Friday 28 November, 2008

ராகமும் சுகமும்..

நீ தந்த
சுகமும் ராகமும்
என்னை விட்டுப் போகும்
மோகமும் காமமும்
ஒருநாள் போகும்..
ஒருநாள் நீயும்..

ஒருபோதும்
உன்னாலேற்பட்ட
துயரம் மட்டும்
நீங்கப் போவதில்லை...

அவனும் பசியும்..

எத்தனையோ இரவுகள்
என் கதவுகளைத்
திறந்து விட்டிருக்கிறேன்..
அவன் இளைப்பாறலுக்காய் ...

அவன் பல கதவுகளைத்
தட்டியதையும்
பிற வீட்டு
சன்னல்களைத் திறந்ததையும்..
குடிசையின் பொந்துகளில்
உற்றுப் பார்த்ததையும்
நானுமறிவேன்..

எந்தக் கதவுகளையும்
நான் தட்டியதில்லை
பலமுறை பசியெடுத்த போதும்...

தானே வரும் உணவுகளையும்
ஏற்றுக் கொண்டதில்லை..
வற்புறுத்தியபோதும்..

புலி பசித்தாலும்
புல்லைத் தின்னாதாம்..
பசு பசித்தாலும்
எலும்பைத் தீண்டாது..!

முதன் முதலில்

முதன் முதலில்
உன் காதலைச் சொல்லிய
இளநீர்க் கடை...

முதன் முதலில்
முத்தம் பெற்றுக் கொண்ட
பேருந்து பயணம்..

முதன் முதலில்
மழைக்கு ஒதுங்கிய
நிழற்குடை..

முதன் முதலில்
மணமாகி கலந்து கொண்ட
தோழியின் திருமண வரவேற்பு...

யாவற்றிற்கும்
தெரிய வாய்ப்பில்லை..
விவாகரத்துக்கு நாம்
அனுமதி கோரியிருக்கும் மனுபற்றி...

காலமும் காதலும்..

நான்
நெருங்கும் போதெல்லாம்
விலகிப் போயிருக்கிறாய்..

நீ
நெருங்கும் போதெல்லாம்
நானும் விலகிப் போயிருக்கிறேன்..

ஒருநாள்
நம்மை விட்டு
வெகுதூரம் விலகிப் போயிருக்கும்..
காதலும்...காலமும்...

வலியுடன்..

சிறகுகளைப்
பிய்த்தெறிவதில்
அந்த ஆர்வமுடையவனே
ஏன் சிந்தனைகள்
சிறகுகள்அல்ல..

கயிறுகளை
இறுக்கி முடிச்சிடுவதில்
விருப்பமுடையவனே
என் சுதந்திரம்
கயிறுகளல்ல ...

சன்னல்களை
சாத்துவதில்
சுகம் காண்பவனே
என் எண்ணங்கள்
சன்னல்களல்ல..

ஊசிகள் கிழிசலைத்
தைத்தால்
வலியிருப்பதில்லை..
உணர்வுகளை
வார்த்தைகளால்
தைத்தால்
வலி பொறுப்பதில்லை...

வலியோடு..

அவனென்னை
அதிகமாய் நேசித்தான்..
சில சமயம்
நானும் கூட...

நிறைய முத்தங்களைப்
பரிசளித்தான்
சில நேரங்களில்
ஒன்றிரண்டு நானும்...

பிரிந்து போவதில்
மும்முரமாய் இருக்கிறான்..
சில போதில்
எனக்கும்...

உறவிற்கும்
பிரிவிற்குமான
ஊடாடலை
எப்படி சொல்ல?

வரிகளால்
வலிகளைச் சொல்ல முடியாது...

மழையே

அந்த மேகம்
விதைத்த
மழையை இந்த பூமி
அறுவடை செய்கிறது...

&&&&&&&&&&&&&&&&&&&&&

விடிய விடிய பெய்த மழை..
விடவே இல்லை
மறுநாள் விடியலிலும்...

&&&&&&&&&&&&&&&&&&&&&

முதல் நாள் மழையாலான
வெள்ளம்
வடியவே இல்லை..
அதற்குள் இன்னுமொரு மழை...

&&&&&&&&&&&&&&&&&&&&&&

மழைத்துளிகள்
ஓடிப் பிடித்து
விளையாடுகின்றன..
பெருகுகிறது ஆறு...

&&&&&&&&&&&&&&&&&&&&&&

தூறல் நின்றதால்
அழுகின்றன..
இலைகள்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சொல்லித் தரும்....

வெளிச்சம்
என்ன சொல்லித் தரும்..
இருளை அறியாத வரையில்...

உறவு
என்ன சொல்லித் தரும்..
பிரிவை உணராத வரை..

புத்தகம்
என்ன சொல்லி தரும்..
புரட்டாத வரை..

