Sunday 28 June, 2009

கேள்விகள்...பதில்கள்..

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

நிச்சயமாய் பிடிக்கும் .. நானே வைத்துக் கொண்ட பெயர்தான் பாரதி ..நான் ஹலோ பண்பலையில் 'இவள்' என்ற நிகழ்ச்சியினை தயாரித்து வழங்கியதால் இவள் பாரதி என்ற பெயர் பரவலாகி... என்னையும் பற்றி கொண்டது..

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

நேற்று இரவு.. அம்மாவினை நினைத்து அழுது தீர்த்தேன்.. இந்த உலகில் எந்த நிபந்தனையும் நிர்பந்தமும் இன்றி nesikkum உயிர் அம்மா மட்டும்தான்..
அவளின் இழப்பினை சில பாடல்களும் காட்சிகளும் நினைவூட்டும் சமயங்களில் பீறிட்டெழும் அழுகையினை என்னால் கட்டுப்படுத்த முடிவதில்லை..

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்..என்னுடைய கையெழுத்து என் மன நிலையினை பிரதிபலிப்பதாக இருக்கும்.. எனக்கு மனம் உற்சாகமாக இருந்தால் கையெழுத்து அழகாகவும்,மனம் சோர்வுற்று இருந்தால் சுமாராகவும், பேட்டி எடுக்கும் சமயங்களில் அடுத்தவர்க்கு புரியாத வகையிலும் இருக்கும்..


4).பிடித்த மதிய உணவு என்ன?

மீன் குழம்பு, ரசம் , பருப்பு கூட்டு, முருங்கை கீரை,கோழி , உருளை

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நான் நட்பாயிருக்கிறேன் என்னை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருப்போர்களிடம்.. நான் என் நட்பை தொடர்கிறேன்... அவர்கள் எனக்கு எதிரிகளாவர்கள் என்ற புரிதல் இருந்த போதிலும்..(ஏனெனில் நண்பர்கள் வெற்றிக்கு துணையாய் இருப்பார்கள்.. எதிரிகள் வெற்றிக்கு காரணமாய் இருப்பார்கள்)

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டிலும் குளித்திருக்கிறேன்.. அருவியில் குளிக்க மிக பிடிக்கும்.. அருவியின் வீழ்ச்சி ஒரு எழுச்சி எனும் தத்துவத்திலும் பிடிக்கும்.. கடலில் கால்கள் நனைத்து விளையாட பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

உடல் மொழியையும், தோற்றத்தையும், பேச்சின் நோக்கத்தையும்..

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

எல்லோரிடமும் சகஜமாக பேசி விடுவது.. யார் என்ன சொன்னாலும் என் மனதுக்கு சரியான விஷயத்தை மட்டும் செய்வது.. எதையும் முயற்சி செய்து பார்த்து விடுவது..எனக்கு பிடித்த விஷயம்..


கொஞ்சம் சோம்பல், கொஞ்சம் கவன குறைவு, ஒருவரை பற்றிய கருத்தை அவரிடமே சொல்லி விடுவது எனக்கு பிடிக்காத விஷயம்...


யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என் அம்மா.. என் வாழ்வில் இருந்து முற்றிலும் உள்ளார்ந்து உபயோகப்படுத்த முடியாமல் போனது அந்த மூன்றெழுத்து சொல்..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

சம்பல் நிற ஜீன்சும், மயில் பச்சை நிற டாப்சும்..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்ய போகிறாய்..?

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம்..

14.பிடித்த மணம்?

வார்னிஷ் மணம், பெட்ரோல் மணம், மண் தொடும் மழை வாசம், என் அம்மாவின் கழுத்தில் எழும் மஞ்சள் வாசம், அவள் கடைசியாக உடுத்தி இருந்த சேலையின் வாசம்..குழந்தைகளின் மேல் எழும் பால் வாசம்.. (பக்கத்து வீட்டு ரோசிக்குரெண்டு வயசாகுது அவளோட வாசம்)

5. பிடித்த விளையாட்டு?

செஸ்

16.கண்ணாடி அணிபவரா?

இல்லை.. பார்ப்பது மட்டும்..

17.எப்படிப் பட்ட திரைப்படங்கள்.. பிடிக்கும்?

கதாநாயகர்களை மையப்படுத்தாமல் கதையை மயப்படுத்தி எடுக்கப்படும் சிறந்த திரைப்படங்கள்..

18.கடைசியாகப் பார்த்த படம்?

பேராண்மை

19.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்..

20. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம் ..

கல்யாண்ஜி கவிதைகள்.. கி.ரா மற்றும் கழனியூரனின் மறைவாய் சொன்ன கதைகள்.. மஞ்சள் வயலில் வெறி பிடித்த தும்பிகள் (மனோரமா பிஸ்வால் - ஒரிய மொழி பெயர்ப்பு கவிதைகள்.. )

21. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மெயில் பார்க்கும் போதெல்லாம்..

22.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காதசத்தம்?

பிடித்த சத்தம் : மழை, எனது அன்புக்குரியவரின் குறுஞ்செய்தியை சுமந்து வரும் அலைபேசி சத்தம்

பிடிக்காத சத்தம்: வெடி, ஹார்ன், ஸ்பீக்கர் சவுண்ட்

23.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

புது டெல்லி

24.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
presence of mind..

25.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நம்பிக்கை துரோகம்.

26.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பேறித்தனம்

27.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
எங்கெங்கு நூலகமோ அங்கெல்லாம்..

28.எப்படி இருக்கணும்னு ஆசை?

நானாகவே..

29.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வாழ்ந்து பாருங்கள்.. அது ஒரு அழகிய கவிதை சில நேரம் பிழைகளோடு..

Saturday 27 June, 2009

ஸ்பரிசத்தின் மறுபெயர்...

"அணு அணுவாய் சாக
முடிவெடுத்த பின்
காதல் சரியான வழிதான்"..

என்ற கவிதையை காதலிக்காதவர்கள் இருக்க முடியாது...
காதலை பற்றி சொல்வதாகவே சிலர் சலித்துக் கொள்கிறார்கள்
எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை பற்றி பேசுவதில் தவறென்ன?
இருக்க முடியும் ?

உலகம் மிகப் பெரியது
உலகத்தை விட பெரியது காதல்..
மரணம்தான் மிக வலியானது..
மரணத்தை விட வலியானது காதல்..
அணுதான் மிக சிறியது..
அணுவிலும் சிறியது காதல்..

இப்படி காதல் காற்றைப் போல எங்கும் நிறைந்திருக்கிறது
ஆயினும் சுவாசத்தை தனித்து உணர்வதில்லை..
காதலும் அப்படித்தான்.. உணர்வதில்லை.. உணர்ந்தவர்கள் சரியாக வெளிப்படுத்துவதில்லை..

மழையில்லாத ஊரில் மட்டுமல்ல..
காதலில்லாத ஊரிலும்
கவிதை வெளிநடப்பு செய்துவிடும்..

காதல் மனக்கதவை தட்டியதும் திறந்துவிடாதீர்கள்..
பலமுறை தட்டுகையில் மூடியே வைத்திருக்காதீர்கள்..

காதலும் ஒரு அனுபவம்..
உணரத்தான் முடியும் அதன் வலியையும்..சந்தோசத்தையும்...

உணர்வோம்..காதலை காதலால்..
ஸ்பரிசத்தின் மறுபெயரும் அதுவே.
.

முகமூடி..

அன்று அவன்
குழப்பத்திலிருந்தான்
கையிலிருந்த
நான்கைந்து முகமூடிகளில்
எதை அணிவதென..?

எதேச்சையாய்
எதிர்கொள்ள நேரிட்டதில்
அவனது மனைவிக்கான
முகமூடியை அளித்து
தூவினான் சில சொற்களை..

முகமூடிகள் ஏதுமற்ற நிலையில்..
அவனிடமே கையளித்து
கடந்தேன் அவ்விடத்தை..

வழியினில் கிழிசலான
முகமூடிகள் சில காலில்
ஒட்டி கொள்ள
உதறியும் உதிராத அவைகளுடன்..
பேருந்தேறினேன்..

இரவு முத்தம்...

அவ்வளவு நிசப்தத்துடன்
நிகழ்த்தப்பட்ட முத்தத்தில்
இரவு மூர்ச்சையிழந்து
இருந்தது...

மீண்டும் நிகழ்ந்த
முத்தத்தின்
சிறு சத்தத்தில்
விழித்துக் கொண்டது இரவு..
.

காலியான இருக்கை...

ஞாயிற்றுக் கிழமையில்
நிரம்பியிருக்கும்
காலியான இருக்கைகளுடனான
பயணம் இதமானது..

எல்லா சன்னலோர
இருக்கையின் வழியேயும்
நானே தெரிகிறேன்..

வழித்தடங்களெங்கும்
விடுமுறையின் பிரதிபலிப்பு..
சிறுவர்களுக்கு விளையாட்டுகளாகவும்
பெரியவர்களுக்கு பேச்சாகவும்
பெண்களுக்கு எவ்வித மாற்றமின்றியும் ..

பண்பலை வரிசை
விரல்நுனியில் மாறிக்கொண்டிருக்க
என் காதுக்குள்
காற்று ஏதோ சொல்ல முயன்று
தோற்று கொண்டிருந்தது..

பேருந்து...

*உப்புப் பெறாத சண்டைக்கு
அதிகாலையில்
கோபித்து
காலியான
பேருந்தில் ஏறினேன்...

கண்கள் ஊறியது
அவன் தேடி வருவானென..?
நேரம் கரைந்தது..
பேருந்தின் சக்கரங்கள்
சுழன்றதில்
என் காதல் நசுங்கி உப்பியது.
.

என் உயிரின் பார்வைக்கு..

நலமாகத்தானிருந்தேன்..
உன்னை சந்திக்காத வரையில்..
பறந்து திரிந்து தானிருந்தேன்..
உன்னிடம் பழகாத வரையில்..
எதிர்பார்ப்புகள் ஏதுமற்று இருந்தேன் ..
உன்னை எதிர்கொள்ளாத வரையில்..

சிறகுகளை சுருக்கியதில்லை..
உன் நிழலை பார்த்திராத வரையில் ..
சிந்தனைகள் செரித்தபடிதானிருந்தன..
உன் அறிவை உண்ணாத வரையில்..
நினைவுகள் சலனமற்று இருந்தேன்....
உன்னை தரிசிக்காத வரையில்..

என் பூமியில் மழையும் வெயிலும்
மாறி மாறித்தான் தழுவியது..
உன் சுற்றுவட்டப் பாதையில் நுழையாத வரையில்..
என் கதிர்கள் ஒளி பாய்ச்சியபடி தானிருந்தன..
உன் எண்ணங்கள் குறுக்கிடாத வரை..
என் இரவுகள் விடியலை நாடித்தான் இருந்தன..
உனது இமைகளுக்குள் உட்புகாத வரையில்..

எனதிரப்பைக்கு பசித்து தானிருந்தது..
உன் இதய நிழலில் இளைப்பாராத வரையில் ..
எனது பார்வைக்கு தடை இருந்ததில்லை..
உன் காட்சி கடந்து போகாத வரையில்..
எனது விரல்களுக்கு வலி தெரிந்ததில்லை..
உனது கைகளுக்குள் சிறைப்படாத வரையில்..

