Monday 16 July, 2012

அங்கே தடை! இங்கே எப்போ?



இவள் பாரதி

அரசு ஊழியர்கள் அலுவலக நேரத்தில் தமது சொந்த தேவைகளுக்காக செல்போன் பயன்படுத்துவதற்கு தடைவிதித்துள்ளது கேரள அரசு.

அலுவலக நேரத்தில் மணிக்கணக்கில் செல்போனில் தங்கள் சொந்த விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பதால் அதிகாரிகளை அவசரத்திற்கு தொடர்பு கொள்ளமுடியவில்லை. அதிகாரிகள் இப்படி வெட்டி அரட்டை அடிப்பதால் முடிக்க வேண்டிய அலுவலக வேலையும் தாமதமாகிறது என பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்ததால் அலுவலகங்களில் செல்போனுக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறது கேரள அரசு. உத்தரவுடன் நிறுத்திக் கொள்ளாமல் இதனைக் கண்காணிக்க அந்தந்த துறைத் தலைவர்களையும் அறிவுறுத்தியுள்ளது. இப்படிக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்த போதும் அவசர காலங்களில் மட்டும் செல்போனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அரசு கூறியுள்ளது.

இந்த உத்தரவானது சரியான நோக்கத்திற்காக பிறப்பிக்கப்பட்டாலும் இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம் என்றும், செல்போனைப் பயன்படுத்த முடியாதபோது அவசரகாலம் என்று எப்படி தெரிந்துகொள்வது என்றும் கேரள அரசு ஊழியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

முத்தாய்ப்பாக, இந்த உத்தரவின் மூலம், அலுவலக நேரங்களில் செல்போனில் வெட்டி அரட்டை அடிப்பது குறைந்து, மக்கள் நலப் பணிகள் துரிதமாக நடக்கும் என்பது நிச்சயம். இதே நடைமுறையை  தமிழக அரசும் பின்பற்றலாமே.

நன்றி: புதிய தலைமுறை,  ஜூன், 28, 2012, (பக்கம் 26)
இவள் பாரதி

சென்றார்கள்... வென்றார்கள்

இவள் பாரதி

எத்தனையோ தடைகளைத் தாண்டி வாழ்க்கைப் பயணத்தை தொடரும் மாற்றுத்திறனாளிகள், அவரவர்க்குரிய சில அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கும் தொடர்ந்து போராட வேண்டியிருப்பதுதான் பெரும் சோகம். அந்த வரிசையில் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக விடாப்பிடியாக போராடியதன் விளைவு.. இன்று அவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைத்திருக்கிறது.

பொன்னையா

 பொன்னையா என்பவர் போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத் திறனாளி. அவர் மாருதி 800 காரைக் கையால் ஓட்டிப் பழகுவதற்காக கேரளாவைச் சேர்ந்த முஸ்தபா என்பவரிடம் காரில் சில மாற்றம் செய்து வாங்கி ஓட்டிப் பழகுகிறார். நன்கு பழகிய பிறகு ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பிக்கிறார். ஆனால் உரிமம் தர மறுக்கிறார்கள். நிறைய இடங்களில் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. பின்னர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்ய, உடனடியாக ஓட்டுநர் பழகுநர் உரிமம் கொடுக்க வேண்டும். பின்னர் அவருக்கு டெஸ்ட் முடித்து லைசன்ஸ் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


பிரபுராஜதுரை
இந்த செய்தி பத்திரிக்கையில் வெளிவந்த மறுநாள் அரசாணை ஒன்று வெளியானது. அதில் டி.வி.எஸ் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து வெளிவரும் மாற்றுத் திறன் கொண்டோருக்காக வடிவமைக்கப்பட்ட மூன்றுசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர்க்கு உடனடியாக லைசன்ஸ் கொடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது’ என்கிறார்கள் இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் பிரபுராஜதுரையும், இராபர்ட் சந்திரகுமாரும்.

சரி, கையால் ஓட்டும் கார் உருவானது எப்படி?

