Tuesday 17 May, 2011

விஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட்ட நூல்களின் விவரங்கள்

இப்படிக்கு அன்புள்ள அம்மா - கலாநிதி ஜீவகுமாரன் - விலை 150
ஈழத்தில் தன் மகனை போரில் இழந்துவிட்ட தாயின் வேதனை ததும்பிய கவிதை நடையிலான நாவல்
முகங்கள் - தொகுப்பு ஜீவகுமாரன் - விலை 250
ஐம்பது எழுத்தாளர்களின் புலம்பெயர்வு பற்றிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு
கடவுளின் நிலம் - இளைய அப்துல்லாஹ் - விலை 100
பல்துறை பற்றி பேசும் செறிவு மிகுந்த கட்டுரை தொகுதி
தேடலே வாழ்க்கையாய் - என்.செல்வராஜா - விலை 80
ஒரு ஈழத்து நூலகரின் மனப்பதிவுகள் அடங்கிய கட்டுரை தொகுதி
வெள்ளைப் பொய்களும் கருப்பு உண்மைகளும் - இவள் பாரதி - விலை 50
நான் சொல்வதெல்லாம் - இவள் பாரதி - விலை 100
நீ மிதமாக நான் மிகையாக - இவள் பாரதி விலை 100
இவள்பாரதியின் மேற்கண்ட நூல்கள் காதலை பேசக் கூடிய கவிதைகள். காதலாக பேசும் கவிதைகள்
பின்குறிப்பு 
இங்கு வாங்கப்படும் ஒவ்வொரு நூலுக்கும் இணையான நூல் ஈழத்தில் உள்ள நூலகங்களுக்கோ, பாடசாலைக்கோ இலவசமாக வழங்கப்படும் என்பது இதன் சிறப்பு


தொடர்புக்கு:
விஸ்வசேது இலக்கிய பாலம்,
visvasethu@gmail.com
cell: 95661 10745

Saturday 14 May, 2011

அறுவடை செய்

விவசாயின் பணி
விதைப்பதும் அறுப்பதும் அல்ல..
நிலத்தை செம்மைப்படுதுவதும் 
களையெடுப்பதும் கூட
நீங்கள் விதைத்துக் கொண்டே இருக்கிறீர்கள் 
களைஎடுக்காமல் 
அறுவடை செய்துதான் ஆக வேண்டும் 
புற்களையும் பூண்டுகளையும்..

நீங்களே விதைத்தீர்கள்

என்ன நடந்துவிட்டது 
இப்படி இடி விழுந்தது போல் 
அமர்ந்திருப்பதற்கு? 
உழைத்தால் தான் ஒருபிடி கவளமாவது
கை வந்து சேரும்.. 
பேசாமல் போய் வேலையை பாருங்கள்.. 
==========
நீங்களே விதைத்தீர்கள்.. 
விளைச்சலில் 
களை வந்துவிட்டதென்று 
கவலை கொண்டால் எப்படி?

ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே என்றும் 
மறக்க முடியுமா என்றும் 
என்னதான் கதறியும் 
மறக்கக் வேண்டியதை நினைவூட்டி 
நினைக்க வேண்டியதை மறக்கடித்து 
தலை கீழ்விகிதங்கலாய் 
கிழிந்து தொங்குகிறது 
சில மாற்றங்கள்..

மறக்க முடியுமா?

