Tuesday 17 July, 2012

விருதுகளும் விதிகளும்





அயல்நாட்டிலிருந்து வந்து தமிழக உணவாக ஆனவை



இவள் பாரதி

சில வருடங்களுக்கு முன்பு வரை சாம்பார், ரசம், பொறியல், அவியல், கூட்டு என பாரம்பரிய உணவுவகைகள் இடம்பிடித்திருந்த தமிழக உணவுப் பட்டியலில் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த உணவுகளும் கலந்து தமிழக உணவாகவே ஆகிவிட்டன. அதில் சிலவற்றின் கதையும், சுவையும்...

பிரியாணி 

டிகிரி படித்த ஒருவர் கூடுதலாக வேறு ஒரு பிரிவில் டிப்ளமோ கோர்ஸ் செய்திருப்பதைப் போல பிரியாணி சமைக்கத் தெரிவது சமையல் கலையில் கூடுதல் தகுதி என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. பிரியாணி இஸ்லாமியர்களின் உணவு என்று அறியப்பட்டாலும் பிற மதத்தினரது திருமண விசேஷங்களிலும் முக்கிய இடம்பெற்றிருக்கிறது.

வறுத்த எனும் பொருள் தருகிற berya எனும் பாரசீகச் சொல்லில் இருந்து வந்தது பிரியாணி எனும் சொல். பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி உலகம் முழுக்க சென்ற வணிகர்களால் தெற்காசியாவில் பரவியது. சிந்தி பிரியாணி, தாய்லாந்து பிரியாணி, இலங்கை பிரியாணி, சிங்கப்பூர் பிரியாணி என அந்தந்த நாட்டில் தயாராகும் உள்ளூர் பிரியாணி வகைகளை சுவைத்து சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இன்று இந்தியாவில் பலவகை பிரியாணிகள் தயாராகின்றன. அவற்றில் தமிழகத்தில் ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, தலப்பாகட்டி பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி போன்றவை விற்பனைகளில் கொடிகட்டி பறக்கின்றன.

பிரியாணி செய்யப் பயன்படுத்தும் பாசுமதி அரிசிக்கு பிரியாணி அரிசி என்ற பெயரும் உண்டு. இறால், மீன், கோழி, ஆட்டிறைச்சி போன்ற வெவ்வேறு வகைகள் உண்டு. தாவர உணவு வகைகளைக் கொண்டு செய்யப்படும் வெஜிடபிள் பிரியாணியும் இதில் அடக்கம்.

ஜாதிக்காய், பட்டை, ஏலம், கிராம்பு, கொத்தமல்லி இல்லை, இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்ற நறுமணப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. சில நறுமணப் பொருட்களை துணியில் முடிந்து பிரியாணி வேகும் போது போட்டுவிட்டு சாறு இறங்கியதும் எடுத்துவிடுவதுண்டு. திண்டுக்கல் பிரியாணியில் பாசுமதிக்கு பதில் சீரகசம்பா அரிசி பயன்படுத்தப்படுகிறது. சில பகுதிகளில் தக்காளி, மஞ்சள் போன்றவை சேர்ப்பதுண்டு. தயிர் வெங்காய பச்சடி, கத்தரிக்காய் தொக்கு, அவித்த முட்டை, குருமா, போன்றவை பிரியாணிக்கு துணையாக பரிமாறப்படும். அரிசியையும், இறைச்சியையும் தனித்தனியாக சமைப்பது, சேர்த்து சமைப்பது என பல்வேறு வகைகளில் தயார் செய்யப்படும் பிரியாணி நாளடைவில் தமிழக உணவாக ஆகிவிட்டது.

பரோட்டா 

பரோட்டா என்பது மைதா மாவில் செய்யப்படும் உணவாகும். இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால் மைதாவினால் செய்யும் பொருட்கள் தமிழகத்திலும் பரவத் தொடங்கின. தமிழ்நாட்டில் உயர்தர உணவுவிடுதிகள் முதல் சாதாரண சாலையோரக் கடைகள் வரை பிரபலமானது பரோட்டா.

தமிழ்நாட்டில் புரோட்டா என்றும், இலங்கையில் பராட்டா என்றும், இந்தோனேஷியாவில் ப்ராத்தா, மொரீஷியசில் பராட்டே என்றும், மியான்மரில் பலேட்டே என்றும் அழைக்கப்படுகிறது. மைதா, முட்டை, எண்ணெய், நெய்  சேர்த்து செய்யப்படும் பரோட்டாவில் சாதாரண பரோட்டா, முட்டைப் பரோட்டா, கொத்துப் பரோட்டா, சில்லிப் பரோட்டா, விருதுநகர் வீச்சுப் பரோட்டா என பல வகைகள் உண்டு. இதற்கு தொட்டுக்கொள்ள சால்னா வழங்குவார்கள்.