எனது நுரையீரலில் சுவாசம் தடைபட்டதில்லை..
உன்னிலிருந்து கசியும் மதுவின் வாசம்
நாசி துளைக்காத வரையில்..
என் கனவுகள் தேங்கி நின்றதில்லை
உன் வார்த்தைகளில் உறையாத வரையில்..
என் உயிர் சொட்டு சொட்டாய் உதிர்ந்ததில்லை..
உன் நிஜம் கண்டு திடுக்கிடாத வரையில்..

நானெப்போதும் என்னை நொந்ததில்லை..
உன் அன்பின் வெப்பம் சுடாத வரையில்..
நானெப்போதும் சோர்ந்ததில்லை..
உனது பதிலின் பதிவை பெறாத வரையில்..
நானெப்போதும் அழுததில்லை..
உனது ஆளுமையினில் அடிமையாகாத வரையில்..



ஆலமரம்..

இப்படியெல்லாம்
நடக்குமென்று தெரியாது..

அந்த
ஆலமரம் சரிந்த பின்னே
அதனின் நிழலில் இளைப்பாறிய
அந்த நான்கு பறவைகளும்
திசைமாறி போகுமென்று..

அவை முன்னர்
உணர்ந்ததுமில்லை..
ஆலமரத்தினால்
தான்
வேர்கொண்டுள்ளோமென..

இப்போது வருந்துகின்றன..
வேரினை இழந்த பின் ..
விதை தேடி..

என்னால் முடியாது..

எப்போதும் என்னால் முடியாது..
ஒரு துரோகத்திலிருந்து
நம்பிக்கையை பெற..
ஒரு ஏமாற்றத்திலிருந்து
எதிர்பார்ப்பை பெற..
எப்போதும் என்னால் முடியாது..

ஆனபோதிலும்
நம்பிக்கையின் பின்னே
ஒளிந்திருக்கும் துரோகத்தையும் ..
எதிர்பார்ப்பின் பின்னே
ஒளிந்திருக்கும் ஏமாற்றத்தையும்
என்னாலறிய முடிகிறது ..
அதை சூடி வரும்
நிஜங்களின் நிழல் பார்த்தே..

சொந்தமாக முடியாத உறவுதான் அது..

அந்த பறவைக்கும்
எனக்குமிருக்கும் புரிதலை
யாரால் புரிய முடியும்?

தன்னுணவினை
பகிரவும்
தன்னுணர்வினை
வெளிப்படுத்தவும்
யாரிடமிருந்து கற்றுக் கொண்டது?
மனிதனைப் போன்றவனிடம்
நிச்சயமாய் இருக்காது..

வெளிசெல்லுகையில்
நிழலாகவும்
உறங்கச் செல்கையில்
கட்டிலின் கீழாகவும்
எப்போதும் என்னை
வட்டமிடும் அந்த பறவை
சொந்தமாக முடியாத
உறவுதான்...

வைகை நதி..

கடல் போய்
சேர்வதற்குள்ளே
வற்றிவிடுகிற அல்லது
பயன்பட்டு விடுகிற
வைகையின்
கரையிலிருந்து
வந்தவள் நான்..

கனவுகளை
செயல்படுத்துகையில்
எதிர்ப்படுகிற
தடைகளால்
எண்ணங்களை வற்றிப்போகவோ
திரும்பப் பெறவோ
ஒருபோதும் சம்மதமில்லை..
அது சாத்தியமுமில்லை...

தான் உருவான இடத்திலேயே
கலக்கும் நதியாயின்றி
இந்த நதி
புது கடலையே உருவாக்கும்..
இன்னும் பிற நதிகளோடு..

காதலின் அடியில்..

யாவற்றிலிருந்தும்
மீட்டெடுக்க
வல்லமையுள்ள
உன்னால்தான்
இப்போது வீழ்ந்து கிடக்கிறேன்
யாதொன்றாலும்
மீட்டெடுக்க இயலாத
காதலின் அடியில்...

Saturday 13 June, 2009

ஒரு கொலைக்கான ஐந்து காரணங்கள்...

பாரதியின் அடுத்த கதை விரைவில்...........

Wednesday 15 April, 2009

பரமபதம்

ஏணியின் உச்சியை
தொடும் வேளையில்
பாம்பொன்று கொத்தி
சடாரென விழுகிறேன்..

நட்பென்னும்
பரமபதத்தில்
வீழ்வதும் எழுவதும்
உருட்டப்படும் கட்டைகளின்
தாயத்தை பொறுத்தமையும்..

தயங்களும் காயங்களும்
எப்போது விழுமென்று
யாராலும் யூகிக்க
முடிவதில்லை..

வெற்றி பெறவோ
தோல்வியுறவோ
தயாரான நிலையில்
பூச்சியத்திலிருந்து
ஆட்டத்தை துவங்குகிறேன்
மீண்டும்...

Friday 3 April, 2009

காதலின் தடயங்கள்...

உனது காதலின்
எல்லைகள் விரிவடைந்தபடி...

எனது காதலோ
எல்லைக்குள்ளே...

உலகின்
ஒவ்வொரு மூலையிலிருந்தும்
தொடங்கிய உன்
காதல் பயணம்
கரைசேரும் நேரமென்றாய்..

முந்தைய உனது
காதலின் எச்சங்கள்
எனது காதலை
தின்று தீர்க்கிறது...

அறிதலுக்காய்
திறந்திருக்குமென்
ஜனக்குழி
ஒருபோதும் மூடியதில்லை..
உன் வருகை யறிந்து...

நீ
விழுந்தெழுந்த
குழிகள் பற்றி
கவலை இல்லை எனக்கு..
என்னிலும் அதற்கான
தடயங்கள் உண்டு என்பதாலே..

Wednesday 25 March, 2009

சாம்பல் துகள்கள்..

சிறிது உலர்ந்த முத்தங்கள்
காய்ந்த கண்ணீர் சுவடுகள்
அப்போதுதான்
முளைவிட்ட காயங்கள்...
இவற்றோடு
உடைத்து போன
சில காதல் துண்டுகளையும்..
சேகரித்து வெளியேறுகிறேன்...

என் சுவடுகளெங்கும்
உன் பிம்பங்களே தெரிய
சேகரித்த யாவற்றையும்
எரிக்கிறேன் அந்நிலவொளியில்..
பேருந்து நிலையத்தின் பலத்த
சத்தங்களுக்கிடையில்..

சாம்பல் துகள்கள் மிஞ்சுமென
பார்த்திருக்க
வெந்தும்
வேகாததுமான
கட்டையாக
கிடக்கின்றன அவைகள்..

அங்கிருப்பவர்களின்
அதட்டலுக்கும்
அன்னியப் பார்வைக்கும்
கரையொதுங்கி
பாதி கரியான
கட்டையோடு தொடர்ந்து
சுழல்கிறது என் காலச்சக்கரம்,...

நிர்வாணம்...

நிர்வாணம்
நிர்பந்தங்களால்
வேறு வேறாய் அறியப்படுகிறது...

குழந்தையின் நிர்வாணம்
குற்றமானதல்ல..
பெண்ணின் நிர்வாணம்
குற்றமற்றதல்ல...


பிற பெண்களின்
நிர்வாணத்தை ரசிப்பவன்
இழிவுபடுத்துகிறான்..
தன் தாயையும்..
மனைவியையும்..


தன் தவறை
ஒத்துக் கொள்பவர்களைவிட
நியாயம் கற்பிப்பவர்கள்
பெருகிவிட்ட
தேயிலை பூமியில்

தேகங்கள்
சிதைக்கப்படுவதற்கும்
கொடூர புணர்வுக்குமே ..


என் சகோதரிகளின்
யோனிகளில்
கொட்டப்படும்
ரத்தங்கள் கறையானவை...

துளிர்க்கும்
கருக்கள்
சிங்கமென்று கொக்கரிப்பவனே...
கேள்...
ஒருபாதி சிங்கமெனில்
மறுபாதி...


காத்திரு
அந்த உறுமல் சத்தத்தினூடே..
அது புலிக்கு சொந்தமானது ....



அனுபவங்கள்..........

புறப்பட்ட இடத்திற்கே
திரும்புகிறேன்...

குறுகிய கால
அனுபவமெனினும்
அதுபோதும்
வாழ்நாள்முழுமைக்கும்..

கசப்பானவையோ
இனிப்பானவையோ
அவை அனுபவங்கள்தான்..

உணர்வுகளையும்
உரிமைகளையும்
அடகு வைக்க நேருகிறது.
மீட்டெடுக்க முடியாத
நேரத்தில்....

இழப்புகளோடு
புறப்பட்ட இடத்திற்கே
திரும்புகிறேன்...

புதிய வலிகளை
ஏற்றுக்கொள்வதிலும்
பழைய வலிகளோடு
ஒத்துப் போய் விடலாம்.. என
திரும்புகிறேன்
புறப்பட்ட இடத்திற்கே...

Tuesday 24 March, 2009

இசைக்கும் வீணை..

இசைப்பதை நிறுத்திய கலைஞனும்
இசைக்க மறுக்கிற வீணையும்..
இயற்கையின் நிழலில் ...

மீட்டப்படாத வீணையில்
சில நரம்புகளை
ஒழுங்கு படுத்துகிறான் ..

வீணை
அபரிமிதமான இசையை
வெளிப்படுத்தி
கலைஞனுக்குள்ளிருந்த இன்னொரு
பரிமாணத்தை
அறிமுகப்படுத்த ..

அவ்விசையில் மருகும்
அவன்
மீண்டும் மீண்டும் வாசிக்கிறான்..
ஒரே ராகத்தை..
வீணை ஒவ்வொருமுறையும்
புதிய பாவத்தை..

இருள் விலகிய பின்னும்
இசைத்தபடி அவன்..
இசைந்தபடி வீணை...

யாதுமானவனே..

யாதுமானவனே
யாதுமானவலாய்
இசைகிறேன்
மீட்டெடு ....
கடந்தகாலத்தின்
துயரச் சுவடுகளிளிருந்தும்
நிகழ் காலத்தின் தத்தளிப்புகளிலிருந்தும்..

எதிர்காலத்தின்
வெற்றிப் பதிவிற்காக...

விடிவதற்கான சாத்தியங்கள்...

இருக்கை தேடியலைந்த
களைப்பில்
சோர்வுறுகிறது..
கனவுகளின் எதிர்பார்ப்பு..

சுமைகளையும்
சுகங்களையும்
ஒருசேர தைத்து
பயணப்படும் மனது..

உறங்குவதற்கு சாத்தியமற்ற
இப்பொழுதுகள்
தூவியபடி இருக்கிறது..
உறக்கத்தின் விதைகளை..

ரயிலின் கடைசிப் பெட்டிடில்
ஜன்னலோர ஒற்றை இருக்கையில்
எதிரெதிர் துருவங்களில்
புன்னகையில் எண்ணங்கள் கோர்த்து
ஒரு பாதையில் நாம்...