லஜபதிராய்
’கேரளாவில் முஸ்தபா என்பவர் ஒரு விபத்தில் கால்களின் செயல்திறனை இழந்துவிடுகிறார். அவர் பிற்பாடு ஒரு கார் வாங்கி தனக்கு தகுந்த மாதிரி கைப்பகுதியில் சில மாற்றங்களை செய்து ஓட்டி வந்தார். இவருடைய நண்பர் ஒருவர் இந்தக் காரை விரும்ப அவருக்கு காரைக் கொடுத்துவிட்டு தனக்காக மறுபடியும் வேறொன்று செய்து கொண்டார். இப்படியே மாற்றுத்திறனாளிகள் கேட்டால் காரில் சில பாகங்களைப் பொருத்திக் கொடுத்து வருகிறார். நானும் அவரிடம் சென்று எனது காரை சில மாற்றங்கள் செய்து ஓட்டிக் கொண்டிருக்கிறேன். நான் வாங்கிய காரில் எந்தவித பாகங்களையும் மாற்றவில்லை. கால்பகுதியில் இருக்கும் ஆக்ஸிக்லேட்டருக்கும், ப்ரேக்குக்கும் ஒரு ஒயர் பொருத்தி கையினால் நான் ஓட்டும் அளவுக்கு மாற்றி வாங்கி வந்தேன். இதுவரை கடந்த ஏழு வருடங்களாக 50,000கி.மீட்டருக்கு மேல் வண்டி ஓட்டியிருக்கிறேன். எனது தேவைக்கு அடுத்தவரை எதிர்பார்த்து நிற்பது இயலாது என்பதை விட பிறருக்கு அவசர உதவி தேவைப்படும் போது உதவ முடிகிறது என்பது திருப்தியளிக்கிறது. ஆனால் இன்னும் எல்.எல்.ஆர். தான் வைத்திருக்கிறேன். நிரந்தர லைசன்ஸ் தரவில்லை.’ என்று ஆதங்கப்படுகிறார் பொன்னையா. ‘இன்று என்னுடைய முயற்சியின் விளைவாக டிவிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனத்திற்காகவாவது லைசன்ஸ் கொடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டதே ஆறுதலாக இருக்கிறது‘ என்கிற பொன்னையா ஒரு வழக்கறிஞரும் கூட .

இராபர்ட் சந்திரகுமார்

இன்னொரு சம்பவம்..

இதே போல மாற்றுத் திறனாளியான பால்ராஜ் என்பவர் தனது காருக்கு பதிவுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் தர மறுத்துள்ளார்கள். இவரது காரும் கேரளாவில் கொடுத்து சிறு மாற்றம் செய்து கொண்டு வரப்பட்டது. ’வண்டியை உங்கள் இஷ்டத்திற்கு மாற்றினால் பதிவுச் சான்றிதழ் தர முடியாது’ என்று ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கூற மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படுகிறது. இந்த வழக்கில் லஜபதிராய் ஆஜராகினார். நீதிமன்றம் ’ஒரு மாதத்திற்குள் பதிவுச் சான்றிதழ் கொடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. அத்துடன் மாற்றுத்திறனாளிகள் வாரியத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு விண்ணப்பித்ததும் ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ் போன்றவை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் வழிவகை செய்ய அறிவுறுத்தியிருக்கிறது.

பாக்ஸ்
·மாற்றுத்திறனாளிகள் ரயிலில் நான்கில் ஒருமடங்கு கட்டணம் செலுத்தி இந்தியா முழுவதும் பயணிக்கலாம். உடன் அழைத்துச் செல்லப்படும் ஒரு நபருக்கும் இதே சலுகை உண்டு. இதே போல பேருந்திலும் சலுகை உண்டு.

·மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு அரசின் திருமண நிதியுதவித் திட்டத்திலிருந்து 25,000ரூபாயும், 4கிராம் தங்கமும், பட்டதாரிகளுக்கு 50,000ரூபாயும், 4கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.

·10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாற்றுத் திறனாளி மாணவ,மாணவியருக்கு ரொக்கப்பரிசு மற்றும் உயர்கல்வித் தொடர உதவித்தொகை வழங்குதல். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்குத் தனி கட்டணம் (Special Fees ) செலுத்துவதிலிருந்து விலக்களித்தல்.

·மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய உதவும் வகையில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பெட்டிக்கடை வைக்க மானியம் உண்டு.

·தசைச் சிதைவு  நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பராமரிக்க அரசின் உதவித் தொகை உண்டு.


நன்றி: புதிய தலைமுறை,  ஜூன், 28,  2012, (பக்கம் 34 -35)
இவள் பாரதி

தகவல் தராத தகவல் ஆணையத்திற்கு அபராதம்


இவள் பாரதி

தகவல் தரவேண்டிய தகவல் ஆணையமே, குறித்த காலத்திற்குள் கேட்ட தகவலைத் தராமல் காலதாமதம் செய்ததற்கு அபராதம் விதித்து நெத்தியடியாக தீர்ப்பளித்திருக்கிறது சென்னை (தெற்கு) நுகர்வோர் குறைதீர் மன்றம். 