பஞ்சாபில் உருவான பரோட்டா இந்தியாவின் பல மாநிலங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர்,மொரீஷியஸ் என மற்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்த போது அந்தந்த இடங்களில் உள்ள தனித்தன்மையான சுவையூட்டிகளுடன் கலக்கப்பட்டு புதிய பரிமாணத்தை அடைந்தது.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஷாநவாஸ் என்பவர் தனது நூலொன்றில், ’’ரவையையும் மைதாவையும் கலந்து 'கஸ்தா பரோட்டா', கடலைமாவும் மைதாவும் கலந்து 'மிஸ்ஸி பரோட்டா'  கம்பு மாவு மைதா கலந்து 'பஜ்ரே கே பரோட்டா', சோளமாவு-மைதா கலந்து 'மக்கி பரோட்டா' , கேழ்வரகு -மைதா கலந்து 'ராகி பரோட்டா', கருமிளகு பவுடரைக் கொஞ்சம் மேலே தூவிவிட்டால் 'காலி மிர்ச் பரோட்டா' , ஓமத்தைப் பொடியாக்கி மேலே தூவிவிட்டால்'அஜ்வின் பரோட்டா', கரம் மசாலாவை மட்டும் கலந்து 'மசாலா பரோட்டா', சீரகத்தைக் கலந்தால் அது 'ஜீரா பரோட்டா', முந்திரி பாதாம் அல்லது ஏதாவது கொட்டை வகைகள் கலந்து சுட்டால் அது 'பேஷாவரி பரோட்டா', பொட்டுக்கடலை- வெங்காயம் சேர்த்து சுட்டால் 'சத்து பரோட்டா' (இது பீஹாரில் மிகவும் பிரபலம்), பச்சைமிளகாய் மட்டும் போட்டு சிலர் பரோட்டா ஆர்டர் பண்ணுவார்கள், அது 'மிர்ச்சி பரோட்டா'’’ என பலவகையான பரோட்டாக்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

பஞ்சாபில் பரோட்டாவை ஆரம்பத்தில் லஸ்ஸியுடன் சேர்த்தும் சாப்பிட்டிருக்கிறார்கள். பப்பாளி பரோட்டா, பனானா பரோட்டா என விதவிதமாக முயற்சிக்கிறார்கள் சிங்கப்பூர் மக்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொத்துப்பரோட்டாவும், முட்டைப் பரோட்டாவும் தான் மிக பிரபலம்.

ஃபரைடு ரைஸ் 

கி.மு.4000க்கு முந்தைய பழமை வாய்ந்தது என்று வரலாற்றுப் பதிவு கொண்ட ஃபரைடு ரைஸ் சீனாவின் பாரம்பரிய உணவு. சீன வெளிநாட்டினரால் தென்கிழக்காசியாவில் பரவிய ஃப்ரைடு ரைஸ் அந்தந்த இடங்களுக்கேற்ப, சேர்க்கும் பொருட்களுக்கேற்ப பல்வேறு வகைகளில் தயார் செய்யப்படுகிறது.

எக் ஃப்ரைடு ரைஸ், சிக்கன் ஃப்ரைடு ரைஸ், இறால் ஃப்ரைடு ரைஸ், வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸ் என கடைகளில் தயாரிக்கப்படும் ஃபரைடு ரைஸ் துரித உணவு வகையைச் சேர்ந்தது. இது அரிசி, எண்ணெய், சோயா சாஸ், வர மிளகாய், காய்கறிகள், இறைச்சி, முட்டை போன்றவை கலந்து செய்யப்படுவது. சீனாவில் இருந்து வந்தாலும் இந்தோனேஷியாவில்தான் மிக அதிகமான வகைகளில் தயாரிக்கப்படுகின்றது. இங்குதான் வெள்ளை ஃப்ரைடு ரைஸ், ஜாவா ஃப்ரைடு ரைஸ், உப்புமீன் ஃப்ரைடு ரைஸ், பட்டாயா ஃப்ரைடு ரைஸ் என பலவிதங்களில் சுவைக்கப்படுகிறது.

பெரும்பாலும் தமிழக நகரங்களில் பெரிய உணவகங்களில் கிடைத்துக் கொண்டிருந்த ஃப்ரைடு ரைஸ் இப்போது சின்னக் கிராமங்களில் இருக்கும் சின்னக் கடைகளிலும் சாதாரணமாகக் கிடைக்கிறது.