விடிவதற்கான சாத்தியங்களோடு
இரவு கரைகிறது...
தண்டவாள ஓசைகளிலும்
பயணிகளின் பேச்சரவங்களிலும்...

எதையும் உள்வாங்காமல்
எதிரிருக்கும் நீ மட்டுமே
நிறைந்திருக்கிறாய்..
என் சுவாசமெங்கும்....

கனவுகள் மெய்ப்பட..

சூரிய ஒலி எட்டிப்பார்க்க
வாய்ப்பில்லா சிற்றறைக்குள்
எனது புதிய வாசம்..

அறையெங்கும் அடுக்கபட்டிருந்தது
உன் ஆளுமை..
தேடல் மட்டுமே இயக்கத்தில்..

உணர்வுகள்
ஓடியாடி விளையாட
செய்வதற்கு ஒன்ற்மற்றவர்களாய்..
உருமாற்றியிருந்தது நிகழ்வுகள்...

இயல்புக்கு மாறான
இமைகளுக்கு நேரான
இதயத்திற்கு கூரான
ஒன்றை கண்டெடுத்தேன்..

நீயறியாது பத்திரப்படுத்தி
வெளியேறுகிறேன்..
நீயுமறிந்த ஒன்றை...

'கனவுகள் மெய்ப்பட'
வாழ்த்துகிற தேவதைகளுக்காக
மட்டுமல்ல...

எந்நொடியும் சிந்தித்தபடியிருக்கிறேன்...
நாமிணைந்து பணியாற்றி..
பரபரப்பாகும் கனவோன்றையும்..
பரவசமாகும் இரவொன்றையும்..

இரவின் கண்ணீர்..

அந்த இரவு
அத்தனை சுலபமானதாய்
இருக்க வில்லை..

அந்த இரவின் கண்ணீர்
அத்தனை கரிப்பாயும்
இருந்ததில்லை...
அதற்கு முன்னதான நாட்களிலும்
இனி வரும் பொழுதுகளிலும் கூட...

எனக்கு முன்
இரண்டே விஷயங்கள்தான்
கையழைத்தது..

ஒன்று வலிகளைச் சுமக்கும்
இதயமும்..
மற்றொன்று வலிகளை
பரப்பும் உறவும்...

இந்த இரண்டு வலிகளும்
இமைகளை தானே திறந்து
வந்தமர்ந்து கொண்டன...


மீள்வதற்கு வழியற்று
மீட்ட ஆரம்பித்தேன்..
வலிகள் சுமைகளாக இல்லை..
சுகங்களாகவும் இல்லை...

வலிகள்
மரத்துப் போயிருந்தன....

Monday 23 March, 2009

சாம்பலாகும் வரை...

இந்த முறை
எனது துயரங்களை
எழுதி விடப் போவதில்லை...

ஏனெனில்
அவை வலிமையிழந்துவிடக்கூடும்
புதைத்து வைக்கவும் விருப்பமில்லை..
என் பார்வையிலேயே உலா வரட்டும்..

அப்போதுதான்
எனக்குள் எரியும் பொறி
பெருநெருப்பாகும்..

அந்த நெருப்பு
அந்த பொய்யான
ஒரு சார் விந்தில் துளிர்க்காத அவனை
சுட்டெரிக்கும்
சாம்பலாகும்வரை....

அதனாலொன்றும்...

உன் நிழல் கூட
என் மீது படிவதில்லை...
அதனாலொன்றும் கவலையில்லை..

உதிர்க்கிற வார்த்தைகளில்
ஒன்றுகூட அன்பாயிருப்பதில்லை..
அதனாலொன்றும் மோசமில்லை..

கடக்கிற நொடிகளில்
பார்வை கூட பரிமாறப்படுவதில்லை..
அதனாலொன்றும் நட்டமில்லை...

ஒரே வீட்டில்
இப்படி இருக்க முடியுமா?
என்பவர்களுக்கு
அதிலொன்றும் ஆச்சரியமில்லை.

பறை

இதயத்தின் திரை
கிழித்து
ஊடுருவிய
பறையின் அதிர்வு
இன்னும் நின்ற பாடில்லை...

தலைமுறை கோபங்களை
தப்பில் தாளமாக்கி
உட்செவியினை உசுப்பிவிடுகிறது..

ஐம்புலன்களையும் அதிர வைக்க
ஐம்புலன்களும் ஆடுகிற காட்சி
விடுதலையின் ஓலத்தின் நீட்சி...

காற்றினை கட்டுக்குள் வைத்து
இசைக்கப்படும் அவ்விசை
வீரியத்தின் வெளிப்பாடு..

இன்னும் இன்னும் கிழிக்கட்டும்..
அதிகாரங்களையும்
அக்கிரமங்களையும்
தன்னகத்தே கொண்ட
செவிப்பறைகளை
இந்த பறை...

Friday 6 March, 2009

சுனை நீர்....

ஊற்றுக் கண் தேடியலைந்த

மானின் கால்கள் சோர்வுற்று நிழலில்

ஒதுங்கியது...


இலைகள் மேவிக்கிடந்த

நீரூற்று காற்றின் விலக்குதலில்

கண்ணிற்பட்டது...


தாகம் தீர மான் நீரை

உறிஞ்ச புதிய புதிய

சத்தங்களோடு

வெளிப்படுகிறது...நீரூற்று..


சுனை நீரின் சுவை ஏறுகிறது...

சுவை ஏறிக் கொடிருக்கிறது..

அதிசயம்தான்..பூக்கள் யாவும்...

மல்லாந்துறங்கும்
வண்டின் மீது
பூக்கள் மகரந்தங்களைச்
சொறிவதும்....

நெப்பந்தஸ் போலான
தாவரங்களின் செயல்பாடும்...
அதிசயம்தான்...

வண்டின் ஒற்றைக் கால்
உரசுதலில்
பூத்துக்கொட்டும்
கிளிட்டோரியஸ்
என்றும் ஈரம் காயாத இதழ்களையும்...
வற்றி போகாத நீர்த்துளிகளையும்...

Thursday 5 March, 2009

கடந்து போன காற்றலையின் ஊடே..

அன்புள்ள சகாவுக்கு...

கடலுக்குள் நீந்த கரையோரத்தில் நடந்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது...திடீரென வீசிய புயல் காற்று கடலுக்குள் தள்ளி விட்டது போல
இருக்கிறது என் நிலைமை...

வேறென்ன சொல்ல சகா...காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள்.. கல்லடி படலாம் ..ஒன்றும் மோசமில்லை... வெட்டி விடலாம் என்று எப்படி யோசிக்க முடிந்தது.. என்று எனக்கு விளங்கவே இல்லை... கனவு போல இருக்கிறது நடந்த யாவும்...

எனக்கு நல்ல நண்பனாக, குருவாக,இந்த உலகத்தில் யாவுமான ஒரு உறவாக இருந்த உன்னதமான நட்பு ...அப்படிப்பட்ட நட்பின் கதகதப்பில் இருந்த நான் அந்த கூட்டை விட்டு சின்னஞ்சிறிய இறகுகளோடு பறக்க நேர்ந்தது
வருத்தமாய் இருக்கிறது...சகா...

என்னை பிறர் ஏளனம் செய்யும் போதெல்லாம் அது என்னை பக்குவப்படுத்தும் பயிற்சியாகவே இருந்திருக்கிறது..அந்த எதிர்ப்பின் வலி என்னை தீண்டிய போதெல்லாம் வார்த்தைகளில் ஒத்தடம் கொடுத்த தோழன் நீ..

சில சமயங்களில் நீயும் என்னை காயப்படுத்தினாலும்..அது காயமல்ல..என் மீதான நேயம் என்பதை புரிந்து வைத்திருக்கிறது நம் நட்பு...யாருக்கும் உணர முடியாது நம்மை தவிர இதை.. உன் வார்த்தைகளிலே சொல்ல வேண்டும் என்றால்.. நம் நட்பு தாய்ப்பாலை விட சுத்தமானது...

உன்னிடம் பேச நிறையவே விஷயங்கள் இருந்த போதிலும் ஒரு சிறு இடைவெளியில் மீண்டும் உன்னை சந்திப்பேன் என்று உறுதி கூறி இப்போது விடைபெறுகிறேன் ஒன்று மட்டும் சொல்லி.....

உனது நல்ல எண்ணங்களும் ..எனது நம்பிக்கையும்.இடைவிடாத முயற்சியும்..
என்னை உயரும் என்பது திண்ணம்...

இவள் எப்போதும் இயங்கி கொண்டிருப்பாள்....
நட்பிலும்..நம்பிக்கையிலும்...
இன்னும் இவள் பேசுவாள்..
இணைந்திருங்கள்......
தற்காலிகமாக வானொலியில் அல்ல... இணைய தளத்தில்....

தோழமையுடன்......
இவள் பாரதி..

Monday 2 March, 2009

இலை கிள்ளும் விரல்களுக்கு...

ஒப்பனைக்கு
ஒப்புக் கொடுக்க
ஒருபோதுமெனக்கு சம்மதமில்லை...

ஒப்பிட்டு
உயர்வு தாழ்வு பேச
உள்ளத்தில் அனுமதியில்லை...

தேடலில்
தொலைந்து போகுமென்னை
தேடலே மீட்டெடுக்கும்..

ஏதுமற்ற
ஏளனங்களை
ஏறிட்டும் பார்ப்பதில்லை..

ஒன்றுமற்ற
உரையாடல்களை
ஒருகணமும் விரும்புவதில்லை..

செதுக்கி
மேம்படுத்த உதவாதவை..
உண்மையான விமர்சனங்களில்லை..

ஒதுக்கப்படும் ஒன்றே
ஒத்துக் கொள்ளப்படும்
இதற்கு காலம் பதில் சொல்லும்..

முளைவிடும் போதே
இலை கிள்ளும் விரல்கள்
நீருற்ற போவதில்லை...
வேர்களின் வளர்ச்சிக்கு...

களையெடு உள்ளே...
முளைவிடு வெளியே...
தலைஎடுப்பாய் தரணிபோற்ற.....

நண்பனே .... அந்த நாள் நண்பனே..

எனது ஒருநாளில்
சில பல நிமிடங்களை ...
பூக்கச் செய்தவன்...
ஒவ்வொரு நொடியையும்..
முடமாக்கி போய்விட்டான்..

புகையை கூட என்
தூக்கி எறிந்தவன்..
என் புன்னகையையும்
மென்று தின்றுவிட்டான்..

என் கண்கள் கலங்கினாலே
ஆயிரம் காரணங்கள் கேட்கிறவன்...
தாரை தாரையாய் வழியும்
கண்ணீருக்குள் நீச்சலடிக்கிறான்..

நிலவொளியில் என்
நிழலையும் கவனித்தவன்...
இன்றெனது நினைவின்
நிழலுக்குள் கூட ஒதுங்க மறுக்கிறான்...

எது நடந்தாலும்..
நண்பனே..
நீ நண்பன்தான்..எனக்கு..

Friday 27 February, 2009

மூன்றாவது பக்கம்..

