Saturday 28 July, 2012

பெண்கள் வாழத் தகுதியற்ற நாடு: இந்தியா!



இவள் பாரதி


பெண்கள்வாழத் தகுதியான நாடுகள் பட்டியலில்இந்தியாவுக்குக் கடைசி இடமே கிடைத்துள்ளது.


ஜி 20 நாடுகளில் உள்ள அனைத்து சூழ்நிலைகளையும் ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியாகியுள்ளது. அதில் முதலிடம் கனடாவிற்கு. ஆண் - பெண் இன வேறுபாட்டைக் களையும் அரசின்கொள்கைகள், வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகள், பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் திட்டங்கள், உடல் ரீதியாகவும் தொழில்ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெண்களுக்குத் தேவையான அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுதல், வன்கொடுமைகளைத்  தடுத்தல் போன்றவற்றால் கனடா, பெண்கள் வாழத் தகுதியான நாடுகளின் இடத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. கனடாவைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

குழந்தைத் திருமணங்கள், அடிமைத்தனம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் ஆகியவற்றின் காரணமாக  மிக மோசமான நாடு என இந்தியாவை ஆய்வு குறிப்பிடுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாலியல் தொழிலுக்காக விற்றல், குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, வீட்டுப் பணிப்பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாவது போன்ற காரணங்களால் பெண்கள் வாழத் தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடமே கிடைத்துள்ளது என்பதுதான் வேதனையான தகவல்.

தரவரிசைப் பட்டியலில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, தென்னாப்ரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு முன்னதாக இடம்பெற்றுள்ளன.

கடந்த 2011ம் ஆண்டு  உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான, பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தானும், 2வது இடத்தில் காங்கோவும், 3வது இடத்தில் பாகிஸ்தானும் இடம்பெற்றிருந்தன. இந்தியா நான்காவது இடத்திலும், ஐந்தாவது இடத்தில் சோமாலியாவும் இருந்தன.

சுகாதாரச் சீர்கேடு, பாலியல் வன்கொடுமைகள், கலாசார ரீதியிலான வன்முறைகள், மதம் அல்லது பாரம்பரியம் சார்ந்த பெண்களுக்கு எதிரான பழக்கவழக்கங்கள், கடத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது  செய்தி நிறுவனமான தாம்ஸன் ராட்டர்ஸின் பெண்கள் உரிமைக்கான சட்டப்பூர்வத் தகவல் மற்றும் சட்ட ஆதரவு அமைப்பின் (Global hub for women’s rights) சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு இது.

இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள்  விபச்சாரத்தில் தள்ளப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவிகிதம் பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள். 20ம் நூற்றாண்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பெண் சிசுக்கொலை, கருச்சிதைவு  போன்ற காரணங்களால் இறந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்கு முன் திருமணம் நடக்கிறது.

2009ம் ஆண்டு உலகில் நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவிகிதம் இந்தியாவிற்குள் நடந்தவையாகும். கட்டாயத் திருமணங்களும் பெண்களுக்கு எதிரான முக்கியக் கொடுமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தேசியக் குற்றப்பதிவு மையம் (‡NCRB)  வெளியிட்டுள்ள தகவல்களின்படி இந்தியாவிலிருக்கும் பெருநகரங்களில் டெல்லிதான் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத இடம். 2011ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான  குற்றச் செயல்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக என்.சி.ஆர்.பி. கூறியுள்ளது.

பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள 53 நகரங்களில் பாலியல் வன்கொடுமை 17.6 சதவிகிதமும் கடத்தல்கள் 31.8 சதவிகிதமும் வரதட்சணை இறப்புகள் 14 சதவிகிதமும் நிகழந்துள்ளன.

ஒட்டுமொத்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது பெண்கள் மீதான வன்முறை கடந்த ஆண்டைவிட 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் தலைநகரில் காவல்துறைக்கு எதிராக 12,000 வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது கூடுதல் தகவல். பாதுகாக்க வேண்டிய காவல்துறையாலேயே பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் நாட்டை, பெண்கள் வாழத் தகுதியில்லாத நாடு என அழைப்பதில் ஆச்சரியமில்லை.

இது ஒருபுறமிருக்க, இந்திய மாநிலங்கள் பலவும் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு பெயர்போனவை. குழந்தைப்பேறு சமயத்தில் ரத்தசோகையால் இறக்க நேரிடும் பெண்களின் சதவிகிதம் மிக அதிகம். இன்னொருபுறம்  பெண்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள்.

பெண்களுக்கான வரதட்சணைக் கொடுமை இன்றும் இருந்துவருவதால் பெண்சிசுக் கொலை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. ஆண் குழந்தையின் மீதான ஆசையில் தந்தையின் கொடுமையால் பலியான பெங்களூருவைச் சேர்ந்த மூன்றுமாதக் குழந்தை நேஹா அஃப்ரீனை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது.

ஆண்களைச் சார்ந்தே பெரும்பாலான பெண்கள் வாழ்கிற சூழ்நிலையில் ஆண்களுக்கு ஏற்படுகிற அனைத்துப் பிரச்சினைகளும், பெண்களையும் மனரீதியாகப் பாதிக்கின்றன. இந்தியாவில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் நிகழும்  தற்கொலைகளில் 30 சதவிகிதம் பெண்கள் செய்து கொள்பவை.

இப்போது சொல்லுங்கள்: இந்தியா பெண்கள் வாழத் தகுதியான நாடுதானா?


பெண்சிசுக் கொலை
கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் அழிக்கப்பட்ட பெண்சிசுக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது லட்சம்.

நமது நாட்டில் ஆண்டுதோறும் ஒரு கோடியே பத்து லட்சம் கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. இதில் எண்பது லட்சம் பெண்சிசுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- இவள் பாரதி

Wednesday 18 July, 2012

தமிழ் சினிமாவில் படத்தொகுப்பு



திரைக்குப் பின்னிருக்கும் கலைஞர்களில் முக்கியமானவர்கள் படத் தொகுப்பாளர்கள். அவர்களது படத்தொகுப்பில்தான் ஒரு படத்தின் தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. படத்தொகுப்பு என்பது தேவையில்லாத பகுதியை வெட்டி எடுப்பதும், பின் இணைப்பதும் என நம்மில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கக்கூடும். உண்மை அதுவல்ல.

‘’எடிட்டிங்’ என்றால் என்ன? தேவையில்லாத பகுதிகளை நீக்குதல் என்று அகராதியில் பொருள் அறியலாம். கட்டுரையொன்றை எடிட்டிங் செய்யும் தலைமைப் பத்திரிக்கை ஆசிரியர் தான் பிரசுரிக்க விரும்பாத சொற்களையும், வாசகங்களையும் எல்லாம் நீக்கி விடுவாவரல்லவா? கிட்டத்தட்ட அதே முறையில் குறைபாடு உள்ளதோ, மோசமாகவோ உள்ள காட்சிகளை நீக்குதல் என்ற அர்த்தத்தில்தான் பலரும் ‘ஃபிலிம் எடிட்டிங்’ என்ற செயலை விளங்கியிருக்கிறார்கள். இந்த அடிப்படையில் காட்சிகளை தொகுப்பது, இணைப்பது மட்டுமேதான் ‘எடிட்டருடைய’ பணி என்கிற எண்ணத்திலேதான் இங்கு யாரோ ‘படத்தொகுப்பு’ என்கிற பதத்தை பிலிம் எடிட்டிங்கின் மொழிபெயர்ப்பாக வழங்கியிருக்கக்கூடும். 

ஆனால் ஒரு திரைப்படத்தின் சரியான அர்த்தத்திலான ‘எடிட்டிங்’ தொடங்குவது தேவையற்றதும், குறைபாடானதுமான காட்சிகளையெல்லாம் நீக்கி முடித்தபிறகு, கதையின் சொல்லாடலுக்கேற்ப தேவையானவற்றை இணைத்த பிறகேதான் ‘ரஃப் கட்’ என்றழைக்கப்படுகிற இந்த முதல்கட்ட நிலையின் மொழிபெயர்ப்பாக இருக்கக்கூடிய தகுதி மட்டுமேதான் ‘படத்தொகுப்புக்கு’ உண்டு. ‘ஃபிலிம் எடிட்டிங்’ என்ற ஆங்கிலப் பதத்தின் மொழிபெயர்ப்பே இங்கு காட்சி இணைப்பு என்கிற சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளது.’’ என்று மலையாள இயக்குனர் அடூர்கோபாலகிருஷ்ணன் (தமிழில் - இயக்குனர் மீரா கதிரவன்) தனது நூலில் எடிட்டிங் பற்றி குறிப்பிடுகிறார். எனவே காட்சி இணைப்பு என்றே எடிட்டிங்கை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். 

எடிட்டிங் என்பது ஒரு படத்தின் வேகத்தைக் கூட்டவும், குறைக்கவும் கூடிய நுட்பம் வாய்ந்தது. ஒரு திரைக்கதையை பலவீனப்படுத்தவும், பலப்படுத்தவும் படத்தொகுப்பாளரால் முடியும். காட்சிகள் நகரும் கால அவகாசம் படத்தொகுப்பின் பஙக்ளிப்பால் நீளமாகவோ, குறைவாகவோ மாறும். அப்படி மாறும் போது அந்தக் காட்சி உணர்த்தும் அர்த்தமும் மாறும் எனலாம். 

படங்களை பார்த்த்தும் நம்மால் புரிந்து கொள்ளக் கூடியது திரைக்கதை, பிண்ணனி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, நடிப்பு போன்ற நுட்பங்களைத்தான். ஆனால் சமீபகாலமாக படத்தொகுப்பு, இடத்தேர்வு (கலை), சண்டைக்காட்சிகளில் புதிய உத்திகள், க்ராஃபிக்ஸ் காட்சிகள் ஆகியவற்றையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

பெரும்பாலும் திரைக்குப் பின்னிருக்கும் கலைஞர்களை கண்டுகொள்ளும் போக்கு இந்த நூற்றாண்டில் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். திரைக்கு முன்னிருப்பவர்களை விட திரைக்குப் பின்னிருப்பவர்களின் உழைப்பும், நேரமும் கூடுதலானது. ஆனால் சம்பளம் என்று பார்த்தால் சிலரைத் தவிர பலருக்கும் மிகக் குறைவாகவே உள்ளது என்பது சினிமா வட்டாரங்களிலிருந்து வெளிவரும் வேதனையான தகவல். 

வசூலில் சாதனை படைத்த பிரபல ஹிந்தி படமான ஷோலேவில் எடிட்டராக பணியாற்றிய ஷிண்டே வெறும் 2000ரூபாய்தான் பெற்றிருக்கிறார். மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களை எடிட் செய்த அவர் இன்று தாராவியில் ஒரு குடிசைப் பகுதியில் வசித்து வருகிறார். ஏழ்மையில் வாசம் செய்யும் அவரை திரையுலகம் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனை. 

வெற்றியை மட்டும் ருசிக்கிற திரையுலகம் அதற்கு பின்னிருக்கும் உழைப்பை ஏனோ கொண்டாட திட்டமிட்டு மறந்துவிடுவது உண்மைதான் போலும். விருதுகளும், சாதனைகளும் ஏழ்மையைப் போக்கிவிடுவதில்லை என்ற உண்மை முகத்தில் அறைகிறது. ஒரு படத்திற்கு தரத்தையும், அர்த்தத்தையும் தந்த ஒரு எடிட்டரின் வாழ்வு, இவை இரண்டுமற்று போய்விடுவது கரிபூசப்பட்ட காலத்தின் முகத்தைக் காட்டுகிறது. 

ஒரு காட்சியின் அர்த்தத்தை மாற்றுவதில் படத்தொகுப்பாளரின் பங்கு மிக முக்கியமானது. ஒரு படத்தின் கதை படத்தொகுப்பு மேசையில்தான் முடிவாகிறது என்று ஹாலிவுட் பேட்டிகளில் சொல்வார்களாம். இது போல பரீட்சார்த்த முயற்சிகள் இந்திய அளவில் மிக குறைவு. தமிழில் ஆரண்யகாண்டம் கதை உத்தியில் பேசப்பட்டதற்கு படத்தொகுப்பு முக்கிய காரணம். 

தமிழ்சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எடிட்டர்கள் சிலரைப் பார்க்கலாம். 

