Wednesday 20 April, 2011

Blood on water - ''தண்ணீரில் இரத்தம்

சம காலத்தில் கண்ணெதிரே நடக்கும் கொடுமைகளை ஆவணப்படுத்தி அதை வெளி உலகுக்கு தெரிவிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. அந்த ஒரு காரியத்தை செய்து தன்னையும் வெளி உலகுக்கு சார்பற்ற ஊடகமாக அடையாளப்படுத்திக் கொண்ட என்.டி.டி.வியின் "தண்ணீரில் இரத்தம்" என்ற ஆவணப்படம் செய்திருக்கும் தாக்கம் என்ன என்பதை ஒரு வரியிலேயே சொல்லி விடலாம். என்.டி.டி.வியில் இந்த ஆவணப்படத்தின் ஒளிபரப்பை பார்த்த இலங்கை அரசு தனது மித மிஞ்சிய செல்வாக்கை பயன்படுத்தி அந்த ஆவணப்படத்தை தடை செய்துள்ளனர். 

''தண்ணீரில் இரத்தம்" ஆவணப்படம் சொல்வதென்ன? என்று பார்ப்பதை விட அது மையப்படுத்தும் செய்திகளை நாம் நோக்கலாம். ‘நாங்கள் இலங்கையில் இருக்க முடியாதவாறு சிறிலங்காப் படையினர் எம்மைத் துன்புறுத்துகின்றனர். எங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். எங்களின் சகோதரர்களை, எங்களின் மக்களை சிறிலங்காப் படையினர் சித்திரவதை செய்கின்றனர். அவர்களைக் கொல்கின்றனர். இதனால் அங்கிருக்க முடியாமல் அவுஸ்ரேலியா செல்வதற்காக நாங்கள் புறப்பட்டோம்.’ என்ற குரல் மட்டும் கேட்க அப்படியே தண்ணீரில்  இரத்தம் கலப்பது போலான காட்சியுடன் தொடங்குகிறது. 

ஜூலை 2009 ல் எடுக்கப்பட்ட கோப்புக் காட்சிகளுடன் விரிவடைந்து பின்னணிக் குரலிலும், பின்னணி எழுத்துக்களிலும் சில விஷயங்களை தெரிவித்தபடி நகர்கிறது தண்ணீரில் இரத்தம். 

கடந்த ஆறு மாதத்தில் மட்டும் இருபது முறை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து  சென்றுள்ளார்கள் தமிழீழ மக்கள். அப்படி இலங்கையிலிருந்து தப்பித்து ராமேஸ்வரம் வரும் மக்களில் இளைஞர்களை இராணுவம் பிடித்துக் கொண்டு போய் விடுவதாக முதியவர் ஒருவர் தெரிவிக்கிறார். 
‘தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் தமிழ் மக்கள் அங்கு இயல்பாக வாழ்வதற்கான எவ்வித அமைதியான சூழ்நிலையும் உருவாகவில்லை என்பதையும், தமிழ் மக்கள் இலங்கையிலிருந்து வெளியேறிவிடவே விரும்புகிறார்கள் என்பதையும் அது வெளிப்படுத்துகின்றது.

இதேபோன்றே, தமிழ்நாட்டுக்கும் இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாக  வருகின்றார்கள் என்பதையும் ஆதாரத்துடன் அது வெளிப்படுத்துகின்றது. இனவெறி சிறிலங்காப் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க முடியாததாலேயே தாங்கள் இங்கே வந்ததாக ஈழத்  தமிழ் மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

தன்னுடன் வந்த இரண்டு பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்கி இலங்கை ராணுவம் கொன்று விட்டதையும், ஒரு சிறுமியின் கால் மட்டும் தனியே கிடந்த கொடுமையையும் கண்ணெதிரே பார்த்த நடுக்கத்தை ஒரு பெண்மணியின் குரலில் கேட்க முடிகிறது. 

இலங்கையில் கடந்த வருடம் போர் ஓய்வடைந்ததற்குப் பின்னரும் தமிழ் மக்கள் அங்கு வாழ முடியாத நிலைமை காணப்படுவதையே இத்தகைய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. 

மண்டபம் கேம்பின் காட்சிகள் நகருகையில் பின்னணியில்'' கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை '' என்ற பாடல் மனதை ரணமாக்கும் விதமாக இருக்கிறது. 

''இலங்கையைச் சிங்கள நாடாக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதைத் தான் செய்து வருகின்றார். மாறாக, சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் வென்றிருந்தாலும் அதனைத்தான் செய்திருப்பார். எங்களைப் பொறுத்தவரை இரண்டு பேரும் ஒரே மாதிரிதான். தமிழ் மக்களைப் பொறுத்த வரை அழிவு அழிவு தான்'' என தமிழ் இளைஞர் ஒருவர் கூறுகின்றார். 

ஒரு காட்சியில் "அவன் ஒரு கிரிக்கெட் வீரனாக விரும்புகிறான். போர் வீரனாக அல்ல" என்ற வசனத்துடன் அமைந்த காட்சி எதை சொல்கிறது நமக்கு? 

சீமான் பேசுகையில், ''வவுனியா தடுப்பு முகாம்களுக்குள் தமிழ் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சொல்வதற்கு எந்தவொரு அனைத்துலக ஊடகத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இத்தகைய தடுப்பு முகாம்களில் இருந்து மீளக் குடியேற்றப்பட்ட தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை அறியவும் முயலவில்லை. இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மக்களின் வாழ்விலும் எத்தகைய முன்னேற்றமும் இல்லை.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்று முடிந்து விட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு தமிழ் மக்களுக்கான சுதந்திரத்தை வழங்குவேன் என்று குறிப்பிட்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் அம் மக்களுக்கு என்ன சுதந்திரத்தை வழங்கினீர்கள் எனக் கேட்கவும் எவருமில்லை.'' என்று சொல்வது முற்றிலும் உண்மை.  
இத்தகைய பிரச்சினைகளால் அதிகம் பாதிப்படைவது மீனவ மக்களே என்பதை பிற்பாதி ஆவணப்படம் விளக்குகிறது. 

