Monday 29 September, 2008

மாறிவிட்டது

மொட்டைமாடி
மறந்திருக்க வாய்ப்பில்லை
இரவின் மடியில்
நிலவின் பிடியில்
நெடுநேரம் பேசியதை...

ரோஜாச் செடிகளும்
நம் நட்பின்
அடையாளமாய்
மொட்டுக்களை
பூக்களாக்கி இருக்கிறது...

சிறகில்லாமல்
அடைக்கலமாய் வந்த
சின்னக் கிளிக்கும்
சிறகுகள் விரியத்
துவங்கியிருக்கிறது...

பருவகால மாற்றங்களுக்கு
பக்குவப்படுத்தப்பட்ட
கற்றாழைச் செடிகளும்
கிளைகள் விட்டிருக்கிறது...

கஷாயத்துக்காய்
அந்தியில் சேகரித்த
வேப்பம்பூக்களில் மீதம்
வேப்பம்பழங்கள் ஆகிப்போனது ..

கருவேப்பிலையும்
முருங்கையும்
காய்க்கத் தொடக்கி விட்டது...

எல்லாமே மாறிவிட்டது
பருவத்தில்..
நம் நட்பைப் போல ..

போதும்

இதுவரை
பேசி கழித்தது போதும்...
கூடிச் சிரித்தது போதும்...
பாடி மகிழ்ந்தது போதும்...
பழகிக் களித்தது போதும்...
என்று கட்டளையிடுவதில்லை
நட்பிற்கு
உன்னைப்போல் யாரும்
காரணமின்றி....

சுபாவம்

என் பூமிக்கு
மழையாக வந்தாய்..
தாங்கிக் கொன்டது
என் பிழையல்ல சுபாவம்..

என்ன செய்ய
என் சுபாவத்தை
பிழையென கருதுவது
சமூகத்தின் சுபாவம்...

விதிவிலக்கல்ல

கலைத்துப்போட்டாய்
மனதோடு என் நினைவுகளையும்...

விதைத்து சென்றாய்
ஆசையோடு என் ஆர்வத்தையும்...

மிச்சமேதுமில்லை
உன்னிடமிருந்து எனக்குள்
என் நேரங்களை
நொறுக்குத் தீனியென
நொடி நொடியாய்
நீ தின்றதைத் தவிர...

அனுமதியின்றி கலைத்து
அனுமதியின்றி விதைத்து
அனுமதியின்றியே
அமைதியாய் சென்றுவிட்டாய்...

என் ஆயுளின்
அர்த்தங்கள் மொத்தமாய்
கரைந்தது உன் பிரிவில்...

என் பெண்மையினை
அர்த்தப்படுத்திய உன் உறவே
என் ஆண்மையினை
சோதித்து பிரிவதில்
எனக்குள் கோபங்கள் ஏதுமில்லை..

பெண்மையும் ஆண்மையும்
ஒவ்வொரு அணுவுக்குள்ளும்
ஆட்சி செய்கிறது ...

நீயோ நானோ
விதிவிலக்கல்ல...


மதன் நேர்காணல்

மதன் அவர்களுடனான சந்திப்பு திடீரென நிகழ்ந்த போதிலும் அதிக நேரம் ஒதுக்க முடியாத அவரது சூழல் காரணமாகவும் நடந்த சந்திப்பில் இருந்து...


எத்தனை வயசில இருந்து கார்ட்டூன் பரிச்சயம் ஆனது?
நான் ஒரு நாலு வயசில இருந்து கார்ட்டன் போடுறேன்? எனக்கு இயற்கையாகவே வந்த ஒரே திறமை கார்ட்டூன் போடுறதுதான்..
மத்த எல்லா திறமைகளும் உங்களைப் போல ஒரு வட்டத்துக்குள்
வந்த பின்னால கத்துக்கிட்டதுதான்...இளஞர்கள் இந்த துறையில் ரொம்ப குறைவா இருக்காங்க..இந்தியாவில் இந்த துறையில நிறைய வாய்ப்பிருக்கு.. ஆனால் எத்தனை இளைஞர்கள் தயார் நிலையில இருக்காங்க?