தொடக்கமும் முடிவுமற்ற காதல்..
இணக்கமும் பினக்கமுமற்ற உறவு..
சிரிப்பும் அழுகையுமற்ற உணர்வு..
நகர்ந்தும் நகராத காலம்..
புரிந்தும் புரியாத சூழல்..
யாதொன்றுக்கும்
இரண்டு பக்கமென்று யார் சொன்னது?
மூன்றாவது பக்கமொன்றை
முன்னிறுத்துகிறேன்..
என் வாழ்வினூடே...

Saturday 21 February, 2009

காதல் கடிதம்

வணக்கம் காதலனே..
சொல்வதை செய்..
செய்வதை சொல்..
சொல்லி விட்டு செய்யாதே..
செய்து விட்டு சொல்லாதே..
சொல்வதை செய்யாமல்
சொல்லி சொல்லி கொல்வாய் உனது கடிதத்தில்......

நல்ல வரிகள்தான் இல்லையா?
காதலனும் காதலியும் சேர்ந்து எழுதிய வரிகள் என்று...
சொல்லாமலே புரியும்...

கடிதம் என்பது அருகில் இருக்கும் ஒரு காகித உறவு....
நம்மை நேசிப்பவர் அருகில் இல்லாத நேரத்திலும்...
தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் போதும்..
பிரிந்த நேரத்திலும்..நம்மை ஆற்றுப்படுத்துகிற அற்புதம்...

Friday 20 February, 2009

ஒரு கடிதம் எழுதினேன்..

கடிதம் எழுதுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது...

என்று யார் சொன்னது? கடிதம் உணர்வு சொல்வதை மனசின் உயிர் திரவம் படர்த்தும் விந்தை.

கடிதம் குறுஞ்செய்தி போல உடனே அழித்து விடக் கூடியதல்ல..

மனம் சோர்வுறும் போதெல்லாம் நமக்கு அன்பானவர் எழுதிய கடிதத்தை எடுத்து படிக்கும் தோறும் புத்துணர்வு பிறக்கும்..வார்த்தைகளுக்கு புது விளக்கம் கிடைக்கும்..எந்த வார்த்தை எந்த பொருளில் எப்படி பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று எண்ணி எண்ணி பார்க்கையில் இன்னும் இன்னுமாய் காதலும்...காதலைப் பற்றிய புரிதலும் மேலோங்கும்...

Wednesday 18 February, 2009

வெள்ளை மாளிகை...

அந்த வெள்ளை நிறங்களால்
சூழப்பட்ட
உயரமான
பளிங்கு அறையினை..
அமைதி
தன் ஆளுகைக்கு
உட்படுத்தியிருந்தது...

சூரிய வெளிச்சம் மட்டுமே
புள்ளியாய் ஊடுருவ
அங்கு அனுமதிக்கப் பட்டிருந்தது...

அந்த ஒற்றை சூரியப்புள்ளி
ஆயுதப் புள்ளியாய்
அடையாளப்பட்டது..

பால்வெளியில்
உலவுவது போலான
உணர்வினையும்...

அண்டத்தில் மிதப்பதான
அதிர்வுகளையும்
தோற்றுவித்தது...
அந்த வெள்ளை மாளிகை..

முட்டைக்குள்
தனித்து மிதக்கும்
மஞ்சள் கருவினைபோல்
மனசுக்குள்
மறைந்து கிடக்கும்
மாசுகளை
தனியே மிதக்க வைக்கும்
அந்த வெள்ளை மாளிகை...

தாமரையின்
வடிவத்தையொத்த
தங்க முலாம் பூசப்பட்ட
வெள்ளை அறையினை
நிறைத்திருக்கிறது...
பேரண்டத்தின் அமைதி...

சற்று முன்...

சற்று முன்
எடுத்த இம்முடிவு
குறித்து எனக்குள்
எந்த சலனங்களும் இல்லை..

முடியப் போகும்
ஒரு பயணம் குறித்தோ
துவங்க இருக்கும்
புதிய பயணம் குறித்தோ
எவ்வித ஆற்றாமையுமில்லை...

விழப் போகும்
ஒரு மர வேரின் பெருத்த
ஓலமும்...
விதையொன்றின்
முளைவிடுதலில்
துளிர்த்த நிசப்தமும்...
உச்சி வெயிலில்
காலுக்கடியில்
விழும் நிழலை யொத்தது..
.

நேசத்திற்குரிய காதலனுக்கு...

என் நேசதிற்குரியவனே...
காதல் என்றாலே காத தூரம் ஓடும் எனக்குள்ளும் காதல் இருக்கிறது என்பதை உணர வைத்தவனே...சிரிப்பாய் இருக்கிறது சில சமயம்.. அழுகையாய் இருக்கிறது சில சமயம்...ஏன் என்றுதானே கேட்க நினைக்கிறாய்..சொல்கிறேன்...

காதல் பற்றி நான் படித்த கவிதைகளும், கதைகளும் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை..ஏனெனில் அந்த சமயங்களில் நான் காதலின் வருகைக்கு வேலியிட்டு இருந்தேன்..இப்போது நான் படிக்கிற கவிதைகளும்,பார்க்கிற உலகப் படங்களும் எனக்குள் உன் நினைவுகளை பாத்தி கட்டி செல்கின்றன..

ஒரு உதாரணம் சொல்கிறேன்..கேளேன்.. " இயற்கை " படத்தில் ஒரு வசனம் உண்டு..ஷேக்ஸ்பியர் சொன்னதாகா..

" காதலுக்கு காரணம் இருக்க முடியாது..
காரணம் இருந்தால் அங்கு காதல் இருக்க முடியாது"

என்ற வசனம் என்னை அடிக்கடி திரும்ப வைக்கும்... அதே போல் அறிவுமதியின் ஒரு கவிதையும்...

"அணு அணுவாய்
சாவதற்கு முடிவெடுத்தபின்
காதல்
சரியான வழிதான்..."

அடிக்கடி கண்ணாடி பார்த்துக் கொள்ளும் ஆர்வத்தைபோல்
அவ்வப்போது இந்த இலக்கியங்கள் உன்னை எனக்குள் விதைத்த படி இருக்கிறது...

"எனக்குள்
இருக்கும்
காதலை
அறுவடை செய்ய முடியாது..
ஆயிரமாயிரம்
ஆண்டுகளான பின்னும் " ...


இந்த வார்த்தை என் காதலின் ஆழத்தை சொல்லும்...நமக்குள் ஏற்பட்ட
சந்திப்புகளை அடிக்கடி அழைத்து விசாரித்துப் பார்க்கிறேன்...
அவை உனக்குள் நானும் எனக்குள் நீயும் ஒளிந்து கொண்ட ரகசியங்களை பறைசாற்றி சிரிக்கிறது..புன்னகை புரிந்தவாறே யோசித்து கொண்டிருக்கிறேன்... ரசனையோடு நம் காதலைப் பற்றி....

ஒரு தோழியின் கடிதம்....

அன்புத் தோழனுக்கு,
தொலைபேசியில் மட்டுமே பேசிப் பழக்கப்பட்டிருக்கும் நாம் முதன்முறையாக உணர்வுகளை எழுத்துக்களாக பிரதிபலிக்கும் கடிதம் வழியாக பேசுகிறோம்...இல்லை நான் பேசுகிறேன்..நீ கேட்கிறாய்..இரண்டு, மூன்று நாட்களாகவே நீ என்னிடம் சரியாக பேசவில்லை என்பது எனக்குத் தெரியும், நீ ஊருக்கு வந்துவிட்டு போனதிலிருந்து உன்மனது சரியில்லை என்று நீ சொன்னவுடன் எனக்கு லேசாக பொறி தட்டியது.சில நினைவுகள் உன்னை அலைக்கழித்திருக்கும் என்பதை நானே புரிந்திருக்கிறேன்..

உனது மனம் மட்டுமல்ல.. எல்லோருடைய மனமும் முதல் காதலை மறந்துவிடாதுதான்..அதிலும் தான் விரும்பிய ஒருத்தி தன் கண்முன்னே கண்டுகொள்ளாமல் செல்லும்போது அந்த வலி எத்தகையது என்பதை எந்நாளும் உணரமுடியும்..உன் தோழியாக அல்ல.. நானும் ஒருவருக்கு மனம் விரும்பிய ஒருத்தியாக இருந்திருக்கிறேன் என்பதாலே..

பதின் பருவம் எல்லோருக்கும் குறிப்பிடத்தக்க ஒன்றுதான்..பள்ளியில் படிப்போருக்கு அது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்...நட்பு, காதல் என்று வாழ்க்கையின் மறுபகுதியை ஒரே சமயத்தில் க(பெ)ற்றுக்கொள்ளும் பருவம்..

அதில் எது நட்பு?எது காதல் என்று புரிந்து கொள்ள முடியாத ,அப்படியே உணர்ந்தாலும் சிலவற்றை ஏற்றுக் கொள்ள இயலாத மனம் ..அது பிசைந்த மாவைப் போல் எதற்கும் இசைந்து கொடுக்கும் வகையில் சூழலின் கைப்பிள்ளையாய் சுழலும் பருவம்... நட்பைக் கூட காதலென்று ஒத்துக் கொள்ளும்.. ஆனால் காதலை ஒருபோது நட்பாக ஒத்துக் கொள்ளாது...

தோழா இந்த நேரத்தில் உனக்கொன்று சொல்கிறேன்.. உனது எல்லா இன்பங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு துன்பம் காலத்தின் முந்தானையை பிடித்துக் கொண்டு தொடரும்...அப்போது மனம் தளராதே..

இப்போது நீ எடுக்க இருக்கும் முடிவுகளே உன்னை எதிர்காலத்தை நோக்கி நகர்த்தும்.. நீ தேடிப் போன காதலை விட உன்னை தேடி வரும் காதல் முக்கியமானது என்பார்கள்.. அதை விட நீயும் தேடி உன்னையும் ஏற்றுக் கொண்ட காதலே உன்னை வாழ வைக்கும்.. ஆதலினால் காதல் செய் சிறுது காலத்திற்குப் பின்..

அதாவது உன் கல்வி முடித்து வேலைக்குப் போன பின்...அதற்குள் காதல் உன்னை தேடி வந்தாலும் உதட்டோரம் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு உன் வேலையில் கவனமாஇரு... இனி வரும் காலம் நலமே அமையட்டும்...

Friday 13 February, 2009

காதலர் தினம்- ஸ்பரிசம்6

காதல் உணர்வின் உச்சம்
காமம் காதலின் எச்சம்..

காதல் இதயத்தின் நான்கு அறைகளையும் ஆக்கிரமித்து ...அதிர்வையும் ..அசைவையும்.. அலையையும்..
ஏற்படுத்தி விடும் என்றால் அது மிகை இல்லை..

இயங்கச் செய்வதும்...இயக்கம் மறுப்பதும் காதலின் வெளிப்பாடு...
புரிதலில் நிலைத்து நிற்கும் காதல் சந்தேக புயலில் சாய்ந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்..

இந்த காதலர் தினத்தில் மட்டுமல்ல.. ஒவ்வொரு நாளும் காதல் ஆராதிக்கப்படும்
நாளாகவே இருந்து விட்டால் எல்லா நாளும் நல்ல நாளே...
காதலர்களுக்கு எனது அன்பும் ..ஸ்பரிசமும்..

