Monday 23 March, 2009

சாம்பலாகும் வரை...

இந்த முறை
எனது துயரங்களை
எழுதி விடப் போவதில்லை...

ஏனெனில்
அவை வலிமையிழந்துவிடக்கூடும்
புதைத்து வைக்கவும் விருப்பமில்லை..
என் பார்வையிலேயே உலா வரட்டும்..

அப்போதுதான்
எனக்குள் எரியும் பொறி
பெருநெருப்பாகும்..

அந்த நெருப்பு
அந்த பொய்யான
ஒரு சார் விந்தில் துளிர்க்காத அவனை
சுட்டெரிக்கும்
சாம்பலாகும்வரை....

அதனாலொன்றும்...

உன் நிழல் கூட
என் மீது படிவதில்லை...
அதனாலொன்றும் கவலையில்லை..

உதிர்க்கிற வார்த்தைகளில்
ஒன்றுகூட அன்பாயிருப்பதில்லை..
அதனாலொன்றும் மோசமில்லை..

கடக்கிற நொடிகளில்
பார்வை கூட பரிமாறப்படுவதில்லை..
அதனாலொன்றும் நட்டமில்லை...

ஒரே வீட்டில்
இப்படி இருக்க முடியுமா?
என்பவர்களுக்கு
அதிலொன்றும் ஆச்சரியமில்லை.

பறை

இதயத்தின் திரை
கிழித்து
ஊடுருவிய
பறையின் அதிர்வு
இன்னும் நின்ற பாடில்லை...

தலைமுறை கோபங்களை
தப்பில் தாளமாக்கி
உட்செவியினை உசுப்பிவிடுகிறது..

ஐம்புலன்களையும் அதிர வைக்க
ஐம்புலன்களும் ஆடுகிற காட்சி
விடுதலையின் ஓலத்தின் நீட்சி...

காற்றினை கட்டுக்குள் வைத்து
இசைக்கப்படும் அவ்விசை
வீரியத்தின் வெளிப்பாடு..

இன்னும் இன்னும் கிழிக்கட்டும்..
அதிகாரங்களையும்
அக்கிரமங்களையும்
தன்னகத்தே கொண்ட
செவிப்பறைகளை
இந்த பறை...

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?