சொன்னதைச் செய்தோம் என்று அய்யாவும்
சொல்லாததையும் செய்தார்கள் என்று அம்மாவும்
என்னதான் செய்கிறார்கள் என்று மக்களும்
வாழ்க தமிழகம்
*******
எல்லாவித கருத்துக் கணிப்புகளையும்
தகர்த்துவிட்டு
ஆள்கிறது மக்களின் மறதி
எந்தவித நல்ல மாற்றங்களும்
வரப்போவதில்லை
என்பது மக்களின் உறுதி
*******
பந்தயத்தில்
வெற்றி என்பது
வலிமையால் அல்ல
எதிரியின்
பலவீனத்தாலும் வாய்த்துவிடுகிறது.
*******
ஒரு கண்ணில் புரையும்
மறு கண்ணில் திரையும்
விழுந்தாகிவிட்டது
மூன்றாவது கண்ணுக்கு
இடம் தேடியநிலையில்
புரை விழுந்த கண்ணிலே
போய் குடிகொண்டது
மூன்றாவது கண்..
எந்த கண்ணும் வழிகாட்டாது
கையால் தடவியே செல்கின்றன..
கால்கள் தட்டுத் தடுமாறி..
எங்கே செல்லும்
இந்த பாதையென அறியாமல்..
*******

Wednesday 4 May, 2011

வானம் - கொஞ்சம் புதிய கோணம்

எப்போதும் போல் ஐந்து பாடல்கள், நான்கு சண்டைக்காட்சிகள், அம்மா செண்டிமென்ட், தீவிரவாதம், குத்துப்பாட்டு என்று எடுத்தாலும் திரைக்கதை பயணிக்கும் திசையில் சற்று புதிய கோணத்தை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் க்ரிஷ். இவர் தெலுங்கில் எடுத்து வெற்றி பெற்ற 'வேதம்'  படத்தின் ரீமேக் தான் தமிழில் வானமாகியிருக்கிறது. 

கதைச்சுருக்கம்
மதவெறி பிடித்த இந்துக்களால் தாக்கப்பட்டு கர்ப்பத்திலிருக்கும் தன் குழந்தையை இழக்கிறது பிரகாஷ்ராஜ் - சோனியா அகர்வால் தம்பதி. தன் அண்ணியின் குழந்தை இறந்து போனதால் வீட்டைவிட்டு ஓடிப்போகும் நசீர் சென்னையில் இருப்பதாக தகவல் கிடைக்க பிரகாஷ்ராஜும் சோனியாவும் சென்னை வருகின்றனர். 

வட்டிப்பணம் கொடுக்காததிற்காக தன் மகனை உப்பளத்தில் வேலைக்கு இழுத்துச் செல்லும் பண முதலையிடமிருந்து தன் மகனை மீட்க போராடும் சரண்யா தனது கிட்னியை விற்க தன் மாமனாருடன் சென்னை வருகின்றார்.
தன் பரம்பரையில் எல்லோரையும் போல தன் மகனும் ராணுவ வீரனாக வேண்டும் என்று ஆசைப்படும் தாயிடம் தான் பாடகனாக, கிடாரிஸ்டாக வேண்டும் என்று தன் குழுவோடு முயற்சிக்கும் பரத் அண்ட் க்ரூப் சென்னைக்கு ஒரு லைவ் நிகழ்ச்சிக்காக வருகிறது. 

பாலியல் தொழிலை தனியாக தொடங்க வேண்டும் என ஆசைப்பட்டு தன் அக்காவுடன் அனுஷ்கா சென்னைக்கு வருகிறார். 

அறநூறு கோடிக்கு சொந்தக்காரியான பெண்ணை பொய் சொல்லி காதலிக்கும் சென்னையிலிருக்கும் குப்பத்து இளைஞன் சிம்புவின் கதை. 
இப்படி ஐந்து திசைகளில் பயணிக்கும் கதையானது மருத்துவமனையில்  ஒரே புள்ளியில் இணைகிறது. பெங்களூர், தூத்துக்குடி என்று வெவ்வேறு ஊர்களில் தொடந்தும் கதை சென்னைக்கு எப்படி வந்து சேர்க்கிறது? அவர்களின் நோக்கம் நிறைவேறியதா? மருத்துவமனையில் வைக்கப்பட்ட தீவிரவாத தாக்குதலில் எல்லோரும் தப்பினார்களா? என்பதே மீதி கதை. 