அதில் ஜே.சி.போஸ் (போட் அசோசியேஷேன் தலைவர்) '' இலங்கையில் போர் ஆரம்பிக்கும் 1983 க்கும்  முன்  இலங்கை  இராணுவத்தினர் தமிழ்  மக்களுக்கு உணவு கொடுப்பதும் உதவி செய்வதும் உண்டு. இரு நாட்டு மக்களும் அன்னியோன்யமாக இருந்து வந்தோம். இப்போது நிலைமை மாறி விட்டது.'' என்றார். 

இதுவரை 4000 இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 1000  மீனவர்கள் காயமடைந்து உள்ளனர்.  மூன்று வருடத்தில் 500 மீனவர்கள் இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட்டுள்ளனர். என்ற செய்தி எழுத்து வடிவில் வந்து மறைகிறது. 

பின்னணியில் தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை கண்ணீரில் மிதக்க விட்டான் என்ற வாலியின் பாடல் மெதுவாக எழுந்து ஒடுங்கியது. 
கடல் இருக்குற வரை மீன் இருக்கும். மீன் இருக்குறவரை மீனவன் இருப்பான். கடலுக்கு எல்லை கிடையாதுங்க.  இராணுவத்துக்குத்தான் எல்லை உண்டு. என்று ஒரு மீனவர் கூற,  புலிகளின் பிரசினை முடிவுக்கு வந்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது 300 க்கும் மேற்பட்டகப்பல்களை இலங்கை கடற்படை சுவர் போல் நிறுத்தி எங்களை மீன் பிடிக்க விடாது தடுக்கிறது. தனுஷ் கொடியைத் தாண்டினாலே இலங்கை ராணுவம் வந்து விடுகிறது. அது இந்திய பார்டரா? இலங்கை பார்டரா? என்று கூட தெரியவில்லை.என்றும் கவலை தெரிவித்துள்ளனர். 
"இதனால இருட்டுக்குள்ள போய் மீன் பிடிக்கிறோம். அப்ப கூட வந்து மறிச்சு மீன எல்லாம் நாசம் பண்ணி படக உடைச்சு தள்ளிடுறாங்க. போன தடவ போட்டுள வந்து இடுச்சதுல போட்டுக்குள்ள தண்ணி இறங்கி நாங்கல்லாம் தண்ணிக்குள்ள குதிச்சு உயிர்க்கு போராடுனோம். இன்னொரு போட் வந்து எங்களை காப்பாத்தி கூட்டி போச்சு. "blood on water
"இங்க ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் இருக்கோம். எல்லாரும் தினமும் கடலுக்கு போனாதான் மீன் பிடிச்சு வயித்த கழுவ முடியும். ஒரு நாளைக்கு கடலுக்குப் போகாட்டாலும் எங்கள் நிலைமை மோசமாயிடும். இந்த நிலைமையில நாங்க உயிரோட இருக்கணும்னா இந்த இந்திய அரசு இலங்கை அரசோட பேச்சு  வார்த்தை நடத்தி கச்சத் தீவுல மீன் பிடிக்க அனுமதிக்கோனும். இரண்டு நாட்டு மக்களும் கடலுக்குள்ள சந்திச்சு பேசிக்கிட்டு சாப்பாடு  சாப்பிட்டுக்கிட்டு இருக்கணும்ணு விரும்புறோம்."
இப்படி ஒவ்வொருவரும் தனது எண்ணங்களை தெரிவித்துக் கொண்டிருக்க, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி மதிப்புள்ள ஆயிரம் படகுகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது..என்பதும் இதனால் ஒரு நாளைக்கு பத்து லட்சம் ரூபாய் நஷ்டம் எனவும் பின்னணி எழுத்துக்கள் தோன்றி மறைகிறது. 

போர் முடிவடைந்து விட்டது என்பது சமாதானம் உருவாகி விட்டது என்று அர்த்தப்படாது என ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச கற்கை நெறிகளுக்கான பேராசிரியர் அனுருத்த செனோய் தெரிவிக்கின்றார். 
என்.டி.டி.வியின் இந்த ஆவணப்படத்தில் தமிழ் மக்கள் பேசும் போது மட்டும் ஆங்கிலத்தில் அதை பின்னணி எழுத்துக்களில் காட்டும் போது ராஜா பக்ஷே பேசும் போதும், மற்ற பத்திரிக்கையாளர்கள், வல்லுனர்கள் பேசும் போது அதை தமிழில் எழுத்துக்களாக காட்டாதது.. யாருக்காக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை எழுப்புகிறது.? 

ஆன போதும் தண்ணீரில் இரத்தம் என்ற ஆவணப்படத்தின் முயற்சியை பாராட்டத்தான் வேண்டும். படம் முடிந்த நிலையில் ஒரு பெண் , எனது கணவனை இலங்கை ராணுவம் கொன்று விட்டது. அவரது உடல் கூட கிடைக்கவில்லை. 
அதற்கு பின் பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளத்தேன். என் பையன் ஐந்து வருடங்களுக்கு முன்னால் குண்டடி பட்டு வீட்டில் இருக்கிறான். இனி என் இரண்டு பிள்ளைகளும் கடல் பக்கம் போக வேண்டாம். எங்களுக்கு கடல் வேண்டாம்." என்று கண்ணீருடன் சொல்லும் போது தண்ணீரில் இரத்தம்  இல்லை. இரத்தமே இங்கு தண்ணீராய் ஓடுகிறது என்பதை வலியுடன் ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது. 