காதலர் தினம் - ஸ்பரிசம்5

காதலுக்கு ஆணை இட முடியாது.. ஆனால் காதல் ஆணையிடும்..
காதலுக்கு அணை போட முடியாது...ஆனால் காதல் அணை போடும்..

எல்லா காதலும் நம்பிக்கையில்தான் கட்டப்படுகிறது..அல்லது நம்பிக்கையில் கட்டப்படுவதுதான் காதல்..எத்தனை காதலர்கள் காதலுக்கு உண்மையாய் இருக்கிறார்கள்.?.இந்த காலத்தில் அரிதுதான் ...உண்மையாய் இருக்கும் காதலர்கள் காதலுக்கு மரியாதை செய்பவர்கள்.. காதலுக்கு மரியாதை செய்பவர்களை காதலும் மரியாதை செய்யும்..

உணர்வுகள் எல்லாமே வெளிப்படுத்தக்கூடியதுதான்..ஆனால் காதல் உணர்வு மட்டும் கவனமாக கையாளப் பட வேண்டும்.. அது ஒரு கண்ணாடி மாதிரி.. எப்போதும் பிரதிபலிக்கும்.. கூடவே அதை புதுப்பித்துக் கொண்டே இருந்தால் நம்மை அது புதுப்பிக்கும்.. நம்மை எல்லா விதத்திலும் அழகாக்கும் ஆற்றல் காதலுக்கு உண்டு.. உள்ளத்திலும் உடலிலும் உற்சாகமடைய செய்யும் காதல்...
காதல் எனும் வார்த்தையே வசீகரமானது..காதலும் வசீகரமானது..

காதலர் தினம்-ஸ்பரிசம்4

காதல் வந்ததும் செயல்பாடுகள் மாறும்..
காதல் ஒரு மனிதனை அணுவேனும் முன்னேற்றனுமே ஒழிய
இருக்கும் நிலையிலிருந்து கீழே தள்ளி விடக்ககூடாது..

ஈர்ப்பில் ஆரம்பிப்பதுதான் காதல்.. ஆனால் காதல் ஈர்ப்பாகவே இருக்க சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்..இருவருக்குமிடையே காற்றை தவிர வேறு எதுவும் சுலபமாக நுழைய அனுமதிக்கக் கூடாது..முக்கியமாக மூன்றாம் நபரின் தலையீடு இருக்கவே கூடாது..ஆயிரம் பேர் ஆயிரம் விஷயங்களை சொல்லும் போதும் நம் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்ய துணிவு வேண்டும்...

காதல் போல எளிமையான விஷயம் எதுவும் கிடையாது..
காதல் போல கடினமான விஷயமும் இல்லை..
அதனால் சிந்தித்து செயல் படுங்கள்..செயல்பட்டுவிட்டு சிந்திக்காதீர்கள்...
காதல் எதிர்பார்ப்பில் தொலைகிறது...காதல் சந்தேகத்தில் கலைகிறது..
காதல் புரிதலில் வாழ்கிறது..காதல் புன்னைகையில் பிரசவமாகிறது..

Wednesday 11 February, 2009

கையகப்படுத்திய...காதல்.

*
சில
ஞாபங்களை
நினைவோடும்
பொருள்களோடும்
கையகப்படுத்திய
வந்துவிட்டேன்.
இதோ
என் முன்
பரப்பி வைக்கப்பட்ட
பொருள்கள்
நிரப்புகிறது
உன் மீதான
நேசத்தை...

*
மூச்சு முட்டுகிறது..
இந்த
ஜன்னலோரக்காற்று
உனதன்பைப்போல்..

*
உன்
விரல்கள்
கரும்பின்
வேராய்
இருந்திருக்குமோ..
முன் ஜென்மத்தில்..
நீ
அனுப்பும் சொற்கள்
இப்படி
தித்திக்கிறதே...

*
உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
கண்டுகொண்ட
நிமிடங்களில்
காதல்
கைதட்டி சிரித்தது..
சிறந்த காதல்
இணையினை
கண்டுவிட்டதாக...

கசியும் காதல்..

*
உச்சிவெயிலில்
காய்ந்து கொண்டிருக்கும்
கூழாங்கற்கள்
பிரதிபலிக்கிறது..
இனிய தருணங்களின் பதிவை...

அதன் கீழே
வலியோடு
முனகுகிறதென் காதல்...

*
இலைகளற்ற
மரங்கள்தான்
அவை
வேர்களற்றவையல்ல..
இணக்கமற்ற
மனத்தான்
எனக்கு
காதலற்றவையல்ல..

*
என்
கண்ணீரின்
கரிப்பு
உனக்கு
சுவைஎனில்
நதியாய்
பெருகட்டும்..

*
உன்
என்னுள்
வந்து சென்ற
நிமிடங்கள்
இயற்கை
எனக்களித்த
பரிசு
அதை
பதியமிடுகிறேன்...
என் பயணமெங்கும்
அவை பூத்து
மணம்பரப்பும்
நம் காதலை சுமந்து...

காதல் துளிகள்..

*
உன்
இதழ்களில்
சிறு புன்னகை
தவழ்வதை
ஒளிந்திருந்து பார்க்க
இவளிடம்
அனுமதி
இவனிடம்
வந்திருக்கும்
என் பெயர்
காதல்...

*
உனதன்பின்
துளிகள்
என்னை
மூழ்கடிக்கிறது
காதல் கடலில்..

*

அலையும் மனசு
அடங்கிட
வழி சொல்லு
அலையே...
கலையும் கனவு
நிலைத்திட
வழி சொல்லு
நிலவே..

*
உதட்டின்
ரேகைகள்
அழியும் வரை..
உயிரின்
தேவைகள்
முடியும் வரை
இந்த காதல்
தீரப்போவதில்லை...

Tuesday 10 February, 2009

இயற்க்கைக்கு எழுதும் கவிதை..

இருகை கூப்பி
இதயத்தோடு
இறுக அனைத்து
வரவேற்ற
காடுகளுக்குச் சொல்ல
நிறையவே இருக்கிறது..
எனக்கும்
இயற்கைக்குமான
காதலை...

வானளாவ
வஞ்சனையின்றி
வளர்ந்திருக்கும் மரங்கள்..
பெயரில்லா
பூக்களை
சுமந்திருக்கும்
கிளைகள்..
இலைகளும் பூக்களுமாய்
உரமாகக் காத்திருக்கும்
அடி மரத்தின் சலசலப்பு...

காடுகள்
காற்றுக்கு மட்டுமே
கதவைத் திறந்து வைத்திருந்தது
காதலுக்கான
அனுமதியோடும்..
வெகுமதியோடும்..

வெற்றுத்தாளாய்
பறக்கும்
காற்றை..
அதன் போக்கிலேயே
சென்று
இயற்கை
எழுதி எழுதி தீர்த்த
கவிதைகள்
பாதை தோறும்
பளிச்சிடுகின்றன..

ஓரிடத்தில்
காற்றின் மேல்
எழுதப்படும் யாவையும்..
நகர்தலின் போது..
மறைந்து
மற்றோரிடத்தில்
புதுப்பிக்கப் படுகிறது
நொடிதோறும்...

வெற்றுத் தாள்களாக
விரையும்
நாம்
இயற்கையிடம்
எதை பதிவு செய்ய
அனுமதிக்கிறோம்..?

காதல் வானிலை..

ஒரு பாதி வெயிலும்
மறுபாதி நிழலும்
வாய்த்த
மாலைப் பொழுதில்
தாய்ப்பறவையின்
கதகதப்பிற்குள்ளிருக்கும்
சிறுகுஞ்சைப் போலவும்..

சிப்பிக்குள்
முத்தாக இருக்கிற
நீரின் உந்துதலைப் போலவும் ..

கீழிருந்த மேற்பரப்பின்
எல்லைகளைத்
தொட்டுப் போன
உன் பார்வையில்
கசிந்தது..

நிழலும்
வெயிலுமுள்ள
காதலும்
காமமுள்ள..
வெளிச்சப்புள்ளிகள்...

உமிழ் நீர்

உமிழ் நீர்
ஊற்றி
மூடி வைக்கப்பட்டுள்ள
குப்பிகளை
பத்திரப்படுத்துகிறேன்..

புறச்சூழலில்
அகப்பட்டு
அதன் அகச்சூழல்
கெட்டுவிடாமல்
பாதுகாக்கிறேன்
உனக்கான
அந்த குப்பிகளை...

வெவ்வேறான
மண்ணின் நீரினை
நிரப்பி
குப்பிகளின் அழகையும்
மேன்மையையும்
திறம்படக் கையாளும்
உனக்கு
குப்பிகள் பரிசளிக்கும்
எப்போதும்
உனது வருகைக்கான
வரவேற்பையும்...
புகுவிழாவிற்கான
வாசத்தையும்.. .. ..

Monday 9 February, 2009

காதல் தாவரம்..

அலையடிக்குமிந்த
பாறை
எந்நேரமும்
நனைந்தபடியே
இருப்பது
உனது
காதல் மழையில்
இதயச் சிறகுகள்
நனைந்த பறவையாய்
என்னை நினைவூட்டுகிறது..

தொடர் ஈரத்தின்
பிரதிபலிப்பில்
பாறை மீது
பூத்திருக்கும்
சிறுதாவரங்கள் ...

உணர்த்துவது
என்னவெனில்
தொடர் காமத்தின்
நிரந்தர எச்சமாய்..
பூத்திருக்கும் காதலை...

அவை
சூரிய ஒளிபட்டும்
அலையடித்தும்
வளரும்
பாசிபடிந்த
சிறுதாவரத்தைப் போல்..

எனக்குள்
எப்போதும்
பூத்திருக்கச் செய்யும்
புரிந்துணர்வின் மீது
கட்டப்பட்டுள்ள
நம் காதல் தாவரத்தை.. .. ..

சுமந்து..

இந்த
காதலைச்
சுமந்து
நடப்பது
எவ்வளவு பெரிய
சுகமான சுமையாய்
இருக்கிறது...
நத்தையின் நகர்வைப் போல்..
நதியின் நகர்வைப் போல்..

அறுவடை

ஆயிரமாயிரம்
ஆண்டுகள்
கடந்த பின்னும்
அறுவடை செய்து தீராது
என்னுள்
விதைக்கப்பட்ட
காதல்...

காதலர் தினம்- ஸ்பரிசம்3

மண்ணில் காதல் இன்றி யாரும் கிடையாது என்பது மனதில் காதல் இன்றி யாரும் கிடையாது என்பதன் பொருளே..

காதலிக்கும் முன் யாரும் நம்மைக் கண்டுகொள்ளாத போது வரும்
வெறுப்பு...காதலிக்கும் போது எல்லோரும் நம்மையே கண்டு கொள்வதாக வரும் தவிப்பு...இந்த இரண்டு விஷயங்களும் யாருடைய வாழ்க்கையையும் புரட்டி போட்டு விடும்..

காதல் என்று சொல்லும் போது அங்கு காமத்தைப் பற்றியும் பேசி ஆக வேண்டும்..
ஏனெனில் குறிக்கோளில்லாத வாழ்க்கை மட்டுமல்ல காமமில்லாத காதலும் துடுப்பில்லாத படகைப் போன்றது தான்..