தானே தயாரித்து இயக்கி பெருவெற்றி பெற்ற நாடோடி மன்னன் படம் குறித்து எம்.ஜி.ஆர். எழுதிய நூலில் எடிட்டர் ஜம்புவைப் பற்றி ‘திரு.ஜம்பு அவர்கள் கடைசி நேரத்தில் செய்த பணிக்கும் அவருடைய நேர்மைக்கும் கிடைத்த பெரும் வெற்றி இது. இந்தக் காலத்தில் யாரும் செய்யாத தியாகத்தைச் செய்து தொகுப்பவர்களின் ஒற்றுமைக்கும், கடமை பெரிது ; விளம்பரமல்ல என்பதற்கும் வெற்றி தேடிந்தந்தவர் திரு.ஜம்பு அவர்கள.’ என்று பாராட்டியுள்ளார். அத்துடன் ‘படத்தின் உயிர்நாடி எடிட்டிங் (வெட்டி ஒட்டி இணைத்தல்) கதை,வசனம், பாடல்கள், நடிப்பு, காட்சி சோடனைகள் மற்றும் எல்லாம் எவ்வளவுதான் திறம்பட இருந்தாலும் எடிட்டிங் சரிவரச் செய்யாமற் போனால் படத்தின் தோல்வி நிச்சயமாகி விடும். 

ஆரம்பத்தில் திரு.ஆறுமுகம் என்பவர் இருந்தார். அவர் சில காரணத்தால் விலகினார். அதன் பிறகு திரு.பெருமாள் அந்தப் பொறுப்பை ஏற்றார். படத்தின் முடிவு நேரத்தில் அவரால் வேலை செய்ய முடியாமற் போன காரணத்தால் வேறொருவர் துணைக்கு நியமிக்கப்பட்டார். அவரும் அதில் தோல்வியுறவே, கடைசியாக வண்ணப்பகுதிகளில் பெரும் பகுதியை எடிட் செய்து கொடுக்கும் பொறுப்பைத் திரு.ஜம்பு அவர்கள் ஏற்றார். அவருடைய விருப்பத்தின் படியும் வற்புறுத்தலின் படியும் தான் அவருடைய பெயரைப் படத்தில் வெளியிடவில்லை.’  என்று ஜம்பம் இல்லாத எடிட்டர் ஜம்பம் குறித்து கூறியிருக்கிறார். 

எடிட்டர் லெனின் உதவி எடிட்டராக பல ஹிந்தி படங்களில் பணியாற்றி பின் தமிழில் காதலன் படத்திற்காக தேசியவிருது பெற்றவர். அஞ்சலி, ஜென்டில் மேன், இந்தியன், காதல் தேசம், ரட்சகன், வாலி, முதல்வன், குஷி, தில், 12பி, உள்ள்ம் கேட்குமே, தவமாய் தவமிருந்து, சென்னை 28, உச்சிதனை முகர்ந்தால் போன்ற தமிழின் மிக முக்கிய படங்களில் மட்டுமில்லாமல் தூவான தும்பிகள், டெய்ஸி, சீசன், தாழ்வாரம் போன்ற மலையாள படங்களிலும் பணியாற்றியவர். இவரும் எடிட்டர் வி.டி.விஜயனும் சேர்ந்து பல படங்களை எடிட் செய்துள்ளார்கள். 
இவர்களை எடிட்டிங் இரட்டையர்கள் என்றும் சொல்வதுண்டு. அதிலும் நல்ல படங்களை மட்டுமே எடிட் செய்வேன் என்று தற்போது குறும்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் லெனின். இவரியக்கிய ஊருக்கு நூறு பேர் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றவர்.

எடிட்டிங் அறையில் இயக்குனரும் இருக்க வேண்டும், அப்போதுதான் சில சமயங்களில் காட்சிகளை முன் பின்னாக இணைப்பதில் ஃப்ளாஷ்பேக் உத்திகள் போன்றவற்றை நன்கு கொண்டுவர முடியும். ஆயிரத்தில் ஒருவன் சரியும் தவறுமாய் ஆனதற்கு, இரண்டு - மூன்று ஆண்டுகள் கஷ்டப்பட்டு எடுத்த படத்தை எடிட்டிங்கில் உட்கார்ந்து கவனிக்காமல், எடிட்டர் கோலா பாஸ்கரையே பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு, டைரக்டர் செல்வராகவன் விக்ரம் நடிக்க அடுத்து தான் இயக்கும் மெகா பட்ஜெட் படத்தின் வேலைகளில் பிஸியாகி விட்டதுதான் காரணம் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது. 

கோலா பாஸ்கரும் மிகச் சிறந்த எடிட்டர். செவன்ஜி ரெயின்போ காலனி, போக்கிரி, யாரடி நீ மோகினி, வில்லு, குட்டி, மயக்கம் என்ன போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்தவர். 

இயக்குனரின் நடிகர் என்று சிலரைச் சொல்வதைப் போலவே இயக்குனரின் படத்தொகுப்பாளர் என்றும் சிலரைச் சொல்லலாம். இது போலவே அந்த காலத்தில் எஸ்.பி முத்துராமனுக்கு ஆர் விட்டல், பி வாசுவுக்கு பி மோகன் ராஜ், கே.எஸ் ரவிகுமாருக்கு கே.தணிகாசலம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அந்தவகையில் எடிட்டர் ஆண்டனி இன்றைய பிரபல இயக்குனர்களின் முதல் தேர்வாக இருக்கிறார். 

காக்க காக்க, கஜினி, வேட்டையாடு விளையாடு, சிவாஜி, பீமா, வாரணம் ஆயிரம், அயன், ரேனிகுண்டா, எந்திரன், மதராசப்பட்டினம், பையா, ஏழாம் அறிவு, தெய்வத்திருமகள், நண்பன் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் வேலை செய்தவர். வேகம் என்றால் ஆண்டனிதான் என்று சொல்லும் அளவுக்கு இவருடைய எடிட்டிங்கில் திறமையைக் காட்டியவர். கெளதம் மேனனின் ஆஸ்தான எடிட்டர். கெளதம் தான் இவரை காக்க காக்க படம் மூலம் அறிமுகப்படுத்தியவர். 

’ஒரு நாள் கௌதம்மேனன் என்னிடம் அவசரமாக வந்து ஆடியோ ரிலீசுக்கு நேரமாச்சு ‘காக்க..காக்க’ படத்தில் வரும் ‘என்னை கொஞ்சம் மாற்றி’ பாடலை எடிட் செய்து தரும்படி கேட்டார். நானும் அதைச் செய்து கொடுத்தேன். அந்தப் பாடலில் இம்ப்ரெஸ் ஆயிட்டு ‘முழு படத்தையும் நீயே எடிட் செய்து கொடுத்துடேன்’னு கௌதம் சொன்னார். ஸோ… ‘காக்க… காக்க’ படம்தான் நான் எடிட்டிங் செய்த முதல் முழு படம்ன்னு சொல்லலாம். ‘காக்க காக்க’ ஆரம்பிச்சு இதுவரை அறுபது படங்கள் வரை பண்ணியாச்சு.’ என்று ஒரு நேர்காணலில் ஆண்டனி கூறியிருக்கிறார். 
இயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான படத்தொகுப்பாளரும், "வேதம் புதிது' படத்திற்கு தேசிய விருது வாங்கியவருமான பி.மோகன்ராஜிடம் உதவி படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்த கிருத்திகா "உயிரின் எடை 21 அயிரி' படத்தின் மூலமாக முதல் பெண் படத்தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் தடம் பதித்திருக்கிறார். அவர் கூறுகையில், ’கண்ணை உறுத்தாத எந்தப் படத்தொகுப்புமே சிறந்ததுதான். உலகளவில் மைக்கேல் கான், தெல்மா ஸ்கூன்மேக்கர், ரால்ஃப் டாஸன், பார்பரா மெக்லீன் போன்றவர்களை எனக்குப் பிடிக்கும். 

தியரிப்படி படத்தொகுப்பாளர் ஆண்டனி ("காக்க காக்க', "சிவாஜி', "எந்திரன்', "ஏழாம் அறிவு') தான் பணிபுரியும் படங்களின் படத்தொகுப்பில் கொடுக்கும் கட் எல்லாமே தவறானவைதான். அவர் படத்தொகுப்பு விதிகளை உடைத்துவிட்டு புதுவிதமான ஃபாஸ்ட் கட் என்னும் விதியை உருவாக்குகிறார். ஆனால், அது படத்தொகுப்பு விதியில் இடம்பெற்றிருக்கவில்லை. பாஸ்ட் கட் முறையை அவர் பயன்படுத்துவதால் அது படத்தில் தனித்து தெரிகிறது.
அதன் மூலமும் படத்தின் பார்வையாளனும் அந்த இடத்தில் கதையில் ஒன்றாமல் அந்தத் தொழில்நுட்பத்தில் ஒன்றிவிடுகிறான். இது தியரிப்படி தவறானதுதான். ஆனால், ஒரு படத்தொகுப்பாளரை நோக்கிப் பார்வையாளனை ஆண்டனி நகர்த்தியிருப்பதால் அந்தத் தவறிலிருந்து அவர் தப்பித்துக் கொள்கிறார்’ என்று கிருத்திகா கூறுகிறார். இருந்தாலும் காட்சிகளை வேகப்படுத்திக் காண்பிக்கும் முறையை இன்றைய தலைமுறை விரும்புவதற்கு சாட்சியாக இருப்பவை இயக்குனர் ஹரியின் படங்கள்.  

படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மறைந்த பிரபல ஓவியர் எம்.எஃப்.ஹுசைன், சந்தோஷ் சிவன், ஷாஜி கருண், விஷால் பரத்வாஜ், ஃபர்ஹான் அக்தர் என பிரபல இயக்குனர்களுக்கு படங்களுக்கு இவர்தான் முதல் தேர்வு. எட்டு தேசிய விருதுகளும், ஐந்து கேரள அரசு விருதுகளும், இரண்டு நந்தி விருதுகளும், துபாய் சர்வதேச திரைப்பட விழா விருது என பல விருதுகளை தன் படத்தொகுப்பிற்காக பெற்றவர். 
ஒரு நேர்காணலின் போது "ஒரு எடிட்டர் வெளியே தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நல்ல படத்தில் எடிட்டிங் வெளியே தெரியாது. இயக்குநரின் ரசனை, காட்சிப்படுத்துதல், அவர் சொல்ல விரும்பியதை, வேகமும் தரமும் குறையாமல் தருவதுதான் ஒரு எடிட்டரின் வேலை. கேரக்டரின் தன்மை, அவர்கள் எப்படி வெளிப்பட வேண்டும் என்பது எடிட்டரின் கையில்தான் இருக்கிறது. சுருக்கமா, எடிட்டிங் டேபிளில்தான் ஒரு படத்தின் சரியான திரைக்கதை உருவாகும்!" என்று கூறியிருக்கிறார். 

"மணிரத்னம் கூட 'அலைபாயுதே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'யுவா', 'குரு'ன்னு நிறையப் படங்கள் பண்ணியிருக்கேன். தான் கஷ்டப்பட்டு ஷூட் பண்ணினது எல்லாமே படத்தில் வரணும்னு மணி நினைக்க மாட்டார். ஆனா, அந்த ஃப்ளேவர் ரசிகர்களுக்குப் போய்ச் சேரணும்னு தீர்க்கமா இருப்பார்.

நந்திதா தாஸின் முதல் படம் 'ஃபிராக்'க நான்தான் எடிட் செய்தேன். நல்ல சினிமாக்கள் வெளியானால், 'அவசியம் பாருங்கள்'னு போன் செய்து சொல்வார்!" என தான் பணியாற்றிய இயக்குனர்களிடம் கிடைத்த அனுபவங்களை அழகாக சொல்லியிருக்கிறார். 

பல படங்களை இணைந்து டைரக்ட் செய்த கிருஷ்ணனும், பஞ்சுவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பலரும் நினைப்பது போல் சகோதரர்கள் அல்லர். எஸ்.எஸ்.எல்.சி. தேறியதும், சினிமாத்துறையில் சேர விருப்பம் கொண்டு, அன்றைய பிரபல டைரக்டர் ராஜா சாண்டோவிடம் உதவியாளராகச் சேர்ந்தார். எடிட்டிங் துறையில் பயிற்சி பெற்றார். இந்தக் காலக்கட்டத்தில் கோவையில் கந்தன் ஸ்டூடியோ என்ற சினிமா ஸ்டூடியோ நடந்து வந்தது. இந்த ஸ்டூடியோவைத்தான் பிற்காலத்தில் ஸ்ரீராமுலு நாயுடு வாங்கி, "பட்சிராஜா ஸ்டூடியோ" என்ற பெயரில் நடத்தினார். கந்தன் ஸ்டூடியோவில் லேபரட்டரியில் பணியாற்றிய கிருஷ்ணனும், பஞ்சுவும் நண்பர்களானார்கள். 