இவள் பாரதி 
(ஒரு வருடத்திற்கு முன் ஒரு இணையதளத்திற்காக எழுதப்பட்டது)

Tuesday 19 April, 2011

தமிழ் சினிமாவில் ஒப்பனை


தமிழர்களின் பழங்கலைகளில் ஒன்றான தெருவில் நிகழ்த்தப்படும் தெருக்கூத்திலே துவங்கி வீதி நாடகம் முதல் மேடை நாடகம் வரை தன் பயணத்தை மேம்படுத்திக்கொண்டே வந்த ஒப்பனைக் கலை சினிமாவில் தவிர்க்க இயலாத இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
ஒப்பனை மிகச் சிறந்த கலை. ஒப்பனை செய்பவர்கள் ரசனைத் தனமை அதிகம் கொண்டவர்கள். ஒப்பனைக் கலைஞர்கள் சினிமாவின் பல்வேறு பிரிவில் பணியாற்றுகிற இயக்குனர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், இசையமைப்பாளர், ஒலித்தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் இப்படி பலரையும் சார்ந்து இயங்கக்கூடிய மிக முக்கியமான பணியினைச் செய்பவர்கள்.

கலைகள் அறுபத்து நான்கில் கவின் கலைகள் என்பவற்றில் ஓவியம், ஒப்பனை ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. அதாவது அழகான தோற்றத்தைக் கொண்டு அமைவது என்பதாகும். சொல்லும் செய்திக்கு அழகையும், நேர்த்தியையும் கொடுப்பது மட்டும் ஒப்பனையின் நோக்கம் அல்ல. அது கதாபாத்திரத்தின் தன்மைக்கும், கதாபாத்திரம் நிகழ்த்துகிற காலத்துக்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதும் முக்கியமே.
ஒப்பனைக் கலைஞர்களே கூட ஆடை வடிவமைப்பாளர்களாகவும், சிகையலங்கார கலைஞர்களாகவும் இருக்கலாம் அல்லது இவையனைத்தையும் தனித்தனி பிரிவினரே கூட கவனிக்கலாம்.

ஒப்பனையின் நோக்கம் என்பது கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஒப்பனையச் செய்வதே. ஒப்பனை என்பதை காட்சிப் புனைவு என்றும் கூட சொல்லலாம். மிகைப்படுத்தல் என்று பார்த்தால் தெரியாது. அப்படிச் சொல்வதும் பொருத்தமானதாக இருக்காது. ஆனால் மிகைப்படுத்தப்பட்டு இயல்பாகக் காட்சிப்படுத்தும் தன்மை ஒப்பனைக் கலைஞர்களையே சாரும்.
அந்தகால தமிழ்சினிமாவில் தொடங்கி ஒப்பனையின் பல்வேறு பரிமாணங்களை இன்று வெளிவந்திருக்கும் சினிமா வரை காண முடிகிறது. பாரதியார், வீர பாண்டிய கட்டபொம்மன், ஒளவையார் என அத்தனை பேரையும் சினிமாவில் பார்த்து அறிந்து கொண்டவர்களே அதிகம்.

இன்றைய தமிழ்சினிமாவில் ஒப்பனை குறித்து எடுத்துக் காட்டிச் சொல்லக் கூடிய பல திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. எப்போதும் நகைச்சுவை நடிகராகவே பார்த்துப் பழக்கப்பட்ட வடிவேலு சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவந்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் அரசனாக நடித்திருப்பார். அதை நாம் ஏற்றுக் கொள்ளும் விதமாக அவரது ஒப்பனையும் மிக அருமையாக அமைந்திருக்கும். இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களுக்கும் மிகச் சரியான வேறுபாட்ட வடிவேலுவின் நடிப்பு உணர்த்தியிருந்தாலும் ஒப்பனைக்கு மிக பங்கு இருக்கிறது.

ஒப்பனை பற்றி பேசும் போது உலக நாயகன் கமலின் பல்வேறு திரைப்படங்களை உதாரணமாகக் கூற முடியும். குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய படங்கள் அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, இந்தியன், தசாவதாரம் போன்றவை. இந்தியனில் வயதான தாத்தாவாக மிக அழகாகக் காட்டப்பட்டது ஒப்பனையால்தான். அதிலும் அவ்வை சண்முகியில் கமல் ஏற்று நடித்த பெண்பாத்திரமானது பெரிய வெற்றியை தேடித் தந்தது. ஒப்பனைக் கலைஞர்கள் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தசாவதாரம் படத்தில் பத்து கதாபாத்திரமும் வெவ்வேறுவிதமான ஒப்பனையைக் கொண்டிருக்கும். அதிலும் ஃபிலிட்சர் என்ற வில்லன் காதபாத்திரம் ஏற்றிருந்த ஒப்பனை தத்ரூபமாக ஒரு அமெரிக்கனை கண்முன் நிறுத்தியது. அதே போல் கமல் செய்திருந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒப்பனையின் கடும் உழைப்பில் உருவானவை என்பது ரசிகர்களைப் பரவசப்படுத்தியது.

ஒப்பனை என்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. ஒப்பனை என்பது ஆடை வடிவமைப்பு, ஆடை நிறத் தேர்வு, சிகையலங்காரம், முகப்பூச்சு ஆகியவற்றை கொண்டதாக கூறப்பட்டாலும் நிகழ்வு நடைபெறும்  இடம், சூழல், வெளிச்சம், பிண்ணனி, காலகட்டம், பழக்கவழக்கம், கல்வி, நோக்கம், பணி போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது என்பது சினிமாவை உற்றுக் கவனிப்பவர்களுக்கு எளிதில் விளங்கும்.