காதலை ஆராதிப்பவர்களை காதலும் ஆராதிக்கும்...காதல் நிலைத்து நிற்பது காமத்தில் அல்ல... புரிதலில்.. புரிதல் சிலந்தி வலை பின்னுவது போலானது..
அறுந்தறுந்து விழும் போதெல்லாம்... சோர்வின்றி சிலந்தி எச்சிலை உதிர்ப்பதை போல ....இடைவெளிகளை புரிதலில் இட்டு நிரப்பிக் கொண்டால்
காதல் வாழ்க்கை களிப்பாக இருக்கும்.

காதலர் தினம்- ஸ்பரிசம்2

காதல் நம்மை சந்தோசப்படுத்தும்..எப்போது தெரியுமா?... புரிதலுடன் இருக்கும் போது..இந்த காதலுக்குத் தான் எத்தனை சக்தி இருக்கிறது தெரியுமா?...
காலமும் காதலும் கைகோர்த்துக் கொண்டு சிறந்த காதலை இந்த உலகத்தில் தேடிக் கொண்டே இருக்கிறது யுகம் யுகமாய்.. இந்த தருணத்தில் ஒரு கவிதை என் நினைவில் வந்து போகிறது...

"உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
கண்டுகொண்ட
நிமிடங்களில்
காதல் கைதட்டி
சிரித்தது..
சிறந்த காதல்
இணையினைக்
கண்டுவிட்டதாக..."

உண்மைதான்.. உண்மையான காதலை நாம் உணர்ந்து கொள்ளும் போது
எந்த பிரச்சினை வந்தாலும் அதை தாங்கும் சக்தியை அந்த காதலே நம் கைகளில் கொடுத்து விட்டுப் போகும்...அதே போல் கண்டுகொள்ளப்படாமல் போகும் காதல் அலைந்து கொண்டு இருக்கும் இந்த மண்ணில்...இன்னொரு விஷயம்.. மண்ணும் காதலும் ஒன்று.. எப்படி என்று கேட்பது புரிகிறது?

மண் காலில் ஒட்டிக் கொண்டிருக்கும்போது கண்டு கொள்ளாத நாம்
கண்ணில் பட்டு விட்டால் கலங்கிப் போகிறமே...அப்படிதான் இந்தக் காதலும் ...
நம்மைத் தாண்டி செல்லும்போதெல்லாம் விமர்சிக்கும் நாம் நமக்குள் வந்து அமரும் போது அந்த வலியோடு கூடிய சுகம் இருக்கிறதே அதை உணரத்தான் முடியும்..வார்த்தைகளால் உரைக்க முடியாது...மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?

காதலர் தினம்- ஸ்பரிசம்-1

காற்றைப் போல் இந்த காதல் எப்போதும் நம்மைச் சுற்றித்தான் இருக்கும்..
நாம் அதை தனித்து உணருவது எப்போதோ ஒருமுறைதான்.
காதலைப் பற்றி பலரும் பலவாறு சொல்லி இருக்கிறார்கள்..ஆயினும் புதிதாய் சொல்வதற்கு ஏதோ ஒரு விஷயம் இருப்பதால்தான் இன்னும் இனிக்கிறது இந்த காதல் என்னும் வார்த்தையும்..அதன் ஸ்பரிசமும்..

காதலைக் காதலிக்காத உள்ளமும் கிடையாது..காதலை மீறிய உணர்வும் கிடையாது..காதல் தித்திக்க காரணம் நாம் காதலிப்பதால் இல்லை..நாம் காதலிக்கப் படுவதால்...இதை எத்தனை உள்ளங்கள் உணர்ந்திருக்கும்?...காதலித்துப் பார்.. என்பதை விட.. காதலிக்கப் பட்டுப்பார்.. என்று சொல்லலாம்.. நம்மை புரிந்து கொள்ள நம்மை மனதார நேசிக்க ஒரு உயிர்
இருக்கிறது என்ற எண்ணமே நம்மை சந்தோசப் படுத்தும்...இந்த சந்தோசம் இன்னும் தொடரும்... காதல் நம்மை தொடர்வதைப் போல்..

பனிரெண்டு மணி அய்ம்பத்தேழு நிமிடம்...

இரண்டு இரவு..
இரண்டு பகல்..
இரண்டு காலை...

இயற்கையின் குடைக்குள்
இயல்பான பகிர்தல்..
மென் தூரிகையில்
நின் ஓவியங்கள்..
சுவாசத்தில் சுகம்..
சிந்தனையின் தெளிவு...

நகம் ...

நீ
முதன் முறை
வெட்டி விட்ட
நகங்களை
வளர வளர வெட்டுகிறேன்...

அது
நம்
காதலைப் போல
வெட்ட வெட்ட வளருகிறது..

Wednesday 4 February, 2009

நானாக நீ...

எப்படி
எனக்குள்
வந்தாய்..?
சொல்லத் தெரியவில்லை..

நானாகவே
நீயிருந்தாய்..
நான் நினைப்பதெல்லாம்
நிகழ்த்தியிருந்தாய்..

தானாக யாவும்
சொல்வாய்..
சமயத்தில்
என்னை வெல்வாய்...
மௌனத்தில்
பாதி கொல்வாய்..

திசைகளைத் திறந்தவன்..

சிரிக்கிறாய்..
சிதறடிக்கிறாய்...

புன்னகைக்கிறாய்..
புதைக்கிறாய்..

அரவணைக்கிறாய்..
அழ வைக்கிறாய்..

நிற்கிறாய்..
நிறைக்கிறாய்..

கற்பிக்கிறாய்..
கற்கிறாய்..

அறிகிறாய்..
ஆராதிக்கிறாய்..

ஆள்கிறாய்..
வீழ்கிறாய்..

திசைகளைத் திறக்கிறாய்..
தீண்டாமை வெறுக்கிறாய்..
தித்திப்பாய் இருக்கிறாய்..

சோகங்கள் புதைக்கிறாய்..
சுகங்கள் விதைக்கிறாய்..
தாகங்கள் தீர்க்கவே
தருணங்கள் பார்க்கிறாய்...

காலக் கண்ணாடியாய்
கண்முன்னே நடக்கிறாய்..
பிம்பமாய் தொடர்கிறேன்..
உன் திசைஎங்கும்..

காதல் சுமந்து..

வாரி வாரி
இறைக்கிறாய்..
காதலை
வாங்கும் திறனின்றி
திரும்பிச் செல்கிறேன்..
என் முன்னே
அலை வருகிறது
உன் காதலைச் சுமந்து..

அழிக்கிறேன்.

சுவடுகளை
அழிக்கிறேன்..
அழிப்பதும்
சுவடுகளாகிறது...

பூனை..

மௌனப் பூனை
உலகைச் சுற்ற விரும்பி
ஒரு மதிய நேரத்தில்
வெளிக் கிளம்பியது...

இதமான
பயணம்
இறுக்கமாக ஆரம்பித்தது..
அவனைச் சந்தித்ததிற்குப் பின்..

பூனையைத்
தடவிக் கொடுத்தவன்
மெல்ல மடியிலிட்டு
வருடினான்..

பூனை எழ
முயற்சிக்க
வாலையும் காலையும்
ஒரு சேர பிடித்து
சுழற்றும்
பாவனையில் வைத்திருந்தான்..

பூனையின் மிரண்ட கண்கள்
வழி ரத்தம் கசிய
இரக்கமே இல்லாமல்
அதன் வாலைக் கடித்துத் துப்பி
தூக்கிஎறிந்தான்..

திரும்பி வந்த பூனை
பின் ஒருபோதும்
மதியத்தில்
வெளிக்கிளம்பியதில்லை...

காணாத போது..

உன்னைக்
காணாத போது
எழுவதும்..
உன்னைக்
கண்டவிடத்து
அடங்குவதுமான
உன்னால்
மட்டுமே
பதில் தரக் கூடிய
கேள்விகள் சில
காத்திருக்கின்றன..
எப்போது
எதிர் கொள்ள சம்மதம்?

மௌனம்

என்
வார்த்தைகளுக்கே
விளக்கம் கேட்கும்
பலருக்கு மத்தியில்
என்
மௌனத்தையும்
மொழி பெயர்க்க
உனக்கு மட்டுமே
தெரிந்திருக்கிறது தோழா...

கிளிசரின்

உன்
வார்த்தைகளில்
கிளிசரின்
தடவியிருப்பாய் போலும்..

அது
என்
கண்களில்
கண்ணீரைக்
கண்டுவிட்டுத்தான்
ஓய்கின்றது..

நேசம்..

உன்
மீதான
நேசத்தை
நிரப்பி வைத்திருக்கிறேன்..
நினைவுக் குப்பிகளுக்குள்..

நீ
தட்டி விட்டுச்
செல்லும் அதனை..
மீண்டும் நிரப்புகிறேன்
பழைய நேசத்துடன்...

கனவுகள்

கனவுகள்
காத்திருக்கின்றன
சலனமற்ற
என் தூக்கதிற்க்காய்...

தூக்கம்
காத்திருக்கின்றது ..
வரமறுக்கும்
கனவுகளுக்காக...

இந்த இரவு
எதை பரிசளிக்க
போகிறதோ?

பூமிகள்.

இன்று
உச்சிவெயிலில்
சோப்பு நுரைகளால்
காற்றுத் திரைகளால்
நிறைய பூமிகளை
பிரசவித்தபடி இருந்தேன்..

நிழல் கடந்த
பூமிகள் சில
சூரியன்களாய்
மாறிப் போயின..

அக்கம் பக்கமிருந்த
சின்னஞ்சிறார்கள்
ஓடி வந்து தங்களது
சிறு கைகளால்
பூமிகளை
உடைக்க ஆரம்பித்தனர்..

சளைக்காமல்
பூமிகள்
என் வாயிலிருந்து
பிரசவமாக
அவர்களின் கைகளில்
உடைபட்டு
மறைந்த படி இருந்தன....

வேறு வேறு
உலகமாயிருந்த
அவர்களுக்கும்
எனக்கும்
புது உலகம் உருவானது..

Tuesday 3 February, 2009

முத்தம்

பணியினிடுக்குகளில்
சோர்வுற்ற
அந்தி மலரைப் போல
வரும் என்னை
புதுப்பிக்கிறது...
உன் ஸ்பரிசமும்..
எச்சில் முத்தமும்...

உன் பிஞ்சுக்
கைகளில்
எப்போதும்
சிறைபடக்
காத்திருந்த
பொழுதுகள் ஆயிரம்...

நீ
வீடு மாற்றி
சென்றதிலிருந்து
வெறுமையாய்
இருக்கிறது
என் பொழுதுகள்..

அவ்வப்போது
நீ
முன்னர் கொடுத்த
முத்தங்களே
மீட்டெடுக்கின்றன...
அவசர காலங்களில்...

நீ...

காலைப் பனியினை
தரிசித்த
இயற்கையின்
சத்தங்களை
பதிவு செய்த
அனுபவம் சொல்லி
படுக்கையில்
புரண்டு கொண்டிருக்கும்
என்னை விழிக்க செய்கிறாய்...
விலக்குகிறேன்
போர்வையோடு..
சோர்வையும்..

