்



நீ
உதிர்த்த
சொற்களை
முதலில் கோர்த்துப்
பார்த்துத் தோற்றுப் போனேன்...
மீண்டும் மீண்டும்
முயற்சித்ததில்
சில சொற்கள் விடுபட
மற்றதெல்லாம்
கோர்த்து
நீர் தெளித்து
மூடி வைத்து
மறுநாள் பிரித்தேன்...
ஒவ்வொன்றும்
இரட்டை வாக்கியங்களை
பிரசவித்தது...
உன்
சொற்கள் வீரிய விதைகள்..
என்
மனம் தாங்கும் நிலம்..

இதமான...

உன்

இதமான பார்வையிலே

என் இமைகள் நிறைத்தாய்...

உன்

பதமான வார்த்தையிலே

என்

இரவுகள் கரைத்தாய்...

உன்

ஓவியக் கைகளால்

சில கவிதைகள் பரப்பினாய்...

உன்

விதவிதமான கையெழுத்தை

அவ்வெள்ளைதாளில் நிரப்பினாய்...
--------------------------

Sunday, 28 December 2008

சின்ன சின்னதாய்..


உன்
ஓவியத்தின் அருகில்
ஒரு கவிதை
எழுத முடிந்தது...

உன்
கவிதையின் அருகில்தான்
ஒரு ஓவியம்
வரைய முடியவில்லை..

------------------------

உன் எழுத்துகளை
அள்ளி விழுங்குகிறேன்....
ததும்புகிறதென்
விரல்கள்...

------------------------
நீ
சென்ற பின்பு
எட்டி எட்டி பார்க்கிறது
என்னோடு
நீ
பாதி வரைந்து போன
ஓவியமும்...
------------------------

Wednesday, 17 December 2008

இந்த வாழ்வு

நிச்சயமற்ற
எதிர்பார்ப்புகளினூடே
நாளை பற்றிய
எவ்வித சேமிப்புமின்றி
நகர்கிற நொடிகளில்...

எந்த நொடியிலும்
கவ்விக் கொள்ள
காத்திருக்கும்
மரணத்தின் தூறல்..

இந்த கோப்பைச்சோற்றை
தின்று முடிக்கும் வரை
நீடித்திருக்குமா...
இந்த வாழ்வு?

நீயும் நானும் வேறு வேறு

உனக்கும்
எனக்கும்
தாய்மொழி ஒன்றுதான்
தொணிதான் வேறு..

உனக்கும்
எனக்கும்
தேவைகள் ஒன்றுதான்
காரணம்தான் வேறு..

உனக்கும்
எனக்கும்
ஊர் ஒன்றுதான்
இருப்பிடம்தான் வேறு..

நீயும் நானும்
வேறு வேறுதான்
ஆனால்
வேர் ஒன்றுதான்...

Monday, 1 December 2008

ஒற்றை சிறகு..

ஒற்றைச் சிறகாய்...ஒற்றைச் சிறகாய்..
காற்றில் பறந்தேன்..
கைப்பிடித்தாய்...

ஒற்றை வரியாய் ஒற்றை வரியாய்
ஏட்டில் இருந்தேன்..
நீ படித்தாய்..

உன் பெயரை சொன்னாலே
உயிரணுக்கள் சலசலக்கும்...
உன் குரலை கேட்டாலே
உதிரத்தில் அலையடிக்கும்..

வித்தகரே வித்தகியே

வித்தகரே வித்தகரே
விதை கற்றுத் தர தயக்கமென்ன...
உத்தமரே உத்தமரே
என்னை ஏற்றுக் கொள்ள கலக்கமென்ன..

உன்னில் என்னைக்
காணும் நேரமிது..
என்னில் உன்னை
காணும் நேரமெது?..

விபரங்கள் தெரியவில்லை இதில்
விரசங்கள் ஏதுமில்லை

பூவுமொன்று தேடி வர
வண்டுக்கென்ன ரோசமிங்கு?
தீவைப் போல தனித்திருந்தால்
தீர்ந்திடுமா ஊடலிங்கு?

சாயம் போகா வானவில்தான்
காயம் பட்டுத் துடிக்கிறதே ..
நீயுமிங்கு விலகி நின்றால்
தேயுமிந்த பிள்ளை நிலா..

உன்னை நெஞ்சில் எண்ணித்தான்
உண்மை எல்லாம் சொல்லினேன்...
உளறிக் கொட்டி விட்டேன்
போய் வரவா...

என் ஆயுளின் அந்திவரை...

என் ஆயுளின் அந்திவரை
அன்பின் அடைமழையாய்
வருவாயா...?

என் வேரினை நனைத்திடவே..
உன் கடைசி மழைத்துளியைத்
தருவாயா..?

நெடுந்தூரப் பயணம் போய் வரலாம்..
நெடுங்கதை பேசி மனம் ஆறலாம்..
தொடர் வண்டி தடதடக்கும்..
மலைச்சாரல் சிலுசிலுக்கும்..

பேசாத கதைகள் பேசிடலாம்..
ஓயாத அலையாய் பேசிடலாம்..

நிலக்கடலை கொறித்து நடைபோடலாம்..
நிலம் பதிக்கும் பாதத்தை எடைபோடலாம்..
மழை வந்து தொணதொணக்கும்..
மரக்கிளையும் முணுமுணுக்கும்..