வாழ்க்கை
என்ன சொல்லித்தரும்
நீயில்லாத ஒன்றை...

ஆண் பெண்..

ஆணுக்கும்
பெண்ணுக்கும் பிறந்து..

ஆணிலோ
பெண்ணிலோ இணைந்து...

ஆணையோ
பெண்ணையோ பெறுவதைத்தவிர....
என்ன இருக்கிறது
இந்த வாழ்க்கையில்...?


உனக்குள் நான்..

உனதசைவுகளில்
தொடக்கி விடுகிறது
எனக்கான இளைப்பாறல்...

*************************************

வரமும் கோபமும்
ஆளுக்கொரு திசையில்
நம்மை இழுத்துப் போடும் போதும்..
எங்கிருந்தோ
வருடி விட்டுப் போகிறது...
கண்களின் குறும்புன்னகை..

*****************************************

எந்தத் திசையிலிருந்தாலும்
நேர்க்கோட்டில்
சந்தித்துக் கொள்ளும்
கண்கள் சொல்லி விடுகின்றன...
ஒருவரை ஒருவர் தேடியதை..

**********************************************

முத்தமிடத் துடிக்கும்
உனது உதடுகளுக்கு
எப்படிச் சொல்லுவேன்...
இமைக்கும் தோறும்
மொத்தமாய் உன்னை
முத்தமிடுவதை...

**************************************

கண்களுக்குள் இதயமும்
இதயத்திற்குள் கண்களும்
சில சமயங்களில்...

உனைப் பார்த்தவுடன்
இதயம் படபடப்பதும்
கண்கள் துடிப்பதும்...

*************************************

நேரங்காலமற்ற
பணி உளைச்சலிலிருந்து
மீட்டெடுக்கும்
முயற்சியில்
புதைந்து போகிறேன்...
நானும் உளைச்சலுக்குள்...

***********************************************

சொல்லி விட்டுப்
போவதை விட
சொல்லிக் கொள்ளாமல்
போகும் தருணங்களில்
சுமையாகின்றன..
உன் நினைவுகள்..

********************************************

இமைகளும் சுமையாகின்றன...
உன்னைக் காணாத போதுகளில்
நீரும் மோராகின்றது
உன்னைக் கண்டதில்...

*********************************************

நமக்குள் நேரும்
சண்டைக்குப் பிறகு
பூக்கின்றன..
என்னிடம் கை நிறைய
கவிதைகளும்..
உன்னிடம் நேசம் வழியும்
கண்களும்...

******************************************

உயிரோடோ
மெய்யோடோ
சேராமல்
துணைக்காலாய்
தனித்திருக்கிறேன்...
பொருத்தமான
உயிர் மெய்யாய்
நீ இருந்தால்..

***********************************

நமக்கான
விஷயங்களில்
ஏற்படும் முரண்களை விட
பிறரால்
தோற்றுவிக்கப்படும் முரண்கள் ...
இமயமாய்...

**************************************************

தொடர்பு எல்லைக்கு
அப்பாலிருக்கையில்
புரட்டுகிறேன்
நமது முதல் சந்திப்பின்
பக்கங்களை....

*******************************************************

நீ அணைக்கத் தவறும்
அழைப்பினை
என்னுடையதென
அறிந்ததும்
ஒரு குறுஞ்செய்தி மூலம்
குதூகலப் படுத்துகிறாய்..

****************************************************

எதேச்சையாய்
கன்னம் கிள்ளிப் போனாய்..
ஒவ்வொரு முறை
கடக்கும் போதும்
உனக்குள் கிள்ளிப் போடுகிறேன்
சிறு நெருப்பை..

*****************************************************






மழை மழை

மழையே பொழியாதே
பாவம்
வீடற்ற மனிதர்கள்..

*****************************

யாரைத் திட்டித் தீர்க்கிறாய்
பெரு மழையே..

******************************

வெயிலைத் தாங்க முடிகிறது..
இந்த மழையைத் தான்
தாங்க முடியவில்லை...

உன் கோபத்தைத் தாங்க
முடிந்த என்னால்...
உனதன்பை தாங்க முடியாதது போல...

***********************************************

மழைக்குப் பிந்திய
சாலையைப் போல்..
உன் சந்திப்பிற்குப் பிறகான
என் மனது..

**********************************************

மழை
வரும்போது அனுமதி
கேட்கவில்லை..
போகும் போதும்
அப்படியே...

****************************************

விடாமல் தூறுகிறது
மழை...
விட்டுத் விட்டுத்
தூறுகிறாய்..
உள்ளுக்குள் நீ..

***********************************

மண்ணுக்குள்
புதைந்திருக்கும்
வாசனையை
வெளிக் கிளப்புகிறது
சிறு மழை..