நான் செய்ய
நினைப்பவற்றை
செய்து முடித்து விட்டு
விழி விரிய செய்கிறாய்...
சிந்தித்து
செயல் படாமலிருக்கும் என்
நிலையினை
நகையாடுகிறது உன் செயல்..

கடக்க வேண்டிய எல்லைகளை
கண்டு பிரமித்து நிற்கையில்
எனக்கு முன்னே சென்று
கைதூக்கிவிட காத்திருகிறாய்..
என் இதயம்
சிறகு முளைத்து
பறக்கிறது உனக்கு முன்னால்..

எல்லோருக்குமானவனகா
நீயிருந்த போதும்
உணர்கிறேன்
சில நேரங்களில்...
எனக்கானவனாக ...

நமக்கிடையேயான
வார்த்தை பரிமாற்றங்களின்
மத்தியில்
சம்மணமிட்டு எழுகிறது
மௌனம்...

அது உடை படும் போது
விடை தெரியும்..
எல்லாக் கேள்விகளுக்கும்...

காத்திருப்பு படர்கிறது...
நம் வெளியெங்கும்..

புன்னகை

வழியில்
எங்காவது
சந்தித்தால்
உதிர்த்துப் போக
புன்னைகையாவது வேண்டும்...

இப்போதே
விதைத்துப்
போகலாம்
அதற்கான
துவக்கப் புன்னகையை...

புத்தகங்கள்- சிறுகதை

சிரித்தபடியே சொன்னான்...'நீ இன்னும் கடக்க வேண்டிய எல்லைகள் எவ்வளவோ இருக்கிறது. ..' என்று. தலையாட்டியபடியே 'அந்த எல்லைகளை அறிமுகம் செய்து வை' என்றபடி விடைபெற்று வந்துவிட்டேன்..

வரும் வழியெங்கும் அதைப் பற்றியே அசைபோட்டேன்...நான் இதுவரை எண்ணியவை குறுகிய எல்லைகளை கொண்டதா? எனது வாசிப்புத்தளம் இன்னும் விரிவடையவில்லையா? அவன் சொன்ன அந்த கடக்க வேண்டிய எல்லைகள் எவை? ..இந்த பத்து வருடத்தில் நான் இன்னும் சிறுபகுதிக்குள்ளே நின்று கொண்டுதான் சுற்றி வந்திருக்கிறேனா? ஏன் என்னிடம் எனக்கு தெரிந்த யாரும் சொல்லவில்லை...சொன்னால் அவர்களுக்கு இணையாக நானும் வளர்ந்து விடுவேனா?.. அல்லது அவர்கள் சொல்லியும் அதற்கான தேடல் என்னிடம் இல்லாமல் இருந்ததா?..இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வது..?ஒரே குழப்பமாக இருக்கிறதே ..சரி அவன் நாளை சந்திப்பதாக சொல்லி இருக்கிறான்.. அவனிடமே கேட்டு விடலாம்..

மறுநாள் குறித்த நேரத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது..ஒரு சிறிய ஆனால் கனமான பையொன்றை என்னருகில் வைத்துவிட்டு தன்னுடைய கால்சட்டையை லேசாக தூக்கிக் கொண்டு மணலில் அவன் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான்..

நான் கால்களை நீட்டியபடியிருந்தது அவனுக்கு எரிச்சல் தரவில்லையென்று
உணர்ந்தேன்..அவன் தந்த பையைத் திறந்து ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் பார்த்தேன்... இதுவரை நான் கேள்விப்படாத எழுத்தாளர்கள் .. நாவல்களாக, கதைகளாக,கவிதைகளாக கைகளில் கனத்துக் கொண்டிருந்தனர்.. அவனே ஆரம்பித்தான்..

ஒவ்வொரு எழுத்தாளர்களின் செல்வாக்கு பற்றியும், அவர்களின் பின்புலம் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தான்...அதுமட்டுமன்றி அந்த புத்தகங்களின் ஒரு சிறு சாராம்சத்தையும் பகர்ந்தான்..நான் விழிவிரிய
ஆச்சர்யத்துடன் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. இவ்வளவு நாள் இவனைப் பற்றி அறியாமலிருந்து விட்டோமே என்ற ஏக்கத்தை தூவியபடி இருந்தது அவன் பேச்சு...

அவனிடம் கேட்பதற்கென்று சேர்த்து வைத்த கேள்விகளுக்கும் அவனது வார்த்தைகள் பதில் சொல்வதாக இருந்தது...அந்த பையை வீட்டுக்கு கொண்டு வந்து எனது அறையெங்கும் பரப்பி வைத்துக் கொண்டு ஆச்சரியங்களோடு பார்த்திருந்தேன் .. எவ்வளவு மிகப் பெரிய எழுத்தாளர்களெல்லாம் இன்று என்னோடு..

ஒவ்வொரு புத்தகங்களையும் எடுத்து லேசாக புரட்டி பார்த்து விட்டு பக்கத்திலேயே வைத்தபடி இருந்தேன்..சிறிது நேரத்தில் எனது அறையெங்கும் பரவி இருந்த புத்தகங்கள் ..என்னை சுற்றி அடுக்கப் பட்டிருந்தது போல இருந்தது.. ஒவ்வொரு எழுத்தாளர்களிடமும் மிக நெருங்கிய நட்பை பெற்று விட்டேன்.. இப்படியே நாட்கள் நகர்ந்து போனது...நான் புத்தகங்களுக்கிடையில் ஊர்ந்து கிடந்தேன்..தீராத தாகத்துடன் வரிகளை வலிகளை விழுங்க கற்றுக் கொண்டு விட்டேன் ..அந்த அறையை விட்டு வெளியே எங்கும் நகர்ந்த பாடில்லை..யாரும் என்னைதொந்தரவும் செய்ய வில்லை.. பூட்டப்பட்ட அந்த அறையின் ஜன்னல் வழியே வெளியே யாரவது முக்கியமான நபர்கள் எங்கள் வீட்டிற்கு வருகிறார்களா? என்று பார்த்துக்
கொள்வதோடு சரி...

ஒரு கட்டத்தில் புத்தகங்களின் பக்கங்களில் குடியேற ஆரம்பித்தேன்.. சில தாள்களோடும் ..சில எழுதுகோல்களோடும் .. குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். அந்த குறிப்புகள் ஒரு பக்கம் தாள்களாக பரவி ஒரு குவியலை உருவாக்கிஇருந்தது..இப்போது புத்தகங்கள் தன் எடையை இழக்க ஆரம்பித்தது.. நான் புரட்டிப் படித்த புத்தகங்கள் காற்றில் மிதந்தன..ஒரு காகிதத்தைப் போல.. இப்படியே அந்தரத்தில் நான் படித்த புத்தகங்கள் காகிதத்தை போல மிதக்க ..நான் எடுத்த குறிப்புகள் தரையோடு தரையாய் கிடந்தது..

புத்தகங்களோடு படுத்துக் கிடந்த இரவுகளில் பசியறியாது..
உடல் இயக்க வெளிப்பாடுகள் ஏதுமின்றி இருந்தது ஆச்சரியமாய் இருக்கிறது..

ஒருவேளை அந்த கதைகளில் வரும் கதாபாத்திரங்களோடு நானும் உண்டு , கழித்து ,ஊர் சுற்றியது காரணமாய் இருக்கலாம்..
சில நாட்கள் கழித்து எனக்கு புத்தகங்கள் பரிசளித்தவன் வந்தான்..என் அறையை திறந்து மூடினேன்.. உள்ளே வந்து பார்த்தவன் வியந்துபோனான்.. அப்போது அவன் தந்திருந்த புத்தகங்கள் காற்றில் மிதப்பதை விட்டு ஒவ்வொன்றாய் தரையில் விழ.. எனது குறிப்புகள் இப்போது அந்தரத்தில் மிதக்க ஆரம்பித்தது..

அவன் வேறு புத்தகங்கள் எதாவது கொண்டு வந்திருக்கிறானா என்றுக் கேட்க அவன் நூலகத்திலிருந்து வந்ததாக ஒரே ஒரு புத்தகத்தை நீட்ட அதையும் வாங்கி அவசர அவசரமாக பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.. எனது தாகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்ததே யொழிய அடங்கவில்லை..எனது நாட்கள் இப்படியே நகர்வதை அருகிருந்து பார்த்த அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.. இப்படியே விட்டால் நான் பைத்தியமாகி விடுவேனென்று அவனிடம் என் வீட்டில் உள்ளவர்கள் சொல்லவும் அவன் அந்த முடிவை எடுத்திருக்கக் கூடும்..

தீராத தேடலுடன் படித்தபடி இருந்த என்னை தான் படிக்கப் போவதாக சொன்னான்.. அதிர்ச்சியுடன் நிமிர்ந்த போது எதையும் கண்டு கொள்ளாதவனாக வேக வேகமாக புரட்டினான்...

அதற்கு பிறகு நான் எதையும் படிப்பதே இல்லை..எங்கேயாவது எழுத்துக்கள் தெரிந்தாலே எரிச்சலைடைகிறேன்..என் பார்வையிலிருந்து எழுத்துகள் ஓடி ஒளிய வேண்டும் என விரும்புகிறேன்.. வீட்டிற்கு வாங்கி வரும் பொருட்களைச் சுற்றி இருக்கும் தாள்கள் கூட கடுங்கோபத்தை உண்டாக்குகின்றன.. அவன் இன்னும் என்னைப் படித்துக் கொண்டிருக்கிறான்......

தூத்துக்குடி முத்து

முத்துக்கு பெயர் பெற்றது
தூத்துக்குடி...
தூத்துக்குடியே பெற்றெடுத்த
முத்து நீ...

உன் தீக்குளிப்பை
ஈனர்கள் சிலர்
ஏளனமாய் பேசலாம்..
அது எப்போதும்
நடப்பதுதானே...

உன் தியாகம்
ஏராளமானோரை
உசுப்பி விட்டிருக்கிறது...

இருட்டை கொளுத்திப்
போட்ட வெளிச்சமே...
பல முகத்திரைகளை
கிழித்தெறிந்த தீவி(வீ)ரனே

வரலாற்று நாயகன் நீ...
வரலாற்றை புரட்டும் நாயகன் நீ...

உன் வெளிச்சத்தில்
பலரின் முகங்களும்
வெட்ட வெளிச்சமாயின..

நீ இட்ட தீ
புகைகிறது உலகமெங்கும்...
இனத்தீயாய்..

இது விளையாட்டு

வேடிக்கைதான்
பார்க்க முடிகிறது..
சிலரால்..

விளையாட்டையும்...
வெடிகுண்டு போடுவதையும்...

கர்ணா..

பணத்தின் பின் சென்ற
இனமழிக்க துணிந்த
வரலாற்றுத் துரோகியே...

நீ உயிர் துறந்திருந்தால்
உலகமே உன்னை கொண்டாடிஇருக்கும்..
உயிருக்கு பயந்து
எதிரிக்கு ஏவல் செய்யப் போனா(நா)யே ...