கைலியை தொடைக்குள் மேல் ஏற்றிக் கட்டி பருத்தி வீரனில் பார்த்த கார்த்தி பையா படத்தில் இல்லை. பையா படத்தில் அவரது தோற்றம் பளிச்சென்றிருந்த்து.

பாலாவின் சேது படத்தில் விக்ரமின் கடைசி நேரக் காட்சிகள், நாடோடிகள் பட்த்தில் சசிக்குமாருக்கு கண் புருவத்திற்கருகில் வெட்டுக்காயம் ஒன்று ஏற்பட்டு மெது மெதுவாக படம் முடியும் வ்ரை காயமாறும் காட்சிகள், எந்திரனில் சிட்டியாக வரும் ரஜினியின் காட்சிகள் போன்றவை நினைவில் நிற்பவை.

ஒப்பனைக் கலைஞர்களுக்கான விருதுகளும் சமீபகாலமாகக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக தன் திரையுலக பயணத்தைத் துவங்கியவர்தான் சில்க் ஸ்மிதா. ஒப்பனைக்கென தனியாக கலைஞர்களை வைத்துக் கொள்ளாமல் தானே ஒப்பனை செய்து கொள்வாராம் நாடகத்திலும், சினிமாவிலும் தனக்கென தனி சாம்ராஜ்யம் அமைத்த டி.பி.ராஜலட்சுமி.
முதன் முதலில் அமெரிக்காவில் 1948ஆம் ஆண்டுதான் விருதுகளுக்கான பிரிவில் ஒப்பனைக்கு இடம் கிடைத்தது. இதுவரை தமிழில் கமலின் ஹே ராம்(2000) படத்திற்காக சரிகாவும்,  பாரதி(2001) படத்திற்காக பி.கிருஷ்ணமூர்த்தியும், சமீபத்தில் நம்மகிராமம்(2011) படத்திற்காக இந்திரன் ஜெயன்சும் ஒப்பனைக்காக தேசிய விருது பெற்றவர்களாவர்.

ஒப்பனை என்பது கறுப்பு நிறத்தவரை சிகப்பாக காட்டுவது என்பது போய் சிகப்பாக இருப்பவரை கருப்பாகக் காட்டுவதும், சண்டைக் காட்சிகளில் அடுத்தடுத்த படப்பிடிப்பின் போது முந்தைய காட்சியின்ன் தொடர்பு துண்டிக்கப்படாமல் கவனித்து ஒப்பனை செய்வதும், உயரமானோரைக் குள்ளாமாகக் காட்டுவதும், உயரம் குறைவானோரை உயரமாகக் காட்டுவதும், வயதானோரை இளையோராகக் காட்டுவதும், இளையோரை வயதான ஆளாக்க் காட்டுவதும், அழகாகக் காட்டுவதும், அழகின்றி காட்டுவதும் ஒப்பனையே.

ஒப்பனையை ஒரு ப்ரஃபஷனல் படிப்பாக எடுத்துப் படிக்கும் அளவுக்கு அதன் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் இன்னும் அவர்களை இரண்டாம் நிலை ஊழியர்களாகவே கருதுவதை தவிர்க்கலாம். விஜய் டிவி ஆண்டுதோறும் வழங்கும் திரையுலகத்திற்கான விருதுகளை நடிகை கவுதமியும், பானு யோகேஷும் பெற்றுள்ளனர்.

ஒப்பனைக்குள்ளேயே மேக் அப், காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல் எனப் பலவாறான பிரிவுகள் வந்துவிட்டது. இவை அனைத்தும் சேர்ந்ததுதான் ஒப்பனை என்பதையும் நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை சிறிதளவும் சிதைக்காமல் அதே நேரம் சற்று மிகைப்படுத்தலுடன் கூடிய ஒப்பனைகள் சமீபகாலத்தில் வரத் துவங்கியுள்ளன. சினிமா என்பதே ஒரு ஒப்பனை சார்ந்த தொழிநுட்பம் என்பதை ஏற்றுக் கொள்ளும் நாம் ஒப்பனைக்கலைஞர்களையும் அப்படி மதிக்க வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.

இவள் பாரதி

Monday 18 April, 2011

விஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட இருக்கும் நூல்களின் விவரங்கள்

இப்படிக்கு அன்புள்ள அம்மா - கலாநிதி ஜீவகுமாரன் (டெனிஷ் மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கவிதை வடிவிலான நாவல்.. )

முகங்கள் - தொகுப்பு: ஜீவகுமாரன்(ஐம்பது எழுத்தாளர்களின் புலம்பெயர்வு பற்றிய சிறுகதைகள் )

நீ மிதமாக நான் மிகையாக - இவள் பாரதி (கவிதைகள் )

நான் சொல்வதெல்லாம் - இவள் பாரதி (கவிதைகள் )

கடவுளின் நிலம் - இளைய அப்துல்லா (கட்டுரைகள் )

தேடலே வாழ்க்கையாய் - என்.செல்வராஜா (கட்டுரைகள் )

நாள் : 01-05-2011

நேரம் : காலை 10 மணி

இடம் : கன்னிமாரா நூலகம், சென்னை

அனைவரும் வருக..

