Wednesday 22 October, 2008

இது பிரிவின் காலம்

கோபத்தில் உன்னால்
உதிர்க்கப்படும்
சிற்சில செயல்கள்தான்
சமருக்கான
அழைப்பாக இருக்க்கிறது...
-------------------------------
போர்க்களத்தில்
நிற்குமென்னை
பூச்சூடி அலங்கரித்து வரச்
சொல்கிறாய்...

எனக்கான அணிகலனே
தைரியம் என்பதை
மறந்து போகாதே...
----------------------
பிரிவுகள்தான்
எனதிருப்பினை
உனக்கு
எடுத்தியம்புமென
பிரிந்து போனேன்..

உணர்த்திவிட்டது
உன் அருகாமையை
எனக்கு...
-----------
முதுகுக்குப்பின்
வார்த்தைகளால் அடிக்கும்
உன்னை விடவும்
நேருக்கு நேராய்
பார்வையால் அறையும்
என் எதிரி மேலானவன்..
----------------------------
உனது
சின்னக் கிறுக்கல்
பெரிய சறுக்கலை
தருவிக்கிறது...

சில சந்தர்ப்பங்களில்
எதிர்பாராத கிறுக்கல்கள்
சின்ன அதிர்வலையைத்
தோற்றுவித்து அடங்குகிறது..
-----------------------------------
நிகழ்வுகளை
பதிவு செய்வதற்காகவே
பயணப்பட்டதில்
காலம் முன்மொழிய
சூழல் வழிமொழிய
புதிய அனுபவமொன்று
அந்நிகழ்விற்கு தலைமை ஏற்றது...
----------------------------------------

கண் பேசும் கவிதைகள் -3

பார்வையாலே
சொட்டுச் சொட்டாய்
நனைத்து
வெப்பமூட்டுகிறாய்...
-------------------------
நீ முட்டாள்
என்பதற்காகவே
அறிவிலியாய்
அறியத் தருகிறேன் என்னை...
-----------------------------------
உனது நினைவுகள்
பௌர்ணமியாய்
தொடங்கி
பௌர்ணமியாய்
முடிகின்றன..
வளராமலும்...
தேயாமலும்...
----------------
வியர்ப்பதற்கே
காரணமானவனே
விசிறியும் விடுகிறான்...
----------------------------
இப்போதெல்லாம்
கவிதை என்றாலே
நினைவுக்கு
வந்துவிடுகிறது..
உனக்கு என் முகம்...
------------------------
நண்பர்களிடம்
கெஞ்சிக் கூத்தாடிக்
கைபேசி கட்டணத்தைக்
கட்டி விடுகிறாய்...

உனது அழைப்பை
நான் பெறவும்..
எனது அழைப்பை
நீ ஏற்கவும்...
---------------


தேனூறும் எண்ணம்

ஒருமுறை
கன்னத்தில் ஒன்று கேட்டு
நீ அடம்பிடித்த போது
என் உதட்டில்
பட்டம்பூச்சியொன்று
நொடியில் அமர்ந்து போனது...

நான் உனக்கு தராததைவிட
அது என்னிடம் பெற்றுச்
சென்றதாகக்
கோபித்து நாள் முழுவதும்
தோட்டத்தில் அதனைத்
துரத்தினாய்...

பின் எப்பொழுதாகினும்
எங்கேனும் அதன் இனத்தைப்
பார்க்க நேர்ந்தாலே
நமது எண்ணங்களில்
தேனூருகிறது...

கண் பேசும் கவிதைகள் -2

பயணங்கள்
கவிதைகளின்
தாய் வீடு போலும்...

குதூகலத்துடன்
வந்து ஒட்டிக்
கொல்கின்றன...

எத்தனையோ நட்புகளுக்கும்
எத்தனையோ காதலுக்கும்
களம் அமைத்த
இரயிலின் இருக்கைகள்
புனிதப்படும்...