ஓட்ஸ் 

இது ஒருவகை கி.மு. முதலாம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட ஓட்ஸ் கோதுமை, பார்லி போல் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படவில்லை. எகிப்தில் பயிரிடப்படாமல் களை போல வளர்ந்த ஓட்ஸ், சுவிட்சர்லாந்தில் குகைகளிலும் காணப்பட்டது. பல நூற்றாண்டுகளாக தானே முளைக்கும் களைச் செடியாகவே இருந்திருக்கிறது. முதன்முதலில் 1602ல் வட அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டு மாசாசூசட்ஸ் கடற்கரையில் உள்ள எலிசபெத் தீவுகளில் பயிரிடப்பட்டன. அதன் பின் ஜார்ஜ் வாஷிங்டன்னில் 580ம் ஏக்கரில் 1786ல் பயிரிடப்பட்டது. இப்படியாக 1860-70களில் படிப்படியாக மேற்கு நோக்கி விதைக்கப்பட்டுக் கொண்டேயிருந்த ஓட்ஸ் மிஸிஸிப்பி பள்ளத்தாக்கு வரை பயிரிடப்பட்ட ஓட்ஸ் இன்று உலகின் முக்கியத்துவம் வாய்ந்த உணவுப்பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

சாமுவேல் ஜான்சன் தனது அகராதியில், ’ஸ்காட்லாந்து மக்களால் சாப்பிடப்பட்டாலும், இங்கிலாந்து குதிரைகளுக்கே மிகப் பொருத்தமான உணவாக இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். இதற்கு ஸ்காட்லாந்துக்காரர் ஒருவர், ‘அதனால்தான் இங்கிலாந்தில் நல்ல குதிரைகளும், ஸ்காட்லாந்தில் நல்ல ஆண்களும் இருக்கிறார்கள்’ என்று பதில் கூறிய சுவாரசியமான சம்பவங்களும் ஓட்ஸ் வரலாற்றில் இருக்கின்றன.

ஓட்ஸ் முதலில் குதிரைகளுக்கும், கோழிகளுக்கும் உணவாக இருந்து மிகச் சமீப காலத்தில் தான் மனித உணவாக மாறியிருக்கிறது. ஓட்ஸ் காலை உணவாக மட்டுமில்லாமல் மற்ற உணவுப் பொருட்களிலும் மூலப் பொருளாகவும், பதப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

ஓட்ஸ் ஒரு டயட் உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. ஓட்ஸ் பெரும்பாலும் தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து காலை உணவாக எடுத்துக் கொள்ளபடுகிறது. ஓட்ஸ் இட்லி, ஓட்ஸ் பாயாசம், ஓட்ஸ் உப்புமா, ஓட்ஸ் வெஜிடபிள் ரைஸ் என அதிலும் வெரைட்டி கண்டுபிடித்து அட்டகாசம் செய்வது தமிழர்கள்தான்.

ஐஸ்க்ரீம் 

தமிழில் குளிர்களி அல்லது பனிக்கூழ் என்றழைக்கப்படும் ஐஸ்க்ரீம் கி.மு. 300ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது எனினும் இன்று நாம் சாப்பிடும் ஐஸ்க்ரீம் அளவுக்கு பல வகைகளும், சுவைகளும் அப்போது இல்லை. மகா அலெக்சாண்டர் (கி.மு.336-323) பனிக்கட்டியில் தேன் கலந்து பருகியதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஐஸ்க்ரீமை உலகிற்கு அறிமுகப்படுத்தியது  'நீரோதான்' என்று சொல்கிறார்கள்.  கி.பி. 54ல் பிறந்த ரோம் பேரரசர் நீரோ, பனிக்கட்டியில் பழச்சாறு,தேன் கலந்து ஒருவிதமான ஐஸ்க்ரீமை சுவைத்தார் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது.  இத்தாலியரான மார்க்கோபோலோ 17ம் நூற்றாண்டில் சீனா வந்து 13 ஆண்டுகள் தங்கியிருந்திருக்கிறார். அப்போது அவர் பாலுடன் கலந்து ஐஸ்க்ரீம் தயாரிக்கும் முறையை செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் முதலில் உருப்படியான ஐஸ்க்ரீமைத் தயாரித்தவர்கள் சீனர்களே. பிற்பாடு வித விதமான ஐஸ்க்ரீம்கள் உருவாக்கியவர்கள் மொகலாய மன்னர்கள். அவர்களுக்காக ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்டதுதான் குல்பி ஐஸ்கிரீம்.
1770ல்தான் முதன்முதலில் ஐஸ்க்ரீம் விளம்பரம் செய்தித்தாளில் வெளியானது. 1777ல் நியூயார்க்கில் தான் ஐஸ்க்ரீம் கடை (அப்போது பார்லர் என்று யாராலும் அழைக்கப்படவில்லை) ஆரம்பிக்கப்பட்டது. முதன்முதலில் ஐஸ்க்ரீம் வைக்கப்படும் கோன் 1896, செப்டம்பர் 22 மார்சியோனி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு நியூயார்க் கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களால் அவர்களின் காலனியாதிக்க நாடுகளிலும் பரவி இன்று ஐஸ்க்ரீம் நிலையாக ஆட்சிகொண்டு விட்டது.