அரசு சார்ந்த எந்த தகவல்களையும் கேட்டு எழுத்து மூலம் பெறுவதற்கு ஒரு குடிமக்களுக்கு உரிமை உள்ளது. இதன் மூலம் மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா, நமது வரிப்பணம் வீணாகிறதா, நம் நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் நடக்கும் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது உட்பட அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். இந்தத் தகவல்களைப் பெற குறிப்பிட்ட 30 நாட்கள் என்ற காலக்கெடு இருக்கிறது. (உயிர் காக்கும் விஷயங்களில் 24 மணி நேரத்திற்குள் தகவல் தர வேண்டும்) இந்தக் காலகெடுவுக்குள் தகவல்கள் தரவேண்டும் என்றும், தாமதமானால் ஏன் தாமதமாகிறது என்பதற்கான சரியான காரணத்தையும் சொல்ல வேண்டும். சரியான தகவல்களைத் தர மறுப்பதும், தவறான தகவல்களைத் தருவதும், தகவல்களைத் தர காலம் தாழ்த்துவதும் நுகர்வோருக்கு செய்யும் அநீதியாகும். இந்த அநீதிக்கு எதிராகத்தான் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் மாநில தகவல் ஆணையத்தின் பொதுத் தகவல் அதிகாரிக்கு எதிராக நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.

ரமேஷ், வழக்கறிஞர்
இவர் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி, மாநில தகவல் ஆணையத்திடம் சில கேள்விகளைக் கேட்டு தபால் அனுப்பியிருக்கிறார். அதில், ‘மனுதாரர்களுக்கு, தாமதமாக தகவல் தரும் பொது தகவல் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மாநில தகவல் ஆணையத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சம்பளம் எவ்வளவு? என 19 தகவல்களைக் கேட்டுள்ளார். ஆனால் ஜூன் 23ம் தேதிதான் தகவல் தரப்பட்டிருக்கிறது. இதனால் சென்னை நுகர்வோர் மன்றத்தில் மாநில தகவல் ஆணையத்தின் மேல் புகார் அளித்தார். அதற்கு, ‘குறித்த நேரத்திற்குள் தகவல் தரப்படவில்லையெனில் ஆணையத்தில்தான் மேல் முறையீடு செய்ய வேண்டும், அவரை நுகர்வோராக கருதக் கூடாது’  என்று மாநில தகவல் தெரிவித்திருக்கிறது. 

நீதிபதி. ராமச்சந்திரன்
ஆனால், இதற்கு முன் இது போன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய நுகர்வோர் ஆணையம் ஆகியவை அளித்த தீர்ப்பினை முன்னுதாரணமாகக் கொண்டு, தகவல் கேட்பவரும் நுகர்வோரே என்ற அடிப்படையில், ’குறித்த நேரத்தில் தகவல் தராதது சேவைக் குறைபாடு’ என்று கூறி மாநில தகவல் ஆணையத்திற்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது சென்னை தெற்கு நுகர்வோர் குறைதீர் மன்றம். தாமதமான தகவலுக்காக மற்றும் சரியான தகவல் தராததற்காக தமிழகத்தில் முதன்முதலில் தகவல் அலுவலகம் மீது அபராதம் விதித்து உத்தரவிட்டவர் திருநெல்வேலியைச் சேர்ந்த நீதிபதி இராமச்சந்திரன். இந்த தீர்ப்பையும் முன்மாதிரியாகக் கொண்டே இப்போது மாநில தகவல் ஆணையத்திற்கெதிராக தீர்ப்பளித்திருக்கிறது சென்னை நுகர்வோர் மன்றம். மாநில தகவல் ஆணையத்தின் மீது அபராதம் விதித்திருப்பது இதுவே முதன்முறை. இனிமேலாவது தகவல் தர வேண்டிய அமைப்புகள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்படும் என நம்புவோம். 

பாக்ஸ்


ஐஸ்வர்யா
என் கேள்விக்கு என்ன பதில்?


பாடப்புத்தகம் படிக்கும் போது தோன்றிய ஒரு கேள்விக்கு பிரதமர் அலுவலகம் வரை பதில் கேட்டு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறாள் சிறுமி ஐஸ்வர்யா.