ஊடலில் உன்னைக் கிடத்திடுவேன்..
கூடலில் என்னை படுத்திடுவாய்...

====================================


உன்னால் முடியாதா ....

முடியாதா உன்னால் முடியாதா
விடியாதா இரவு விடியாதா
யார் சொன்னது? -உனக்கும்
வேர் உள்ளது
வா வா வா
வாழ்வை வாழ்வாய் வாழ்வோம்...

முட்டி மோது முயற்சிகள் செய்..
நெட்டித் தள்ளு..
விட்டில் அல்ல விளக்கில் சாக
விண்மீன் நீயே..

வெற்றி கிடைக்கும் வரை
உறவுகள் சொல்லும் வீண் முயற்சி..
வெற்றி கிடைத்த போது..
உலகமே சொல்லும் விடாமுயற்சி..

இயங்கு இயங்கு இதயமாய்...
இமயத்தை விடவும் உயரமாய்..

பிறைநிலா தேய்வதில்லை..

வெள்ளை இரவே
பிள்ளை உறவே
கொள்ளை போனது
எந்தன் மனதே

பச்சை நிலவே
இச்சை கிளியே
பிச்சை புகினும்
காதல் சிறப்பே..

எழுதப்படா கவிதை நான்
உழப்படா நிலம் நான்-அன்பே
கலப்படம் ஏதுமில்லை -அதனால்
நிழற்படம் தேவை இல்லை...

சிறகில்லா பறவை நான்
உறவில்லா பாவை நான்-அன்பே
குறைகள் ஏதுமில்லை -ஆயினும்
பிறைநிலா தேய்வதில்லை...

உன் குரல் போதும்..

கண்ணே என் கண்ணே
உன் குரல் போதும்..
உயிரின் அணுவும் அதிரும்..

அன்பே என் அன்பே
நீ அருகிருந்தால்
எனது பூமி சுழலும்..

வானம் அது நம் வீடு..
வாழ்வோம் இரு சிறகோடு...
நிலவில் ஒரு திரை போடு- இந்த
உறவில் இனி பிரிவேது..

புத்தம் புது பூக்கள் மலரும்
நிதம் அது பூமியில் உலரும்..
முத்தமொன்று மேனியில் படரும்..
சத்தமின்றி உயிரணு மலரும்..

ஒருமுறை..

ஒருமுறை ஒருமுறை போதும் - என்
தலைமுறை வரைக்கும் தொடரும்..
மறுமுறை மறுமுறை கேட்டால் - சில
வரைமுறை கடந்திட தொடரும்..

சொல்லிவிட வா..
சொல்லி விட வா..

என் காதும் உனக்கு கருவறை..
உன் குரலைச் சுமக்கும் பலமுறை..
என் கனவும் எனக்கு கருவறை..
உன் வரவைச் சுமக்கும் பலமுறை...

மென் இதயம் தந்தேன் போய்விடு..
கீழ் இமைகளில் கொஞ்சம் ஓய்வெடு..
என் விதையில் மழையாய் தூறிடு..
புது வித்தைகள் கற்றுத் தேறிடு..

நான் உன் வாசகி

நான் உன் வாசகி
என்னில் வா சுகி..
நான் உன் தேவியே
நீ என் தேவையே..

இன்னும் சொல்லுவேன்-
உன் கன்னம் கிள்ளுவேன்
நெஞ்சில் அள்ளுவேன்-உயிர்
நேசித்தே கொல்லுவேன்..

உன் பார்வை என்னில் மேயும்...
தாக வேர்வை ஆறாய் பாயும்..
உன் மோகம் கொஞ்சம் ஓயும்...
என் தேகம் மெல்லத் தேயும்..

என் காதில் காதல் பாடு..
உன் இதழால் இதழை மூடு..
என் உயிரில் உயிரைத் தேடு...
உன் பிரிவில் மரணம் ஈடு..

======================

மௌனம்..

மௌனத்தை உடைப்பது...
எவ்வளவு கடினமொன்று..
அறியாதவன் அவன்

அவனுக்கும்
அவளுக்குமான
மௌனத்திரையைக் கிழிக்கும்
சில செயல்களைச் செய்தேன்...

மௌனம் விலக்கி
புன்னைகையை பிரசவித்து
அவள் போனபின்
அவன் சொல்கிறான்..

எங்களுக்கிடையேயான
மௌனத்தை
கிழித்துவிட்டதால்
நமக்கிடையேயான
சில கோடுகளை
வரைகிறேன்..
விலகி நில் என்கிறாய்...

இன்னும் நீடிக்கிறது..
அவர்களுக்கிடையேயான
நலவிசாரிப்புகளும்..
எங்களுக்கிடையேயான
மௌனப் பொறிகளும்...

புது வாசனை

தீப்பிடிக்கும்
வார்த்தைகளில்...
நீர் தெளித்து கோர்க்கிறேன்....
புதிய வாசனையோடு...
பூக்கிறது சில சொற்கள்..

பரம்பரை கனவுகள்...

எனக்கும்
சில பரம்பரை கனவுகள்
இருக்கின்றது..

