Friday 21 May, 2010

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்


இன்று குழந்தைகள் தினம் என்பதற்காக மட்டுமின்றி இந்தக் கேள்விய கேக்கல. ஒவ்வொருவருக்கும் குழந்தைப்பருவம் என்பது மிக முக்கியமானது. உங்கள் குழந்தைப் பருவம் அனுபவம் எப்படியிருந்தது.?
விருதுநகர் மாவட்டம் சாத்துப்பட்டி பக்கத்துல இருக்குற நென்மேனிங்ற கிராமத்துல தான் கழிஞ்சது. அது என்னுடைய அப்பாவுடைய ஊர். அங்கதான் முதல் வகுப்புல இருந்து 11ம் வகுப்பு வரை படிச்சேன். அம்மா, அப்பா எங்க கூட இல்லை. அவங்க வேலை நிமித்தமா வெவ்வேறு ஊர்கள்ல வாழ்ந்திட்டுருந்தாங்க. அதனால தாத்தா பாட்டி கூட இருந்தேன். அது ஒரு பெரிய குடும்பம். தாத்தா, பாட்டி, அப்பா கூட பொறந்த அத்தைகள் எல்லாரும் சேர்ந்த ஒரு பெரிய குடும்பத்துல நான் இருந்தேன். அப்புறம் என் தம்பி இளங்கோ. எழுத்தாளர் கோணங்கினு அறியப்பட்டவர். அவனும் என் கூட வந்து சேர்ந்தான். ரெண்டு பேரும் அந்த கிராமத்துலதான் 10,15 வருஷம் இருந்தோம். 2 வயசுல இருந்து நான் அந்த ஊர்ல இருந்தேன். அப்பா, அம்மா கூட இல்லாத ஏக்கத்தோடயேதான் என்னுடைய காலம் முழுவதும் கழிஞ்சது. தாத்தா பாட்டியுடனிருந்த சந்தோஷமும், அப்பா, அம்மா கூட இல்லாத வருத்தமும் கலந்திருந்தது என் குழந்தை பருவம்.

உங்களுடைய எழுத்தாற்றல் குழந்தை பருவத்துலயே ஆரம்பிச்சுடுச்சா?
அம்மாவுடைய அப்பா அந்த காலத்துலயே புகழ்பெற்ற எழுத்தாளர், நாடக ஆசிரியர், சுதந்திர போராட்டத்துல பங்கெடுத்துக்கிட்டவர். தமிழ்சினிமாவின் பேசும்படத்துக்கு முதல் பாடல், வசனம் எழுதியவர். அப்பா வீட்டுல இருந்து அம்மா வீட்டுக்கு விடுமுறை காலங்கள்ல போவோம். அங்க புத்தகங்கள் இருக்கும். அப்பவே ரேடியோ இருக்குற வீடா இருந்துச்சு. எங்க ஊர்ல ரேடியோ இல்லாத சமயம் அது. அம்மா வீட்டுல தாத்தாவுக்குத் தனி ரூம் இருந்துச்சு. அது ரேடியோ ரூம். எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல அவர் இறந்துட்டாரு. அவர் வீடு பூரா புத்தகங்கள் இருக்கும். அப்புறம் எங்க அப்பா எழுதுவாங்க. எழுத்துங்றது எங்க குடும்பத்துல அதுவும் வாழ்க்கைல ஒரு பகுதி என்ற உணர்வு சின்ன வயசுலயே ஏற்பட்டதுக்கு குடும்ப சூழல் ஒரு காரணம். எங்க வீட்டுல அப்பா, சித்தப்பா, தாத்தா இப்படி எல்லாரும் எழுதுவாங்க. அதனால எழுதுவது வாழ்க்கையின் ஒரு பகுதிங்ற எண்ணம், புரிதல் சின்ன வயசுலயே வந்துடுச்சு.

‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’ங்ற குழந்தைகளுக்கான படைப்பு குறித்து சொல்லுங்களேன்.
அது ரொம்ப பின்னாடி இப்ப எழுதுனது. குழந்தைகளுக்கான சமூகவியல் சார்ந்த கட்டுரைகள். பொதுவா தமிழில் வந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கான கட்டுரைகள், கதைகள் மீது பெரிய அசூயை எனக்கு உண்டு. எதுவும் குழந்தைகளுக்கான உலகத்தோடு குழந்தைகள் மொழியில் இல்லாமல் இருக்கிறது. காக்கா, கீக்கி, கூக்கூ னு இதான் குழந்தைகளுக்கான இலக்கியம்னு உண்டாகி வச்சிருக்காங்க. அது ரைமிங்கா இருக்கு சரிதான். ஆனா குழந்தைப்பருவம்ங்றது 14 வயசு வரை இருக்கு. ஆறாவதுக்கு மேல படிக்கிறவங்க சமூக நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆரம்பிக்கிறாங்க. அவங்களுக்கு சமூகம் பற்றிய கேள்விகள் இருக்கும். எங்க ஊர்ல 96&97ல சாதிக் கலவரம் நடந்துச்சு. சாதினா என்னங்ற கேள்வி அந்த வயசுக் குழந்தைகள்கிட்ட இருக்கு. ஆனா பாடப்புத்தகத்துல இல்ல, எங்கேயுமே இல்ல, அந்த மாதிரி, சாதி குறித்த, சமூகம் குறித்த குழந்தைகளுக்கான கட்டுரை எழுத வேண்டும்ங்ற உணர்வு ஏற்பட்டது. அதுக்காக சோதனை முயற்சியா எழுதுனதுதான்.


குழந்தைகளுக்கான படைப்புகள் பெருகியிருக்குன்னு நினைக்கிறீங்களா?
குழந்தைகளுக்கானப் புத்தகங்கள்னு பேர் போட்டு வர்ற புத்தகங்களின் எண்ணிக்கை பெருகியிருக்கு. அதெல்லாம் குழந்தைகளுக்கான புத்தகங்கள் கிடையாது. இந்த புத்தகங்கள்தான் என்னைக்கும் வந்துட்டே இருக்கே. அது சரியில்லைங்றதுதானே. குழந்தைகளுடைய உலகத்தில் குழந்தைகளோடு நின்று பேசுகிற மொழியில் வருகிற புத்தகங்கள் ரொம்ப குறைவு. குழந்தைகளை நோக்கி இப்ப மாமா கதை சொல்லப் போறேன் கேளுங்கனு போதிக்கிற அறிவுரை சொல்கிற தகவல்களை சொல்கிற புத்தகங்கள்தான் அதிகமிருக்கு. இதுதான் குழந்தைகள் புத்தகங்களாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கு. அப்படிப்பட்ட புத்தகங்கள் வேஸ்ட்.

குழந்தைகளுக்கான படைப்புகள்னு நீங்க எதை சொல்வீங்க?
அது குழந்தைகளும், எழுதுபவரும் சேர்ந்து உருவாக்க வேண்டிய எழுத்து. இருட்டு எனக்கு பிடிக்கும்ங்ற என்னோட புத்தகமே நான் கட்டுரை எழுதி குழந்தைகள் மத்தியில வாசித்து அவங்களையும் வாசிக்கச் சொல்லி, அதுல அவங்க நிறைய கேள்விகள் கேட்டு, புரியாத வார்த்தைகளை நீக்கி கொண்டு வந்தது. அவங்க இந்த கட்டுரை நல்லா இல்லைனு சொல்லி நிறைய ரிஜெக்ட் பண்ணாங்க. அதயெல்லாம் போடாம அப்புறம் அவங்க சொன்னத எல்லாம் சேத்து திரும்ப எழுதி அப்புறம் கொண்டு வந்தேன். அப்டினாலும் 8 கட்டுரை எழுதினதுல் 4தான் எனக்கு திருப்தியா வந்திருக்கு. இது குழந்தைகளுக்காகத் திட்டமிட்டு உருவாக்கப் பட வேண்டியது. இது மாதிரி குழந்தைகளோடு சேர்ந்து உழைத்து உருவாக்கணும்.