வெனிலா ஐஸ்க்ரீம், சாக்லேட் ஐஸ்க்ரீம், கோன் ஐஸ்க்ரீம், பட்டர் ஸ்காட்ச் என பல வெரைட்டிகளில் இப்போது சாப்பிடுகிறோம். ஐஸ் வண்டியை எதிர்பார்த்து இருக்கும் கிராமங்கள் இப்போது ஐஸ்க்ரீம் பார்லர்களில் சென்று சாப்பிடும் அளவுக்கு முன்னேறி இருக்கிறது. வீடுகளிலும் கூட ஹோம் மேடு ஐஸ்க்ரீம் என்று செய்யப்படுகிறது.

நூடுல்ஸ்

2002ஆம் ஆண்டு சீனாவின் மஞ்சலாற்றில் தொல்பொருள் ஆரய்ச்சியாளர்களால் 4000 வருடங்களுக்கு முந்திய உலகின் மிக பழமையான நூடுல்ஸ் உள்ள மட்பாண்டகிண்ணம் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் (25-220) நூடுல்ஸ் இருந்ததாக வரலாற்று நூல் ஒன்று கூறுகிறது.

சைனீஸ் நூடுல்ஸ் புத்த துறவி ஒருவரால் ஜப்பானில் ஒன்பதாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1900களில் ஜப்பானில் சைனீஸ் நூடுல்ஸ் மிக பிரபலமானது. இன்ஸ்டண்ட் எனப்படும் உடனடி நூடுல்ஸ் 1958ல் கண்டுபிடிக்கப்பட்டு ஜப்பானில் விற்பனைக்கு வந்தது. ஆசிய நாடுகளில் பின்னர் வெவ்வேறு இடங்களுக்கு பயணிகளால் அறிமுகமான நூடுல்ஸ் இன்று பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது.

அரிசி உள்ளிட்ட தானிய வகைகளிலிருந்து தயாரிக்கப்பட்டாலும் பெரும்பாலும் கோதுமை மாவிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. பிசைந்து தட்டையாக உருட்டி பல வித வடிவங்களில் வெட்டப்பட்ட மாவிலிருந்து சன்னமான இழைகளாகவோ, குழாய்களாகவோ, நாடா வடிவில் அல்லது பிற வடிவங்களில் உலர்ந்த நிலையில் பாதி சமைத்த உணவாக தயாரிக்கப்படுகிறது. நூடுல்ஸ் வெந்நீரில் அல்லது சமையல் எண்ணெய், காய்கறிகள், இறைச்சி, முட்டை சேர்த்து வேக வைத்தல் அல்லது பொரித்தல் முறையில் சமைக்கப்பட்டு சூப் சாஸ் ஆகியவற்றுடன் பரிமாறப்படுகிறது.
இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் வருவதற்கு முன் இடியாப்பம்தான் தமிழர்களின் நூடுல்ஸாக இருந்தது.

பஃப்ஸ்

ப்ரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த க்ளாடியஸ் என்பவர் 1645ல் தனது உடல்நலமில்லாத தந்தைக்கு ரொட்டித் துண்டு செய்கிறார். மாவு, தண்ணீர், வெண்ணெய் மூன்றையும் கலந்து திரும்பத் திரும்ப பத்துமுறை மடித்து அடுப்பிலிட்டு எடுக்கிறார். அது ஒரு வித்தியாச வடிவத்துடனும், சுவையுடனும் இருப்பதைக் கண்டார். பின்னர் தொழிற்பயிற்சி முடித்து பாரிஸ் சென்ற அவர் அங்கு தனது சகோதரர் கடையில் பஃப்ஸை செய்கிறார். யாருக்கும் தெரியாமல் ஒரு பூட்டிய அறைக்குள் அந்த செய்முறையை மறைக்காமல் எல்லோருக்கும் செய்து காண்பிக்கிறார். அவரது சகோதரர்கள் இதற்கான பேக்டரி ஒன்றை உருவாக்குகிறார்கள். பஃப்ஸைக் கண்டுபிடித்த அந்த கலைஞன் 1682ல் இறந்து போனார். ஆனால் இன்று கண்டுபிடித்தவர் யாரென்று தெரியாமலே உலகம் முழுவதும் பஃப்ஸ் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இனிப்பு பஃப்ஸைக் கண்டுபிடித்தது நைஜீரியாதான். பஃப்ஸ் மாவு, ஈஸ்ட், சர்க்கரை, வெண்ணெய், முட்டை, உப்பு, தண்ணீர் சேர்த்த மாவை பொன்னிறம் வரும் வரை வறுத்து செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை சரியாக செய்ய வேண்டும். இல்லையென்றால் அனைத்தும் வீணாகிவிடும்.

