Tuesday 21 October, 2008

பண்டிகை

பண்டிகை நாட்களின்
முன்பாக
அலைஅலையாய்
திரளும் மக்களில் நானுமோர்
புள்ளியாய் நகர்கிறேன்...

விலையை விசாரித்து
விலகிப் போகும்
கடைகளின் எண்ணிக்கை
ரூபாய் நோட்டுக்களை விட
அதிகம்..

சாலையோரக் கடையில்
மலிவாய் சிலதை
பொறுக்கியபடி
ஆறுதலைடையும்
ஆர்வம்...

பட்டாம்பூச்சி

நெடுஞ்சாலையின்
எந்த திசையிலிருந்து வருமென்று
யூகிக்க முடியாத தருணத்தில்
பட்டென்று சிறகுகளால்
தட்டிப் போகும்
பட்டாம்பூச்சிகள் ...

பரவசப்பட இயலாத
பதட்டத்தில்
பாதுகாப்பாய் வண்டியோட்டுவதில்
கவனம் குவிய
ஆழ்மனதில் சில கேள்விகள்
தேங்குகிறது...

நகரச் சாலைகளில்
கட்டிட இடுக்குகளில்
எங்கே சேகரிக்கும்
தனக்கான உணவை...
உறைவிடத்தை..

கரை ஒதுங்கிய
கேள்விகளுக்கு
வெவ்வேறு பட்டாம்பூச்சிகளின்
உரசல்கள் உணர்த்துகிறது...
இவ்வெளியில் யாவர்க்கும்
வாழ ஒரு இடமுண்டு...

தவறுகள்

தவறுகள்
யாவர்க்கும் தவறுகளாய்த்
தெரிவதில்லை...

தவறுகளை
செய்தவர்களும் தவறுகளை
உணர்வதில்லை ...

தவறுகளை
சரியாக பார்க்கிற தவறும்
குறைந்தபாடில்லை..

தவறுகள்
புரிகிற தவறுகளில்
தப்பிப் பிழைக்கிறது
சில உண்மைகள்...

சந்தேகம்தான்...
அந்த உண்மையிலும் தவறுகள்
உயிரோடிருக்கலாம்..

நேசிப்பின் பரிமாணம்

படித்தபடியிருந்த
புத்தகத்தின் முனையில்...

தானே வந்தமர்ந்த
சின்னஞ்சிறிய பூச்சியொன்று
உற்றுப் பார்க்குமுன்னே
பறந்து சென்றது...
பக்கங்களையும்
பார்வையையும் கடந்து..

என்ன தேடி வந்திருக்கும்?
எனது உற்றுநோக்குதல்
அதற்கு உயிர்பயம்
தந்திருக்குமோ?

இருக்கலாம்...
நேசிப்பு கூட சில நேரங்களில்
யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது..

நேசிப்பு

நேசிப்பதைக் குறைத்துக்
கொள்ளலாம்..

ஒன்றன் பின் ஒன்றாய்
வீசிஎரியப்படும்
வாசனையற்ற சொற்கள்
மிதக்கின்றன..
கருக்கொள்ளவிருக்கும்
மேக தூசுகளாய் ..

உருண்டு திரண்டு
எந்நேரமும் பொழியக்
காத்திருக்கும் அது..

மென்மையுடன்
வன்மையுடன்
மேகம்
சட்டென்று கொட்டிவிடும்
உனது எல்லையற்ற
எதிர்பார்ப்பின் விளிம்பு வெடித்து..




இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?