கிளைகளுடன்
மீண்டும் பயணிக்கையில் ...
---------------------------------
காத்திருப்புகளில் கூட
பருவம் தோன்றுகிறது...

காதலின் காத்திருப்பு
கோடையாயிருக்கும்...

நட்பின் காத்திருப்பு
வசந்தமாயிருக்கும்...
-------------------------
ஆடை மாற்றி ஆடை மாற்றி
அழகு பார்த்த போதில்
மனமும் தன் ஆடையைக்
கழற்றிக் கொள்ள ...

பாய்ச்சலுக்குப் பதுங்கும்
புலியாய் நரம்புகள் முறுக்கிக்
கொள்ள வேகம் பீறிட்டது...

சற்று நேர
அடங்குதலுக்குப் பின்...
ஒளியுண்டு நிமிர்ந்தாய்
கவியத் தொடங்கியது
என் மீது இருள்...
-----------------------
*முதன் முதலாய்
நாம் பயணித்த
ரயில் கடந்து போகிறது
இரைச்சலுடன்...

உள்ளுக்குள்
நிசப்தமாய்
நம் நெருக்கம்...
-------------------------

கண் பேசும் கவிதைகள்-1

*உனது விரலின்
வெளிச்சத்தில்
என் வெட்கங்கள்
எல்லாம்
கண்ணாமூச்சி ஆடின..

வெட்கம் வடியத்
தொடங்கியதில்
மீறப்பட்ட எல்லைகள்
வெளியின்றியே திரிகின்றன
இன்னமும்...
------------------------
*இரவுக்கும்
விடியலுக்குமான
இடைவெளியில்
தொலைகிறது
நம்பிக்கையின் கணம்...

நிறைவிற்கும்
நிறைவின்மைக்கும்
இடையிலான ஊசலில்
அலைகிறது மனம்...
---------------------
*காற்றில்
விதைத்திருக்கிறேன்
உன் நினைவுகளை

நீயோ நானோ
இல்லாத போதுகளில் கூட
நம்மைப் பற்றி
பேசியபடி இருக்கும்
எந்த ஜன்னலோர
பயணியிடமாவது...
--------------------------------
*ஒருமுறை
விதைக்கப்படுவதில்லை
நம்பிக்கை..
ஒவ்வொரு முறையும்
வளர்க்கப் படுவதே
நம்பிக்கை...

ஒருமுறை
ஊற்று எடுப்பதல்ல
காதல் ..
ஒவ்வொருமுறையும்
பிரவகிப்பதே காதல்...
------------------------

Tuesday 21 October, 2008

பண்டிகை

பண்டிகை நாட்களின்
முன்பாக
அலைஅலையாய்
திரளும் மக்களில் நானுமோர்
புள்ளியாய் நகர்கிறேன்...

விலையை விசாரித்து
விலகிப் போகும்
கடைகளின் எண்ணிக்கை
ரூபாய் நோட்டுக்களை விட
அதிகம்..

சாலையோரக் கடையில்
மலிவாய் சிலதை
பொறுக்கியபடி
ஆறுதலைடையும்
ஆர்வம்...

பட்டாம்பூச்சி

நெடுஞ்சாலையின்
எந்த திசையிலிருந்து வருமென்று
யூகிக்க முடியாத தருணத்தில்
பட்டென்று சிறகுகளால்
தட்டிப் போகும்
பட்டாம்பூச்சிகள் ...

பரவசப்பட இயலாத
பதட்டத்தில்
பாதுகாப்பாய் வண்டியோட்டுவதில்
கவனம் குவிய
ஆழ்மனதில் சில கேள்விகள்
தேங்குகிறது...

நகரச் சாலைகளில்
கட்டிட இடுக்குகளில்
எங்கே சேகரிக்கும்
தனக்கான உணவை...
உறைவிடத்தை..