காந்தி எப்போது தேசத்தின் தந்தையானார்? இந்தக் கேள்விக்கு ஆசிரியர், பெற்றோர், உறவினரிடம் பதில் கிடைக்காத பத்து வயது சிறுமி, பிரதமரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பதில் கேட்டு கடிதம் எழுதுகிறார். திகைப்படைந்த பிரதமர் அலுவலகமோ அந்த கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப.. அங்கும் பதில் தெரியாததால் தேசிய தகவல் பதிவகத்திற்கு அனுப்பப்டுகிறது. அங்கும் பதில் தெரியவில்லை. (பதில்: காந்தியின் மனைவி இறந்த போது நேதாஜி வெளியிட்ட இரங்கல் செய்தியில் காந்தியை மகாத்மா என்று குறிப்பிட்டிருக்கிறார்) 

நன்றி: புதிய தலைமுறை,  ஜூன், 28, 2012, (பக்கம் 58 - 59)
இவள் பாரதி

11,500 ஆண்டுகள் பழைமையானதா பூம்புகார்?




இவள் பாரதி


புகார் கடலாராய்ச்சியில் புகார் மேல் புகார்


சமீப நாட்களாக கடல்கொண்ட பூம்புகார் பற்றிய ஆய்வு குறித்த மின்னஞ்சல் ஒன்று பலருக்கும் வந்து கொண்டிருக்கிறது. கிரகாம் ஹான்காக் என்ற ஆய்வாளர் கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்து பூம்புகார் 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று தனது ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த மின்னஞ்சல், கிரஹாம் ஹான்காக்கின் ஆய்வின் அடிப்படையை ஏற்காமல் இன்னும் பூம்புகாரை இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஏன் பாடப்புத்தகங்களில் குறிப்பிட வேண்டும்?   இதுகுறித்து அக்கறை கொள்ளாமல் தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் என்ன செய்கிறது? கடலில் மூழ்கிய தமிழக நகரங்கள் பற்றிய ஆராய்ச்சி ஏன் தீவிரமடையவில்லை என்றும் அது சூடான சிந்தனைகளை முன்வைக்கிறது. கிரஹாம் ஹான்காக்கின் ஆய்வு குறித்து புதுச்சேரி, திராவிடப் பேரவையின் பொதுச் செயலாளர் நந்திவர்மன் தனது வலைத்தளத்தில் எழுதிய கட்டுரைதான் அப்படி மின்னஞ்சலாக அனுப்பப்பட்டுக் கொண்டுள்ளது. உண்மையில் பூம்புகார் கடலாய்வில் நடந்து வருவதென்ன?


நந்திவர்மன்

நந்திவர்மனைச் சந்தித்து கடல் கொண்ட பூம்புகாரின் கடலாய்வு குறித்தும் தொன்மை குறித்தும் கேட்டோம்.


"இணையதளத்தில் கூகுள் மேப்பில் நீங்கள் பார்க்கலாம். இந்தியாவைச் சுற்றியிருக்கும் கடலோரப் பகுதி சில மைல் தூரம் வெளிர்நீல நிறத்திலும் அதைத்தாண்டிய பகுதிகள் கருநீல நிறத்திலும் இருக்கும். வெளிர்நீலப் பகுதிகள் ஆழம் குறைவானவை. அங்கே நிலம் மூழ்கியுள்ளது என்பதற்கு இன்று கூட பெரிய சான்று இருக்கிறது.
தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும்போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. இந்த ஆய்வில் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச், 8,9ல் கடலில் மூழ்கியவர்கள் இரும்பு பீரங்கி, ஈயக்குண்டைக் கண்டுபிடித்தார்கள். எஸ்.ஆர்.ராவ் தலைமையில் வானகிரி பக்கத்தில் கப்பல் கட்டுமானம் தொடர்புடைய ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

கூகுள் மேப்பில் வெளிர் நீலம்



 1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரைலாட  வடிவத்தில் கட்டுமானம்ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி விட்டனர். மீண்டும் 1993ல் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சியைத் தொடங்கியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் 2 மீ. உயரமும், 85 செ.மீ. நீளமும் உடைய ஒன்றைக் கண்டுபிடித்தனர். அது புழுதியும் சேறுமாக மூடப்பட்டிருந்தது.  பின்னர் நிதிப்பற்றாக்குறையால் அகழாய்வு தடைபட்டது.





