Wednesday 22 October, 2008

கண் பேசும் கவிதைகள்-1

*உனது விரலின்
வெளிச்சத்தில்
என் வெட்கங்கள்
எல்லாம்
கண்ணாமூச்சி ஆடின..

வெட்கம் வடியத்
தொடங்கியதில்
மீறப்பட்ட எல்லைகள்
வெளியின்றியே திரிகின்றன
இன்னமும்...
------------------------
*இரவுக்கும்
விடியலுக்குமான
இடைவெளியில்
தொலைகிறது
நம்பிக்கையின் கணம்...

நிறைவிற்கும்
நிறைவின்மைக்கும்
இடையிலான ஊசலில்
அலைகிறது மனம்...
---------------------
*காற்றில்
விதைத்திருக்கிறேன்
உன் நினைவுகளை

நீயோ நானோ
இல்லாத போதுகளில் கூட
நம்மைப் பற்றி
பேசியபடி இருக்கும்
எந்த ஜன்னலோர
பயணியிடமாவது...
--------------------------------
*ஒருமுறை
விதைக்கப்படுவதில்லை
நம்பிக்கை..
ஒவ்வொரு முறையும்
வளர்க்கப் படுவதே
நம்பிக்கை...

ஒருமுறை
ஊற்று எடுப்பதல்ல
காதல் ..
ஒவ்வொருமுறையும்
பிரவகிப்பதே காதல்...
------------------------

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?