படத்தின் பலம்
படம் ஆரம்பிக்கும் போதான டைட்டில் கார்டு அனிமேஷனை பாராட்டலாம். 
சிம்புவுடன் சந்தானம் வரும் காமெடிக் காட்சிகள் (செயின் திருடும் காட்சிகள், போலீஸ் ஸ்டேசனில் பேசும் காட்சிகள்)
ஆங்காங்கே நறுக்கு தெறித்த வசனங்கள். 

ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பாத்ரூம் இருக்கு நாங்க எங்கையா போவோம்? - திருநங்கை பேசும் வசனம்
பொய் சொல்றது ஈசி. ஆனா உண்மை பேசுறது கஷ்டம் - சிம்பு பேசும் வசனம்
அப்பாவிகளை கொடுமைப்படுத்துற எல்லாருமே டெரரிஸ்ட்தான் - பிரகாஷ்ராஜ் வசனம்
போலீஷை நம்பக் கூடாது. குழந்தையைக் காணாம்னு கம்ப்ளைன்ட் கொடுத்தா பொண்டாட்டியைக் காணாம போகப் பண்ணிடுவாங்க - கணேஷ் பேசும் வசனம்
இவரு பெரிய பாரதிராஜா. ஸ்க்ரீனுக்கு பின்னால இருந்து ஒளிஞ்சு பாக்குறாரு - சந்தானம் பேசும் வசனம்
பணம் இருக்குறவன் சிரிக்க மாட்டான். விசில் அடிக்க மாட்டான். ஜாலியா அனுபவிக்க மாட்டான். போறப்ப பணத்தை எடுத்துட்டா போகப்போறான் - சந்தானம்
உங்க கனவுகளை ஆசைகளை எங்க மேல திணிக்காதீங்க - பரத் பேசும் வசனம்
நாங்க கழட்டிட்டு செய்ற வேலையை நீ யூனிபார்ம் போட்டு செய்றியே, வெக்கமா இல்லை - அனுஷ்கா பேசும் வசனம். 
இப்படியாக வசனங்களுக்கு க்ளாப்ஸ் பறக்கிறது. 

யுவனின் பாடல்கள். அதிலும் குறிப்பாக 'தெய்வம் இருப்பது எங்கே' என்ற தீம் பாடல் அருமை. அதன் வரிகளும். படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள். சரண்யா, சரண்யாவின் மாமனார், பிரகாஷ்ராஜை கைது  செய்யும் காவல்துறை அதிகாரி, பரத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றும் சிங் இப்படியான கதாபாத்திரங்கள் பேசப்படும் படி இருக்கின்றன. எப்போதும் காதல் செய்து திருமணத்தில் முடிந்து, அல்லது காதல் நிறைவேறுவது அல்லது தோற்று வேறு ஒரு பெண்ணை மணப்பது   இப்படியான சலிப்பில் இருந்து சற்றே விலகி க்ளைமாக்சில் வித்தியாசம் காட்டி இருப்பது இவையெல்லாம் படத்துக்கு பலம். 

படத்தில் பலவீனம்
படம் ஆரம்பித்து ஒருமணி நேரம் வரை கதை எந்த திசையில் போகிறது என்பது தெளிவாக புரியாதது.

முஸ்லீம்களையே எப்போது தீவிரவாதிகளாகக் காட்டுவது. அதை ஒரு முஸ்லீமே எதிர்ப்பது போலவும் காட்டுவது.  பாடல்களில் கண்ணைக் கூசச் செய்யும் ஒளிப்பதிவுக் காட்சிகள். சில கிளிஷே காட்சிகள். சினிமாவுக்கான சில பார்முலாக்கள். தேவையில்லாத கிளாமர் காட்சிகள்.

ஆனபோதும் ஆண்டனியின் எடிட்டிங் க்ளைமாக்ஸ் காட்சிகளில் பரபரப்பை அதிகப்படுத்துகிறது. படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்களுக்கு பாராட்டைப் பெற்றுத்தரும். 

வானம் - கொஞ்சம் புதிய கோணம்.
-- 
இவள் பாரதி

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?