அதிலொன்று
அகலமான நீளமான
ஐந்தறை கொண்ட
வீடொன்றில்

வரவேற்பறை
கழிவறை
குளியலறை
புத்தக அறை தவிர
ஐந்தாவதாய்..

அடிமைக்கான
ஆதியாயிருந்த
சமையலறையை
வெற்றாகவே
வைத்திருப்பேன்..

என் பிள்ளைகளுக்கு
அந்த அறையின்
சில கதைகளைச் சொல்வேன்...

அனுமதி

மழை
வரும்போது
அனுமதி கேட்கவில்லை
போகும் போதும் அப்படியே...

வாசனை

மண்ணுக்குள் புதைந்திருக்கும்
வாசனையை
வெளிக் கிளப்புகிறது..
சிறு மழை...

வாசனை
மண்ணுக்கானதா?
மழைக்கானதா?

Friday, 28 November 2008

ராகமும் சுகமும்..

நீ தந்த
சுகமும் ராகமும்
என்னை விட்டுப் போகும்
மோகமும் காமமும்
ஒருநாள் போகும்..
ஒருநாள் நீயும்..

ஒருபோதும்
உன்னாலேற்பட்ட
துயரம் மட்டும்
நீங்கப் போவதில்லை...

அவனும் பசியும்..

எத்தனையோ இரவுகள்
என் கதவுகளைத்
திறந்து விட்டிருக்கிறேன்..
அவன் இளைப்பாறலுக்காய் ...

அவன் பல கதவுகளைத்
தட்டியதையும்
பிற வீட்டு
சன்னல்களைத் திறந்ததையும்..
குடிசையின் பொந்துகளில்
உற்றுப் பார்த்ததையும்
நானுமறிவேன்..

எந்தக் கதவுகளையும்
நான் தட்டியதில்லை
பலமுறை பசியெடுத்த போதும்...

தானே வரும் உணவுகளையும்
ஏற்றுக் கொண்டதில்லை..
வற்புறுத்தியபோதும்..

புலி பசித்தாலும்
புல்லைத் தின்னாதாம்..
பசு பசித்தாலும்
எலும்பைத் தீண்டாது..!

முதன் முதலில்

முதன் முதலில்
உன் காதலைச் சொல்லிய
இளநீர்க் கடை...

முதன் முதலில்
முத்தம் பெற்றுக் கொண்ட
பேருந்து பயணம்..

முதன் முதலில்
மழைக்கு ஒதுங்கிய
நிழற்குடை..

முதன் முதலில்
மணமாகி கலந்து கொண்ட
தோழியின் திருமண வரவேற்பு...

யாவற்றிற்கும்
தெரிய வாய்ப்பில்லை..
விவாகரத்துக்கு நாம்
அனுமதி கோரியிருக்கும் மனுபற்றி...

காலமும் காதலும்..

நான்
நெருங்கும் போதெல்லாம்
விலகிப் போயிருக்கிறாய்..

நீ
நெருங்கும் போதெல்லாம்
நானும் விலகிப் போயிருக்கிறேன்..

ஒருநாள்
நம்மை விட்டு
வெகுதூரம் விலகிப் போயிருக்கும்..
காதலும்...காலமும்...

வலியுடன்..

சிறகுகளைப்
பிய்த்தெறிவதில்
அந்த ஆர்வமுடையவனே
ஏன் சிந்தனைகள்
சிறகுகள்அல்ல..

கயிறுகளை
இறுக்கி முடிச்சிடுவதில்
விருப்பமுடையவனே
என் சுதந்திரம்
கயிறுகளல்ல ...

சன்னல்களை
சாத்துவதில்
சுகம் காண்பவனே
என் எண்ணங்கள்
சன்னல்களல்ல..

ஊசிகள் கிழிசலைத்
தைத்தால்
வலியிருப்பதில்லை..
உணர்வுகளை
வார்த்தைகளால்
தைத்தால்
வலி பொறுப்பதில்லை...

வலியோடு..

அவனென்னை
அதிகமாய் நேசித்தான்..
சில சமயம்
நானும் கூட...

நிறைய முத்தங்களைப்
பரிசளித்தான்
சில நேரங்களில்
ஒன்றிரண்டு நானும்...

பிரிந்து போவதில்
மும்முரமாய் இருக்கிறான்..
சில போதில்
எனக்கும்...

உறவிற்கும்
பிரிவிற்குமான
ஊடாடலை
எப்படி சொல்ல?

வரிகளால்
வலிகளைச் சொல்ல முடியாது...

மழையே

அந்த மேகம்
விதைத்த
மழையை இந்த பூமி
அறுவடை செய்கிறது...

&&&&&&&&&&&&&&&&&&&&&

விடிய விடிய பெய்த மழை..
விடவே இல்லை
மறுநாள் விடியலிலும்...

&&&&&&&&&&&&&&&&&&&&&

முதல் நாள் மழையாலான
வெள்ளம்
வடியவே இல்லை..
அதற்குள் இன்னுமொரு மழை...

&&&&&&&&&&&&&&&&&&&&&&

மழைத்துளிகள்
ஓடிப் பிடித்து
விளையாடுகின்றன..
பெருகுகிறது ஆறு...

&&&&&&&&&&&&&&&&&&&&&&

தூறல் நின்றதால்
அழுகின்றன..
இலைகள்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சொல்லித் தரும்....