உங்களுடைய கார்ட்டூன் திறமை வளர உதவியாய் இருந்தது எது?நாமேதான் செய்து கொள்ள வேண்டும்..இயற்கையான திறமைன்னு சொல்வாங்கல்ல எப்டினா ஒரு மொசார்ட் மாதிரி.. பாரதி மாதிரி.. இவங்கல்லாம் பிறவி கலைஞர்கள்...அப்டின்னு சொல்வாங்க.. திறமை அப்டிங்கறது நிறைய பேர்கிட்ட இருக்கும்..மைக்கேல் ஏஞ்சலோ மாதிரி ஆர்ட்டிஸ்ட் பாத்தீங்கன்னா அவங்களுக்கு நிஜமாவே இறைவன் கொடுத்த வரம்னு தோணும்..அவ்ளோ ஆச்சர்யம் .. அதை நாம இறைவனு சொல்லிடுறோம் .. நிறைய இளைஞர்களுக்கு திறமை இருக்கு..ஒருத்தருக்கு ஓவியம் நல்ல வரும்.. உங்களுக்கு குரல்வளம் இருக்கு பாடுறீங்க .. பேசுறீங்க (நிஜமாவா ? ஹி ஹி ).. சில பேர் மாடலிங் பண்ணுவாங்க...அதை வளர்த்துக் கொள்வது எப்படி அப்டிங்கற அடிப்படையில தான் உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியும்?

நான் கார்ட்டூன் பண்ணும் போது எல்லாம் இந்த மாதிரி எல்லாம் கோர்ஸ் கிடையாது..ஒருவேளை இருந்திருந்தால் முறைப்படி படிப்படியா படிச்சு இருக்கலாம் ..அப்டி படிச்சு இருந்தால் சிறந்த மாணவன்னு பேர் வங்கி இருப்பேனோ? இல்ல மக்குன்னு பேர் வங்கி இருப்பேனோ தெரியாது...இப்ப இருக்குற மாதிரியான வாய்ப்புகள் அப்பலாம் கிடையாது..அதனால நான் இயற்பியல் படிச்சேன்...என்னோட நோட் புக்ஸ்ல பாத்திங்கன்னா முதல்ல இருக்குற பக்கங்கள்ல ஃபார்முலா இருக்கும்.. கடைசி இருபது பக்கங்கள் என்னோட கார்ட்டூன் தான் இருக்கும்.. பேராசிரியர்கள் பாத்துட்டு கிழிச்செல்லாம் போட்டது கிடையாது... அவங்க என்ன நினைப்பாங்கன்னா எங்கேயோ தப்பான இடத்துல தப்பான ஆள் வந்து உக்காந்திருக்கனே அப்டின்னு 'யப்பா கொஞ்சம் பாடத்தையும் கவனிப்பா'ன்னு சொல்லுவாங்க...(ரொம்ப நல்ல ஆசிரியர்கள் கிடைச்சு இருக்காங்க..) ஏனா கார்ட்டூன்ஸ் நல்லா இருக்கும்..

நீங்க வரைஞ்ச கார்ட்டூன்ல மறக்க முடியாத கார்ட்டூன் இல்ல வரைய ரொம்ப முயற்சி செஞ்ச கார்ட்டூன் பத்தி சொல்லுங்களேன்?
கார்ட்டூன் அப்டிங்றது விஷுவல் திங்.அத பாத்தாதான் புரிஞ்சுக்க முடியும்..அதை வானொலில விளக்க வேண்டி இருக்கும்..அதுல நாம ஒரு செய்தி சொல்றோம்..கார்ட்டூன்ங்றது சாதரண காமிக்ஸ் படம் கிடையாது.கார்ட்டூனுல தேச,மாநில தலைவர்கள் வராங்க..அதுல வந்து தலையங்கம் மாதிரி..ஒரு நிகழ்வு நடப்பது பற்றி ஒரு கருத்து சொல்றேன்.இது பத்திரிக்கைக்கும் எனக்கும் ஒரு உடன்பாடா செய்துக்கிறதுதான்.. .கார்ட்டூனுக்கு பல திறமைகள் தேவைப்படுது..அது எப்டிங்றது பெரிய விசயம்..அதை இவள்ல மட்டும் சொல்லிட முடியாது..

புஷ்பவனம் தம்பதி நேர்காணல்..


புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி அவர்களுடன் ஒரு நேர்காணல்..

கிராமிய பாடல்களை கிராமத்திலிருந்து நகரத்து வீதிகளுக்கு எடுத்து சென்ற நாட்டுப்புற கலைஞர்களில் குறிப்பிடத்தக்க பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமியும் அனிதா குப்புசாமியும்...

அவர்களை எதிர்பாரா ஒரு தருணத்தில் ஹலோ பண்பலையில் இவள் நிகழ்ச்சியில் சந்தித்ததில் இருந்து உங்களுக்காக...



இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?