Sunday 25 December, 2011

ஏன் இந்த கொலைவெறி - கேரளமே...






இரவு மணி 8.08.
101 டிகிரி காய்ச்சலும், 360 டிகிரி தலைசுற்றலும், தலைவலியும், உடல்வலியும், ஜலதோஷமும், இருமலும் ஒட்டு மொத்தமாய் பின்னியெடுக்க இரண்டு நாட்களாய் மருத்துவரிடம் சென்று வருகிறேன். இதோ இப்போதும் மருத்துவமனை சென்று விட்டு வீட்டினுள் நுழைகிறேன்.
ஒரு தொலைபேசி அழைப்பு.
முல்லைப் பெரியாறு அணை விவாகரத்தை முன்னிட்டு ஜெய்ப்ரகாஷ் என்பவர் தீக்குளித்து தேனி மருத்துவமனையில் இருந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இது தேனிமாவட்ட செய்தியாளர் ஜெயபால் சொன்ன துயரச் செய்தி.
செய்தி காதில் விழுந்த மறு நொடி முதல் மனம் தேனிக்குள் மீண்டும் நுழைந்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னால் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி குறித்தும், கேரளாவிலிருந்து வெளியேற்றப்படும் தமிழர்களின் உண்மை நிலவரம் குறித்தும் அறிய தேனி மாவட்டம் முழுதும் பயணம் செய்திருந்தேன்.
புதிய தலைமுறை பத்திரிக்கையில் சேர்ந்த பிறகு வெளியூர் சென்று செய்தி சேகரிக்கும் முதல் பிரச்சினை முல்லைப் பெரியாறு பிரச்சினை. தேனி மக்களின் மனநிலை கொதிப்படைந்து இருப்பதை அங்கு கண்ட அத்தனைக் காட்சிகளும் சாட்சியாக தெரிவித்தன.
தேனி மாவட்ட கிராம மக்களிடம் பேசும் போது எல்லாம் எனது பதிவுக் கருவி பதிவு நிலையில் இருந்தது. கம்பத்தில் ஒரு டையில் பேசிக் கொண்டிருக்கும் போது கடைக்குள் நுழைந்த ஒருவர் நிருபர் என கேள்விப்பட்டதும் தனது குமுறல்களைக் கொட்டினார்.
கேரளாவுல இருந்து இங்க வந்து படிக்கிற பசங்கதாங்க ரொம்ப அதிகம். அதுல கேரளாக்காரன்தான் மொத மார்க் எடுக்குறான். அப்டினா நம்ம தமிழ் பசங்க சிலர் விட்டுக் கொடுத்தோ அல்லது அவனுக்க ஏறி மிதிச்சோதான மேல வர்றானுங்க. அதெல்லாம் கேரளாக்காரனுங்களுக்கு தெரியல. இந்தியாவுலயே மெத்த படிச்ச மாநிலம்னு பேரெடுத்துருக்கானுங்க. படிச்சவன் நடந்துக்குற மாதிரி நடந்துக்குறான். கேரள அரசியல் லாபத்துக்காக இத்தனை நாள் அண்னன் தம்பியா, மாமன் மச்சானா பழகிக்கிட்டு இருந்தவங்களுக்கு இடையிலே ஒரு பெரிய பிளவை என்னைக்குமே மீட்க முடியாத விரிசலை உண்டுபண்ணிட்டாங்க. இந்த போராட்டத்துல சில உயிர்கள் போனாதான் தீர்வு கிடைக்கும்னா அதுக்கும் நாங்க தயார். நாங்க செத்தாலும் நாளைக்கு எங்க பிள்ளைங்க நல்லாருப்பாங்க.
இப்படி பேசிவிட்டு சட்டென்று நகர்ந்து போன அவரின் பெயரைக் கூட கேட்கவில்லை. அருகில் விசாரித்த போதும் அடிக்கடி இங்கு வருவார். பேர் நினைவில் இல்லை என்றார்கள். மீண்டும் அவர் பேசியதைக் கேட்க வீட்டிற்கு வந்து பதிவுக் கருவியைக் கேட்டபோதுதான் தெரிந்தது. அவரது வார்த்தைகள் பதியாமல் போனது என்பது. ஆன போதும் அவரது பேச்சு மற்றவர்களை விடவும் ஆணித்தரமாக இருந்ததால் பதிந்து போயிருந்தது மனதின் ஆழத்தில்.
உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கடந்த டிசம்பர் 10ம் தேதி நீருக்கான உரிமையும் மனித உரிமைகளில் ஒன்றை என்ற கருத்தை வலியுறுத்தி இருபது பேர் கொண்ட மதுரை மாவட்ட உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் குழு கம்பத்திற்கு வந்தது. அங்கிருந்த மக்களை சந்தித்து அவர்களுக்கு எல்லா வகையிலும் சட்ட ரீதியாக உதவி செய்வதாக வாக்களித்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகுறித்து வழக்கறிஞர்கள் சொல்லும் கருத்துக்களை கவனித்தால் கேரள அரசின் திட்டமிட்ட அராஜகப் போக்கை நன்கு புரிந்து கொள்ளலாம்.
மத்திய நீர்வள ஆணையத்தின் இரண்டு தலைமை பொறியாளர்கள் மத்தியபிரதேச மாநில அரசின் அணைப்பாதுகாப்பு இயக்குனர் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தின் ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் தமிழ்நாடு மற்றும் கேரள அரசின் இரண்டு பிரதிநிதிகள் அடங்கிய குழு முல்லைபெரியாறு அணை குறித்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்கையில் கேரள அரசின் பிரதிநிதிகள் தவிர அனைவரும் ஒப்புதல் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
1979ல் 152அடியாக இருந்த போது பேச்சுவார்த்தைக்காக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் டெல்லி சென்றார். அப்போது அணையின் நீர்மட்ட்த்தை 142 அடியாக குறைப்பதற்கு சம்மதம் அளித்திருந்தார். ஆனால் 136அடியாக குறைத்துவிட்டது. (ஆனபோதும் இன்றுவரை 152அடிக்கும் சேர்த்தே தமிழக அரசு குத்தகைப்பணம் கட்டிவருகிறது. முன்னர் ஐந்து ரூபாயாக இருந்த குத்தகைப்பணத்தையும் உயர்த்தி 30ரூபாயாக கொடுத்து வருகிறது.)
இதை எதிர்த்து 2001 ல் முல்லை பெரியாறு சுற்றுசூழல் குழு வழக்குபோட்டது. பல்வேறு விவாதங்களுக்கு பிறகு 2006ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அணையின் நீர் மட்டம் உயர்ந்தால் மக்களின் பாதுகாப்புக்கு கேடு விளையுமா? என்ற கேள்வி உட்பட ஐந்து கேள்விகளுக்கு உச்சநீதி மன்றம் பதிலளிக்கையில்.. “அணையின் சுற்றுசூழலுக்கும் காட்டில் வாழும் புலிகள் யானைகளுக்கும் மிகவும் நல்லது. நிலநடுக்கம் ஏற்பட்டால் கூட அதிலிருந்து பாதுகாத்துகொள்ள முடியுமா என்பது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மிகவும் ஆழமாக ஆய்வுசெய்யப்பட்டது. அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் அணையின் பாதுகாப்புக்கு எந்தவித சீர்குலைவும் இல்லை கேரள அரசின் எப்போதும் முட்டுக்கட்டை போடும் அணுகுமுறையே மேற்கொள்ளப்பட்டதே அறிக்கையில் தெளிவுபடுத்துகின்றன. மேலும் அணையை பலப்படுத்துவதற்கு கேரள அரசு முட்டுக்கட்டையாக இருக்க்கூடாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்த 10நாட்களில் கேரள பாசன மற்றும் நீர்பாதுகாப்பு சட்டம் 2003ல் கேரள அரசு சட்ட்த்திருத்தம் கொண்டு வந்தது. அதில் கேரளாவின் 22அணைகள் குறித்த முழுக்கட்டுபாடு அனைத்தும் மாநில அரசுக்கே சொந்தம் அதில் முதல் அணையான முல்லை பெரியாறு அணையின் மொத்த அடியே 136தான் என்றும் கூறப்பட்டது. இதை எதிர்த்து அப்போதைய முதல்வர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். அதற்கு கேரள அரசு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்ட்து. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் எழுந்த பிரச்சனை காரணமாக இரு மாநிலமக்களும் சுமூகமான உறவை இழந்து, இங்கு கேரளமக்களின் பொருட்களை சேதப்படுத்துவதும் அங்கு தமிழக மக்களை அடித்து துன்புறுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு ஒரே தீர்வு உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தக் கோரி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
பென்னிகுக்கின் இரண்டாம் பேரன் ஸ்டூவர்ட் சாம்சன் தன்னுடைய தாத்தாவும் பாட்டியும் சொத்துக்களை விற்று கட்டிய முல்லை பெரியாறு அணையை பார்வையிட 31.10.2003 ல் வந்தார். 01.11.2003 ல் அணைக்கட்டில் நிருபர்களிடம் பேசும் போது, “முல்லை பெரியாறு அணை எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு மாறுபட்டு எந்த செயலும் செய்யக்கூடாது. தென் தமிழக மக்களின் நலனுக்காகவே இந்த அணை கட்டப்பட்ட்து. அந்த நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்படாவிட்டால் கர்னல் பென்னிகுக்கின் ஆத்மா சாந்தியடையாது என்று மனம் உருகிப்பேசினார்.