அந்த நேரத்தில் ராஜா சாண்டோவின் டைரக்‌ஷனில் "ஆராய்ச்சி மணி" என்ற படம் மனு நீதி சோழனின் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வந்தது. இதில் கன்றை இழந்த பசு, கண்ணீர் விட்டபடி அரண்மனைக்கு ஓடிவந்து, ஆராய்ச்சி மணியின் கயிற்றை பல்லால் கடித்து இழுத்து, மணியை அடிக்கவேண்டும்.

இந்தக் காட்சியை பலமுறை எடுத்தும் சரியாக வரவில்லை. எடிட்டிங் துறையில் நன்கு பயிற்சி பெற்றிருந்த பஞ்சுவும், கிருஷ்ணனும் டைரக்டர் ராஜா சாண்டோவிடம் சென்று, அக்காட்சியை எப்படி படமாக்கலாம் என்பது குறித்து யோசனை தெரிவித்தனர். ராஜா அனுமதியளிக்க, பஞ்சுவும், கிருஷ்ணனும் தங்கள் திறமை முழுவதையும் பயன்படுத்தி டிரிக் ஷாட் (தந்திரக் காட்சி) மூலம் அந்தக் கட்டத்தை படமாக்கினர். மாடு கண்ணீர் வடிப்பது, கயிற்றை வாயினால் இழுத்து மணியை அடிப்பது ஆகிய காட்சிகள் தத்ரூபமாக அமைந்தன.

அதைப் பார்த்த ராஜா சாண்டோ, கிருஷ்ணனையும், பஞ்சுவையும் கட்டித் தழுவிக்கொண்டார். "இளைஞர்களாக இருந்தாலும் மிகத் திறமைசாலிகளாக இருக்கிறீர்கள். இனி நீங்கள் உதவியாளர்களாக இருக்கவேண்டாம். இருவரும் சேர்ந்து டைரக்டர்களாக ஆகுங்கள். "பூம்பாவை" என்ற படத்தை டைரக்ட் செய்ய எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. தயாரிப்பாளரிடம் சொல்லி, அந்த வாய்ப்பை உங்களுக்கு வாங்கித் தருகிறேன்" என்றார். இந்தப்படம் 1944 ஆகஸ்டு மாதம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது.

நடிகர் திலகம் சிவாஜி நடித்த "பராசக்தி", எம்.ஆர்.ராதா நடித்த "ரத்தக்கண்ணீர்", எம்.ஜி.ஆர். நடித்த "பெற்றால்தான் பிள்ளையா" போன்ற படங்கள் பெருவெற்றியைத் தேடித்தந்தன. ஏவி.எம். ஸ்டூடியோவில் உருவான பல சிறந்த படங்கள் கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ஷனில் உருவாயின. குலதெய்வம், தெய்வப்பிறவி, உயர்ந்த மனிதன், அன்னை, சர்வர் சுந்தரம், குழந்தையும் தெய்வமும் உள்பட பல படங்களை சிறப்பாக டைரக்ட் செய்தனர். கதையை திரைக்கதை ஆக்குவதில் கிருஷ்ணன் முக்கிய பங்கு எடுத்துக்கொள்வார். படப்பிடிப்பை சுறுசுறுப்பாக நடத்தி, "எடிட்டிங்" வேலைகளை கவனிப்பது பஞ்சுவின் பொறுப்பு. சிறந்த நட்புக்கு மட்டுமல்ல இயக்கமும், எடிட்டிங்கும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இவர்கள் உதாரணமாகத் திகழ்ந்தனர். 

பிரபல திரைப்பட இயக்குநர்களான பீம்சிங், மகேந்திரன், திருமலை மகாலிங்கம் ஆகியோரின் திரைப்படங்களில் எடிட்டராகப் பணியாற்றிய எடிட்டர் பால் துரைசிங்கம் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்கள் என மொத்தம் 150 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். 

ரோஜா, பம்பாய், தளபதி, இருவர், சேது, பிதாமகன், அமர்க்களம், சந்திரமுகி உள்பட 500க்கும் மேற்பட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர், சுரேஷ் அர்ஸ். சிறந்த படத்தொகுப்புக்காக 2 முறை தேசிய விருது பெற்றவர். இவர் `மகான் கணக்கு என்ற படத்தின் மூலம் நடிகர் ஆகியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

சிலரது பெரும் உழைப்பு சிலரால் வெளிவரும். சிலரால் மறைந்துவிடும். அத்ற்கு காரணம் நாம் இயக்குனர்களையும், நடிகர்களையும் முன்னிருத்தி படத்தைப் பார்ப்பதுதான். உதாரணத்திற்கு சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து பெருவெற்றி பெற்ற பாட்ஷா படத்தின் எடிட்டர் கணேஷ்குமார். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் எடிட்டிங்கும் ஒன்று என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும்.

பருத்திவீரனுக்காக தேசிய விருது பெற்ற எடிட்டர் ராஜாமுகமது இதுவரை தமிழ், மலையாளத்தில் 16 படங்களை முடித்துவிட்டார். இவர், யதார்த்தமான கதைகளுக்கு பட்த்தொகுப்பு செய்வதுதான் சவாலானது, கஷ்டமானதும் கூட என்கிறார். 

கமர்ஷியல் படங்களுக்கும், யதார்த்த படங்களுக்கும் கதைக்களத்தைப் போலவே படத்தொகுப்பு விஷயங்களும் மாறுபடும். இளா என்பவர் ஐஃபோன் காமிராவைக் கொண்டே ஒரு குறும்படத்தை முழுவதுமாக உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார்.  அந்த அனுபவங்களை அழகாக தொகுத்து அளித்திருக்கிறார். ’எப்படி காட்சிகளை அமைத்தாலும் வேறு வேறுவிதமான பரிமாணங்கள் வருவதைக்கண்டு நாங்களே ஆச்சர்யப்பட்டுக்கொண்டோம். அதிசயித்தோம் எடிட்டிங் என்னும் பெரும் கலை கண்டு.உண்மையைச் சொன்னால் கத்திரி வைப்பதில் தான் படத்தின் ஓட்டம் அமைந்திருக்கிறது. ஆனால் இவையெல்லாம் வெளியுலகில் இருப்பவர்களுக்கு தெரிவதேயில்லை’ என்ற கூற்று எடிட்டிங் பற்றிய இளைஞர்களின் பார்வையையும் பதிவு செய்கிறது. எல்லாத்துறைகளையும் போலவே சினிமா எடிட்டிங்கும் டிஜிட்டல் மயமாகிவிட்டது.  எந்தக் கலையையும் மதித்து உண்மையாக நேசித்து செய்தால் வெற்றியின் கதவு திறந்தே இருக்கும் என்பதற்கு மேற்கணட எடிட்டர்களே சாட்சி. 

அந்தக் காலத்தைப் போலவே இன்னும் சில வருடங்களில் அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொண்ட ஒருவரே திரைத்துறையில் ஜொலிக்க முடியும் என்ற நிலை வரலாம். அப்போது இன்னும் அதிகமாக தமிழ் திரையுலகம் சாதனை படைக்கும். 

இவள் பாரதி

Tuesday 17 July, 2012

விருதுகளும் விதிகளும்





அயல்நாட்டிலிருந்து வந்து தமிழக உணவாக ஆனவை



இவள் பாரதி

சில வருடங்களுக்கு முன்பு வரை சாம்பார், ரசம், பொறியல், அவியல், கூட்டு என பாரம்பரிய உணவுவகைகள் இடம்பிடித்திருந்த தமிழக உணவுப் பட்டியலில் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த உணவுகளும் கலந்து தமிழக உணவாகவே ஆகிவிட்டன. அதில் சிலவற்றின் கதையும், சுவையும்...

பிரியாணி 

டிகிரி படித்த ஒருவர் கூடுதலாக வேறு ஒரு பிரிவில் டிப்ளமோ கோர்ஸ் செய்திருப்பதைப் போல பிரியாணி சமைக்கத் தெரிவது சமையல் கலையில் கூடுதல் தகுதி என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. பிரியாணி இஸ்லாமியர்களின் உணவு என்று அறியப்பட்டாலும் பிற மதத்தினரது திருமண விசேஷங்களிலும் முக்கிய இடம்பெற்றிருக்கிறது.

வறுத்த எனும் பொருள் தருகிற berya எனும் பாரசீகச் சொல்லில் இருந்து வந்தது பிரியாணி எனும் சொல். பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி உலகம் முழுக்க சென்ற வணிகர்களால் தெற்காசியாவில் பரவியது. சிந்தி பிரியாணி, தாய்லாந்து பிரியாணி, இலங்கை பிரியாணி, சிங்கப்பூர் பிரியாணி என அந்தந்த நாட்டில் தயாராகும் உள்ளூர் பிரியாணி வகைகளை சுவைத்து சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இன்று இந்தியாவில் பலவகை பிரியாணிகள் தயாராகின்றன. அவற்றில் தமிழகத்தில் ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, தலப்பாகட்டி பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி போன்றவை விற்பனைகளில் கொடிகட்டி பறக்கின்றன.

பிரியாணி செய்யப் பயன்படுத்தும் பாசுமதி அரிசிக்கு பிரியாணி அரிசி என்ற பெயரும் உண்டு. இறால், மீன், கோழி, ஆட்டிறைச்சி போன்ற வெவ்வேறு வகைகள் உண்டு. தாவர உணவு வகைகளைக் கொண்டு செய்யப்படும் வெஜிடபிள் பிரியாணியும் இதில் அடக்கம்.

ஜாதிக்காய், பட்டை, ஏலம், கிராம்பு, கொத்தமல்லி இல்லை, இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்ற நறுமணப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. சில நறுமணப் பொருட்களை துணியில் முடிந்து பிரியாணி வேகும் போது போட்டுவிட்டு சாறு இறங்கியதும் எடுத்துவிடுவதுண்டு. திண்டுக்கல் பிரியாணியில் பாசுமதிக்கு பதில் சீரகசம்பா அரிசி பயன்படுத்தப்படுகிறது. சில பகுதிகளில் தக்காளி, மஞ்சள் போன்றவை சேர்ப்பதுண்டு. தயிர் வெங்காய பச்சடி, கத்தரிக்காய் தொக்கு, அவித்த முட்டை, குருமா, போன்றவை பிரியாணிக்கு துணையாக பரிமாறப்படும். அரிசியையும், இறைச்சியையும் தனித்தனியாக சமைப்பது, சேர்த்து சமைப்பது என பல்வேறு வகைகளில் தயார் செய்யப்படும் பிரியாணி நாளடைவில் தமிழக உணவாக ஆகிவிட்டது.

பரோட்டா 

பரோட்டா என்பது மைதா மாவில் செய்யப்படும் உணவாகும். இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால் மைதாவினால் செய்யும் பொருட்கள் தமிழகத்திலும் பரவத் தொடங்கின. தமிழ்நாட்டில் உயர்தர உணவுவிடுதிகள் முதல் சாதாரண சாலையோரக் கடைகள் வரை பிரபலமானது பரோட்டா.

தமிழ்நாட்டில் புரோட்டா என்றும், இலங்கையில் பராட்டா என்றும், இந்தோனேஷியாவில் ப்ராத்தா, மொரீஷியசில் பராட்டே என்றும், மியான்மரில் பலேட்டே என்றும் அழைக்கப்படுகிறது. மைதா, முட்டை, எண்ணெய், நெய்  சேர்த்து செய்யப்படும் பரோட்டாவில் சாதாரண பரோட்டா, முட்டைப் பரோட்டா, கொத்துப் பரோட்டா, சில்லிப் பரோட்டா, விருதுநகர் வீச்சுப் பரோட்டா என பல வகைகள் உண்டு. இதற்கு தொட்டுக்கொள்ள சால்னா வழங்குவார்கள்.