வெளிச்சம்
என்ன சொல்லித் தரும்..
இருளை அறியாத வரையில்...

உறவு
என்ன சொல்லித் தரும்..
பிரிவை உணராத வரை..

புத்தகம்
என்ன சொல்லி தரும்..
புரட்டாத வரை..

வாழ்க்கை
என்ன சொல்லித்தரும்
நீயில்லாத ஒன்றை...

ஆண் பெண்..

ஆணுக்கும்
பெண்ணுக்கும் பிறந்து..

ஆணிலோ
பெண்ணிலோ இணைந்து...

ஆணையோ
பெண்ணையோ பெறுவதைத்தவிர....
என்ன இருக்கிறது
இந்த வாழ்க்கையில்...?


உனக்குள் நான்..

உனதசைவுகளில்
தொடக்கி விடுகிறது
எனக்கான இளைப்பாறல்...

*************************************

வரமும் கோபமும்
ஆளுக்கொரு திசையில்
நம்மை இழுத்துப் போடும் போதும்..
எங்கிருந்தோ
வருடி விட்டுப் போகிறது...
கண்களின் குறும்புன்னகை..

*****************************************

எந்தத் திசையிலிருந்தாலும்
நேர்க்கோட்டில்
சந்தித்துக் கொள்ளும்
கண்கள் சொல்லி விடுகின்றன...
ஒருவரை ஒருவர் தேடியதை..

**********************************************

முத்தமிடத் துடிக்கும்
உனது உதடுகளுக்கு
எப்படிச் சொல்லுவேன்...
இமைக்கும் தோறும்
மொத்தமாய் உன்னை
முத்தமிடுவதை...

**************************************

கண்களுக்குள் இதயமும்
இதயத்திற்குள் கண்களும்
சில சமயங்களில்...

உனைப் பார்த்தவுடன்
இதயம் படபடப்பதும்
கண்கள் துடிப்பதும்...

*************************************

நேரங்காலமற்ற
பணி உளைச்சலிலிருந்து
மீட்டெடுக்கும்
முயற்சியில்
புதைந்து போகிறேன்...
நானும் உளைச்சலுக்குள்...

***********************************************

சொல்லி விட்டுப்
போவதை விட
சொல்லிக் கொள்ளாமல்
போகும் தருணங்களில்
சுமையாகின்றன..
உன் நினைவுகள்..

********************************************

இமைகளும் சுமையாகின்றன...
உன்னைக் காணாத போதுகளில்
நீரும் மோராகின்றது
உன்னைக் கண்டதில்...

*********************************************

நமக்குள் நேரும்
சண்டைக்குப் பிறகு
பூக்கின்றன..
என்னிடம் கை நிறைய
கவிதைகளும்..
உன்னிடம் நேசம் வழியும்
கண்களும்...

******************************************

உயிரோடோ
மெய்யோடோ
சேராமல்
துணைக்காலாய்
தனித்திருக்கிறேன்...
பொருத்தமான
உயிர் மெய்யாய்
நீ இருந்தால்..

***********************************

நமக்கான
விஷயங்களில்
ஏற்படும் முரண்களை விட
பிறரால்
தோற்றுவிக்கப்படும் முரண்கள் ...
இமயமாய்...

**************************************************

தொடர்பு எல்லைக்கு
அப்பாலிருக்கையில்
புரட்டுகிறேன்
நமது முதல் சந்திப்பின்
பக்கங்களை....

*******************************************************

நீ அணைக்கத் தவறும்
அழைப்பினை
என்னுடையதென
அறிந்ததும்
ஒரு குறுஞ்செய்தி மூலம்
குதூகலப் படுத்துகிறாய்..

****************************************************

எதேச்சையாய்
கன்னம் கிள்ளிப் போனாய்..
ஒவ்வொரு முறை
கடக்கும் போதும்
உனக்குள் கிள்ளிப் போடுகிறேன்
சிறு நெருப்பை..

*****************************************************






மழை மழை

மழையே பொழியாதே
பாவம்
வீடற்ற மனிதர்கள்..

*****************************

யாரைத் திட்டித் தீர்க்கிறாய்
பெரு மழையே..

******************************

வெயிலைத் தாங்க முடிகிறது..
இந்த மழையைத் தான்
தாங்க முடியவில்லை...

உன் கோபத்தைத் தாங்க
முடிந்த என்னால்...
உனதன்பை தாங்க முடியாதது போல...

***********************************************

மழைக்குப் பிந்திய
சாலையைப் போல்..
உன் சந்திப்பிற்குப் பிறகான
என் மனது..

**********************************************

மழை
வரும்போது அனுமதி
கேட்கவில்லை..
போகும் போதும்
அப்படியே...

****************************************

விடாமல் தூறுகிறது
மழை...
விட்டுத் விட்டுத்
தூறுகிறாய்..
உள்ளுக்குள் நீ..

***********************************

மண்ணுக்குள்
புதைந்திருக்கும்
வாசனையை
வெளிக் கிளப்புகிறது
சிறு மழை..

*********************************

அந்த மேகம் விதைத்த
மழையை
இந்த பூமி அறுவடை
செய்கிறது...

*********************************

விடிய விடிய பெய்த
மழை..
விடவே இல்லை
மறுநாள் விடியலிலும்..