பணப்பயிர்களான தென்னை ரப்பரை பயிர் செய்யக்கூடிய கேரளாவிற்கு அரிசி முதல் அத்தனை பொருட்களும் தமிழகத்தில் இருந்து தான் வருகிறது. ஆனால் அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது கேரளம். அதிகமான நீர் கடலில் கலக்கிறது அப்படி வீணாகும் தண்ணீரைக்கூட தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கும் கேரள அரசை கண்டிக்கிறேன் என்று சாகித்ய அகடாமி விருது பெற்ற மலையாள இலக்கிய வாதி பால் சக்காரியா 19.01.2003 ல் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
தமிழ் நாட்டில் உற்பத்தியாக கேரள மாநிலத்தில் ஓடும் நதிகளுக்கு தமிழகம் 93 டி.எம்.சி தண்ணீரை அளிக்கிறது. கேரளாவில் உற்பத்தியாகி தமிழகத்திற்கு அளிக்கப்படும் பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கப்பட்டால் 10.6 டி.எம்.சி நீர் மட்டுமே கிடைக்கும். பரமிக்குளம் ஆழியாறு திட்டப்படி நமக்கு 32.5 டி.எம்.சி நீர் கிடைக்கிறது. இதன் மூலம் தமிழகம் கேரளத்திற்கு அதிகப்படியாக 50.2 டி.எம்.சி தண்ணீரை அளித்து வருகிறது. தமிழ் நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மலையாளிகள் வாழ்கிறார்கள். ஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்கு 1,700 கனமீட்டர் நீர் தேவையென விஞ்ஞானிகல் கணக்கிட்டிருக்கிறார்கள். அப்படியானால் தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகளுக்கு ஓராண்டுக்கு 5,100 மில்லியன் கனமீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால் பெரியாறு அணையில் கேரளத்திடம் நாம் கேட்பது 126மில்லியன் கனமீட்டர் நீர் மட்டுமே. நம்மிடம் இருந்து இதைவிட பல நூறு மடங்கு நீரை உறிஞ்சிக்கொள்ளும் கேரளம் நமக்குச் சட்டப்படியும் உச்ச நீதிமன்ற ஆணையின் படியும் உரிமையான நீரை விட்டுத்தர மறுக்கிறது என்று பழ நெடுமாறன் ஒர் பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்திய அமெரிக்கர்கள் நடித்து கேரளாவைச் சேர்ந்த சோகன் ராயால் இயக்கப்பட்ட டேம் 999 படத்திற்கு தமிழகம் தடை விதித்திருக்கிறது. இதற்கு சோகன் ராய் அளித்த பேட்டி ஒன்றில் “சீனாவில் 1975ம் ஆண்டு பான்கியோ என்ற அணை உடைந்த போது சுமார் 2 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அதே அபாயம் இப்போது 100ஆண்டு பழமை வாய்ந்த முல்லை பெரியாறு அணைக்கும் ஏற்பட்டுள்ளது. அரசியல் பிரச்சனை காரணமாக இந்த விவகாரத்தில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்த பட்த்தில் முல்லை பெரியாறு அணையைக் காண்பிக்காவிட்டாலும், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள் முல்லை பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்களும் தான். என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமலும், உச்சநீதி மன்ற தீர்ப்பை அறியாமலும் கூறியிருக்கிறார். கடந்தமாதம் நவம்பர் 27ம் தேதி வெளியான டேம் 999 படம் கேரளமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது அதன் விளைவாகவே அங்கிருக்கும் தமிழர்கள் தோட்ட்த் தொழிலாளர்கள் அடித்து விரட்டப்பட்டனர். குமுளி காவல் நிலையத்திற்கு முன்னால் ஒரு ஃபிளக்ஸ்போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒருபக்கம் அணை உடைந்து மக்கள் அடித்துசெல்லபடுவது போலவும், மறுபக்கம் கேரள மக்கள் தண்ணீர் இன்றி வரட்சிக்கு தள்ளப்படுவது போலவும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த எதிர்ப்புணர்வை தூண்டிவிட்ட சோகன் ராய்க்கு அம்மாநில அரசு முன்னாள் குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணன் விருது வழங்கி சிறப்பிக்க இருக்கிறது.