பஞ்சாபில் உருவான பரோட்டா இந்தியாவின் பல மாநிலங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர்,மொரீஷியஸ் என மற்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்த போது அந்தந்த இடங்களில் உள்ள தனித்தன்மையான சுவையூட்டிகளுடன் கலக்கப்பட்டு புதிய பரிமாணத்தை அடைந்தது.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஷாநவாஸ் என்பவர் தனது நூலொன்றில், ’’ரவையையும் மைதாவையும் கலந்து 'கஸ்தா பரோட்டா', கடலைமாவும் மைதாவும் கலந்து 'மிஸ்ஸி பரோட்டா'  கம்பு மாவு மைதா கலந்து 'பஜ்ரே கே பரோட்டா', சோளமாவு-மைதா கலந்து 'மக்கி பரோட்டா' , கேழ்வரகு -மைதா கலந்து 'ராகி பரோட்டா', கருமிளகு பவுடரைக் கொஞ்சம் மேலே தூவிவிட்டால் 'காலி மிர்ச் பரோட்டா' , ஓமத்தைப் பொடியாக்கி மேலே தூவிவிட்டால்'அஜ்வின் பரோட்டா', கரம் மசாலாவை மட்டும் கலந்து 'மசாலா பரோட்டா', சீரகத்தைக் கலந்தால் அது 'ஜீரா பரோட்டா', முந்திரி பாதாம் அல்லது ஏதாவது கொட்டை வகைகள் கலந்து சுட்டால் அது 'பேஷாவரி பரோட்டா', பொட்டுக்கடலை- வெங்காயம் சேர்த்து சுட்டால் 'சத்து பரோட்டா' (இது பீஹாரில் மிகவும் பிரபலம்), பச்சைமிளகாய் மட்டும் போட்டு சிலர் பரோட்டா ஆர்டர் பண்ணுவார்கள், அது 'மிர்ச்சி பரோட்டா'’’ என பலவகையான பரோட்டாக்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

பஞ்சாபில் பரோட்டாவை ஆரம்பத்தில் லஸ்ஸியுடன் சேர்த்தும் சாப்பிட்டிருக்கிறார்கள். பப்பாளி பரோட்டா, பனானா பரோட்டா என விதவிதமாக முயற்சிக்கிறார்கள் சிங்கப்பூர் மக்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொத்துப்பரோட்டாவும், முட்டைப் பரோட்டாவும் தான் மிக பிரபலம்.

ஃபரைடு ரைஸ் 

கி.மு.4000க்கு முந்தைய பழமை வாய்ந்தது என்று வரலாற்றுப் பதிவு கொண்ட ஃபரைடு ரைஸ் சீனாவின் பாரம்பரிய உணவு. சீன வெளிநாட்டினரால் தென்கிழக்காசியாவில் பரவிய ஃப்ரைடு ரைஸ் அந்தந்த இடங்களுக்கேற்ப, சேர்க்கும் பொருட்களுக்கேற்ப பல்வேறு வகைகளில் தயார் செய்யப்படுகிறது.

எக் ஃப்ரைடு ரைஸ், சிக்கன் ஃப்ரைடு ரைஸ், இறால் ஃப்ரைடு ரைஸ், வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸ் என கடைகளில் தயாரிக்கப்படும் ஃபரைடு ரைஸ் துரித உணவு வகையைச் சேர்ந்தது. இது அரிசி, எண்ணெய், சோயா சாஸ், வர மிளகாய், காய்கறிகள், இறைச்சி, முட்டை போன்றவை கலந்து செய்யப்படுவது. சீனாவில் இருந்து வந்தாலும் இந்தோனேஷியாவில்தான் மிக அதிகமான வகைகளில் தயாரிக்கப்படுகின்றது. இங்குதான் வெள்ளை ஃப்ரைடு ரைஸ், ஜாவா ஃப்ரைடு ரைஸ், உப்புமீன் ஃப்ரைடு ரைஸ், பட்டாயா ஃப்ரைடு ரைஸ் என பலவிதங்களில் சுவைக்கப்படுகிறது.

பெரும்பாலும் தமிழக நகரங்களில் பெரிய உணவகங்களில் கிடைத்துக் கொண்டிருந்த ஃப்ரைடு ரைஸ் இப்போது சின்னக் கிராமங்களில் இருக்கும் சின்னக் கடைகளிலும் சாதாரணமாகக் கிடைக்கிறது.

ஓட்ஸ் 

இது ஒருவகை கி.மு. முதலாம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட ஓட்ஸ் கோதுமை, பார்லி போல் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படவில்லை. எகிப்தில் பயிரிடப்படாமல் களை போல வளர்ந்த ஓட்ஸ், சுவிட்சர்லாந்தில் குகைகளிலும் காணப்பட்டது. பல நூற்றாண்டுகளாக தானே முளைக்கும் களைச் செடியாகவே இருந்திருக்கிறது. முதன்முதலில் 1602ல் வட அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டு மாசாசூசட்ஸ் கடற்கரையில் உள்ள எலிசபெத் தீவுகளில் பயிரிடப்பட்டன. அதன் பின் ஜார்ஜ் வாஷிங்டன்னில் 580ம் ஏக்கரில் 1786ல் பயிரிடப்பட்டது. இப்படியாக 1860-70களில் படிப்படியாக மேற்கு நோக்கி விதைக்கப்பட்டுக் கொண்டேயிருந்த ஓட்ஸ் மிஸிஸிப்பி பள்ளத்தாக்கு வரை பயிரிடப்பட்ட ஓட்ஸ் இன்று உலகின் முக்கியத்துவம் வாய்ந்த உணவுப்பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

சாமுவேல் ஜான்சன் தனது அகராதியில், ’ஸ்காட்லாந்து மக்களால் சாப்பிடப்பட்டாலும், இங்கிலாந்து குதிரைகளுக்கே மிகப் பொருத்தமான உணவாக இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். இதற்கு ஸ்காட்லாந்துக்காரர் ஒருவர், ‘அதனால்தான் இங்கிலாந்தில் நல்ல குதிரைகளும், ஸ்காட்லாந்தில் நல்ல ஆண்களும் இருக்கிறார்கள்’ என்று பதில் கூறிய சுவாரசியமான சம்பவங்களும் ஓட்ஸ் வரலாற்றில் இருக்கின்றன.

ஓட்ஸ் முதலில் குதிரைகளுக்கும், கோழிகளுக்கும் உணவாக இருந்து மிகச் சமீப காலத்தில் தான் மனித உணவாக மாறியிருக்கிறது. ஓட்ஸ் காலை உணவாக மட்டுமில்லாமல் மற்ற உணவுப் பொருட்களிலும் மூலப் பொருளாகவும், பதப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

ஓட்ஸ் ஒரு டயட் உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. ஓட்ஸ் பெரும்பாலும் தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து காலை உணவாக எடுத்துக் கொள்ளபடுகிறது. ஓட்ஸ் இட்லி, ஓட்ஸ் பாயாசம், ஓட்ஸ் உப்புமா, ஓட்ஸ் வெஜிடபிள் ரைஸ் என அதிலும் வெரைட்டி கண்டுபிடித்து அட்டகாசம் செய்வது தமிழர்கள்தான்.

ஐஸ்க்ரீம் 

தமிழில் குளிர்களி அல்லது பனிக்கூழ் என்றழைக்கப்படும் ஐஸ்க்ரீம் கி.மு. 300ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது எனினும் இன்று நாம் சாப்பிடும் ஐஸ்க்ரீம் அளவுக்கு பல வகைகளும், சுவைகளும் அப்போது இல்லை. மகா அலெக்சாண்டர் (கி.மு.336-323) பனிக்கட்டியில் தேன் கலந்து பருகியதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஐஸ்க்ரீமை உலகிற்கு அறிமுகப்படுத்தியது  'நீரோதான்' என்று சொல்கிறார்கள்.  கி.பி. 54ல் பிறந்த ரோம் பேரரசர் நீரோ, பனிக்கட்டியில் பழச்சாறு,தேன் கலந்து ஒருவிதமான ஐஸ்க்ரீமை சுவைத்தார் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது.  இத்தாலியரான மார்க்கோபோலோ 17ம் நூற்றாண்டில் சீனா வந்து 13 ஆண்டுகள் தங்கியிருந்திருக்கிறார். அப்போது அவர் பாலுடன் கலந்து ஐஸ்க்ரீம் தயாரிக்கும் முறையை செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் முதலில் உருப்படியான ஐஸ்க்ரீமைத் தயாரித்தவர்கள் சீனர்களே. பிற்பாடு வித விதமான ஐஸ்க்ரீம்கள் உருவாக்கியவர்கள் மொகலாய மன்னர்கள். அவர்களுக்காக ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்டதுதான் குல்பி ஐஸ்கிரீம்.
1770ல்தான் முதன்முதலில் ஐஸ்க்ரீம் விளம்பரம் செய்தித்தாளில் வெளியானது. 1777ல் நியூயார்க்கில் தான் ஐஸ்க்ரீம் கடை (அப்போது பார்லர் என்று யாராலும் அழைக்கப்படவில்லை) ஆரம்பிக்கப்பட்டது. முதன்முதலில் ஐஸ்க்ரீம் வைக்கப்படும் கோன் 1896, செப்டம்பர் 22 மார்சியோனி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு நியூயார்க் கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களால் அவர்களின் காலனியாதிக்க நாடுகளிலும் பரவி இன்று ஐஸ்க்ரீம் நிலையாக ஆட்சிகொண்டு விட்டது.

வெனிலா ஐஸ்க்ரீம், சாக்லேட் ஐஸ்க்ரீம், கோன் ஐஸ்க்ரீம், பட்டர் ஸ்காட்ச் என பல வெரைட்டிகளில் இப்போது சாப்பிடுகிறோம். ஐஸ் வண்டியை எதிர்பார்த்து இருக்கும் கிராமங்கள் இப்போது ஐஸ்க்ரீம் பார்லர்களில் சென்று சாப்பிடும் அளவுக்கு முன்னேறி இருக்கிறது. வீடுகளிலும் கூட ஹோம் மேடு ஐஸ்க்ரீம் என்று செய்யப்படுகிறது.

நூடுல்ஸ்

2002ஆம் ஆண்டு சீனாவின் மஞ்சலாற்றில் தொல்பொருள் ஆரய்ச்சியாளர்களால் 4000 வருடங்களுக்கு முந்திய உலகின் மிக பழமையான நூடுல்ஸ் உள்ள மட்பாண்டகிண்ணம் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் (25-220) நூடுல்ஸ் இருந்ததாக வரலாற்று நூல் ஒன்று கூறுகிறது.

சைனீஸ் நூடுல்ஸ் புத்த துறவி ஒருவரால் ஜப்பானில் ஒன்பதாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1900களில் ஜப்பானில் சைனீஸ் நூடுல்ஸ் மிக பிரபலமானது. இன்ஸ்டண்ட் எனப்படும் உடனடி நூடுல்ஸ் 1958ல் கண்டுபிடிக்கப்பட்டு ஜப்பானில் விற்பனைக்கு வந்தது. ஆசிய நாடுகளில் பின்னர் வெவ்வேறு இடங்களுக்கு பயணிகளால் அறிமுகமான நூடுல்ஸ் இன்று பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது.

அரிசி உள்ளிட்ட தானிய வகைகளிலிருந்து தயாரிக்கப்பட்டாலும் பெரும்பாலும் கோதுமை மாவிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. பிசைந்து தட்டையாக உருட்டி பல வித வடிவங்களில் வெட்டப்பட்ட மாவிலிருந்து சன்னமான இழைகளாகவோ, குழாய்களாகவோ, நாடா வடிவில் அல்லது பிற வடிவங்களில் உலர்ந்த நிலையில் பாதி சமைத்த உணவாக தயாரிக்கப்படுகிறது. நூடுல்ஸ் வெந்நீரில் அல்லது சமையல் எண்ணெய், காய்கறிகள், இறைச்சி, முட்டை சேர்த்து வேக வைத்தல் அல்லது பொரித்தல் முறையில் சமைக்கப்பட்டு சூப் சாஸ் ஆகியவற்றுடன் பரிமாறப்படுகிறது.
இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் வருவதற்கு முன் இடியாப்பம்தான் தமிழர்களின் நூடுல்ஸாக இருந்தது.