 உலகக் கடல் அகழாய்வில் ஈடுபட்டிருக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரஹாம் ஹான்காக், தேசியக் கடலாராய்ச்சி நிறுவனத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற எஸ்.ஆர்.ராவ் அவர்களை 2001 பிப்ரவரியில் சந்தித்து சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார். அது குறித்து அவர்  தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதில் கிட்டத்தட்ட 19,000 ஆண்டுகளாக ICE AGE எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து வருகிறது. இதுவரை மூன்று முறை கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது. வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின. கடைசியாக 8,000 ஆண்டுகளுக்கு முன் பனி உருகி கடல் மட்டம் உயர்ந்தது என்கிறார் கிரஹாம். இவரது கருத்தை டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி கிளன் மில்னே, ‘கடல்மட்ட உயர்வின் அடிப்படையில் பார்க்கும்போது பூம்புகார்  9,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும்’ என்று உறுதி செய்தார்.



கிரஹாம் ஹான்காக்
 கிரஹாம், பூம்புகார் கடலில் மூழ்கி ஆய்வு செய்த அறிக்கையை பெங்களூரில் வெளியிட்டார். அவர் எடுத்த புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், துவாரகை 7,500 ஆண்டுகள் பழமையானது என்று ஏற்றுக் கொண்டவர்கள் பூம்புகார் 9,500 ஆண்டுகள் பழமையானது என்பதை ஏற்க மறுத்தனர். ஆனால், இவரது ஆய்வு, அண்டர் தி வேர்ல்டு என்ற தலைப்பில் அமெரிக்க சேனல்களில் ஒளிபரப்பானது.நம்மவர்கள் பலர் கரையில் இருந்துகொண்டே கடலைப் பற்றி ஆய்வு நோக்கில் எழுதிவிடுவார்கள். ஆனால், வெளிநாட்டவர்கள் கடலுக்குள் சென்று வந்துதான் கடலைப் பற்றியே எழுதுவார்கள்" என்கிறார் நந்திவர்மன்.


செல்வராஜ்
தேசியக் கடலாராய்ச்சி மையத்தின் தலைவர் எஸ்.ஆர்.ராவ் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது, அவருக்கு உதவியாளராக அப்போது மாவட்ட தொல்லியல் துறை ஆய்வாளராக இருந்தவர் செல்வராஜ். தமிழக அரசு கடலாய்வுக்காக ஒதுக்கிய பணத்தை செலவழிக்க வேண்டுமானால் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனத்தோடு தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்களும் இருக்க வேண்டும் என்று கூறவே, முறையான பயிற்சி கொடுத்து செல்வராஜ் இந்த ஆராய்ச்சியில் நீருக்குள் மூழ்கி கடலாய்வு செய்திருக்கிறார். "1983 முதல் 1996 வரை நான்கு கட்டங்களாக ஆய்வு செய்தோம். திருமுல்லைவாயிலிலிருந்து தரங்கம்பாடி வரை எங்களது ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். தேசியக் கடலாராய்ச்சி நிறுவன விஞ்ஞானி வோரா தலைமையில் நடந்த முதல் கட்ட ஆய்வில் கடற்கரையோரம் ஐந்து கி.மீ. தூரம் வரை நடந்து போனோம். அதில் பல உறைகிணறுகளைக் கண்டறிந்தோம்.


இரண்டாம் மூன்றாம் கட்ட ஆய்வு, கடல் மேற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது குளோபல் ப்ராஸசிங் சிஸ்டம் எனப்படும் ஜி.பி.எஸ். உட்பட ஐந்து வகையான கருவிகள் பயன்படுத்தப்பட்டன. Side scan sonar Fisher என்ற கருவியின் மூலம் கடலுக்கு அடியில் நிலப்பரப்பில் என்ன இருக்கிறது என்பதையும் (கட்டடம், மண் படிவங்கள், கப்பலின் சிதைந்த பகுதிகள் போன்றவை), Eco மூலம் அது எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதையும், –Mini Ranger  மூலம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதையும் ஆய்வு செய்யமுடியும்.

கடைசியாக எஸ்.ஆர்.ராவ் தலைமையில் கடலுக்கு அடியில் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த டைவர்ஸ் (கடலில் மூழ்குபவர்கள்) உடன் நானும் டைவிங் செய்தேன்.