************************************

முதல் நாள் வெள்ளம்
இன்னும் விடியவே இல்லை..
அதற்குள் இன்னுமொரு மழை...

***************************************

மழைத்துளிகள்
ஓடிப் பிடித்து
விளையாடுகின்றன...
பெருகுகிறது ஆறு...

********************************************

தூறல் நின்றதால்
அழுகிறது
இலைகள்...

********************************************



வலி

வலிக்கிறது...
கொட்டும் மழையை
எப்படித் தாங்குவார்கள்
அவர்கள்?

**********************

அழுது விடாதீர்கள்
அது கண்ணீர்த் துளிகள் அல்ல..
உள்ளத்தைக் கொத்தும் உளிகள்..

**************************************

மாடுகளை விட்டு விட்டு
நாடு கடந்து வந்தோம்...
மூக்கணாங்கயிறுகளின்..
முடிச்சுகள் கைகளை
இறுக்குகிறது...

*************************

விடை பெற்று
கொண்டு வரவில்லை..
வினாவோடு
வந்திருக்கிறோம்..

*************************
முகவுரை
எழுதும் முன்னே
முடிவுரைக்கு வழி சொல்லும்
இந்த வாழ்வு என்ன வாழ்வு?

*********************************

அலையலையாய் வருகிறாய்..
துளித் துளியாய் குதிக்கிறோம்..

*********************************

கரையில் கால் வைக்கிறோம்..
கொட்டு மழையிலும்
ஆதி மண் சுடுகிறது...

********************************

தொலைத்த..

என் பெயரைத் தொலைத்த..
தருணத்தில்
உன்னை சந்திக்கிறேன்...

எனக்கு என்ன பெயர்
சூட்டுவாய்?

உன்னைப் போலத்தான்..

உன்னைப் போலத்தான்
இந்த மழையும்...

அடிக்கடி ஈரமாக்கி
ஆடை மாற்ற வைக்கிறது..

உன்னைப்போலத்தான்
இந்த மழையும்

சேறு இறைக்கவும்..
கழுவவும்போல்
அடிக்கவும்..
அணைக்கவும்..

உன்னைப் போலத்தான்
இந்த மழையும்...
முடுக்கி விடவும்..
முடக்கி விடவும்..

மழையே

சொல்லித்தான் ஆக வேண்டும்
உன்னாலேற்பட்ட
தாக்கத்தை..
ஊக்கத்தை..
ஏக்கத்தை..


மழையின் வரவு

ஈரம் காயாத துணிகள்
மரம் குளிக்கும் காலம்
இல்லை பேசும் ரகசியம்
கோலம் காணாத வாசல்
தலை குளிக்காத காலை
மழையின் வரவில்...

**********************

எங்கோ இருக்கிறாய்
மழை விசாரித்துவிட்டுப்
போகிறது...
உன் அருகாமையை...

***********************

கரிகாலன் கலங்கி இருப்பான்
வீணாய் போகும்
மழை நீர் கண்டிருந்தால்..

**************************

இந்த மழைக்கு
கொஞ்சிப் பேசவும் தெரிந்து இருக்கிறது
மிஞ்சிப் போகவும் தெரிந்திருக்கிறது..
மனிதர்களைப் போல...

************************

மழையை
வழியனுப்பி விடாதீர்கள்...
நான் ஊன்றிய விதை
இன்னும் துளிர் விட வில்லை...

*********************************

மண்ணை மட்டுமல்ல
என்னையும் அரித்துப் போன
மழை நீ..

**********

என்னதான் சோகம்
கொஞ்சம் அழுவதை
நிறுத்தி விட்டுச் சொல்லேன்
மழையே....

*************

இந்த மழைத் துளிகளை
யாரும் மிதித்து விடாதீர்கள்..
உங்கள் பாதத்தை
கிள்ளி விடப் போகிறது...

****************************

மழை மழையாய்..

இலைகளோடு
இந்த மழைத் துளிகள்
இரவு பகலாய்
அப்படி என்னதான்
பேசித் தீர்க்கிறதோ?

*********************

நட்சத்திரங்கள்
ஊருக்குப் போகட்டும்..
மழைத் திருவிழாவிற்கு
மனிதர்களே போதும்..

**********************

மரங்கள் அழிந்த
சோகத்தில்
ஆறுதலடையா மேகம்
அழுதழுது தீர்க்கிறது
மழையாய்..

************

மேகம் உருகி
மழை பொழிய...
மழை உருகி
மண் தொட...
மண் உருகி
விதை துளிர்க்க...
விதை உருகி
விருட்சமாகிறது...

*****************

Wednesday, 26 November 2008

ஊதா நிற உடை

உனக்குப் பிடித்தமானதென
தெரிந்து
ஊதா நிற உடையணிந்த போதும்
எனக்காகத் தானென
இறுமாப்புக் கொள்கையில்
கண்கள் காட்டிக் கொடுத்துவிடுகின்றன...
மறைக்கும் எனது சொற்களை...

காவிரி

எடுத்துக்காட்டாய்
உன்னைக் கைகாட்டும் நேரங்களில்
காவிரியாய் பொங்கும்
நெஞ்சம்...

ஏதேனும் ஒன்றில்
'க்கு' வைத்துப் பேசுகையில்
அதே காவிரியாய்
வறளும்....