பிசைந்த மாவை திரும்ப திரும்ப அடுக்குதல் மூலமாக செய்யப்படும் பஃப்ஸில் வெஜிடபிள் பஃப்ஸ், எக் பஃப்ஸ், சிக்கன் பஃப்ஸ், மட்டன் பஃப்ஸ் என பலவகைகள் உள்ளன. பசி எடுத்தால் அது சாப்பாட்டு நேரமாக இல்லாதிருந்தால் ஒரு பஃப்ஸும் கூல்ட்ரிங்ஸும் குடித்துவிட்டு செல்லும் பல மக்களை நகரங்களில் எப்போதும் காணலாம்.

விவாதம்


இவள் பாரதி

விபத்து ஏற்படுத்தும் டிரைவர்கள் மீது கருணை காட்டக் கூடாது. ஓட்டுநர் உரிமம் வழங்குவது வாகனம் ஓட்டத் தானே தவிர கொலை செய்வதற்கல்ல என்று சமீபத்தில் ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. இது குறித்து இருவர் விவாதிக்கிறார்கள்..

A.P. அன்பழகன், மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சம்மேளனம் (CITU)


விபத்துக்கு ஓட்டுநர் மட்டுமே காரணம் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஓட்டுநர்களுக்கு வேலைப்பளு திணிக்கப்பட்டிருக்கிறது. 15, 20 வருடங்களுக்கு முன்பு போக்குவரத்தில் இருந்த பல விஷயங்கள் இப்போது நடைமுறையில் இல்லை. சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லக் கூடிய ஒரு பேருந்தை இயக்கும் ஓட்டுநர் 200கிமீ வந்ததும் அதாவது விழுப்புரத்தை அடைந்ததும் இறங்கிவிடுவார். அங்கு ஓய்வறையில் இருக்கும் ஓட்டுநர் ஒருவர் அந்தப் பேருந்தை திருச்சி வரை இயக்குவார். சென்னையிலிருந்து வந்த நடத்துனர் திருச்சியில் இறக்கிவிடுவார். திருச்சியிலிருந்து கன்னியாகுமரி வரை வேறு ஒரு ஓட்டுநரும், நடத்துனரும் இயக்குவார். அப்போதெல்லாம் 200கிமீ ஓட்ட எட்டு மணி நேரம் ஆகும். அதாவது எட்டுமணி நேர வேலை என்பது உறுதியான இருந்தது. விபத்துக்களும் குறைவாகவே இருந்தது. மோட்டார் வாகனச் சட்டப்படி எட்டுமணி நேர வேலைக்குப் பின் ஆறு மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். இப்போது அப்படி இல்லை. தர்மபுரியிலிருந்து திருவண்ணாமலை வந்து, அங்கிருந்து மைசூர் சென்று, பின்னர் மைசூரிலிருந்து திருவண்ணாமலை, தர்மபுரி என ஒரு ஓட்டுநரே 1140 கி.மீ செல்லவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. 5ரூ இன்கிரிமெண்ட் கூடுதலா தருகிறோம். இவ்வளவு படி தருகிறோம் என்று கூறி ஓட்டுநர்களை அதிகமாக வேலை வாங்குவதும் விபத்துகளுக்கு காரணம். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது அரசுதான். சென்னை முதல் கன்னியாகுமரி வரை நாற்கரச் சாலையாக மாற்றிவிட்டோம் என்கிறார்கள். ஆனால் ஊழியர்களுக்கான ஓய்வைக் குறைத்து வேலையை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் கடந்த நான்காண்டுகளில் விபத்துகளிண் எண்ணிக்கை முன்னிருந்ததைவிட குறைந்திருக்கிறது.
28/02/2009 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக ஏ.ஆர்.லட்சுமணன் இருந்தபோது இந்தியாவில் அதிகவிபத்து நடக்கிறதென்று கமிட்டி ஒன்று போட்டார். ’உலகில் அதிகளவில் விபத்து நடக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை சீனாவும், இரண்டாமிடத்தை இந்தியாவும் பிடித்திருக்கிறது. ஆனால் சீனா அதனை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்தியிருக்கிறது. அதே போல இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்’ என கூறியிருந்தார்.

விபத்துக்கு டிரவர் காரணமில்லை என்று சொல்ல வரவில்லை. டிரைவரும் ஒரு காரணம். ஆனால் டிரைவர் மட்டுமே காரணமில்லை. எப்போதுமே அரசு இலாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட முடியாது. எம்.ஜி.ஆர் முதலைமைச்சராக இருந்த போது 1000 மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நகரப் பேருந்து விட்டார். ஆனால் அரசுக்கு அதனால் எந்த வருவாயும் இல்லை. ஆனால் அது ஒரு சேவையாக கருதப்பட்டது. இப்போதைய வழக்கில் போக்குவரத்துத் துறைக்கு 11 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது என்று கூறப்பட்டது.

