Saturday 25 August, 2012

ஓடும் ரயிலிலும் புகார் செய்யலாம்



இவள் பாரதி


பயணத்தின்போது ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது ரயில்வே ஹெல்ப்லைன் 99625 00500

ரயில் பயணங்களின்போது... உடன் பயணிப்பவர்களாலோ, ரயில் நிற்கும் இடத்திலோ, ரயில்வே பிளாட்பாரத்தில் நிற்பவர்களாலோ ஏதேனும் பிரச்சினை எனில், பிரச்சினை எங்கே நடந்ததோ அந்த இடத்தில் இறங்கி, ரயில்வே காவல்துறையிடம் புகார் செய்ய வேண்டியிருக்கும். பயணத்தையும் பாதியில் கைவிட வேண்டியிருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் புகார்  செய்யவே தயங்குவார்கள். இப்போது அந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வந்துள்ளது. ஓடும் ரயிலிலேயே புகாரளிக்கக் கூடிய வசதிதான் அது.

பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணத்தின்போது ஏற்படுகிற பிரச்சினை குறித்து புகாரளிக்க வேண்டுமெனில், ரயிலில் இருக்கும் பாதுகாப்பு போலீசாரிடம் கூறினால் புகாரைப் பெற்றுக்கொண்டு ரசீது கொடுப்பார்கள். இது குறித்து குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்து புகாரின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். புகாரின்போது உங்களின் முழு முகவரியையும் வாங்கிக்கொண்டு தேவைப்பட்டால் முதல் தகவல் அறிக்கையை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்கள்.

இதுதவிர ரயில்வே ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. 99625 00500 என்ற இந்த எண்ணில் தொடர்புகொண்டு புகார் தரலாம். ஒருவேளை, ரயிலில் இருக்கும் பாதுகாப்பு போலீசாரை உங்களால் சந்திக்க முடியவில்லை என்றால், மேற்கண்ட எண்ணுக்கு தகவல் கூறினால், அடுத்த நிறுத்தத்தில் இருக்கும் ரயில்வே போலீசாரையோ அல்லது அதே ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரையோ நீங்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.
ரயில்களில் தொல்லைப்படுத்தும் நபர்கள் முதல் கோச்சில் தண்ணீர் இல்லை என்றாலும், யாருக்காவது உடனடி மருத்துவ உதவி தேவை என்றாலும் இந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் அனைத்து ரயில்களுக்கும் இந்த எண்ணில் உதவி கிடைக்கும். அதுமட்டுமின்றி, வேறு மாநிலத்தில் பயணம்  செய்யும்போது உதாரணமாக, எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் பயணம் செல்கிறோமெனில் வேற்று மொழிக்காரர்கள் இந்த ஹெல்ப் லைனில் பேசினால் அந்த ரயிலில் பயணம்  செய்யும் பகுதியில் உள்ள ரயில்வே காவல்துறையின் எண் உதவிக்கு தரப்படும். அந்தக் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்படும். ஒருநாளைக்கு 50 அழைப்புகள் வரை ரிசீவ்  செய்யப்படுகிறது. இதில் மூன்று ஷிஃப்ட்டாக வேலை செய்யும் அனைவரும் மென்மையாகப் பேசக் கூடிய பெண்களே. எந்த ஒரு அழைப்புக்கும் தேவையான பதிலை தெளிவாகவும், சுருக்கமாகவும் சொல்கிறார்கள். இதே எண்ணுக்கு மூன்று இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால், லைன் கிடைப்பதில் பிரச்சினை வருவதற்கான வாய்ப்பும் குறைவே.

- இவள் பாரதி

கிளறிய குப்பையில் கிளம்பிய பூதம்!



இவள் பாரதி

தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்களில் குப்பைகள் மலையெனக் குவிந்து வருவதால், மக்களின் உடல்நலத்திற்கு உருவாகிவரும் ஆபத்துகள் பற்றி, ‘ஐயோ ஆபத்து!’ என்ற தலைப்பில் (காண்க: ‘புதிய தலைமுறை’ 12 ஜனவரி 2012 இதழ்) ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.  நாடு முழுக்க குவிந்து பெருகும் இந்தக் குப்பை பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், புதிதாகப் பல அதிர்ச்சித் தகவல்கள் அம்பலமாகியிருக்கின்றன.