நட்பு

வடக்கிருந்து
உயிர் நீத்த நட்பு
கோப்பெருஞ்சோழன்
பிசிராந்தையாருடையது ...

அருகிருந்து
துயர் நீக்கும் நட்பு
நம்முடையது..

முரண்பாடு

முரண்பாடுகளால்
பின்னப்படும் வலைகளில்
சினம் விடுவிக்கப்பட்டு
சிரிப்பு அடைபடுகிறது...

அப்பொழுதுகளில்
உடன்பாட்டுக்கான
ஆயத்தமாய்..
ஒரு கண் சிமிட்டலை
உணர்கிறேன்....

சாபக்கேடு

அலைபேசியில்
பேசிக் கொண்டிருக்கையில்
எழும் பெரும்மூச்சினை
மொழிபெயர்க்கத் தெரிந்த போதும்..

அருகிருக்கையில்
எழும் எண்ணங்களை
அறிந்து கொள்ள முடியவில்லையென...
பிதற்றுவதை
நீ நம்புவது
சாபக்கேடுதான்..

அரவணை

என் ப்ரிய மழையே
இப்போதே
என்னுள் விழுந்து விடாதே..

ஆறாகி
உன் போக்கிலே சென்று
இறுதியில் வந்து சேர்
கடலாய் உன்னை
அரவணைத்துக் கொள்கிறேன்...

விலகு

கண்கள் வலைபின்னியவுடன்
இரண்டு நிகழ்வுகள்
அரங்கேறுகின்றன...

ஒன்று
அனைத்தையும் மறந்து விடுகிறேன்...
இரண்டு
என்னையே தொலைத்து விடுகிறேன்...

தயவு செய்து
'விலகிப் போ' வென சொல்லவில்லை..
'விலகி நில்' என்பதே என் வேண்டுகோள்...

அல்லி புல்லி

எண்ணங்கள் ஒத்துப் போன
போதிலும்...
இணக்கம் இருந்த போதிலும்
பிணக்கிற்கு பஞ்சமில்லை...
ஒரு பூவின் அல்லிபுல்லி
இதழ்களைப் போல...

நீ

என் உதடுகள் திறந்து
பேசுகிறாய்..

என் விழிகள் திறந்து
பார்க்கிறாய்..

என் உணர்வுகளை அழித்து
வாழ்கிறாய்...

நறுக்குகள்....

பேசக் கற்றுக் கொள்..
அல்லது
பேசாமலிரு...

**************

என்னை
நகர்ந்திருக்கச் சொல்கிறாய்...
விலகிஇருக்கவா?
விலகாதிருக்கவா?

********************

புத்தகமெங்கும்
உன் வாசனை
நிரம்பி இருக்கிறது....
எப்போது புரட்டினாய்..
நானறியாமல்..

****************

இன்னும் தொடங்கவே இல்லை
அதனாலென்ன...
முடித்துக் கொள்ளலாம்
இந்த வாழ்க்கையை...
இன்னுமோர் தொடக்கதிற்காக..

*********************************

இவ்வெற்றுத் தாளில்
கிறுக்க பலருக்கும் ஆசைதான்..
கவிதைக்காகக்
காத்திருக்கிறது இந்த தாள்....

******************************

அறுந்துபோன
உறவுகளை..
முடிச்சிட முனையப்
போவதில்லை...
முடிச்சுகள்
இறுக்குமெனில்...
அறுந்தே இருக்கட்டும்..

இசைக்கருவி..

நான்
இசைக்கருவியாக பிறக்க விரும்புகிறேன்...

நீ மட்டும்
இசைக்கும் கருவியாக...

யாராலும்
கவனிக்கப் படாத இசைக்கருவியை
மீட்டும் நாளொன்றில்
பேரிரைச்சலொன்று...
எரிச்சல் தரலாம்..

தொடந்து மீட்டு
தூய ராகங்கள் உயிர்த்தெழும்...

மீட்டுவதை நிறுத்தும் போது
வேறாரும் மீட்ட இயலாத
வினோத இசைக்கருவி இது...

இசைகிறேன்..
இசை...


இருவாழ்வி

மழைக்கால தவளைகளை
பிடிப்பதில்லை..
சத்தத்தினூடே கூடுவதால்..

வேகத்தடை

வேகத்தடையை
நீக்கினார்கள்..
பள்ளமானது பாதை
இப்போதும்
அது வேகத்தடையாகவே
இருக்கிறது...

கேள்வி கேட்காதே

மடி மீதிடு...
முடி கோதிடு...
முகம் துடைத்திடு..
அகம் பேசிடு..
விரல் தீண்டிடு..
கேள்வி கேட்காதே...

நீர்

உன்னை நினைக்கையில்
ஆறாய்ப் பெருகும் எண்ணங்கள் ...
அருவியாய் கொட்டும் ஆசைகள்...

உன் அருகாமையில்
வற்றித்தான் போகிறது...
சின்ன தீண்டல் போதும்..
உயிரூற்றுப் பெருக்கெடுக்க....

நிழல்

உனது நிழலாய் தொடரும்
வாரம் கொடு..

மறுத்தால்
மரமாக சாபமிடு..