பொதுவாக அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படாததால் மூன்றாம் நபருக்கான இழப்பீட்டுத் தொகையை அரசு போக்குவரத்து கழகமே கொடுக்க வேண்டியுள்ளது. காப்பீடு செய்வதிலிருந்து அரசு விலக்கு வாங்கி வைத்திருக்கிறது. அரசுப் பேருந்து ஒன்றுக்கு காப்பீடு செய்ய 18363 ரூபாய் செலவாகும். மொத்தமாக 12,13 கோடி செலவாகும் எனவே அரசு இதை செய்ய முன்வரவில்லை. அரசுப் பேருந்துகளில் விபத்துக்கள் ஏதேனும் நேரும் போது மக்கள் மன்றம் என்கிற சிறிய கமிட்டியில் கூடி பைசல் செய்துவிடுவார்கள். தனியார் பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் போது ஜப்தி செய்ய மாட்டார்கள். ஏனெனில் அது இன்ஸ்யூரன்ஸ் செய்யப்பட்டிருக்கும்.

மற்றொன்று சரியான சாலைவசதி இல்லை. தமிழகத்தில் ஒரு கோடியே 36 இலட்சம் வாகனங்கள் ஓடுகிறது. ஒரு நாளைக்கு 3000க்கு மேல் வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதற்கெல்லாம் சரியான சாலைவசதி இல்லை. 8000 தனியார் பேருந்துகள், 4002 மினிபேருந்துகள், 21,169 அரசுப் பேருந்துகள், ஒரு கோடியே 2 இலட்சம் இருசக்கரவாகனங்கள், 4000 ஆட்டோக்கள் மாநிலம் முழுவதும் இயக்கப்படுகிறது. வாகன்ங்களைக் கட்டுப்படுத்தி இயக்க வேண்டும். இதற்கு அரசுத்துறையைப் பலப்படுத்துவது முக்கியம். வாகனங்கள் பெருகிய அளவுக்கு சாலைவசதிகள் பெருகவில்லை.

சென்னையில் ஒரு நாளைக்கு 55 இலட்சம் பயணிகள் ஏறி இறங்குகிறார்கள். இங்கு 5000 பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி இருந்தும் 3140 பேருந்துகள் தான் இயக்கப்படுகிறது. பேருந்துகளை அதிகப்படுத்தி மற்ற வாகனங்களை மட்டுப்படுத்த வேண்டும்.

ரயில், விமானம், கப்பல் என எல்லாமும் விபத்துக்குள்ளாகிறது. எந்த ஓட்டுநரும் விபத்துக்குள்ளாக்க வேண்டும் என்று வாகனத்தை எடுப்பதில்லை. எங்கேயும் விபத்து நடக்கக்கூடாது என்பதுதான் எல்லாருக்குமான விருப்பம். ஆனால் எதிர்பாராமல் நடந்துவிடுகிறது. அதற்கு பல காரணங்கள் உண்டு. ஓட்டுநர் மட்டுமே காரணம் என்று சொல்வது சரியானதல்ல.

இ.பினேகாஸ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர், மதுரை. 


டிரைவர்களுக்கு கருணை காட்டக் கூடாது என்பது சரிதான். லைசன்ஸ் கொடுக்கும் போதே பச்சை, மஞ்சள், சிவப்பு என்று ஐந்து நிறங்கள் வட்டமாக இருக்கும். ஒவ்வொரு விபத்து நிகழ்த்தும் போதும் ஒவ்வொரு வண்ணமும் வரிசையாக பஞ்ச் செய்யப்படும். கடைசியாக சிவப்பு வண்ணம் குறியிடப்படும் போது அவரது உரிமம் ரத்து செய்யப்படும். சிவப்பு குறியிடப்பட்ட பின் விபத்து ஏற்படுத்தினால் இவருக்கு தொடர்ச்சியாக விபத்து ஏற்படுத்துவதே வழக்கம் என்ற முத்திரை விழுந்துவிடும். ஐந்து முறை வாய்ப்பு கொடுத்த பின்னர் தான் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

பள்ளி வேன்களுக்கான ஓட்டுநர்களை தேர்வு செய்யும் போது மூன்று விதமாக தேர்வு செய்வார்கள். ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரி, முன்னாள் அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநர், அதிக அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இது விபத்து நிகழக் கூடாது என்ற எச்சரிக்கையாக செயல்படுவதற்கான உதாரணம். தொடர்ச்சியாக குற்றவியலில் (இங்கு விபத்து என்று பொருள்) ஈடுபடும் போதோ, குடித்து விட்டு வாகனம் ஓட்டினாலோ, போதைப் பொருளுக்கு தொடர்ச்சியாக அடிக்ட் ஆனாலோ, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினாலோ, பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் வாகனம் ஓட்டினாலோ மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 19ன் படி லைசன்ஸ் அத்தாரிட்டியே லைசன்ஸை திரும்பப் பெறவோ, தகுதியில்லாமல் செய்யவோ முடியும்.