கரை ஒதுங்கிய
கேள்விகளுக்கு
வெவ்வேறு பட்டாம்பூச்சிகளின்
உரசல்கள் உணர்த்துகிறது...
இவ்வெளியில் யாவர்க்கும்
வாழ ஒரு இடமுண்டு...

தவறுகள்

தவறுகள்
யாவர்க்கும் தவறுகளாய்த்
தெரிவதில்லை...

தவறுகளை
செய்தவர்களும் தவறுகளை
உணர்வதில்லை ...

தவறுகளை
சரியாக பார்க்கிற தவறும்
குறைந்தபாடில்லை..

தவறுகள்
புரிகிற தவறுகளில்
தப்பிப் பிழைக்கிறது
சில உண்மைகள்...

சந்தேகம்தான்...
அந்த உண்மையிலும் தவறுகள்
உயிரோடிருக்கலாம்..

நேசிப்பின் பரிமாணம்

படித்தபடியிருந்த
புத்தகத்தின் முனையில்...

தானே வந்தமர்ந்த
சின்னஞ்சிறிய பூச்சியொன்று
உற்றுப் பார்க்குமுன்னே
பறந்து சென்றது...
பக்கங்களையும்
பார்வையையும் கடந்து..

என்ன தேடி வந்திருக்கும்?
எனது உற்றுநோக்குதல்
அதற்கு உயிர்பயம்
தந்திருக்குமோ?

இருக்கலாம்...
நேசிப்பு கூட சில நேரங்களில்
யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது..

நேசிப்பு

நேசிப்பதைக் குறைத்துக்
கொள்ளலாம்..

ஒன்றன் பின் ஒன்றாய்
வீசிஎரியப்படும்
வாசனையற்ற சொற்கள்
மிதக்கின்றன..
கருக்கொள்ளவிருக்கும்
மேக தூசுகளாய் ..

உருண்டு திரண்டு
எந்நேரமும் பொழியக்
காத்திருக்கும் அது..

மென்மையுடன்
வன்மையுடன்
மேகம்
சட்டென்று கொட்டிவிடும்
உனது எல்லையற்ற
எதிர்பார்ப்பின் விளிம்பு வெடித்து..



Saturday 18 October, 2008

காதல் நிஜமானதுதான்..

உன் காதல்பொறாமைப் படும்..

எரிச்சல் படும்..கோபப்படும்..

என் காதல்அன்பைத்தரும்..

கனிவைத் தரும்..பொறுமை தரும்..

இரண்டுமே இருப்பதால்நம்

காதல் நிஜமானதுதான்..

Wednesday 1 October, 2008

தனிமை

அந்த ரயில் நிலையத்தில்
என்னைத் தவிர யாருமில்லையென
சொல்ல முடியாது...

நடுநிசியில்
பொது இடத்தில்
தனியே இரவைக் கழிக்கும்
வெறுமை யாருக்கும் வாய்க்கக் கூடாது...

எங்கேயோ இருந்து கேட்கும்
நாய்களின் ஓலமும்...
அனைத்துப் போட்ட
சிகரெட் துண்டுகளாய்
சிதறிக் கிடக்கும் மனித உருவங்களும்...

நன்றாகத் திருகி மூடியும்
சொட்டுச் சொட்டாய் ஒழுகும்
நீர்க்குழாயும்..
மின்னொளிகளும்..

ஆங்காங்கே
நடமாடுகிற அறிமுகமற்ற ஆட்களும்
ஊசிமுனை கொசுக்களும்
துர்நாற்றம் வீசுகிற கழிவறைகளும்
போக்கி விடவில்லை
என் தனிமையை..

பேட்டரியில் சார்ஜ் இல்லாத
அலைபேசியும்...
காகிதம் ஏதுமில்லாத நேரத்தில்
அழகாய் எழுதும் பேனாவும் கூட..

கைப்பையின்
கடைசித் திறப்பில்
கைவிட்டு எடுத்தேன் ...
என் தனிமையை நீக்குகிற
அந்த புத்தகத்தை...

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?