உனக்கு நிழல் தருவேன்
என்னை தேடுகையில்....

ஒரு வார்த்தை

வண்ணத்துப் பூச்சிகள்
பரிசளிக்க வேண்டாம்...

ஓவியங்கள்
வரைந்து தர வேண்டாம்..

பாடல்கள்
பாட வேண்டாம்..

முகம் புதைத்தழ
மடி வேண்டாம்...

கவிதைகள் எழுத
எழுதுகோல் தர வேண்டாம்..

விரும்புகிறேனேன
ஒரு வார்த்தை போதும்...
வாழ்ந்திடுவேன்...
ஏழு ஜென்மங்களையும் ஒன்றாகவே...

காதலும் நட்பும்

காதல்
உரிமை எடுத்துக் கொள்வது..
நட்பு
உரிமையாகவே இருப்பது...

காதல்
அன்பை முன்னிலைப் படுத்துவது..
நட்பு
அன்பாகவே இருப்பது...

காதல்
மீறலுக்கு மன்னிப்புக் கோரும்..
நட்பு
மன்னிப்பையே மீறலெனக் கருதும்..

காதல்
ஆழமாகும் அல்லது அகலமாகும்
நட்பு
ஆழத்தில் அகலமாகும்..

காதலும் நட்பும்
ஒரு பூதமென குப்பிக்குள்
அடைபட்டிருக்கிறது..
திறப்பவரின் தேவையைப் பொறுத்து
இரண்டிலொன்று இதயம் கவ்வும்...

நட்பும் காதலும்

நட்பும் காதலும்
நூலிழை வித்தியாசத்தில் தான்
பிரிக்கப்படுகின்றன..

நூலிழை தான் அளவுகோலா?
எதைக் கொண்டு அளப்பது..?
சொல்லா..? செயலா?

சொல்லெனில்
தவிர்க்கப்பட வேண்டியதென்ன?
செயலெனில்
விலக்கப் பட வேண்டியதென்ன?

உடலா? உள்ளமா?
உடலெனில்
எவ்வளவு தூரம் தள்ளி இருக்கலாம்?
உள்ளமெனில்
எவ்வளவு தூரம் இடம் கொடுக்கலாம்?

யாரும் புரிந்து கொள்ள முடியாத
நூலிழையை
நண்பர்களோ,காதலர்களோ
உணர்ந்திருப்பார்களோ?

காதலர்களை நண்பர்களென
அங்கீகரிப்பதும்
நண்பர்களை காதலர்களென
அடியாயாலப் படுத்துவதும்
ஒரு நூலிழைதான்...

மழை மழையாய்...

யாருமற்ற நெடுஞ்சாலையில்
தனித்து நடக்கிறேன்..
எங்கிருந்தோ பின் தொடர்ந்த மேகம்
அனுப்பி இருக்கிறது...மழையை..

**********

புனைவற்ற புன்னகையாய்
பூத்துக் கொட்டுகிறது
மழை...

**********

மழை இரவு
வீட்டில் உன் இருப்பு
வேறென்ன வேண்டும்?

**********

கை நிறைய கவிதைகளை
மழை தருகிறது
கதவடைப்பு செய்து
காகிதத்தோடு அமர்ந்திருக்கிறேன்..

**********

மண் மீது மழைத்துளி
என்ன எழுதி எழுதி
அழிக்கிறதோ?

**********

நொடிநேரப் பூந்தொட்டிகளை
படைக்கிறது
ஒவ்வொரு மழைத்துளியும்...

**********

குடை தவிர்த்து
நடக்கலாம்
கேள்வி கேட்பவர்களுக்கு
விடை சொல்ல இந்த
மழை இருக்கிறது..

**********

இந்த மழையில்
கொஞ்சம் நனைந்து கொள்ளலாம்
நம்மை நனைக்கும் துளிகளாவது
சங்கமமாகட்டும்..

**********

ஒவ்வொரு துளிகளையும்
முடிச்சிட முயன்று
தோற்றுப் போகும் மழை...

**********

மேகத்தையே
வானமாகக் காட்டும்
சாகச மழை ...

**********

தொணதொணக்கும் மழை
முனுமுனுக்கும் இலை
என்னதான் பேசித் தீர்க்கிறது?

**********

மௌனத்தை உடைக்க
முயற்சிக்கிற இந்த மழையை
என்ன செய்வது?

**********

வீட்டிற்குள் வருமிந்த காற்று
மழைத்துளிகளை பொறுக்கி
எடுத்து வருகிறது...

**********

விடாது தூறும் மழை
எதை விமர்சிக்கிறது?

**********

நில் மழையே
சொல் மழையே
யாரை சந்திக்க வந்தாய்?

**********

சில்லென்ற மழை
சில நேரங்களில் பிழை..

**********

மாலை நேரமும்
மழைக்கால நாட்களும்
அள்ளி தந்த கவிதைகளை
தள்ளி வைத்து விட்டு
காத்திருப்பு தொடர்கிறது
சாரல் காற்றினூடே...

***********

Friday, 21 November 2008

துளித்துளியாய்...

#சிறைஎடு..
முறையிடு..
மறுத்தால்
முரண்டுபிடி...
உறக்கம் களை
உணர்வளி ..
உயிர்ப்பி..

