Friday 18 July, 2008

நினைவு

பசு தன் கன்றை
நாவால் தடவும் போதும் ...
கோழி தன் குஞ்சுகளை
சிறகுகளுக்குள் அரவணைக்கும் போதும்
குரங்கு குட்டி தன் தாயை
இறுக பற்றி தாவும் போதும்
உனது இழப்பின் வலி
இன்னும் அதிகமாகிறது...

பொழுது

உன் பிரிவிற்கு முன்னதாக
உன்னோடு நான் செலவழித்த
நாட்களையெல்லாம்
சேமித்தபடி இருக்கிறேன்
நினைவலைகளில் !
ஆயினும்
சேமிக்கும் பொழுதுகளும்
செலவழிக்கும் பொழுதுகளாய்.....

வேதனை

நமது பிரிவிற்குப் பின்
வேர் பிடிக்கா விதையின்
வேதனையுடன் கழிகிறது
வேனிற்காலமும்...
மழைக்காலமும்!

வேர்கள்

எனது நம்பிக்கையின்
வேர்கள்
பல இடங்களில் காயப்பட்ட போதும்
இரத்த கசிவில்லை...
வாக்குறுதிகளையும்
வாஞ்சையினையும்
நம்பிய நட்பின்
கன்னித்திரை கிழிபட்டது
உன் துரோகத்தால்...
இனிமேலதை தைக்க முடியாதுதான்
ஆனால் நிரந்தரமாய் மூடிக்கொள்ள
உன்னால் கற்றுக்கொண்டேன்
முன்னால் நண்பனே....

பழைய முத்தம்

அந்த
பழைய முத்தம்
இன்னும் பயமுறுத்துகிறது...
மாடிப்படிகளின் வளைவில்
திடீரென கன்னம் பற்றி
நிகோட்டின் மணத்தில்
நிலை தடுமாறச் செய்த
அந்த பழைய முத்தம்
பயமுறுத்ததான் செய்கிறது
பாம்பின் தீண்டுதலைப் போல...

குறுந்தகடு

பதிவு செய்த
குறுந்தகடு ஒன்றில்
உன் முகம் கண்டு
உள்ளம் சிலிர்த்தேன்...
பின் உன் முகம்
கூட்ட நெரிசலில்
கரைந்து போக
சிறு புள்ளியாகி
தேடிக் கொண்டிருக்கிறேன்
அலையினூடே
ஒளிச்சிதறலாய்....

அம்மா

அம்மா
நீ அழகிய மரபு கவிதை
உன் மரபில்
பூத்த புதுக்கவிதை நான்
இதோ என் மகள்
ஹைக்கூவாய்...

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?