பஃப்ஸ்

ப்ரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த க்ளாடியஸ் என்பவர் 1645ல் தனது உடல்நலமில்லாத தந்தைக்கு ரொட்டித் துண்டு செய்கிறார். மாவு, தண்ணீர், வெண்ணெய் மூன்றையும் கலந்து திரும்பத் திரும்ப பத்துமுறை மடித்து அடுப்பிலிட்டு எடுக்கிறார். அது ஒரு வித்தியாச வடிவத்துடனும், சுவையுடனும் இருப்பதைக் கண்டார். பின்னர் தொழிற்பயிற்சி முடித்து பாரிஸ் சென்ற அவர் அங்கு தனது சகோதரர் கடையில் பஃப்ஸை செய்கிறார். யாருக்கும் தெரியாமல் ஒரு பூட்டிய அறைக்குள் அந்த செய்முறையை மறைக்காமல் எல்லோருக்கும் செய்து காண்பிக்கிறார். அவரது சகோதரர்கள் இதற்கான பேக்டரி ஒன்றை உருவாக்குகிறார்கள். பஃப்ஸைக் கண்டுபிடித்த அந்த கலைஞன் 1682ல் இறந்து போனார். ஆனால் இன்று கண்டுபிடித்தவர் யாரென்று தெரியாமலே உலகம் முழுவதும் பஃப்ஸ் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இனிப்பு பஃப்ஸைக் கண்டுபிடித்தது நைஜீரியாதான். பஃப்ஸ் மாவு, ஈஸ்ட், சர்க்கரை, வெண்ணெய், முட்டை, உப்பு, தண்ணீர் சேர்த்த மாவை பொன்னிறம் வரும் வரை வறுத்து செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை சரியாக செய்ய வேண்டும். இல்லையென்றால் அனைத்தும் வீணாகிவிடும்.

பிசைந்த மாவை திரும்ப திரும்ப அடுக்குதல் மூலமாக செய்யப்படும் பஃப்ஸில் வெஜிடபிள் பஃப்ஸ், எக் பஃப்ஸ், சிக்கன் பஃப்ஸ், மட்டன் பஃப்ஸ் என பலவகைகள் உள்ளன. பசி எடுத்தால் அது சாப்பாட்டு நேரமாக இல்லாதிருந்தால் ஒரு பஃப்ஸும் கூல்ட்ரிங்ஸும் குடித்துவிட்டு செல்லும் பல மக்களை நகரங்களில் எப்போதும் காணலாம்.

விவாதம்


இவள் பாரதி

விபத்து ஏற்படுத்தும் டிரைவர்கள் மீது கருணை காட்டக் கூடாது. ஓட்டுநர் உரிமம் வழங்குவது வாகனம் ஓட்டத் தானே தவிர கொலை செய்வதற்கல்ல என்று சமீபத்தில் ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. இது குறித்து இருவர் விவாதிக்கிறார்கள்..

A.P. அன்பழகன், மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சம்மேளனம் (CITU)


விபத்துக்கு ஓட்டுநர் மட்டுமே காரணம் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஓட்டுநர்களுக்கு வேலைப்பளு திணிக்கப்பட்டிருக்கிறது. 15, 20 வருடங்களுக்கு முன்பு போக்குவரத்தில் இருந்த பல விஷயங்கள் இப்போது நடைமுறையில் இல்லை. சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லக் கூடிய ஒரு பேருந்தை இயக்கும் ஓட்டுநர் 200கிமீ வந்ததும் அதாவது விழுப்புரத்தை அடைந்ததும் இறங்கிவிடுவார். அங்கு ஓய்வறையில் இருக்கும் ஓட்டுநர் ஒருவர் அந்தப் பேருந்தை திருச்சி வரை இயக்குவார். சென்னையிலிருந்து வந்த நடத்துனர் திருச்சியில் இறக்கிவிடுவார். திருச்சியிலிருந்து கன்னியாகுமரி வரை வேறு ஒரு ஓட்டுநரும், நடத்துனரும் இயக்குவார். அப்போதெல்லாம் 200கிமீ ஓட்ட எட்டு மணி நேரம் ஆகும். அதாவது எட்டுமணி நேர வேலை என்பது உறுதியான இருந்தது. விபத்துக்களும் குறைவாகவே இருந்தது. மோட்டார் வாகனச் சட்டப்படி எட்டுமணி நேர வேலைக்குப் பின் ஆறு மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். இப்போது அப்படி இல்லை. தர்மபுரியிலிருந்து திருவண்ணாமலை வந்து, அங்கிருந்து மைசூர் சென்று, பின்னர் மைசூரிலிருந்து திருவண்ணாமலை, தர்மபுரி என ஒரு ஓட்டுநரே 1140 கி.மீ செல்லவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. 5ரூ இன்கிரிமெண்ட் கூடுதலா தருகிறோம். இவ்வளவு படி தருகிறோம் என்று கூறி ஓட்டுநர்களை அதிகமாக வேலை வாங்குவதும் விபத்துகளுக்கு காரணம். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது அரசுதான். சென்னை முதல் கன்னியாகுமரி வரை நாற்கரச் சாலையாக மாற்றிவிட்டோம் என்கிறார்கள். ஆனால் ஊழியர்களுக்கான ஓய்வைக் குறைத்து வேலையை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் கடந்த நான்காண்டுகளில் விபத்துகளிண் எண்ணிக்கை முன்னிருந்ததைவிட குறைந்திருக்கிறது.
28/02/2009 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக ஏ.ஆர்.லட்சுமணன் இருந்தபோது இந்தியாவில் அதிகவிபத்து நடக்கிறதென்று கமிட்டி ஒன்று போட்டார். ’உலகில் அதிகளவில் விபத்து நடக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை சீனாவும், இரண்டாமிடத்தை இந்தியாவும் பிடித்திருக்கிறது. ஆனால் சீனா அதனை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்தியிருக்கிறது. அதே போல இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்’ என கூறியிருந்தார்.

விபத்துக்கு டிரவர் காரணமில்லை என்று சொல்ல வரவில்லை. டிரைவரும் ஒரு காரணம். ஆனால் டிரைவர் மட்டுமே காரணமில்லை. எப்போதுமே அரசு இலாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட முடியாது. எம்.ஜி.ஆர் முதலைமைச்சராக இருந்த போது 1000 மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நகரப் பேருந்து விட்டார். ஆனால் அரசுக்கு அதனால் எந்த வருவாயும் இல்லை. ஆனால் அது ஒரு சேவையாக கருதப்பட்டது. இப்போதைய வழக்கில் போக்குவரத்துத் துறைக்கு 11 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது என்று கூறப்பட்டது.

பொதுவாக அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படாததால் மூன்றாம் நபருக்கான இழப்பீட்டுத் தொகையை அரசு போக்குவரத்து கழகமே கொடுக்க வேண்டியுள்ளது. காப்பீடு செய்வதிலிருந்து அரசு விலக்கு வாங்கி வைத்திருக்கிறது. அரசுப் பேருந்து ஒன்றுக்கு காப்பீடு செய்ய 18363 ரூபாய் செலவாகும். மொத்தமாக 12,13 கோடி செலவாகும் எனவே அரசு இதை செய்ய முன்வரவில்லை. அரசுப் பேருந்துகளில் விபத்துக்கள் ஏதேனும் நேரும் போது மக்கள் மன்றம் என்கிற சிறிய கமிட்டியில் கூடி பைசல் செய்துவிடுவார்கள். தனியார் பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் போது ஜப்தி செய்ய மாட்டார்கள். ஏனெனில் அது இன்ஸ்யூரன்ஸ் செய்யப்பட்டிருக்கும்.

மற்றொன்று சரியான சாலைவசதி இல்லை. தமிழகத்தில் ஒரு கோடியே 36 இலட்சம் வாகனங்கள் ஓடுகிறது. ஒரு நாளைக்கு 3000க்கு மேல் வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதற்கெல்லாம் சரியான சாலைவசதி இல்லை. 8000 தனியார் பேருந்துகள், 4002 மினிபேருந்துகள், 21,169 அரசுப் பேருந்துகள், ஒரு கோடியே 2 இலட்சம் இருசக்கரவாகனங்கள், 4000 ஆட்டோக்கள் மாநிலம் முழுவதும் இயக்கப்படுகிறது. வாகன்ங்களைக் கட்டுப்படுத்தி இயக்க வேண்டும். இதற்கு அரசுத்துறையைப் பலப்படுத்துவது முக்கியம். வாகனங்கள் பெருகிய அளவுக்கு சாலைவசதிகள் பெருகவில்லை.

சென்னையில் ஒரு நாளைக்கு 55 இலட்சம் பயணிகள் ஏறி இறங்குகிறார்கள். இங்கு 5000 பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி இருந்தும் 3140 பேருந்துகள் தான் இயக்கப்படுகிறது. பேருந்துகளை அதிகப்படுத்தி மற்ற வாகனங்களை மட்டுப்படுத்த வேண்டும்.

ரயில், விமானம், கப்பல் என எல்லாமும் விபத்துக்குள்ளாகிறது. எந்த ஓட்டுநரும் விபத்துக்குள்ளாக்க வேண்டும் என்று வாகனத்தை எடுப்பதில்லை. எங்கேயும் விபத்து நடக்கக்கூடாது என்பதுதான் எல்லாருக்குமான விருப்பம். ஆனால் எதிர்பாராமல் நடந்துவிடுகிறது. அதற்கு பல காரணங்கள் உண்டு. ஓட்டுநர் மட்டுமே காரணம் என்று சொல்வது சரியானதல்ல.

இ.பினேகாஸ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர், மதுரை. 


டிரைவர்களுக்கு கருணை காட்டக் கூடாது என்பது சரிதான். லைசன்ஸ் கொடுக்கும் போதே பச்சை, மஞ்சள், சிவப்பு என்று ஐந்து நிறங்கள் வட்டமாக இருக்கும். ஒவ்வொரு விபத்து நிகழ்த்தும் போதும் ஒவ்வொரு வண்ணமும் வரிசையாக பஞ்ச் செய்யப்படும். கடைசியாக சிவப்பு வண்ணம் குறியிடப்படும் போது அவரது உரிமம் ரத்து செய்யப்படும். சிவப்பு குறியிடப்பட்ட பின் விபத்து ஏற்படுத்தினால் இவருக்கு தொடர்ச்சியாக விபத்து ஏற்படுத்துவதே வழக்கம் என்ற முத்திரை விழுந்துவிடும். ஐந்து முறை வாய்ப்பு கொடுத்த பின்னர் தான் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

பள்ளி வேன்களுக்கான ஓட்டுநர்களை தேர்வு செய்யும் போது மூன்று விதமாக தேர்வு செய்வார்கள். ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரி, முன்னாள் அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநர், அதிக அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இது விபத்து நிகழக் கூடாது என்ற எச்சரிக்கையாக செயல்படுவதற்கான உதாரணம். தொடர்ச்சியாக குற்றவியலில் (இங்கு விபத்து என்று பொருள்) ஈடுபடும் போதோ, குடித்து விட்டு வாகனம் ஓட்டினாலோ, போதைப் பொருளுக்கு தொடர்ச்சியாக அடிக்ட் ஆனாலோ, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினாலோ, பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் வாகனம் ஓட்டினாலோ மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 19ன் படி லைசன்ஸ் அத்தாரிட்டியே லைசன்ஸை திரும்பப் பெறவோ, தகுதியில்லாமல் செய்யவோ முடியும்.

எத்தனை பேர் டூவீலர் லைசன்ஸ் வைத்துக் கொண்டு ஃபோர் வீலர் ஓட்டுகின்றனர். பல கிராமங்களில் ஆட்டோ ஓட்டுநர்களே அந்த ஊர் தனியார் பேருந்தை இயக்கவும் செய்கின்றனர். அரசுப் பேருந்தில் நடக்கும் விபத்துக்களில் மட்டும்தான் ஓட்டுநர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். தனியார் பேருந்தில் விபத்து ஏற்படுத்திய ஒருவர் வேறு ஒரு இடத்திற்கு சென்று வண்டியோட்டிக் கொண்டிருந்தால் அது யாருக்கும் தெரிவதில்லை. அவர்களை கணகாணிக்க முறையான அமைப்புகள் இல்லை.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியது போல சட்டங்கள் இவ்வளவு கடுமையாக இருந்தும் கடந்த ஆண்டில் 3211 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டும், 275 பேரின் லைசன்ஸ் கேன்சல் செய்யப்பட்டும் உள்ளது. இதற்கு காரணம் தண்டனை குறைவாக இருப்பதே. கொலைக்குற்றத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 302ன் படி ஆயுள்தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்கப்படும். கவனக்குறைவால் ஏற்படுத்திய மரணத்திற்கு பிரிவு 304(ஏ) ன்படி இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்படும். ஆனால் இரண்டு வருட சிறை தண்டனை பெற்றவரை போலீஸ் ஸ்டேஷனே பெயிலில் விடக்கூடிய வசதி இருக்கிறது. அதனால்தான் திட்டமிட்டு ஒருவரை வாகனமேற்றி கொலை செய்தாலும் அது கவனக்குறைவால் நடந்தது என்று இரண்டு வருட தண்டனை மட்டுமே விதிக்கப்படுகிறது. ஆனால் எப்போதும் ஒரே கோணத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை.