*********************************

அந்த மேகம் விதைத்த
மழையை
இந்த பூமி அறுவடை
செய்கிறது...

*********************************

விடிய விடிய பெய்த
மழை..
விடவே இல்லை
மறுநாள் விடியலிலும்..

************************************

முதல் நாள் வெள்ளம்
இன்னும் விடியவே இல்லை..
அதற்குள் இன்னுமொரு மழை...

***************************************

மழைத்துளிகள்
ஓடிப் பிடித்து
விளையாடுகின்றன...
பெருகுகிறது ஆறு...

********************************************

தூறல் நின்றதால்
அழுகிறது
இலைகள்...

********************************************



வலி

வலிக்கிறது...
கொட்டும் மழையை
எப்படித் தாங்குவார்கள்
அவர்கள்?

**********************

அழுது விடாதீர்கள்
அது கண்ணீர்த் துளிகள் அல்ல..
உள்ளத்தைக் கொத்தும் உளிகள்..

**************************************

மாடுகளை விட்டு விட்டு
நாடு கடந்து வந்தோம்...
மூக்கணாங்கயிறுகளின்..
முடிச்சுகள் கைகளை
இறுக்குகிறது...

*************************

விடை பெற்று
கொண்டு வரவில்லை..
வினாவோடு
வந்திருக்கிறோம்..

*************************
முகவுரை
எழுதும் முன்னே
முடிவுரைக்கு வழி சொல்லும்
இந்த வாழ்வு என்ன வாழ்வு?

*********************************

அலையலையாய் வருகிறாய்..
துளித் துளியாய் குதிக்கிறோம்..

*********************************

கரையில் கால் வைக்கிறோம்..
கொட்டு மழையிலும்
ஆதி மண் சுடுகிறது...

********************************

தொலைத்த..

என் பெயரைத் தொலைத்த..
தருணத்தில்
உன்னை சந்திக்கிறேன்...

எனக்கு என்ன பெயர்
சூட்டுவாய்?

உன்னைப் போலத்தான்..

உன்னைப் போலத்தான்
இந்த மழையும்...

அடிக்கடி ஈரமாக்கி
ஆடை மாற்ற வைக்கிறது..

உன்னைப்போலத்தான்
இந்த மழையும்

சேறு இறைக்கவும்..
கழுவவும்போல்
அடிக்கவும்..
அணைக்கவும்..

உன்னைப் போலத்தான்
இந்த மழையும்...
முடுக்கி விடவும்..
முடக்கி விடவும்..

மழையே

சொல்லித்தான் ஆக வேண்டும்
உன்னாலேற்பட்ட
தாக்கத்தை..
ஊக்கத்தை..
ஏக்கத்தை..


மழையின் வரவு

ஈரம் காயாத துணிகள்
மரம் குளிக்கும் காலம்
இல்லை பேசும் ரகசியம்
கோலம் காணாத வாசல்
தலை குளிக்காத காலை
மழையின் வரவில்...

**********************

எங்கோ இருக்கிறாய்
மழை விசாரித்துவிட்டுப்
போகிறது...
உன் அருகாமையை...

***********************

கரிகாலன் கலங்கி இருப்பான்
வீணாய் போகும்
மழை நீர் கண்டிருந்தால்..

**************************

இந்த மழைக்கு
கொஞ்சிப் பேசவும் தெரிந்து இருக்கிறது
மிஞ்சிப் போகவும் தெரிந்திருக்கிறது..
மனிதர்களைப் போல...

************************

மழையை
வழியனுப்பி விடாதீர்கள்...
நான் ஊன்றிய விதை
இன்னும் துளிர் விட வில்லை...

*********************************

மண்ணை மட்டுமல்ல
என்னையும் அரித்துப் போன
மழை நீ..

**********

என்னதான் சோகம்
கொஞ்சம் அழுவதை
நிறுத்தி விட்டுச் சொல்லேன்
மழையே....

*************

இந்த மழைத் துளிகளை
யாரும் மிதித்து விடாதீர்கள்..
உங்கள் பாதத்தை
கிள்ளி விடப் போகிறது...

****************************

மழை மழையாய்..

இலைகளோடு
இந்த மழைத் துளிகள்
இரவு பகலாய்
அப்படி என்னதான்
பேசித் தீர்க்கிறதோ?

*********************

நட்சத்திரங்கள்
ஊருக்குப் போகட்டும்..
மழைத் திருவிழாவிற்கு
மனிதர்களே போதும்..

**********************

மரங்கள் அழிந்த
சோகத்தில்
ஆறுதலடையா மேகம்
அழுதழுது தீர்க்கிறது
மழையாய்..

************

மேகம் உருகி
மழை பொழிய...
மழை உருகி
மண் தொட...
மண் உருகி
விதை துளிர்க்க...
விதை உருகி
விருட்சமாகிறது...

*****************

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?