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்க..

devathaibharathi@gmail.com

Sunday 17 April, 2011

அழகின் நிழல் ஆபத்து

 55
111 
333
நன்றி : பெண்ணே நீ மாத இதழ்

பிரியங்களின் பூந்தொட்டி

  11 penne ne 2-2
நன்றி - பெண்ணே நீ மாத இதழ்

Thursday 7 April, 2011

 பஞ்ச பூதங்களால் வஞ்சிக்கப்பட்ட ஜப்பான்


ஸ்பெக்ட்ரம் ஊழல், தேர்தல் கால கூட்டணி குழப்பங்கள், கிரிக்கெட் ஜூரம் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு முன் நிற்கிறது ஜப்பானில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கமும், சுனாமியும். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி இவற்றின் பாதிப்பு இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பாதிப்பாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 130 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் இந்த சுனாமி உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது என்பது உண்மையே.
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் இந்தோனேஷியா, சிலி, பெரு, மெக்ஸிகோ, பிஜி, ஹவாய், தாய்லாந்து, தைவான், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ரஷ்யா உள்ளிட்ட 50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும், முன்னறிவிப்பும் விடப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 என்ற அளவிலும், ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கம் 8.9 ரிக்டர் அளவிலும் பதிவாகியது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் நான்கு ரயில்கள் காணாமல் போயிருக்கின்றன. சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை வாரி சுருட்டிக் கொண்டு சென்ற சுனாமி துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3000 கார்களையும் அடித்துச் சென்றது. பெரும் பொருட்சேதத்தையும் ,உயிர்சேதத்தையும் நிகழ்த்தியிருக்கிறது ஜப்பானின் நிலநடுக்கம்.
சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கி.மு.1177 இல் நேர்ந்துள்ள ஓர் பூகம்பம் சீன வரலாறுகளில் பதிவாகியுள்ளது! ஐரோப்பாவின் வரலாற்றில் பண்டைய நிலநடுக்கம் ஒன்று கி.மு.580 ஆண்டில் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது! 1556 ஆம் ஆண்டில் சைனாவின் ஷான்ஸி மாநிலத்தில் நேர்ந்த மாபெரும் பயங்கரப் பூகம்பத்தில் 830,000 மக்கள் மாண்டதாக அறிய வருகிறது! பசிபிக் பெருங்கடலில் 1900 - 2001 வரை சுமார் 800 தடவை சுனாமி ஏற்பட்டுள்ளது.
உலகில் 100,000 நபர்களுக்கு மேல் மரணமடைந்த ஒன்பது பூகம்பங்களில் ஆறு நிலநடுக்கம் சைனாவில், இரண்டு ஜப்பானில், ஒன்று இந்தியாவில் நிகழ்ந்தவை! மக்கள் திணிவு மிக்க, மனித எண்ணிக்கை உச்சமான சீன தேசத்தில்தான் அதிகளவில் பூகம்பத்தால் மாண்டு போயுள்ளார்கள். நிலநடுக்கச் சக்தி யூனிட் அளவுக்கு மடிந்த மக்களின் எண்ணிக்கையை ஒப்பு நோக்கின், மத்தியதரைப் பிரதேச நிலப்பரப்புக்கு அடுத்தபடி இடம் பெறுபவை: ஈரான், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இந்தியா, மத்திய ஆசியா, சைனா, டெய்வான், ஜப்பான், தென்னமெரிக்கா ஆகிய நாடுகள்.
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் நியுசிலாந்த், சீனா, ஜப்பான், கலிபோர்னியா, இந்தோனிஷியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது மக்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி சில நிமிடங்கள் வந்து போகிற நிலநடுக்கம் பெருத்த பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் விளைவித்துவிடுகிறது. பூமியின் எங்கோ ஒரு பகுதியில் நிகழும் இயற்கை பேரழிவுகளான நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி, கனத்த மழை மற்றும் செயற்கை பேரழிவுகளான இனஒழிப்பு, அணுகுண்டு சோதனை, இராணுவத் தாக்குதல், பொருளாதாரத் தடை ஆகியவை உலகையே மிரட்டுவது மட்டுமின்றி பாதிப்புக்குள்ளாக்கவும் செய்கின்றன.
ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் இயற்கை பேரழிவானது உலக நாடுகளின் பொருளாதரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜப்பானின் பேரழிவு பங்குசந்தைகளில் மிகப் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் வளமிக்க நாடுகளான லிபியா, எகிப்து, சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை போதாதென்று, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியும் சேர்ந்து கொண்டு ஆசிய பங்குச்சந்தைகளை ஒருகை பார்த்திருக்கின்றன. இதன் பாதிப்பு இந்திய பங்குச்சந்தைகளிலும் ‌எதிரொலித்து வருகிறது.
எட்டு பேர் குழு எனப் பொருள் தரும் ஜி8 (G8 - Group of Eight) என்பது உலகில் அதிக ஆலைத் தொழில் முன்னேற்றம் அடைந்த குடியரசு நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும். ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள், ஐக்கிய இராச்சியம், (1975 வரை ஜி6), கனடா (1976 வரை ஜி7) மற்றும் ரஷ்யா (எல்லா நடப்புகளிலும் பங்கு கொள்வதில்லை) ஆகியவை இந்தக் குழுவில் உள்ள நாடுகளாகும். ஆண்டு தோறும் இந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் அனைத்துலக அதிகாரிகள் பங்கு கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் உச்சி மாநாடுகள் ஜி8-இன் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
2005-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சப்பானின் பாதி ஆற்றல் தேவை பெட்ரோலியத்தின் மூலமும் ஐந்தில் ஒரு பகுதி நிலக்கரி மூலமும் 14% இயற்கைவளி மூலமும் பெறப்படுகிறது. அணு மின்சாரம் நாட்டின் கால் பங்கு மின்தேவையை ஈடுசெய்கிறது. சப்பானில் சாலைப்போக்குவரத்து நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. 1.2 மில்லியன் தொலைவிற்கான நல்ல சாலைகள் இடப்பட்டுள்ளன. சுங்கச்சாலைகளும் பயன்பாட்டில் உள்ளன. 12-க்கும் மேற்பட்ட தொடர்வண்டி நிறுவனங்கள் உள்ளூர், வெளியூர் தொடர்வண்டி வசதிகளை அளிக்கின்றன. பெருநகரங்களை சின்கான்சென் (புல்லட் ரயில்) ரயில்கள் இணைக்கின்றன. சப்பானிய ரயில்கள் நேரந்தவறாமைக்குப் பெயர்பெற்றவை.
பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஜப்பான் சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படுகிறது. டோக்கியவை தலைநகராக கொண்ட ஜப்பான் 6800 தீவுகளைக் கொண்டது. இதில் ஹொக்கைடோ, ஹொன்ஷு, ஷிகொக்கு, கியூஷு ஆகியவை நான்கு முக்கிய தீவுகளாகும். சப்பானில் 173 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நகரிடைப் போக்குவரத்திற்கு வானூர்தி விரும்பப்படுகிறது. ஆசியாவின் சந்தடி மிக்க வானூர்தி நிலையமான அனீதா நிலையம் சப்பானிலேயே உள்ளது. யோகோகாமா, நகோயா துறைமுகங்கள் ஆகியன பெரிய துறைமுகங்கள் ஆகும்.
இப்போது ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சென்டாய் நகரமே மக்கள் வாழத் தகுதியற்ற நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்களில் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் ஜப்பானில் நிலநடுக்கம் வர இருக்கிறது என்பது தெரிந்திருந்தும் இவ்வளவு பெரிய பாதிப்பு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அத்துடன் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதி என்பதால் அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள்தான். ஆனால் இந்தமுறை நிலநடுக்கத்துடன் சுனாமியும், தொடர் நில அதிர்வுகளும் சேர்ந்து கொண்டதால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 13000 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 8199 ஆகவும் உயர்ந்திருக்கும் வேளையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் தெரிகிறது.
எப்போது நிலநடுக்கம் வரும் என்று கணித்துச் சொல்வதற்கு என தனியாக இணையதளமும் இருக்கிறது. இது உலக நாடுகளில் எந்தெந்த நாட்களில் எவ்வளவு ரிக்டர் அளவுகோலில் வந்திருக்கிறது? எங்கு வர வாய்ப்பிருக்கிறது என்பதைச் சொல்கிறது. கடந்த வாரத்தில், கடந்த நாட்களில், கடந்த ஒரு மணி நேரத்தில் என்று உலகநாடுகளில் வந்த சிறு நிலஅதிர்வையும் பதிவு செய்கிறது. இந்த இணையதளத்தில் எந்த நாட்டையும் குறிப்பிட்டு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். http://earthquake.usgs.gov/
இந்நிலநடுக்கத்தால் அணுஉலைகள் அதிகமுள்ள ஜப்பானுக்கு மேலும் பல புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன. புகுஷிமா அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் நிலநடுக்கம் மற்றும் சுனாமியிலிருந்து தப்பியவர்களை சிரமத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தொடர்ந்து அணு உலைகள் வெடித்ததில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியிருக்கிறது ஜப்பானிய அரசு. அணு உலைகளை குளிரூட்டும் பணி தொய்வடந்ததை அடுத்து அணு உலைகளை புதைக்கலாம என்ற கோணத்திலும் ஜப்பான் யோசித்து வருகிறது. இந்த கதிர்வீச்சின் தாக்கம் அமெரிக்காவிலும் இருப்பதாக தெரிகிறது. அணுஉலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டிருப்பதால் யுரேனியம் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி யுரேனியம் வேண்டுபவர்கள் தங்களிடம் கேட்கலாம் என்று கூறியிருக்கிறது.
இலங்கையை கதிர்வீச்சு தாக்கும் அபாயம் இல்லை என்ற செய்தி நிம்மதி அளித்தாலும் ஆகப் பெரும் கவலை இலங்கைக்கு இருக்கிறது என்பதே உண்மை. ஏனெனில் இலங்கைக்கு உதவும் நாடுகளில் ஜப்பான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இலங்கையிடம் இருந்து ஜப்பான் 8.3 மில்லியன் தேயிலையை சென்ற வருடம் வாங்கியிருந்தது. இந்த வருடம் ஜப்பானின் நிலைமை இறக்குமதியைக் கேள்விக்குள்ளக்கியிருக்கிறது. இந்த ஆண்டு இலங்கை அரசு ஜப்பானிலிருந்து ஒரு லட்சம் சுற்றுலாப்பயணிகளை கொண்டு வர திட்டமிட்டிருந்தது. அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து வந்த நிலையில் ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு இலங்கைக்கு பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.
அங்கு இருக்கும் மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பத் தயாராகி வருகின்றனர். ஜப்பான் பிரதமர் நேட்டோகான் மக்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசி வருகிறார். அவரின் செயல்பாடுகள் அரசு இணையத்தளமானhttp://www.kantei.go.ஜப் மூலம் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அனுக்கதிர்வீச்சின் அபாயம் இருக்கலாம் என்று ஜப்பான் பொருட்களை இறக்குமதி செய்ய மற்ற நாடுகள் யோசித்து வருகின்றன. இதனால் தொடர்ந்து ஜப்பானின் நிலையை உடனடியாக அதன் தாக்கத்திலிருந்து பொருளாதார ரீதியில் மீட்க முடியாத சூழல் ஒருபுறமிருப்பினும் உலக நாடுகள் பொருளாதார ரீதியில் உதவ முன் வந்திருக்கின்றன.
1945க்குப் பிறகு ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களும் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான பின் சில வருடங்களில் பொருளாதாரத்தில் தன்னை வளர்த்தெடுத்துக் கொண்ட ஜப்பான் உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
ஆனால் இந்த ஆண்டு நிகழ்ந்த இயற்கைப் பேரழிவானது அவர்களின் ஏற்றுமதியையும், இறக்குமதியையும், உற்பத்தியையும் கடுமையாக பாத்திருக்கின்றது, மக்கள் தொகையில் உலகின் பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஜப்பானில் ஒருபகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் மற்ற பகுதி மக்கள் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்கள். எனவே ஜப்பான் மூலம் சுற்றுலாவில் சம்பாதிக்கும் நாடுகளுக்கும் பொருளாதார நெருக்கடி உண்டாகும். ஜப்பானில் 12 கோடிக்கும் மேலான மக்கள் வசித்து வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து தவித்து வருகின்றனர்.
நில நடுக்கம் மற்றும் சுனாமியால் அதிகளவு உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதன்விளைவாக அணு உலைகள் வெடித்தத்தில் பெரு நெருப்பு மூண்டு அடித்துச் செல்லும் தண்ணீரிலும் எரிந்துகொண்டே இருந்தது. அனுக்கதிர்வீச்சின் அபாயத்தை உண்டாக்கியதில் காற்றும் மாசுபட்டிருக்கிறது. அந்த பகுதிகளில் நல்ல குடிநீரும் கிடைப்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இப்படி நிலம், நீர், காற்று, நெருப்பு என பஞ்சபூதங்களால் வஞ்சிக்கப்பட்ட ஜப்பான் விரைவில் மீண்டெழும் என்று நம்புவோமாக.
எதிர்ப்புகளின், சவால்களின் மத்தியில் பிறந்தவர்கள் எத்தகைய தடையையும் எதிர்கொண்டு முன்னேறுவார்கள்.
இவள் பாரதி
நன்றி - கீற்று.காம்