மோட்டார் வாகனச் சட்டப்படி விபத்து ஏற்படுத்தியவரின் அப்போதைய நிலை, சம்பவத்தின் பின்னணி போன்றவற்றின் அடிப்படையை பார்க்க வேண்டும் என்று உள்ளது. அதன்படி இந்த வழக்கில் கருத்து கேட்கப்பட்ட போது கடவுள் செயலால் விபத்து ஏற்பட்டது என்று ஓட்டுநர் கூறியிருப்பது ஏற்கக் கூடியதல்ல. இன்றைய நிலையில் வாகன விபத்துகள் தொடர்பாக தமிழகத்தில் ஒரு லட்சத்து 31 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 40,000 வழக்குகள் உயிர்பலி ஏற்படுத்தியதால் போடப்பட்டவை. சட்டங்கள் இன்னும் கடுமையாகும் போதுதான் குற்றங்கள் குறையும்.

- இவள் பாரதி

அதிர்ச்சியளிக்கும் பெண் சிசுக் கொலை


இவள் பாரதி


நேஹா அப்ரின்

கடந்த இரண்டு மாதத்திற்கு முன் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர். நாட்டையே அதிரவைத்த பெயரும் கூட.

பெண்ணாகப் பிறந்த காரணத்தால் தனது தந்தையால் சிகரெட்டால் சுட்டும், கடித்தும் கொடுமைப்படுத்தப்பட்ட குழந்தை. பெங்களூரு மருத்துவமனையில் ஒருவார காலப் போராட்டத்திற்குப் பின் மரணத்தைத் தழுவிய மூன்று மாத குழந்தை.

கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியைச் சேர்ந்தவர் உமர் ஃபரூக். இவர் ரேஷ்மா பானு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.  உமர் ஒரு பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வந்தார். அடிக்கடி வரதட்சணைக் கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தியவர், ’பெண் குழந்தை பிறந்தால் உன் தாய் வீட்டில் இருந்து ஒரு லட்ச ரூபாய் வாங்கி வரவேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு ரேஷ்மாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நேஹா அப்ரின் என பெயரிட்டனர். குழந்தை பிறந்ததிலிருந்தே வெறுப்பைக் காட்டி வந்த உமர் ஆண் குழந்தையை ஏன் பெறவில்லை என்று மனைவியையும் துன்புறுத்தியிருக்கிறார்.

குழந்தையின் உடம்பில் சிகரெட்டால் சூடு வைப்பது, தொட்டிலில் இருக்கும் குழந்தையை ஆட்டிவிடும் சாக்கில் சுவற்றில் மோதவிடுவது, அடிப்பது, கடிப்பது என சித்ரவதை செய்திருக்கிறார் உமர். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி குடித்துவிட்டு வந்து குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவாகியிருக்கிறார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அந்த குழந்தை உடல்நிலை மோசமடைந்து வலிப்பு நோயும் வந்து இறந்துவிட்டது. இதற்கிடையே குழந்தையின் தந்தை உமர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இது பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம். பெண் குழந்தையின் மீது தீராத வெறுப்புடன் உமர் நடந்து கொண்டதைப் போல் இல்லாவிடினும் வேறு வகைகளில் பல்வேறு இடங்களில் பெண் சிசுக்கொலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் இதுபோன்று நடக்காது என்று நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி பெண் குழந்தைகளின் பிறப்பு குறித்த தகவல்கள் கேட்கப்பட்டன. ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். அதில் 2001 ஆம் ஆண்டு 390 ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 895க்கு குறைவாகவும், 2008 ஆம் ஆண்டு 447 ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 900க்கு குறைவாகவும் இருக்கிறது. இதன் மூலம் கருவிலேயே பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டு அழிக்கப்படுவது தெரியவந்திருக்கிறது.

தமிழ்நாடு பெண்சிசுக் கொலைக்கு எதிரான பிரசார மையக்குழு உறுப்பினர் எம்.ஜீவா, ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி ஆகியோர் கூறுகையில், ‘அதி நவீன மருத்துவ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆண் குழந்தையை மட்டுமே கருப்பையில் பொருத்துகின்றனர். இதனால் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது‘ என்றனர்.

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனக் கண்டறிவது குற்றம் என்றாலும் அந்த நடைமுறை இன்று வேறுவிதமாக உள்ளது. கருவின் குறைபாடு பற்றி அறிவதற்காக செய்யப்படும் ஸ்கேனிங் போது, குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியப்படுகின்றன. மண்டே, பிரைடே, மிரிண்டா, பாண்டா, தம்ஸ் அப், தம்ஸ் டவுன் போன்ற சங்கேத வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், சில மையங்களில் தாளில் எழுதிக் கொடுப்பதையும் பெண் சிசுக் கொலைக்கு எதிரான  அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் ஆண் பெண் விகிதாசாரம் பெருமளவு குறையும் அபாயம் ஏற்படும். இதைத் தடுக்க தமிழகத்தில் உள்ள 4560 ஸ்கேனிங் மையங்கள் முறையாகக் கண்காணிக்கப்பட வேண்டும். தொட்டில் குழந்தை திட்டத்தை சரியாக அமுல்படுத்த வேண்டும். சுகாதார நிலையங்களில் ’ஃபார்ம் எஃப்’ படிவம் முழுமையாக நிரப்பப்பட வேண்டும். ‘பிறக்கப் போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறியும் தொழில் நுட்பங்கள் சட்டம் - 2002’, ‘மருத்துவ ரீதியான கருக்கலைப்புச் சட்டம் - 1971’ ஆகிய சட்டங்களை தீவிரமாக அரசு அமல்படுத்த வேண்டும்.

’’சமீபத்தில் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. இதில் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்திருந்தது. நம்முடைய சமூக மதிப்பைக் குறைகாணும் வகையில் இருந்தது. ஆனால், நம்முடைய சமுதாயத்தில் பெண் குழந்தைகளை எந்தக் கண்ணோட்டத்தில், மதிப்பீட்டில் பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம். நம் நாட்டின் பல இடங்களில் கருவில் பெண் சிசுக் கொலை மற்றும் பெண் குழந்தை படுகொலை நடந்து கொண்டிருப்பது நமக்கு தேசிய அவமானம். ’’ என்று கூறியிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் கமால் ஜீத் கூறுகையில், இன்றைய கால கட் டத்தில் பெண் குழந்தை பிறப்பு என்பது எதிர்காலத் திற்கான மோசமான முதலீடு என கருதுகின்றனர் என்கிறார்.

· கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் 20,000 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
· கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் அழிக்கப்பட்ட பெண் சிசுக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது லட்சம்.
· நமது நாட்டில் ஆண்டுதோறும் ஒரு கோடியே பத்து லட்சம் கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. இதில் எண்பது லட்சம் பெண்சிசுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் முத்துலெட்சுமியாகவோ, கிரண் பேடியாகவோ, அன்னி பெசண்டாகவோ, கல்பனா சாவ்லாகவோ, அஞ்சு பாபி ஜார்ஜாகவோ தலையெடுக்கும் முன் களையெடுக்கத் துவங்கும் பெண் சிசுக் கொலை புரிபவர்களை அதற்கு துணை நிற்பவர்களை சிறிதளவும் மன்னிக்காமல் தண்டிக்க வேண்டும்.

பெண் குழந்தை குடும்பத்தின் சுமையல்ல.. சமூகத்தின் மேன்மை என்பதை எப்போது உணர்வார்கள் இந்த கொலையாளிகள். மகாகவியின் கண்ணம்மாக்கள் ஆயிரமாயிரமாய் வளர வேண்டும்.


இவள் பாரதி

Monday 16 July, 2012

அங்கே தடை! இங்கே எப்போ?



இவள் பாரதி

அரசு ஊழியர்கள் அலுவலக நேரத்தில் தமது சொந்த தேவைகளுக்காக செல்போன் பயன்படுத்துவதற்கு தடைவிதித்துள்ளது கேரள அரசு.

அலுவலக நேரத்தில் மணிக்கணக்கில் செல்போனில் தங்கள் சொந்த விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பதால் அதிகாரிகளை அவசரத்திற்கு தொடர்பு கொள்ளமுடியவில்லை. அதிகாரிகள் இப்படி வெட்டி அரட்டை அடிப்பதால் முடிக்க வேண்டிய அலுவலக வேலையும் தாமதமாகிறது என பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்ததால் அலுவலகங்களில் செல்போனுக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறது கேரள அரசு. உத்தரவுடன் நிறுத்திக் கொள்ளாமல் இதனைக் கண்காணிக்க அந்தந்த துறைத் தலைவர்களையும் அறிவுறுத்தியுள்ளது. இப்படிக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்த போதும் அவசர காலங்களில் மட்டும் செல்போனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அரசு கூறியுள்ளது.

இந்த உத்தரவானது சரியான நோக்கத்திற்காக பிறப்பிக்கப்பட்டாலும் இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம் என்றும், செல்போனைப் பயன்படுத்த முடியாதபோது அவசரகாலம் என்று எப்படி தெரிந்துகொள்வது என்றும் கேரள அரசு ஊழியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

முத்தாய்ப்பாக, இந்த உத்தரவின் மூலம், அலுவலக நேரங்களில் செல்போனில் வெட்டி அரட்டை அடிப்பது குறைந்து, மக்கள் நலப் பணிகள் துரிதமாக நடக்கும் என்பது நிச்சயம். இதே நடைமுறையை  தமிழக அரசும் பின்பற்றலாமே.

நன்றி: புதிய தலைமுறை,  ஜூன், 28, 2012, (பக்கம் 26)
இவள் பாரதி

சென்றார்கள்... வென்றார்கள்

இவள் பாரதி

எத்தனையோ தடைகளைத் தாண்டி வாழ்க்கைப் பயணத்தை தொடரும் மாற்றுத்திறனாளிகள், அவரவர்க்குரிய சில அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கும் தொடர்ந்து போராட வேண்டியிருப்பதுதான் பெரும் சோகம். அந்த வரிசையில் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக விடாப்பிடியாக போராடியதன் விளைவு.. இன்று அவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைத்திருக்கிறது.

பொன்னையா

 பொன்னையா என்பவர் போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத் திறனாளி. அவர் மாருதி 800 காரைக் கையால் ஓட்டிப் பழகுவதற்காக கேரளாவைச் சேர்ந்த முஸ்தபா என்பவரிடம் காரில் சில மாற்றம் செய்து வாங்கி ஓட்டிப் பழகுகிறார். நன்கு பழகிய பிறகு ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பிக்கிறார். ஆனால் உரிமம் தர மறுக்கிறார்கள். நிறைய இடங்களில் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. பின்னர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்ய, உடனடியாக ஓட்டுநர் பழகுநர் உரிமம் கொடுக்க வேண்டும். பின்னர் அவருக்கு டெஸ்ட் முடித்து லைசன்ஸ் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


பிரபுராஜதுரை
இந்த செய்தி பத்திரிக்கையில் வெளிவந்த மறுநாள் அரசாணை ஒன்று வெளியானது. அதில் டி.வி.எஸ் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து வெளிவரும் மாற்றுத் திறன் கொண்டோருக்காக வடிவமைக்கப்பட்ட மூன்றுசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர்க்கு உடனடியாக லைசன்ஸ் கொடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது’ என்கிறார்கள் இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் பிரபுராஜதுரையும், இராபர்ட் சந்திரகுமாரும்.

சரி, கையால் ஓட்டும் கார் உருவானது எப்படி?

லஜபதிராய்
’கேரளாவில் முஸ்தபா என்பவர் ஒரு விபத்தில் கால்களின் செயல்திறனை இழந்துவிடுகிறார். அவர் பிற்பாடு ஒரு கார் வாங்கி தனக்கு தகுந்த மாதிரி கைப்பகுதியில் சில மாற்றங்களை செய்து ஓட்டி வந்தார். இவருடைய நண்பர் ஒருவர் இந்தக் காரை விரும்ப அவருக்கு காரைக் கொடுத்துவிட்டு தனக்காக மறுபடியும் வேறொன்று செய்து கொண்டார். இப்படியே மாற்றுத்திறனாளிகள் கேட்டால் காரில் சில பாகங்களைப் பொருத்திக் கொடுத்து வருகிறார். நானும் அவரிடம் சென்று எனது காரை சில மாற்றங்கள் செய்து ஓட்டிக் கொண்டிருக்கிறேன். நான் வாங்கிய காரில் எந்தவித பாகங்களையும் மாற்றவில்லை. கால்பகுதியில் இருக்கும் ஆக்ஸிக்லேட்டருக்கும், ப்ரேக்குக்கும் ஒரு ஒயர் பொருத்தி கையினால் நான் ஓட்டும் அளவுக்கு மாற்றி வாங்கி வந்தேன். இதுவரை கடந்த ஏழு வருடங்களாக 50,000கி.மீட்டருக்கு மேல் வண்டி ஓட்டியிருக்கிறேன். எனது தேவைக்கு அடுத்தவரை எதிர்பார்த்து நிற்பது இயலாது என்பதை விட பிறருக்கு அவசர உதவி தேவைப்படும் போது உதவ முடிகிறது என்பது திருப்தியளிக்கிறது. ஆனால் இன்னும் எல்.எல்.ஆர். தான் வைத்திருக்கிறேன். நிரந்தர லைசன்ஸ் தரவில்லை.’ என்று ஆதங்கப்படுகிறார் பொன்னையா. ‘இன்று என்னுடைய முயற்சியின் விளைவாக டிவிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனத்திற்காகவாவது லைசன்ஸ் கொடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டதே ஆறுதலாக இருக்கிறது‘ என்கிற பொன்னையா ஒரு வழக்கறிஞரும் கூட .