# புரட்டி எடு..
புத்துயிர் கொடு..
அரற்று..
மிரட்டு..
அடக்கு..
அகழ்ந்தெழு..
அணுவில்
அணுவாய்
ரசி
புசி...

# வியர்க்க வை
விசிறி விடு
பதமாய் கடி
இதமாய் வருடு..
அழுத்தம் கொடு
அனலில் இடு..

# கரைத்திடு..
கரைந்திரு..
நுரைத்துப் பொங்கு..
மடி மீது
முடி கோது
இடைவேளை
இனியேது?

# சிக்க வை
சிறக்க வை
நிற்க வை
நிறைக்க வை
மக்க வை
மலர வை..

#திறந்து படி
கறந்து குடி
விரட்டி பிடி
விழியால் திரி..

# தீவாக்கு
திரியாக்கு
பூவாக்கு
புயலாக்கு...
சுற்றம் மற
சொர்க்கம் திற..

உரமாயிரு..
உறவாயிரு..
உலகாயிரு..
உயிராயிரு..

#மூர்ச்சையாக்கு
முழுமையாக்கு..
மூச்சில் கல
மூர்ச்சை இழ..
நிம்மதி எழ..
நினைவை இழ..
புதைந்திரு
புகைந்திரு...

#மழையால் பொழி..
பிழையால் அழி..
இருட்டாக்கு
ஒளியூட்டு...
திரைகிழி..
நிறையளி ..
குறை தள்ளு..
குறுக்கள்ளு..

#மலை மோது
கிளை தாவு..
கனி பறி..
பூ நுகர்..
உயிர்வெளி..
உயர்வளி..

#என்னை உயிராக்கு
எனக்குள் உயிராகு...

பட்டாம்பூச்சி

நெடுஞ்சாலை பயணத்தில்
உரசிச் செல்லும்
பட்டாம்பூச்சியாய்..
என்னைக் கடக்கிறாய்..

தக்க வைத்து விரும்பி
திரும்பிப் பார்க்கிறேன்
காணவில்லை சுற்றிலும்..

பாதி வழியில்
படபடக்கிறது என்
சட்டைப் பையில்
உன் இறக்கைகள்...

ஈர்ப்பு

எழுதி எழுதி தீர்க்கிறேன்
தீர்ந்துவிடவில்லை
உன் மீதான ஈர்ப்பு..

தூரத்து மழை

தூரத்து மழையை
ரசிக்கிற மனமும்
உச்சிமோந்து
பாராட்டும் குணமும்
சிலருக்கு இருந்தாலும்..
உன்னிடம் கண்டுகொண்டேன்..
உற்சாகப் பெருவெளி நீ..
உறையா ஊற்று நீ..
நீக்கமற நிறைந்திரு..
நினைவுகளின் வெளியில்...

பத்தோடு ஒன்று..

பத்தோடு பதினொன்று எனக்
கேட்கிறாய்
என்ன சொல்ல..
கண்ணோடு மணி என்றா?
மண்ணோடு விதை என்றா?
இல்லை தோழா..

ஒற்றைச் சிறகுள்ள எனக்கு
மற்றொரு சிறகு தந்து
பறக்கக் கற்றுக் கொடுத்தது
நீதான் தோழா...

அவரவர் பாதையில்

வெட்ட வெளியில்
பொட்ட வெயிலோ
கொட்டும் மழையோ
ஒட்டும் மணலோ
தொட்டு விடும் தூரத்தில்
விட்டுவிலகாமல் பயணிக்கிறோம்...

இருவர் செல்லும் அளவுள்ள
இந்த பாதை
ஒத்தையடி பாதையாக மாறி
முடிவடைந்துவிடாது ..
மீண்டும் இருவழிப் பாதையாக
மாறுகிறது..

அவரவர் பயணத்தை தொடர்கிறோம்..
சஞ்சலமற்று!

அடுக்கிய எண்ணங்கள்

என்னுள்
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
எண்ணங்களை
கலைத்துப் போட்டது
உன் சொற்கள்...

மீண்டும் அடுக்கும் முயற்சியில்
கலைந்து போனது
நமக்கான இடைவெளி ..

இப்போது அந்த அடுக்குகளில்
ஒன்றில் மேல் ஒன்றாய்
நாம்...

நீ என்னில்

நீ என்னில்
கரைந்து போகலாம்..
உறைந்தும் போகலாம்..

நான் உன்னில்
புதைந்து மறையலாம்..
புணர்ந்தும் பிரியலாம்...

என் அதிர்வுகளை
உள்வாங்கும் பக்குவமும்..
உன் தேடலை
கண்டுணர்ந்த துடிப்பும்...
நமக்குண்டு

இந்த தகுதி போதும்
யாவற்றுக்கும்..

நட்பு காலம்

நட்புக் காலத்திற்குள்
பாலமமைத்து
பாதம் தாங்கி
வரவேற்கும் உன் அன்பை
எப்படி தாங்கிக் கொள்வேன்?
சின்ன மனதுக்குள்...

கவிதை கேளுங்கள்

உன் வார்த்தைகளை
அசைபோடும்
ஒவ்வொரு முறையும்
கண்கள் வழி கசியும்
காமத்தை எப்படி மறைப்பது?

அது சரி
ஏன் மறைக்க வேண்டும்?

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?