இந்தக் கடலாய்வின்போது கடலுக்கு அடியில் 45 மீட்டர் நீளத்தில் 7 மீட்டர் தூரத்தில் மண்படிவங்களைக் கண்டறிந்தோம். ஒரு படிவத்தை ஆய்வு செய்தபோது, அது 2 மீட்டர் சுற்றளவுக்குப் புழுதிகளால் மூடப்பட்டிருந்தது. கரையிலிருந்து நாலரை கி.மீ. தூரத்தில் 67 அடி ஆழத்தில் மனிதர்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்றளவும் இருக்கின்றன. செம்பூரான் கற்களை வைத்து அடுக்கிக் கட்டப்பட்ட கட்டடங்கள் அப்போது கண்டறியப்பட்டன. எங்களது ஆய்வின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தமிழக கடலாராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது" என்கிறார் தொல்லியல் நிபுணர் செல்வராஜ்.

ஒரிஸா பாலு
தமிழர்களின் தொன்மை குறித்தும், கடல் மீன் வளம் குறித்தும், பூம்புகார் மற்றும் குமரிக்கண்டம் போன்ற கடலில் மூழ்கிய நகரங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருபவர் ஒரிஸா பாலு. இவர், ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு மையம் என்ற அமைப்பை நிறுவி, கடல் சார்ந்த ஒட்டுமொத்த ஆராய்ச்சியையும் இதன் கீழ் ஒருங்கிணைத்து வருகிறார்.

ஒரிஸா பாலு கூறும்போது,  "தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் கார்பன் 14 ஆய்வு அடிப்படையில் கடலுக்கு அடியில் இருக்கும் பூம்புகார் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்கின்றது. கிரஹாம் கடல்மட்ட உயர்வின் அடிப்படையில் 9,500 ஆண்டுகள் பழமையானது. கடலுக்குள் இருக்கும் கட்டடங்கள், உடைந்து போன கப்பல்களின் பகுதிகள் போன்ற இடங்களில்தான் அதிகமான மீன் வளங்கள் இருக்கின்றன. ஏனெனில் இடிபாடுகளுக்கிடையேதான் மீன் குஞ்சுகள் பெரிய மீன்களிடமிருந்து தப்பிப் பிழைக்க முடியும் என்பதுடன், அந்தப் படிவங்கள் மீது முட்டையிடவும், மீன் குஞ்சுகளைப் பாதுகாக்கவும் முடியும்.
பூம்புகாரிலும் இது போன்ற இடங்கள் இருக்கின்றன. கடல் பற்றி அதிகமாக மீனவர்களுக்குத்தான் தெரியும். அதனால், மீனவர்களின் துணையோடு எனது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். இதுபோல பூம்புகாரிலும்  கடலில் மூழ்கும் குளியாளிகளுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு ஆவணப்படுத்த உள்ளோம்" என்றவர், சமீபத்தில் பூம்புகாரில் ஒரு கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

புலவர்.தியாகராசன்

இந்தக் கலந்தாய்வில் மீனவர்கள், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களும் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட ஓய்வு பெற்ற தமிழ்த்துறைப் பேராசிரியர் தியாகராசன், ‘பூம்புகாரின் வரலாற்று எச்சங்கள்’ எனும் அரிய ஆய்வு நூலை எழுதியவர். இவர் பூம்புகாரில் ஆய்வு மேற்கொள்ள வரும் தொல்பொருள்துறை, அகழாய்வுத் துறை அறிஞர்கள் அத்துணை பேருடனும் தொடர்பில் இருந்தவர். "இந்தக் கடலை அறுபது வருஷமா பாத்துட்டு இருக்கேன். நான் பார்த்த காலத்திலிருந்து கடல் இப்போ ரொம்ப உள்ளே வந்திருக்கு. அம்பது வருஷத்துக்கு முன்னாடி கடல் காலையில் உள்வாங்கி அந்தியில் வெளியே வரும். அப்போ அங்கே இருந்த கோயிலில் மக்கள் சாமி கும்பிட்டு வருவாங்க. காலையில் உள்வாங்கும்போது, மெதுவாகவும் வெளிவரும்போது வேகமாகவும் வரும். இப்போ இருக்கிற இந்தக் கண்ணகி சிலை மூன்று முறை இடம் மாறிடுச்சு" என்று கலந்தாய்வில் பேசினார்.
பேரா.தியாகராஜன்





மற்றொரு பேராசிரியர் தியாகராஜன், "பெரும்பாலும் வரலாறு சார்ந்த ஆய்வுகளை செய்வதும், மேற்கொள்ள தூண்டுவதும் தமிழ்த்துறை பேராசிரியர்களே. ஏனெனில் இலக்கியத்தில் இருக்கும் வரலாற்றின் உண்மையை தேடுபவர்கள் எங்களைப் போன்றவர்களே" என்றார்.