இராபர்ட் சந்திரகுமார்

இன்னொரு சம்பவம்..

இதே போல மாற்றுத் திறனாளியான பால்ராஜ் என்பவர் தனது காருக்கு பதிவுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் தர மறுத்துள்ளார்கள். இவரது காரும் கேரளாவில் கொடுத்து சிறு மாற்றம் செய்து கொண்டு வரப்பட்டது. ’வண்டியை உங்கள் இஷ்டத்திற்கு மாற்றினால் பதிவுச் சான்றிதழ் தர முடியாது’ என்று ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கூற மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படுகிறது. இந்த வழக்கில் லஜபதிராய் ஆஜராகினார். நீதிமன்றம் ’ஒரு மாதத்திற்குள் பதிவுச் சான்றிதழ் கொடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. அத்துடன் மாற்றுத்திறனாளிகள் வாரியத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு விண்ணப்பித்ததும் ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ் போன்றவை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் வழிவகை செய்ய அறிவுறுத்தியிருக்கிறது.

பாக்ஸ்
·மாற்றுத்திறனாளிகள் ரயிலில் நான்கில் ஒருமடங்கு கட்டணம் செலுத்தி இந்தியா முழுவதும் பயணிக்கலாம். உடன் அழைத்துச் செல்லப்படும் ஒரு நபருக்கும் இதே சலுகை உண்டு. இதே போல பேருந்திலும் சலுகை உண்டு.

·மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு அரசின் திருமண நிதியுதவித் திட்டத்திலிருந்து 25,000ரூபாயும், 4கிராம் தங்கமும், பட்டதாரிகளுக்கு 50,000ரூபாயும், 4கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.

·10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாற்றுத் திறனாளி மாணவ,மாணவியருக்கு ரொக்கப்பரிசு மற்றும் உயர்கல்வித் தொடர உதவித்தொகை வழங்குதல். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்குத் தனி கட்டணம் (Special Fees ) செலுத்துவதிலிருந்து விலக்களித்தல்.

·மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய உதவும் வகையில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பெட்டிக்கடை வைக்க மானியம் உண்டு.

·தசைச் சிதைவு  நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பராமரிக்க அரசின் உதவித் தொகை உண்டு.


நன்றி: புதிய தலைமுறை,  ஜூன், 28,  2012, (பக்கம் 34 -35)
இவள் பாரதி

தகவல் தராத தகவல் ஆணையத்திற்கு அபராதம்


இவள் பாரதி

தகவல் தரவேண்டிய தகவல் ஆணையமே, குறித்த காலத்திற்குள் கேட்ட தகவலைத் தராமல் காலதாமதம் செய்ததற்கு அபராதம் விதித்து நெத்தியடியாக தீர்ப்பளித்திருக்கிறது சென்னை (தெற்கு) நுகர்வோர் குறைதீர் மன்றம். 

அரசு சார்ந்த எந்த தகவல்களையும் கேட்டு எழுத்து மூலம் பெறுவதற்கு ஒரு குடிமக்களுக்கு உரிமை உள்ளது. இதன் மூலம் மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா, நமது வரிப்பணம் வீணாகிறதா, நம் நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் நடக்கும் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது உட்பட அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். இந்தத் தகவல்களைப் பெற குறிப்பிட்ட 30 நாட்கள் என்ற காலக்கெடு இருக்கிறது. (உயிர் காக்கும் விஷயங்களில் 24 மணி நேரத்திற்குள் தகவல் தர வேண்டும்) இந்தக் காலகெடுவுக்குள் தகவல்கள் தரவேண்டும் என்றும், தாமதமானால் ஏன் தாமதமாகிறது என்பதற்கான சரியான காரணத்தையும் சொல்ல வேண்டும். சரியான தகவல்களைத் தர மறுப்பதும், தவறான தகவல்களைத் தருவதும், தகவல்களைத் தர காலம் தாழ்த்துவதும் நுகர்வோருக்கு செய்யும் அநீதியாகும். இந்த அநீதிக்கு எதிராகத்தான் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் மாநில தகவல் ஆணையத்தின் பொதுத் தகவல் அதிகாரிக்கு எதிராக நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.

ரமேஷ், வழக்கறிஞர்
இவர் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி, மாநில தகவல் ஆணையத்திடம் சில கேள்விகளைக் கேட்டு தபால் அனுப்பியிருக்கிறார். அதில், ‘மனுதாரர்களுக்கு, தாமதமாக தகவல் தரும் பொது தகவல் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மாநில தகவல் ஆணையத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சம்பளம் எவ்வளவு? என 19 தகவல்களைக் கேட்டுள்ளார். ஆனால் ஜூன் 23ம் தேதிதான் தகவல் தரப்பட்டிருக்கிறது. இதனால் சென்னை நுகர்வோர் மன்றத்தில் மாநில தகவல் ஆணையத்தின் மேல் புகார் அளித்தார். அதற்கு, ‘குறித்த நேரத்திற்குள் தகவல் தரப்படவில்லையெனில் ஆணையத்தில்தான் மேல் முறையீடு செய்ய வேண்டும், அவரை நுகர்வோராக கருதக் கூடாது’  என்று மாநில தகவல் தெரிவித்திருக்கிறது. 

நீதிபதி. ராமச்சந்திரன்
ஆனால், இதற்கு முன் இது போன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய நுகர்வோர் ஆணையம் ஆகியவை அளித்த தீர்ப்பினை முன்னுதாரணமாகக் கொண்டு, தகவல் கேட்பவரும் நுகர்வோரே என்ற அடிப்படையில், ’குறித்த நேரத்தில் தகவல் தராதது சேவைக் குறைபாடு’ என்று கூறி மாநில தகவல் ஆணையத்திற்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது சென்னை தெற்கு நுகர்வோர் குறைதீர் மன்றம். தாமதமான தகவலுக்காக மற்றும் சரியான தகவல் தராததற்காக தமிழகத்தில் முதன்முதலில் தகவல் அலுவலகம் மீது அபராதம் விதித்து உத்தரவிட்டவர் திருநெல்வேலியைச் சேர்ந்த நீதிபதி இராமச்சந்திரன். இந்த தீர்ப்பையும் முன்மாதிரியாகக் கொண்டே இப்போது மாநில தகவல் ஆணையத்திற்கெதிராக தீர்ப்பளித்திருக்கிறது சென்னை நுகர்வோர் மன்றம். மாநில தகவல் ஆணையத்தின் மீது அபராதம் விதித்திருப்பது இதுவே முதன்முறை. இனிமேலாவது தகவல் தர வேண்டிய அமைப்புகள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்படும் என நம்புவோம். 

பாக்ஸ்


ஐஸ்வர்யா
என் கேள்விக்கு என்ன பதில்?


பாடப்புத்தகம் படிக்கும் போது தோன்றிய ஒரு கேள்விக்கு பிரதமர் அலுவலகம் வரை பதில் கேட்டு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறாள் சிறுமி ஐஸ்வர்யா.


காந்தி எப்போது தேசத்தின் தந்தையானார்? இந்தக் கேள்விக்கு ஆசிரியர், பெற்றோர், உறவினரிடம் பதில் கிடைக்காத பத்து வயது சிறுமி, பிரதமரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பதில் கேட்டு கடிதம் எழுதுகிறார். திகைப்படைந்த பிரதமர் அலுவலகமோ அந்த கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப.. அங்கும் பதில் தெரியாததால் தேசிய தகவல் பதிவகத்திற்கு அனுப்பப்டுகிறது. அங்கும் பதில் தெரியவில்லை. (பதில்: காந்தியின் மனைவி இறந்த போது நேதாஜி வெளியிட்ட இரங்கல் செய்தியில் காந்தியை மகாத்மா என்று குறிப்பிட்டிருக்கிறார்) 

நன்றி: புதிய தலைமுறை,  ஜூன், 28, 2012, (பக்கம் 58 - 59)
இவள் பாரதி

11,500 ஆண்டுகள் பழைமையானதா பூம்புகார்?




இவள் பாரதி


புகார் கடலாராய்ச்சியில் புகார் மேல் புகார்


சமீப நாட்களாக கடல்கொண்ட பூம்புகார் பற்றிய ஆய்வு குறித்த மின்னஞ்சல் ஒன்று பலருக்கும் வந்து கொண்டிருக்கிறது. கிரகாம் ஹான்காக் என்ற ஆய்வாளர் கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்து பூம்புகார் 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று தனது ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த மின்னஞ்சல், கிரஹாம் ஹான்காக்கின் ஆய்வின் அடிப்படையை ஏற்காமல் இன்னும் பூம்புகாரை இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஏன் பாடப்புத்தகங்களில் குறிப்பிட வேண்டும்?   இதுகுறித்து அக்கறை கொள்ளாமல் தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் என்ன செய்கிறது? கடலில் மூழ்கிய தமிழக நகரங்கள் பற்றிய ஆராய்ச்சி ஏன் தீவிரமடையவில்லை என்றும் அது சூடான சிந்தனைகளை முன்வைக்கிறது. கிரஹாம் ஹான்காக்கின் ஆய்வு குறித்து புதுச்சேரி, திராவிடப் பேரவையின் பொதுச் செயலாளர் நந்திவர்மன் தனது வலைத்தளத்தில் எழுதிய கட்டுரைதான் அப்படி மின்னஞ்சலாக அனுப்பப்பட்டுக் கொண்டுள்ளது. உண்மையில் பூம்புகார் கடலாய்வில் நடந்து வருவதென்ன?


நந்திவர்மன்

நந்திவர்மனைச் சந்தித்து கடல் கொண்ட பூம்புகாரின் கடலாய்வு குறித்தும் தொன்மை குறித்தும் கேட்டோம்.


"இணையதளத்தில் கூகுள் மேப்பில் நீங்கள் பார்க்கலாம். இந்தியாவைச் சுற்றியிருக்கும் கடலோரப் பகுதி சில மைல் தூரம் வெளிர்நீல நிறத்திலும் அதைத்தாண்டிய பகுதிகள் கருநீல நிறத்திலும் இருக்கும். வெளிர்நீலப் பகுதிகள் ஆழம் குறைவானவை. அங்கே நிலம் மூழ்கியுள்ளது என்பதற்கு இன்று கூட பெரிய சான்று இருக்கிறது.
தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும்போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. இந்த ஆய்வில் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச், 8,9ல் கடலில் மூழ்கியவர்கள் இரும்பு பீரங்கி, ஈயக்குண்டைக் கண்டுபிடித்தார்கள். எஸ்.ஆர்.ராவ் தலைமையில் வானகிரி பக்கத்தில் கப்பல் கட்டுமானம் தொடர்புடைய ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

கூகுள் மேப்பில் வெளிர் நீலம்



 1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரைலாட  வடிவத்தில் கட்டுமானம்ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி விட்டனர். மீண்டும் 1993ல் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சியைத் தொடங்கியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் 2 மீ. உயரமும், 85 செ.மீ. நீளமும் உடைய ஒன்றைக் கண்டுபிடித்தனர். அது புழுதியும் சேறுமாக மூடப்பட்டிருந்தது.  பின்னர் நிதிப்பற்றாக்குறையால் அகழாய்வு தடைபட்டது.