தமிழகத்தின் பலபகுதிகளிலும் கேரளக்காரர்களின் முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் கோல்டு லோன் லிமிடட், ஜோய் ஆலுகாஸ் உட்பட பல வியாபாரத்தளங்கலும் வர்த்தக நிறுவன்ங்களும் சேதப்படுத்தப்படுகின்றன. ஒரு வேளை அணை உடைந்தால் அதிலிருக்கும் தண்ணீர் முல்லை பெரியாறு அணையை விட பெரிய அணையான இடுக்கி அணையில் சேகரம் ஆகிவிடும் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கேரள அரசு சொல்வது போல அணை உடைந்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு வேறு காரணங்கள் இருக்கிறது.
அணையை சுற்றி பல நிறுவனங்கலும், உணவகங்களும், மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இது சட்டத்திற்கு விரோதமானது. எனவே அணையின் குறிப்பிட்ட சுற்றளவில் மக்களோ நிறுவன்ங்களோ செயல்படுவதற்கு அனுமதி கிடையாது. இதன் படியும் பார்த்தால் கேரளா அரசின் நாடகத்திற்கு மேலும் வலுக்கூடுகிறது.
முல்லை பெரியாறு பிரச்சனை தொடர்பாக திரளும் தமிழகத்திற்கு முன்னால் கேரளா மிரண்டு போயிருப்பதால் தான் அங்கிருந்து வெளியேறும் மக்களிடம் நாங்கள் அடித்த்தையோ வன்முறையில் ஈடுபட்டதையோ வெளியில் சொல்லக்கூடாது என்று சொல்லி அனுப்பியிருக்கின்றனர். இதற்கு பலத்த காயங்ளோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சொந்த ஊரான பண்ணைபுரம் திரும்பி இருக்கும் கேரளாவில் வேலை செய்யும் சூப்பர்வைசரான ஜி.விஜயகுமார் அவரது மனைவி சிவகுமாரியும் சான்றாக இருக்கின்றனர்.
முல்லை பெரியாறு அணை விவகாரம் இப்படி சூடுபிடித்தும், தேனி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆரூண் அவர்கள் காணவில்லை என்றும் மக்கள் அந்தந்த ஊர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தனர். இந்த தகவல் அறிந்த அவர் தேனி வந்தபோது அவரது அலுவலகத்தில் திரண்டிருந்த போலீஸ் படை மக்களிடம் இருந்து அவரைக்காக்க கைது செய்தது. அது ஒரு கண் துடைப்பு என்று மக்களும் அறிந்திருந்தனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஒருவேளை கேரள அரசு தன் பிடியை தளர்த்திக் கொள்ளாவிட்டால் இந்த பசுமையான இடங்கள் வறண்டு போய்விடுமே என்ற கவலையை பிரதிபலிக்கும் வண்ணம் அந்த போஸ்டர் கண்ணில் பட்டது. கேரள அரசின் சூழ்ச்சி வெல்லுமானால் என்ற தலைப்பிட்டு இன்று பசுமையும் நாளை வறட்சியுமே சொந்தம் என்பதை குறிக்கும் போஸ்டர் அது.
மீனவர் பிரச்சினை, கூடங்குளம், கூடலூர் வரை ஒவ்வொரு பிரச்சனைக்கும் மக்கள் தனித்தனியே போராடுவதை விடுத்து தமிழகம் முழுக்க மக்கள் அணிதிரள வேண்டும் என்பது பலரின் கருத்து. இதை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில்..
மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு மற்றுமொருவர் தீக்குளித்தார் என வேறொரு நண்பரிடமிருந்து.. மனப்பதட்டம் அதிகமாகிறது.
இன்னுமொரு தொலைபேசி அழைப்போ, தொலைக்காட்சி, பத்திரிக்கை செய்தியோ முல்லைப் பெரியாறுக்காக தமிழன் உயிர்விட்டான் அல்லது உயிர் பறிக்கப்பட்டது என்ற செய்தி வராமல் இருக்கட்டும் என்பது மட்டுமே இப்போது இந்த இரவு நேரத்தில் என் பிரார்த்தனையாய் இருக்கிறது.
இவள்பாரதி

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?