உறங்கா நகரம் - சமன் செய்யப்பட முடியாத இரவுகளின் துயரம்

உறங்கா நகரம் - வெ. நீலகண்டனின் அற்புதமான பதிவு என்று ஒற்றைவார்த்தையில் தொலைக்காட்சியில் ஒரு படத்திற்கான விமர்சனத்தை சொல்வது போல் சொல்லிவிடமுடியாது. ஏனெனில் இதைப் போலான படைப்புகள் அதிகம் வரவேண்டும் என்ற எண்ணத்திலும், மக்களின் அனுபவங்களே கற்பனைகளை விட உயர்ந்தவை என்ற மனப்பாங்கிலும் இந்நூல் குறித்து சில கருத்துகளை முன்வைக்கிறேன். கற்பனைகளை விட விசித்திரமானவை உண்மை.

இரவுகள் பற்றி எண்ணற்ற படைப்புகள் வெளிவந்திருக்கின்றன..
அன்றைய தஸ்தாவெஸ்கியின் வெண்ணிற இரவுகள் தொடங்கி, அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு, மையக்கிழக்கு நாடுகளிலும், தெற்காசியாவையும் சேர்ந்தஎழுத்தாளர்களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் கதைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஆயிரத்தொரு இரவுகள், ஜா.மாதவராஜின் சாலைப்பணியாளர்களின் வாழ்க்கை சாலைக்கே வந்துவிட்ட கொடுமையைச் சொல்லும் ஆவணப்படமான இரவுகள் உடையும், கவிஞர் மதுமிதாவின் படைப்பாளிகளின் இரவு அனுபவங்களை மையமாகக் கொண்டு தொகுக்கப்பட்ட கட்டுரை நூலான இரவு வரையான ஏராளமான நூல்கள் வந்திருக்கின்றன. இத்தனை படைப்புகளும் வித்தியாசமான படைப்புகள் தான். உறங்காநகரமும் வித்தியாசப்பட்டிருக்கிறது. காரணம் சக மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் விதத்தில் தனித்துவம் பெறுகிறது.

குங்குமம் வார இதழில் தூங்கா நகரம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். உடல் வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், வாக்குசொல்லிகள், ஊர்க்காவலர்கள், மருத்துவர்கள், பத்திரிக்கை போடுபவர்கள், பி.பி.ஓக்களில் வேலை செய்பவர்கள், உணவகத்தில் சமைப்பவர்கள், தபால் ஊழியர்கள், பால் வியாபாரிகள் இப்படி 27 தொழில்களின் இரவு நேரத்தை மிக இயல்பாகவும், அதே சமயம் இறுக்கமாகவும் பதிவு செய்திருக்கிறார்.

இரவு ஓய்விற்கான நேரம் என்று சொல்லிக் கொள்ளும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை இரவு உற்பத்தியின் களம். படைப்புகளின் மூலம். சற்று நேரத்தில் விழிக்க இருக்கும் விடியலுக்கு நடை பாதை அமைத்துக் கொடுக்கும் பெருஞ்சாலை.

இரவின் பனிக்குடத்தில் பிறக்கக் கூடிய ஏராளமான கருக்களை உணரத்தவறிய அல்லது கண்டு கொள்ளாது ஒதுங்கி நிற்கும் மனிதர்களை பின்னந்தலையில் அடித்து இங்கே பார்.. ’உனக்காக உறக்கத்தை தொலைத்து அலையும் மனித வாழ்க்கையை’ என்று சொல்லக் கூடியதாக இந்நூலை பார்க்கிறேன்.

விழித்து எழுந்தவுடன் எப்போதோ தாமதமாகும் ஒருநாளில் இன்னும் பேப்பர் வரவில்லையா? பால் வரவில்லையா? என்று எரிச்சல் படுமுன் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் இதற்குப் பின்னாலிருக்கும் பேருழைப்பின் விஸ்வரூபம் புரியவரும்.