 உலகக் கடல் அகழாய்வில் ஈடுபட்டிருக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரஹாம் ஹான்காக், தேசியக் கடலாராய்ச்சி நிறுவனத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற எஸ்.ஆர்.ராவ் அவர்களை 2001 பிப்ரவரியில் சந்தித்து சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார். அது குறித்து அவர்  தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதில் கிட்டத்தட்ட 19,000 ஆண்டுகளாக ICE AGE எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து வருகிறது. இதுவரை மூன்று முறை கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது. வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின. கடைசியாக 8,000 ஆண்டுகளுக்கு முன் பனி உருகி கடல் மட்டம் உயர்ந்தது என்கிறார் கிரஹாம். இவரது கருத்தை டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி கிளன் மில்னே, ‘கடல்மட்ட உயர்வின் அடிப்படையில் பார்க்கும்போது பூம்புகார்  9,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும்’ என்று உறுதி செய்தார்.



கிரஹாம் ஹான்காக்
 கிரஹாம், பூம்புகார் கடலில் மூழ்கி ஆய்வு செய்த அறிக்கையை பெங்களூரில் வெளியிட்டார். அவர் எடுத்த புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், துவாரகை 7,500 ஆண்டுகள் பழமையானது என்று ஏற்றுக் கொண்டவர்கள் பூம்புகார் 9,500 ஆண்டுகள் பழமையானது என்பதை ஏற்க மறுத்தனர். ஆனால், இவரது ஆய்வு, அண்டர் தி வேர்ல்டு என்ற தலைப்பில் அமெரிக்க சேனல்களில் ஒளிபரப்பானது.நம்மவர்கள் பலர் கரையில் இருந்துகொண்டே கடலைப் பற்றி ஆய்வு நோக்கில் எழுதிவிடுவார்கள். ஆனால், வெளிநாட்டவர்கள் கடலுக்குள் சென்று வந்துதான் கடலைப் பற்றியே எழுதுவார்கள்" என்கிறார் நந்திவர்மன்.


செல்வராஜ்
தேசியக் கடலாராய்ச்சி மையத்தின் தலைவர் எஸ்.ஆர்.ராவ் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது, அவருக்கு உதவியாளராக அப்போது மாவட்ட தொல்லியல் துறை ஆய்வாளராக இருந்தவர் செல்வராஜ். தமிழக அரசு கடலாய்வுக்காக ஒதுக்கிய பணத்தை செலவழிக்க வேண்டுமானால் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனத்தோடு தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்களும் இருக்க வேண்டும் என்று கூறவே, முறையான பயிற்சி கொடுத்து செல்வராஜ் இந்த ஆராய்ச்சியில் நீருக்குள் மூழ்கி கடலாய்வு செய்திருக்கிறார். "1983 முதல் 1996 வரை நான்கு கட்டங்களாக ஆய்வு செய்தோம். திருமுல்லைவாயிலிலிருந்து தரங்கம்பாடி வரை எங்களது ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். தேசியக் கடலாராய்ச்சி நிறுவன விஞ்ஞானி வோரா தலைமையில் நடந்த முதல் கட்ட ஆய்வில் கடற்கரையோரம் ஐந்து கி.மீ. தூரம் வரை நடந்து போனோம். அதில் பல உறைகிணறுகளைக் கண்டறிந்தோம்.


இரண்டாம் மூன்றாம் கட்ட ஆய்வு, கடல் மேற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது குளோபல் ப்ராஸசிங் சிஸ்டம் எனப்படும் ஜி.பி.எஸ். உட்பட ஐந்து வகையான கருவிகள் பயன்படுத்தப்பட்டன. Side scan sonar Fisher என்ற கருவியின் மூலம் கடலுக்கு அடியில் நிலப்பரப்பில் என்ன இருக்கிறது என்பதையும் (கட்டடம், மண் படிவங்கள், கப்பலின் சிதைந்த பகுதிகள் போன்றவை), Eco மூலம் அது எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதையும், –Mini Ranger  மூலம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதையும் ஆய்வு செய்யமுடியும்.

கடைசியாக எஸ்.ஆர்.ராவ் தலைமையில் கடலுக்கு அடியில் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த டைவர்ஸ் (கடலில் மூழ்குபவர்கள்) உடன் நானும் டைவிங் செய்தேன்.

இந்தக் கடலாய்வின்போது கடலுக்கு அடியில் 45 மீட்டர் நீளத்தில் 7 மீட்டர் தூரத்தில் மண்படிவங்களைக் கண்டறிந்தோம். ஒரு படிவத்தை ஆய்வு செய்தபோது, அது 2 மீட்டர் சுற்றளவுக்குப் புழுதிகளால் மூடப்பட்டிருந்தது. கரையிலிருந்து நாலரை கி.மீ. தூரத்தில் 67 அடி ஆழத்தில் மனிதர்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்றளவும் இருக்கின்றன. செம்பூரான் கற்களை வைத்து அடுக்கிக் கட்டப்பட்ட கட்டடங்கள் அப்போது கண்டறியப்பட்டன. எங்களது ஆய்வின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தமிழக கடலாராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது" என்கிறார் தொல்லியல் நிபுணர் செல்வராஜ்.

ஒரிஸா பாலு
தமிழர்களின் தொன்மை குறித்தும், கடல் மீன் வளம் குறித்தும், பூம்புகார் மற்றும் குமரிக்கண்டம் போன்ற கடலில் மூழ்கிய நகரங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருபவர் ஒரிஸா பாலு. இவர், ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு மையம் என்ற அமைப்பை நிறுவி, கடல் சார்ந்த ஒட்டுமொத்த ஆராய்ச்சியையும் இதன் கீழ் ஒருங்கிணைத்து வருகிறார்.

ஒரிஸா பாலு கூறும்போது,  "தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் கார்பன் 14 ஆய்வு அடிப்படையில் கடலுக்கு அடியில் இருக்கும் பூம்புகார் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்கின்றது. கிரஹாம் கடல்மட்ட உயர்வின் அடிப்படையில் 9,500 ஆண்டுகள் பழமையானது. கடலுக்குள் இருக்கும் கட்டடங்கள், உடைந்து போன கப்பல்களின் பகுதிகள் போன்ற இடங்களில்தான் அதிகமான மீன் வளங்கள் இருக்கின்றன. ஏனெனில் இடிபாடுகளுக்கிடையேதான் மீன் குஞ்சுகள் பெரிய மீன்களிடமிருந்து தப்பிப் பிழைக்க முடியும் என்பதுடன், அந்தப் படிவங்கள் மீது முட்டையிடவும், மீன் குஞ்சுகளைப் பாதுகாக்கவும் முடியும்.
பூம்புகாரிலும் இது போன்ற இடங்கள் இருக்கின்றன. கடல் பற்றி அதிகமாக மீனவர்களுக்குத்தான் தெரியும். அதனால், மீனவர்களின் துணையோடு எனது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். இதுபோல பூம்புகாரிலும்  கடலில் மூழ்கும் குளியாளிகளுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு ஆவணப்படுத்த உள்ளோம்" என்றவர், சமீபத்தில் பூம்புகாரில் ஒரு கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

புலவர்.தியாகராசன்

இந்தக் கலந்தாய்வில் மீனவர்கள், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களும் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட ஓய்வு பெற்ற தமிழ்த்துறைப் பேராசிரியர் தியாகராசன், ‘பூம்புகாரின் வரலாற்று எச்சங்கள்’ எனும் அரிய ஆய்வு நூலை எழுதியவர். இவர் பூம்புகாரில் ஆய்வு மேற்கொள்ள வரும் தொல்பொருள்துறை, அகழாய்வுத் துறை அறிஞர்கள் அத்துணை பேருடனும் தொடர்பில் இருந்தவர். "இந்தக் கடலை அறுபது வருஷமா பாத்துட்டு இருக்கேன். நான் பார்த்த காலத்திலிருந்து கடல் இப்போ ரொம்ப உள்ளே வந்திருக்கு. அம்பது வருஷத்துக்கு முன்னாடி கடல் காலையில் உள்வாங்கி அந்தியில் வெளியே வரும். அப்போ அங்கே இருந்த கோயிலில் மக்கள் சாமி கும்பிட்டு வருவாங்க. காலையில் உள்வாங்கும்போது, மெதுவாகவும் வெளிவரும்போது வேகமாகவும் வரும். இப்போ இருக்கிற இந்தக் கண்ணகி சிலை மூன்று முறை இடம் மாறிடுச்சு" என்று கலந்தாய்வில் பேசினார்.
பேரா.தியாகராஜன்





மற்றொரு பேராசிரியர் தியாகராஜன், "பெரும்பாலும் வரலாறு சார்ந்த ஆய்வுகளை செய்வதும், மேற்கொள்ள தூண்டுவதும் தமிழ்த்துறை பேராசிரியர்களே. ஏனெனில் இலக்கியத்தில் இருக்கும் வரலாற்றின் உண்மையை தேடுபவர்கள் எங்களைப் போன்றவர்களே" என்றார்.





ஜெகன்
அடுத்து பேசிய மீனவர் ஜெகன், "கடலுக்குள் 65 இடங்கள்ல பார் (மீன் இனப்பெருக்கம் செய்யக் கூடிய இடிபாடுகள், தீவு போன்ற பகுதிகள்) இருக்கு. கிட்டத்தட்ட எல்லா இடங்கள்லயும் ஆழம் ரொம்பக் குறைவாகத்தான் இருக்கு. இந்த பார்கள்லதான் நாங்க போய் மீன் பிடிப்போம். ஒவ்வொரு பாருக்கும். காவிரி பார், பூம்புகார் பார்னு பேர் இருக்கும். எங்ககிட்ட இருக்கிற கருவி மூலம் ஒவ்வொரு பாரும் எவ்வளவு ஆழத்துல எவ்வளவு நீளத்துல எவ்வளவு பெரிசா இருக்குனு பாக்க முடியும். கிட்டத்தட்ட கடலில் 21 கி.மீ. வரை இந்த மாதிரி நிறைய பார்கள் இருக்கு" என்றார்.
இரா. கோமகன்

தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடற்புறப் பிரிவில் பணியாற்றிய பொறியாளர் இரா.கோமகன், "1998ம் ஆண்டு 45 மீட்டர் தூரத்தில் கடல் இருந்தது. 2009ல் 60 மீட்டர் கடல் ஊடுருவியது. தற்பொழுது மேலும் 10 மீட்டர் அளவிற்கு கடல் அரிப்பால் கரை பாதிப்படைந்துள்ளது. மொத்தத்தில் வானகிரி கடற்கரை 70 மீட்டர் அரிப்புக்குள்ளாகியுள்ளது. தமிழகத் தொல்லியல் ஆய்வுகளின்படி பூம்புகார் 5 கிலோமீட்டர் கடல் கொண்ட பகுதி. ஒன்று மட்டும் உறுதியாகிறது, புகாரின் கரை விழுங்கும் கடலின் தாகம் இன்னும் தீர்ந்தபாடில்லை" என்கிறார்.

இந்த ஆய்வுக்காக முதலில் ஒதுக்கிய இரண்டரை கோடியில் 50 லட்சம் மட்டுமே ஆய்வுக்காக செலவழிக்கப்பட்டிருக்கிறது. மிச்சம் என்ன ஆனதென்று தெரியவில்லை. தகுதியான கடலாராய்ச்சி நிபுணர்கள் இல்லாததும் இதுவரை நடந்து முடிந்திருக்கும் பூம்புகார் கடல் ஆய்வுகளைச் சரியான முறையில் அங்கீகரிக்காததும் இந்தப் பின்னடைவுக்குக் காரணங்கள் என்று கூறியவர்கள், கடலுக்கடியில் இருக்கும் நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இப்போது பூம்புகார்

ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். இப்போது குப்பைகள் குவியும் மண்மேடாக மாறியிருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பூம்புகார் வார நாட்களில் குவியும் சுற்றுலா பயணிகளால் பிளாஸ்டிக்கால் நிரம்பி வழிவதும் கண்ணகி சிலையிருக்கும் கட்டடப் பகுதியில் சுற்றுலா வருபவர்கள் தங்களது பெயரினைப் பொறித்து விளையாடியிருப்பதும் ஒருபக்கம் வேதனையளிக்க, மறுபக்கம் பூம்புகாரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும் வானகிரியில் அனல்மின் நிலையம் வர இருப்பது அந்தப் பகுதி மக்களை கவலையடைய வைத்திருக்கிறது. இதிலிருந்து வெளியேறும் கழிவுகளால் கடலில் இருக்கும் மீன் வளம் குறைந்துபோகும் அபாயமும் இருக்கிறது. 




நன்றி: புதிய தலைமுறை,  ஜூலை, 5 2012, (பக்கம் 54 - 56)
இவள் பாரதி


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?