அவை:
1971 முதல் 2011 வரையிலான கடந்த 40 ஆண்டுகளில் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான நகராட்சிகளிலும் (ஒருசில நகராட்சிகள் தவிர)

குப்பைகள் ஏலத்தில் விடப்படவில்லை.

ஒருசில நகராட்சிகளைத் தவிர மற்ற நகராட்சிகளுக்கு குப்பைகளால் எந்த வருவாயும் இல்லை.

விளைநிலங்களுக்கும் உரமாக செல்வது கிடையாது.

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளில் குழித்துறை, கரூர், தாராபுரம், இராஜபாளையம், சத்தியமங்கலம், திருச்செங்கோடு, திருத்துறைப்பூண்டி ஆகிய சில நகராட்சிகளில்மொத்தமே 15 லட்சம் ரூபாய் மட்டுமே குப்பைகளின் மூலம் வருவாய் கிடைத்துள்ளது.

வீணாக ஆற்றிலும், கடலிலும் கொட்டப்படுவதில்லை என்பது கூடுதல் தகவல்.

இத்தனை ஆண்டுகாலமாகவே குப்பைகள் பிரச்சினையில் அரசு மிக அலட்சியமாகவே இருந்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. இந்தத் தகவல்களை, தமிழகத்தில் இருக்கும் அனைத்து நகராட்சிகளிலும் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறார்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி.

தொடர்ந்து நல்லசாமி கூறும்போது, "மக்கும் குப்பை, மக்காத குப்பையைப் பிரிக்க தமிழக அரசு வாங்கிய பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகளால் முழுமையான பயன் உண்டா என்று தெரியவில்லை. மக்களும் அப்படி பிரித்துக் கொடுப்பதில் முழு ஆர்வம் காட்டவில்லை. அரசும் அதைப் பிரித்து எடுப்பதில் முனைப்புடன் செயல்படவில்லை. விளைவு- இதற்காக செலவழிக்கப்பட்ட கோடிக்கணக்கான தொகையும் தெருக்கோடியில் குப்பையாய் போய்விட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு சுழற்சிமுறையில் கிராமங்களில் இருந்து தயாராகும் விளைபொருட்கள் நகரத்திற்கு விற்பனைக்கு வரும். நகரத்தில் வீணாகும் கழிவுகள் உரமாக மாற்றப்பட்டு கிராமத்திற்குப் போகும். இந்த இயற்கை உரத்தைப் பயன்படுத்தியபோது நாடு முழுக்க விளைச்சலும் நன்றாகவே இருந்திருக்கிறது. பின்னர் சிறிது சிறிதாக குப்பைகளுடன் பிளாஸ்டிக் சேர ஆரம்பித்துவிட்டதால்,அதைப் பிரித்தெடுத்து உரம் தயாரிக்க முயற்சிக்காமல் செயற்கை உரத்திற்குத் தாவினார்கள் விவசாயிகள். இப்போது இயற்கை உரம் என்பதே அழிந்து போய், செயற்கை உரம் கோலோச்சிக்கொண்டிருக்கிறது. இதன் விளைவால், செயற்கை உரத்தால் தயாரான உணவுப் பொருட்களால் மக்களுக்கு உடல்நலக்கேடும், மக்கும் பொருட்களுடன், மக்காத பிளாஸ்டிக்கும் கலந்து நிலத்தையும், நீரையும் கெடுத்துக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுமாக இன்றுவரை பாதிப்புகள் தொடர்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் மேற்சொன்ன சுழற்சிமுறை பாதிக்கப்பட்டதே. இந்தச் சுழற்சி முறை மீண்டும் வரவேண்டும். மேலும் குப்பைகளை ஆறுகள், குளங்கள் மற்றும் கடலில் கொட்டவில்லை என்று நகராட்சிகள் சொல்வது நாடறிந்த பச்சைப்பொய் அல்லவா என்றார்" குமுறலுடன்.