எத்தனை பேர் டூவீலர் லைசன்ஸ் வைத்துக் கொண்டு ஃபோர் வீலர் ஓட்டுகின்றனர். பல கிராமங்களில் ஆட்டோ ஓட்டுநர்களே அந்த ஊர் தனியார் பேருந்தை இயக்கவும் செய்கின்றனர். அரசுப் பேருந்தில் நடக்கும் விபத்துக்களில் மட்டும்தான் ஓட்டுநர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். தனியார் பேருந்தில் விபத்து ஏற்படுத்திய ஒருவர் வேறு ஒரு இடத்திற்கு சென்று வண்டியோட்டிக் கொண்டிருந்தால் அது யாருக்கும் தெரிவதில்லை. அவர்களை கணகாணிக்க முறையான அமைப்புகள் இல்லை.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியது போல சட்டங்கள் இவ்வளவு கடுமையாக இருந்தும் கடந்த ஆண்டில் 3211 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டும், 275 பேரின் லைசன்ஸ் கேன்சல் செய்யப்பட்டும் உள்ளது. இதற்கு காரணம் தண்டனை குறைவாக இருப்பதே. கொலைக்குற்றத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 302ன் படி ஆயுள்தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்கப்படும். கவனக்குறைவால் ஏற்படுத்திய மரணத்திற்கு பிரிவு 304(ஏ) ன்படி இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்படும். ஆனால் இரண்டு வருட சிறை தண்டனை பெற்றவரை போலீஸ் ஸ்டேஷனே பெயிலில் விடக்கூடிய வசதி இருக்கிறது. அதனால்தான் திட்டமிட்டு ஒருவரை வாகனமேற்றி கொலை செய்தாலும் அது கவனக்குறைவால் நடந்தது என்று இரண்டு வருட தண்டனை மட்டுமே விதிக்கப்படுகிறது. ஆனால் எப்போதும் ஒரே கோணத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை.

மோட்டார் வாகனச் சட்டப்படி விபத்து ஏற்படுத்தியவரின் அப்போதைய நிலை, சம்பவத்தின் பின்னணி போன்றவற்றின் அடிப்படையை பார்க்க வேண்டும் என்று உள்ளது. அதன்படி இந்த வழக்கில் கருத்து கேட்கப்பட்ட போது கடவுள் செயலால் விபத்து ஏற்பட்டது என்று ஓட்டுநர் கூறியிருப்பது ஏற்கக் கூடியதல்ல. இன்றைய நிலையில் வாகன விபத்துகள் தொடர்பாக தமிழகத்தில் ஒரு லட்சத்து 31 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 40,000 வழக்குகள் உயிர்பலி ஏற்படுத்தியதால் போடப்பட்டவை. சட்டங்கள் இன்னும் கடுமையாகும் போதுதான் குற்றங்கள் குறையும்.

- இவள் பாரதி

அதிர்ச்சியளிக்கும் பெண் சிசுக் கொலை


இவள் பாரதி


நேஹா அப்ரின்

கடந்த இரண்டு மாதத்திற்கு முன் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர். நாட்டையே அதிரவைத்த பெயரும் கூட.

பெண்ணாகப் பிறந்த காரணத்தால் தனது தந்தையால் சிகரெட்டால் சுட்டும், கடித்தும் கொடுமைப்படுத்தப்பட்ட குழந்தை. பெங்களூரு மருத்துவமனையில் ஒருவார காலப் போராட்டத்திற்குப் பின் மரணத்தைத் தழுவிய மூன்று மாத குழந்தை.

கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியைச் சேர்ந்தவர் உமர் ஃபரூக். இவர் ரேஷ்மா பானு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.  உமர் ஒரு பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வந்தார். அடிக்கடி வரதட்சணைக் கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தியவர், ’பெண் குழந்தை பிறந்தால் உன் தாய் வீட்டில் இருந்து ஒரு லட்ச ரூபாய் வாங்கி வரவேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு ரேஷ்மாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நேஹா அப்ரின் என பெயரிட்டனர். குழந்தை பிறந்ததிலிருந்தே வெறுப்பைக் காட்டி வந்த உமர் ஆண் குழந்தையை ஏன் பெறவில்லை என்று மனைவியையும் துன்புறுத்தியிருக்கிறார்.