நான் பண்பலையில் பணியாற்றும் போதும் சரி, பத்திரிக்கையாளராக இருக்கும் போதும் சரி சாலைகளைக் கடக்கும் போது சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளைக் காணும் போது அவர்கள் எப்படி இரவில் மட்டும் வேலை செய்கிறார்கள் என்று பலமுறை யோசித்துள்ளேன். இரவு நிகழ்ச்சி முடித்து 12 மணிக்கு தாமதமாக வீடு திரும்பும் போது ஒட்டப்பட்டிருக்கும் அறிவிப்புகள், காலை நிகழ்ச்சிக்காக ஐந்து மணிக்கே அலுவலகம் வரும் போது மாறியிருக்கும்.

எட்டுமணி நேரத் தூக்கத்தின் அவசியம் பற்றி ஆய்வுகள் வந்து கொண்டே இருக்கும் வேளையில் நின்று பேசக் கூட நேரமின்றி இரவுகளை நகர்த்திக் கொண்டு ஓடுகிற மனித வாழ்க்கையை நம் கண்முன் நிறுத்தி இருக்கிறார். இரவுகள் விற்பனைக்கு என்று சொல்லாமல் சொல்லும் இவர்களின் பெரும் துயரம் கவிந்த வார்த்தைகள் ஈரமுள்ள எந்த நெஞ்சையும் தாக்கக் கூடியவை. சிலரைத் தவிர ஏனையோர் பொருளாதாரத்தின் சிறு பகுதியைக் கூட ஈட்ட முடியாமல் படும் வேதனைகள் இந்தக் கட்டுரைகளில் உச்சமாகத் தெரிகின்றன.

நாம் கடந்து செல்கிற மனிதர்களின் வாழ்க்கைப் பதிவாக உறங்கா நகரம் இருக்கிறது. இரவுகளில் குறி சொல்லிச் செல்லும் குடுகுடுப்பைக்காரர், சாலைகளைத் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர்கள், பேப்பர் போடுபவர்கள், பால்காரர்கள், ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் பணியாளர்கள், காவல்துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், வாட்ச்மேன்கள், மீனவர்கள் இப்படி தன்னால் முடிந்தவரை அனைத்துத்துறையினரையும் பதிவு செய்திருக்கிறார்.

’கீழ்வானம் சிவக்கிறது. நகரம் தன் சுயமுகத்தை தரித்துக் கொண்டு விடியலை உணர்த்த, பச்சையம்மா முகம் இருண்டு கிடக்கிறது.’

’நின்று பேசிய நேரத்தை சமன் செய்வதற்காக மேலும் வேகம் கூட்டுகிறது சிலம்பரசனின் சைக்கிள்’

’நொடிப்பொழுதில் சைரன் சத்தம் தேய்ந்து மறைய, சோகம் தோய்ந்த கனமான நிசபதம் அசோக் நகரைக் கவ்வுகிறது’

’பனி தகிக்கிறது’

போன்ற வார்த்தை பிரயோகங்கள் நீலகண்டனின் ஆளுமையை எடுத்தியம்புகின்றன. நீலகண்டனின் மொழிநடையும், அவர் கையாண்டிருக்கும் வார்த்தைகளும் இந்த கட்டுரைகளில் உலவும் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் மேலும் வலுவைக் கொடுத்திருக்கின்றன. இதில் மக்கள் பேசும் மொழிகளும் பேச்சு வழக்கில் பதிவு செய்யப்பட்டிருப்பது அவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது. சந்தியா பதிப்பகத்தின் அழகிய வடிவமைப்பு வாசகர்களை தொடர்ந்து வாசிக்கத் தூண்டுவதாக அமைந்திருக்கிறது.

இயந்திரகதியாக, இயங்கியல் விதியாக பகல்களாக இரவுகளை மாற்றிக் கொள்ள நேர்ந்திருப்பது பெரும்பாலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கே வாய்த்திருக்கிறது. ஆனால் இவர்களுக்கு பகல்கள் இரவாகி விடுகின்றனவா என்றால் அதுவும் இல்லை. எப்போதும் இயங்கி ஆக வேண்டிய இந்த மக்களுக்கு இரவும் அதனூடான இசையுமே துணையிருக்கிறது.

இதில் இன்னொரு விடயமாக நான் பார்ப்பது என்னவெனில பெரும்பாலான இரவு நேரப் பணியிடத்திலும் பண்பலை கேட்பதைக் குறிப்பிட்டிருக்கும் ஆசிரியர் பண்பலையின் இரவு நேர தொகுப்பாளர்களை எப்படி தவறவிட்டார் என்பது தெரியவில்லை.

தூக்கத்தை விற்று காசாக்குகிற பி.பி.ஓவில் பணிபுரியும் கங்கா, தூக்கத்தைத் தொலைத்துவிடுகிற ஊர்க்காவல் படையின் ஊழியர் ரமேஷ்ராஜ், படிப்பை விலையாகக் கொடுக்கும் பத்திரிக்கை போடும் பள்ளிச் சிறுவன் சிலம்பு இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நம்மை அசைத்துப் பார்க்கின்றன.

இதற்காக நீலகண்டன் எத்தனை இரவுகளை செலவழித்திருப்பார் என்று பார்க்க முற்படுகையில் அந்த இரவுகளின் சேமிப்பாக இந்த நூலை காண்கையில் அவர் அந்த செலவினை சமன் செய்துவிடுவதாகக் கொள்ளலாம்.

இவள் பாரதி

நன்றி - தடாகம் இணைய இதழ், கவி ஓவியா மாத இதழ்

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?