பூமித்தாய் உன்னை சுமந்ததிற்கே
தலைகுனிகிறாள்..
இரட்டையர்களில் ஒன்று
இதயமற்றுப் பிறந்ததை
காலம் அவளுக்கு தாமதமாய்
உணர்த்த நிலைகுலைந்த
அவளைத் தாங்கிப்
பிடித்துக் கொண்டிருக்கிறேன்
என் தாய் மாமன்..

ஒன்று கேள்
ஈனப் பிறவியே...

காலத்தால்
யூதாஸ்
இயேசுவால்
மன்னிக்கபடலாம்..

எட்டப்பன்
கட்டபொம்மனால்
மன்னிக்கப்படலாம்...

காட்டிகொடுத்த கர்ணாவே..
ஆயிரம ஆண்டுகள்
கடந்த பின்னும்
காலமும் மன்னிக்காது..
தமிழினமும் மன்னிக்காது...

அழிந்து போ
அடியோடு அழிந்து போ..

என்ன செய்ய?

நான்கு விக்கெட்
எடுத்ததற்கே
கல்லெறிகிறாய்...

நாற்பது ஆண்டுகளாக
ஆயிரமாயிரம் உயிர்களை
கொல்லும்
உன்னை
என்ன செய்ய வேண்டும்?...

அணி

காதணி
கையணி
காலணி
கழுத்தணி
யாவற்றையும்
கழற்றி வைத்து விட்டு
விளக்கணைக்கிறேன்..
உருவக அணி
உவமை அணி
சொல்பொருட்பின்வருநிலையணி
தற்குறி பெற்றணி
வரிசையாக அணிவகுத்து
நிற்கிறது..

தொலைக்காட்சியும் தொல்லையும்...

சின்னத் திரை மோகம் பிடிபட
சிந்தனையின் வேகம் தடைபடும்..

காய்கறிச் சந்தையில்
விலையினை தெரிந்துகொள்வதை விடவும்
சீரியல் நடிகைகளின்
நிலையினை தெரிந்து கொள்ளவே முனைவர்..

வீட்டிலிருந்தே திருவண்ணாமலை
தீபம் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வர்..
பக்தியாய் முக்தி நோக்கி சக்தி கேட்பார்..

விளம்பரங்கள் பார்த்தே
விடிந்தது முதல்
விழிகள் தூங்கும் வரை
அதனை பொருட்களும் வாங்கப்படும்
பலவீடுகளில் ...
வேண்டாதவற்றையும் வாங்கி நிறைப்பார்
சிலவீடுகளில் ...

அடுத்த தலைமுறையில்
இதெல்லாம் நடக்கும்..

உயிர்கொல்லும் குளிர்பானங்கள்
குளிர்சாதனப் பெட்டியில் குவிப்பார்..
உடல்நலம் குன்றம் போது
இளநீரில் இருந்தோ நொங்கிலிருந்தோ
தயாரிக்கப்பட்டு
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும்
மருந்துகள் அதிக பயன் தரும்..

எட்டுமணியானால்
மின்வெட்டானாலும்
கண்ணில் தாரை தாரையாய் நீர் வழியும்..

அறிவியல் அப்போது சொல்லும்
குறிப்பிட்ட நேரத்தில்
தொடர்ச்சியாய் பார்த்த
தொடர்கள் முடிந்த பின்னும்
முடிவிலியாய் தொடரும் கண்ணீர்
பரிணாம வளர்ச்சிஎன்று...

கணவன் மனைவிக்கிடையேயான
பரஸ்பரம் குறைந்து மாதத்தில் ஒருநாள்
பேசுவதற்காகவே
ஒருநாள் தேர்ந்தெடுக்கப் பட்டு
கொண்டாடப்படும் நாளாக
வெளியில் எங்காவது சந்தித்துப் பிரியும்
நிலை வரும்..

ஒரு வீட்டின் அத்தனை
அறைகளையும்
கண்ணாடி, துணிமணிகள் போல
தொலைக்காட்சிப் பெட்டிகள்
அலங்கரிக்கும்...
ஆளுக்கொரு அறையில்
தொலைகாட்சியில்
முகம் புதைத்திருப்பர்கள்...

தனிக்குடும்பம்
கூட்டுக்குடும்பம் மறைந்து
ஒரு நபர் வீடுகளாக
அறைகள் மாறும்..

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
வீதிக்கொரு பள்ளி கட்டுவோம் என்பது போல...
ஊருக்கொரு கட்சித் தலைவார்கள்
ஈசல்களாய் சேனல்கள் தொடங்குவார்கள்..

நிகழ்ச்சிகளுக்கிடையே
விளம்பரங்கள் வருவது போய்
விளம்பரங்களுக்கிடையே
நிகழ்ச்சிகள் வந்து போகும்..

மட்டைப்பந்து
அதாவது ஆங்கிலத் தமிழில்
கிரிக்கெட்...
கைப்பந்து
கால்பந்து மறந்து
மட்டைப்பந்தோடு
மந்தையாய் திரிவார்கள்...
குழந்தைகள்..மாணவர்கள்..

சிலம்பாட்டம்-சிம்புவின் படமல்ல...
தமிழரின் கலை
சிலம்பாதாம் ஒரு படத்தின்
பெயராக மட்டுமே அறியப்படும்..

திரையரங்குகள்
மூடப்பட்டு
கடித முகவரிகளிலோ
முகவரி தேடி வரும்
புதியவர்களுக்கோ
திரையங்குகள் பெயர்கள்
அடையாளப்படும்..

திரைத்துறை அடியோடு
சின்னத்திரைக்கும் புலம் பெயரும்..
புரட்டுவாரின்றி
புத்தகங்கள் தெம்பும்..

தொடர்ந்து சீரியல்
பார்பவர்களின் சங்கம்
தொடங்கப்படும்..
அதுவும் கூட்டப்படாமலே
இருக்கும்...
கூட்டப்பட்டாலும்
விட்டுப்போன நாட்களில்
நடந்த நிகழ்ச்சிகளை
அசைபோடவே அது பயன்படும்..

அண்டை வீடு
அண்டார்டிகாவில் இருக்கும்..
அண்டார்டிகா
அடுக்களைக்குள் அலறும்..

சேனல்களில் செய்திகள் மாறுபடும்..
உண்மைகள் வேறுபடும்..
சிலர் NDTV,BBC களில்
உள்ளூர் செய்திகளை அறிவார்கள்..

உறவுமுறைகள் கேள்விக்குறியாகும்..
ஒரு குழந்தை தன் தாயைக்
கண்டறிவதே பெரிய கின்னஸ்
சாதனையாகப் பேசப்படும்...

சந்திராயன் விண்ணிலிருந்து
நிலவோடு பூமியையும்
புகைப்படம் எடுத்து அனுப்புகையில்
ஒயர்களால் மரங்கள்
கட்டப்பட்டிருப்பதாக
காட்சிகள் சொல்லும்...
அங்கே
உறவுகள் அறுபட்டிருக்கும்...


Tuesday 20 January, 2009

பெண்ணே

துரியோதனர்களும்
துச்சாதனர்களும்
அதிகரித்து விட
கண்ணன்களும் கூட
மாறிப் போயினர்..

கண்ணன்கள்
கண்டு ரசிப்பதில்
அதி ஆர்வமாய்..

கர்ணன்கள்
கயவர்கலாகி
சுண்டு விரல் மோதிரத்தையும்
சுட்டு விடுவதில்
வல்லவர்களாய்..

சகுனிக்கும்
கூனிக்கும்
அரசாட்சி..

துர்வாச முனிவரும்
விஸ்வாமித்திரரும்
அடுக்கு மாளிகையில்
தொலைக்காட்சி முன்..

இங்கே இதில்
உனைக் காப்பாற்ற
உன்னை விட்டால்
வேறு யாருமில்லை...

கலியுகம்

ராமன்களுக்கு
மண்டோதரிகள்
தேவைப்படுகிறார்கள்..

வால்மீகிகளின்
புராணப்படைகள்
புரட்டப்படுகின்றன..

லட்சுமணன் சீதையின்
குளியலறை வழியே
குளிர்காய்கிறான்..

இருளல்லாத சூழலில்
பார்வைப் பின்னலில்
அகளிகைகலாகும் சிலர்..

கர்ணன்
துரியோதனின் ஆட்சியைக்
கைப்பற்றுகிறான்...

அர்ஜுனன்
கண்ணனோடு
போரில் எதிர் நிற்கிறான்..

குந்தி தேவியை
திருமணத்திற்கு பிறகும்
தொடரும் சூரிய தேவன்...

பாண்டியன் மாதேவி
நெடுஞ்செழியன்
சிதைக்கு தீ வைக்கிறாள்..

கட்டை விரலோடு
கைகளையும் சேர்த்துக்
கேட்கும் துரோணாச்சாரியர்கள்...

மனுநீதி சோழர்கள்
ஆராய்ச்சி மணி
அடிப்பவர்களைத்தான்
தேர்க்காலிலிட்டு
நசுக்குகிறார்கள்..

இப்படியாய் இன்னும்
தொடர்கிறது சில...

காதல்

காதல் ஒரு போதை
காட்டு வழி பாதை
கல் தடுக்கி விழுந்தேன் -உன்
கண் தடுக்க புதைந்தேன்

காதல் ஒரு நீரு
தாகம் அதில் நூறு
மூழ்கடித்து போகும் -அதில்
மூச்சும் திணறிப் போகும்

காதல் ஒரு யானைப்பசி
வாழைப்பழம் எல்லாம் தூசி
அள்ளக் குறையாத அட்சயமே
அணைக்கும் பசியை நிச்சயமே..

கல்லூரியில் பாடம்
கற்றுக் கொள்ளும் நேரம்
காதல் வந்து கலைத்தது
கவிதையாலே வளைத்தது..

தீண்ட வந்த காதல் என்னைத்
தின்று போனதேன்?
வானம் பறந்த சிறகுகள்
கூண்டில் அடைந்ததேன்?

போதும் போதும் லீலைகள்
பொய்தான் காதல் வேலைகள்

கால்கள் இரண்டும் நடக்கும் -அதில்
காதலின் தடம் கிடக்கும் -என்
கண்கள் இரண்டும் பார்க்கும்-அதில்
காதல் முத்துக் கோர்க்கும்

அமைதியில் என் மனம்
நூலகத்தின் அடுக்காய்..
அதிரடியாய் காதல்
புரட்டியது துடுக்காய்..

சாய்ந்து கொள்ள தோள்கேட்டு
காதல் என்னை கெஞ்சியது..
சரியென்று ஒத்துக் கொள்ள
சாய்த்து விட்டு துள்ளியது..

உன்னை நான் மீண்டும்
பார்க்கவும் வேண்டாம்..
உயிரினை நீயும்
உருக்கவும் வேண்டாம்..

காதல் ஒரு தொல்லைதான்
கண்கள் அதற்கு இல்லைதான்
காமம் அதன் எல்லைதானே

காதலுக்கு இல்லை வேலி
காதல் காலம் எல்லாம் போலி
கண்ணீர் துளி அதன் கூலி

சொல்லிக் கொண்டும் வரவில்லை
சொல்லிவிட்டும் செல்ல வில்லை
காதலின் லீலையில்
கவிழ்ந்தேன் மூலையில்

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?