ஜெகன்
அடுத்து பேசிய மீனவர் ஜெகன், "கடலுக்குள் 65 இடங்கள்ல பார் (மீன் இனப்பெருக்கம் செய்யக் கூடிய இடிபாடுகள், தீவு போன்ற பகுதிகள்) இருக்கு. கிட்டத்தட்ட எல்லா இடங்கள்லயும் ஆழம் ரொம்பக் குறைவாகத்தான் இருக்கு. இந்த பார்கள்லதான் நாங்க போய் மீன் பிடிப்போம். ஒவ்வொரு பாருக்கும். காவிரி பார், பூம்புகார் பார்னு பேர் இருக்கும். எங்ககிட்ட இருக்கிற கருவி மூலம் ஒவ்வொரு பாரும் எவ்வளவு ஆழத்துல எவ்வளவு நீளத்துல எவ்வளவு பெரிசா இருக்குனு பாக்க முடியும். கிட்டத்தட்ட கடலில் 21 கி.மீ. வரை இந்த மாதிரி நிறைய பார்கள் இருக்கு" என்றார்.
இரா. கோமகன்

தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடற்புறப் பிரிவில் பணியாற்றிய பொறியாளர் இரா.கோமகன், "1998ம் ஆண்டு 45 மீட்டர் தூரத்தில் கடல் இருந்தது. 2009ல் 60 மீட்டர் கடல் ஊடுருவியது. தற்பொழுது மேலும் 10 மீட்டர் அளவிற்கு கடல் அரிப்பால் கரை பாதிப்படைந்துள்ளது. மொத்தத்தில் வானகிரி கடற்கரை 70 மீட்டர் அரிப்புக்குள்ளாகியுள்ளது. தமிழகத் தொல்லியல் ஆய்வுகளின்படி பூம்புகார் 5 கிலோமீட்டர் கடல் கொண்ட பகுதி. ஒன்று மட்டும் உறுதியாகிறது, புகாரின் கரை விழுங்கும் கடலின் தாகம் இன்னும் தீர்ந்தபாடில்லை" என்கிறார்.

இந்த ஆய்வுக்காக முதலில் ஒதுக்கிய இரண்டரை கோடியில் 50 லட்சம் மட்டுமே ஆய்வுக்காக செலவழிக்கப்பட்டிருக்கிறது. மிச்சம் என்ன ஆனதென்று தெரியவில்லை. தகுதியான கடலாராய்ச்சி நிபுணர்கள் இல்லாததும் இதுவரை நடந்து முடிந்திருக்கும் பூம்புகார் கடல் ஆய்வுகளைச் சரியான முறையில் அங்கீகரிக்காததும் இந்தப் பின்னடைவுக்குக் காரணங்கள் என்று கூறியவர்கள், கடலுக்கடியில் இருக்கும் நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இப்போது பூம்புகார்

ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். இப்போது குப்பைகள் குவியும் மண்மேடாக மாறியிருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பூம்புகார் வார நாட்களில் குவியும் சுற்றுலா பயணிகளால் பிளாஸ்டிக்கால் நிரம்பி வழிவதும் கண்ணகி சிலையிருக்கும் கட்டடப் பகுதியில் சுற்றுலா வருபவர்கள் தங்களது பெயரினைப் பொறித்து விளையாடியிருப்பதும் ஒருபக்கம் வேதனையளிக்க, மறுபக்கம் பூம்புகாரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும் வானகிரியில் அனல்மின் நிலையம் வர இருப்பது அந்தப் பகுதி மக்களை கவலையடைய வைத்திருக்கிறது. இதிலிருந்து வெளியேறும் கழிவுகளால் கடலில் இருக்கும் மீன் வளம் குறைந்துபோகும் அபாயமும் இருக்கிறது. 




நன்றி: புதிய தலைமுறை,  ஜூலை, 5 2012, (பக்கம் 54 - 56)
இவள் பாரதி

ரோட்டில் காரும் ஓட்டலாம்... வீட்டில் சோறும் ஆக்கலாம்!