குழந்தையின் உடம்பில் சிகரெட்டால் சூடு வைப்பது, தொட்டிலில் இருக்கும் குழந்தையை ஆட்டிவிடும் சாக்கில் சுவற்றில் மோதவிடுவது, அடிப்பது, கடிப்பது என சித்ரவதை செய்திருக்கிறார் உமர். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி குடித்துவிட்டு வந்து குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவாகியிருக்கிறார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அந்த குழந்தை உடல்நிலை மோசமடைந்து வலிப்பு நோயும் வந்து இறந்துவிட்டது. இதற்கிடையே குழந்தையின் தந்தை உமர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இது பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம். பெண் குழந்தையின் மீது தீராத வெறுப்புடன் உமர் நடந்து கொண்டதைப் போல் இல்லாவிடினும் வேறு வகைகளில் பல்வேறு இடங்களில் பெண் சிசுக்கொலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் இதுபோன்று நடக்காது என்று நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி பெண் குழந்தைகளின் பிறப்பு குறித்த தகவல்கள் கேட்கப்பட்டன. ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். அதில் 2001 ஆம் ஆண்டு 390 ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 895க்கு குறைவாகவும், 2008 ஆம் ஆண்டு 447 ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 900க்கு குறைவாகவும் இருக்கிறது. இதன் மூலம் கருவிலேயே பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டு அழிக்கப்படுவது தெரியவந்திருக்கிறது.

தமிழ்நாடு பெண்சிசுக் கொலைக்கு எதிரான பிரசார மையக்குழு உறுப்பினர் எம்.ஜீவா, ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி ஆகியோர் கூறுகையில், ‘அதி நவீன மருத்துவ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆண் குழந்தையை மட்டுமே கருப்பையில் பொருத்துகின்றனர். இதனால் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது‘ என்றனர்.

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனக் கண்டறிவது குற்றம் என்றாலும் அந்த நடைமுறை இன்று வேறுவிதமாக உள்ளது. கருவின் குறைபாடு பற்றி அறிவதற்காக செய்யப்படும் ஸ்கேனிங் போது, குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியப்படுகின்றன. மண்டே, பிரைடே, மிரிண்டா, பாண்டா, தம்ஸ் அப், தம்ஸ் டவுன் போன்ற சங்கேத வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், சில மையங்களில் தாளில் எழுதிக் கொடுப்பதையும் பெண் சிசுக் கொலைக்கு எதிரான  அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் ஆண் பெண் விகிதாசாரம் பெருமளவு குறையும் அபாயம் ஏற்படும். இதைத் தடுக்க தமிழகத்தில் உள்ள 4560 ஸ்கேனிங் மையங்கள் முறையாகக் கண்காணிக்கப்பட வேண்டும். தொட்டில் குழந்தை திட்டத்தை சரியாக அமுல்படுத்த வேண்டும். சுகாதார நிலையங்களில் ’ஃபார்ம் எஃப்’ படிவம் முழுமையாக நிரப்பப்பட வேண்டும். ‘பிறக்கப் போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறியும் தொழில் நுட்பங்கள் சட்டம் - 2002’, ‘மருத்துவ ரீதியான கருக்கலைப்புச் சட்டம் - 1971’ ஆகிய சட்டங்களை தீவிரமாக அரசு அமல்படுத்த வேண்டும்.

’’சமீபத்தில் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. இதில் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்திருந்தது. நம்முடைய சமூக மதிப்பைக் குறைகாணும் வகையில் இருந்தது. ஆனால், நம்முடைய சமுதாயத்தில் பெண் குழந்தைகளை எந்தக் கண்ணோட்டத்தில், மதிப்பீட்டில் பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம். நம் நாட்டின் பல இடங்களில் கருவில் பெண் சிசுக் கொலை மற்றும் பெண் குழந்தை படுகொலை நடந்து கொண்டிருப்பது நமக்கு தேசிய அவமானம். ’’ என்று கூறியிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் கமால் ஜீத் கூறுகையில், இன்றைய கால கட் டத்தில் பெண் குழந்தை பிறப்பு என்பது எதிர்காலத் திற்கான மோசமான முதலீடு என கருதுகின்றனர் என்கிறார்.

· கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் 20,000 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
· கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் அழிக்கப்பட்ட பெண் சிசுக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது லட்சம்.
· நமது நாட்டில் ஆண்டுதோறும் ஒரு கோடியே பத்து லட்சம் கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. இதில் எண்பது லட்சம் பெண்சிசுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் முத்துலெட்சுமியாகவோ, கிரண் பேடியாகவோ, அன்னி பெசண்டாகவோ, கல்பனா சாவ்லாகவோ, அஞ்சு பாபி ஜார்ஜாகவோ தலையெடுக்கும் முன் களையெடுக்கத் துவங்கும் பெண் சிசுக் கொலை புரிபவர்களை அதற்கு துணை நிற்பவர்களை சிறிதளவும் மன்னிக்காமல் தண்டிக்க வேண்டும்.

பெண் குழந்தை குடும்பத்தின் சுமையல்ல.. சமூகத்தின் மேன்மை என்பதை எப்போது உணர்வார்கள் இந்த கொலையாளிகள். மகாகவியின் கண்ணம்மாக்கள் ஆயிரமாயிரமாய் வளர வேண்டும்.


இவள் பாரதி

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?