குப்பைகளை பஸ்பமாக்கலாம்!
வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தோடு பெங்களூருவில் உருவாக்கப்பட்ட ஓர் இயந்திரம், ஆயிரம் கிலோ குப்பையைக் கொடுத்தால் 2 கிலோ சாம்பலாக வெளித் தள்ளும். இந்த இயந்திரத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என எந்த வகை குப்பையையும் போடலாம். ஆனால், அதில் சொட்டுத் தண்ணீர்கூட இருக்கக்கூடாது. வாட்டர் பாட்டில்களை போடும்போது தண்ணீர் இல்லாமல் போட வேண்டும். கடையில் வாங்கிய சாம்பார், சட்னி பாக்கெட் ஆகியவற்றை வெறும் பையாகப் போடவேண்டும். காந்தத் தொழில்நுட்பத்தோடு இயங்கும் இந்த இயந்திரத்திற்கு மின்சாரம் தேவையில்லை. இதன் விலை 7 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை. இதிலிருந்து கிடைக்கும் சாம்பலைக்கொண்டு பீங்கான் பொருட்கள் செய்ய முடியும். இதைக் கவனித்துக்கொள்ள அதிகமான ஆட்களும் தேவை இல்லை. இன்னும் சோதனை முயற்சியில் இருக்கும் இந்த இயந்திரம் நடைமுறைக்கு வரும்போது குப்பைகளை பஸ்பமாக்கி விடலாம்!


எந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கலாம்?
நீங்கள் வாங்குகிற எந்த ஒரு பிளாஸ்டிக் டப்பா அல்லது பாட்டிலின்  அடியிலும் முக்கோண வடிவமிட்டு ஓர் எண் இருக்கும். ஒன்று முதல் ஏழு வரை இருக்கும் இந்த எண்தான் அந்த பிளாஸ்டிக்கின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமரின் தரத்தைக் குறிக்கும். ஒரேவிதமான பிளாஸ்டிக்கையெல்லாம் ஒன்றாக உருக்கி, மறுசுழற்சிக்குப் பயன்படுத்துவதற்காக இந்த எண்ணைக் குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த எண்ணை வைத்து எந்தவிதமான பிளாஸ்டிக்கை எதற்காக உபயோகப்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.

எண்: 1 PET
பொதுவாக ஒருமுறை உபயோகப்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை.

எண்: 2 - HDPE (High density poly ethylene)
ஷாம்பூ டப்பாக்கள், சில கடினமான பிளாஸ்டிக் பைகள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை.

எண்: 3 - PVC ( Poly vinyl chloride)
உணவு பேக் செய்யப்படும் பொருள், பைப்புகள், கிளீனிங் பவுடர்கள் இருக்கும் டப்பாக்கள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை. டையாக்ஸின் போன்ற நச்சுவாயுக்களை வெளிப்படுத்துவதால் உடலுக்குப் பலவிதத் தீங்குகளை விளைவிக்கக் கூடியது. சூடான பொருட்களை இதில் வைக்கக்கூடாது.

எண்: 4 - LDPE (Low Density poly ethylene)
இந்த எண் உடைய பிளாஸ்டிக்குகள் குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்த ஏற்றது. மற்ற பிளாஸ்டிக் வகையில் நச்சு வாயுக்கள் வெளியேறும் வாய்ப்பு உண்டு.

எண்: 5 - Poly propylene
சூடான பொருட்களை வைக்கவும், பொதுவான உணவுப் பண்டங்களை வைக்கவும் பயன்படுத்தக் கூடியது. இந்த வகை பிளாஸ்டிக் பொருளை மைக்ரோ வேவிலும் உபயோகப்படுத்தலாம்.

எண்: 6 - Polystyrene
உணவுப் பொருட்கள் வைத்து சாப்பிடலாம். ஆனால், எடுத்துச்செல்ல ஏற்றதல்ல.

1 முதல் 4 எண் வரை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் உணவு எடுத்துச்செல்லத் தகுதியானவை அல்ல. இவை வெப்பச்சூழல் மாறும்போது கார்சினோஜின் எனப்படும் வாயுவை வெளியிடுவதால், இது புற்றுநோய்க்குக் காரணமாக அமையும்.

5, 6 எண் கொண்டவை உணவு, தண்ணீர் ஆகியவை வைக்கவோ, எடுத்துச்செல்லவோ தகுதியுடையவை.

7 எண் கொண்ட பாலிகார்பனேட் பிளாஸ்டிக் வகைகளை உலக நாடுகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவை இந்தியாவில் தடை செய்யப்படவில்லை.


இவள் பாரதி (நன்றி - புதியதலைமுறை, ஆகஸ்ட் 23, 2012)

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?