பொடிசி


சாலையில் காரை இயக்கவும், சமையலறையில் மாவை அரைக்கவும், சூரிய ஒளியால் முடியுமென்றால் அது ஆச்சர்யம்தானே...சூரிய ஒளியால் இயங்கக்கூடிய காரில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியே வீட்டிலிருக்கும் மின்விசிறி, மின்விளக்கு, கிரைண்டர், மிக்ஸி, டி.வி.ஆகியவற்றையும் இயக்குகிறது.

சோலார் காரை கண்டுபிடித்த ராஜசேகரிடம் பேசியபோது, "மின்தட்டுப்பாடு, பெட்ரோல் விலையேற்றம்னு பல பிரச்சினைகள் நம்மை சிரமப்படுத்துது. இதுக்கு என்ன தீர்வுனு ஓர் ஆறு மாசமா செஞ்ச முயற்சியிலதான் சூரிய ஒளியில ஓடக் கூடிய காரை கண்டுபிடிச்சேன். இன்னும் சில வேலைகள் அதுல செய்ய வேண்டியிருக்கு. ஆனாலும் இதை இப்பவே ஓட்டிட்டுதான் இருக்கேன். இந்த காரோட மேற்கூரையில சோலார் தகடு பொருத்தியிருக்கேன். இது 25 வருஷத்துக்கு பழுதாகாது. இதன் மூலமா பேட்டரியில சேமிக்கப்படுற மின்சாரத்துல 30 கி.மீ. வேகத்துல 50 கிலோமீட்டர்ல இருந்து 200 கிலோமீட்டர் வரை காரை ஓட்டலாம். வீட்டுல கரண்ட் இல்லாத நேரத்துல இதுல இருக்கிற பேட்டரியில கனெக்‌ஷன் கொடுத்து ஒரே நேரத்துல டி.வி., ஃபேன், ட்யூப்லைட், மிக்ஸி  போட்டுக்கலாம். ஆனா, கிரைண்டர் யூஸ் பண்ணும்போது வேற எதுவும் போடக் கூடாது. சூரிய ஒளியில ஒருநாள்லசேகரிக்கிற மின்சாரத்துல இதை எல்லாம் செய்ய முடியும்" என்று அவர் சொல்லும்போதே, ‘வர இருக்கும் மழைக்காலத்தில் இது எப்படி இயங்கும்?’ என்ற கேள்வி எழ... அதற்கும் பதில் தயாராய் இருக்கிறது ராஜசேகரிடம்.
"மழைநேரத்துல அல்லது மேகமூட்டம் மாதிரி சூரிய ஒளி கிடைக்காத சமயங்கள்ல வீட்டுல இருக்கிற கரண்ட்ல செல்போனுக்கு சார்ஜ் போடுற மாதிரி இந்த பேட்டரியையும் சார்ஜ் போட்டுக்கலாம். இது ஒருத்தர் மட்டும் உட்கார்ந்து 30 கி.மீ. வேகத்துல செல்லக் கூடியது. அதனால, இதுக்குத் தனியா லைசென்ஸ்வாங்கத் தேவை இல்லை. சுற்றுச்சூழல் மாசுபாடும் இல்லை. இதைத் தயாரிக்க 45,000 ரூபாய் செலவாகிறது. அடுத்ததாக, இரண்டு பேர் உட்கார்ந்து செல்லக்கூடிய காரை வடிவமைக்கப் போறேன்" என்றார்.



ராஜசேகரன், திட்டக்குடி

முன்பு பைக்!

38 வயதாகும் ராஜசேகருக்கு பெயிண்டிங், வெல்டிங், டிங்கரிங், மெக்கானிக், எலெக்ட்ரிக் போன்ற பல வேலைகள் தெரிந்திருப்பது இந்த காரை வடிவமைக்க பேருதவியாக இருந்துள்ளது. ராஜசேகர், திட்டக்குடியில்உள்ள ஒரு மெடிக்கலில் மருந்தாளுநராகவும், லேப் டெக்னீசியனாகவும் இருக்கிறார். இதற்கு முன் 2008ல் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய பைக்கை வடிவமைத்திருக்கிறார். அந்த அனுபவமே இப்போது காரை வடிவமைக்கவும் தூண்டுகோலாக இருந்திருக்கிறது.


நன்றி: புதிய தலைமுறை, ஜூலை 12, 2012 (பக்கம் 58) 
இவள் பாரதி

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?