‘அரசியல் எனக்கு பிடிக்கும்’ற நூல் யாருக்காக எழுதப்பட்டது?
‘அரசியல் எனக்கு பிடிக்கும்’ங்ற புத்தகம் வந்து தூத்துக்குடியில இருக்குற துறைமுகத் தொழிலாளிகளுக்காக எழுதுனது. அங்க இருக்கக்கூடிய 5000 தொழிலாளர்கள் அங்க இருக்கக்கூடிய தொழிற்சங்கங்கள்ல இருக்காங்க. ஆனா அவங்களுக்கு அரசியல்னா என்னனு தெரியாது. அவங்களுக்கு ஒரு கல்வி புகட்டுவதற்கான ஒரு வாசிப்பு புத்தகமா எழுதுனேன். எல்லாருக்கும் அது பிடிச்சதா இருந்தது. அதனால ஒரு இலட்சம், ஒன்றரை இலட்சம் புத்தகங்கள் போட்டு இன்னும் மறுபதிப்பு போயிட்டு இருக்கு.

உங்க புத்தகங்களோட தலைப்புகள பாத்தீங்கன்னா ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’, ‘அரசியல் எனக்கு பிடிக்கும்’னு இருக்கு. இந்த தலைப்புகள் இயல்பா வந்ததா? இல்ல நீங்க ரொம்ப நாளா யோசிச்சு கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்தீங்களா?
புத்தகத்தை எழுதி முடிச்சுட்டுதான் நாம தலைப்பு வைக்கிறோம். புத்தகத்துல இருக்குற பொருள் சார்ந்துதான் அந்த தலைப்பு இருக்கும். அதே சமயம் புத்தகச் சந்தைல அல்லது புத்தகங்கள் பட்டியல்ல வாசகர்கள் பாக்கும் போது அவங்கள ஈர்க்கணும்ங்றது என்னோட கருத்து. எல்லா புத்தகங்களுக்கும் ஈர்ப்பாதான் தலைப்பு வச்சிருப்பேன்.

உங்களுடைய ஆண்களுக்கான சமையல் குறிப்புகள் பத்தி சொல்லுங்களேன்.
அது ரெண்டு பதிப்பு வச்சிருக்கு. முதல் பதிப்புல ‘ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்’னு வந்தது. இரண்டாவது பதிப்பு ‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’ அப்டிங்ற பேர்ல வந்திருக்கு.

இந்த மாதிரி விஷயங்களை எழுதனும்னு எப்டித் தோணுச்சு?
சமைப்பது ஆண்களுடைய வேலைனு நான் நினைக்கிறேன். சமைப்பது பெண்களுடைய வேலைனு யாருக்கும் சந்தேகம் இல்லாததாக நமது சமூகம் இயங்கிக்கிட்டு இருக்கு. இது ஒரு மிகப் பெரிய ஏமாற்று.

கொஞ்சம் தெளிவுபடுத்தி சொல்லுங்களேன்.
பெண்கள் வேட்டையாடிய காலத்துல இருந்தே உலகத்த, மனித சமூகத்தை பராமரிக்க வந்தாங்க. ஆண்கள் வேட்டைக் காலத்ஹ்டுல இருந்தே சும்மா காடுகளைச் சுத்துபவனாக, ஊரைச் சுத்துபவனாக இருந்திருக்கான். ஆகவே வெளி என்பது ஆணுக்கானதாவும், எல்லாரையும் கவனிக்கிற, பராமரிக்கிற மிகப் பெரிய பொறுப்பு பெண்ணுக்கானதாவும் வேலைப் பிரிவினை வரலாற்றுல ஏற்பட்டுச்சு. இதுல சுமைகளெல்லாம் பெண்ணுக்கும், சுதந்திரமெல்லாம் ஆணுக்கும் வரலாற்றுப் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் நியாயமில்லாத நிலை வந்துடுச்சு. ஆகவே இந்த விஷயம் மனசாட்சியை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் எழுதினேன். திட்டமிட்டு எழுதப்பட்டதுதான் இது. கவிதை, கதை மாதிரி தன்னெழுச்சியா வந்தது இல்ல. அது ஒரு அரசியல் நடவடிக்கை.

நீங்க ஒரு ஆணாக இருந்து கொண்டு சொல்லக் கூடிய இந்தக் கருத்துக்கு ஆண்கள் மத்தியில வரவேற்பு இருந்ததா?
இல்ல. நான் வந்து ஆணாக இல்லை. ஆனாக இருக்கக்கூடாதுனு நினைக்கிறேன். உடல்ரீதியாக நன் ஒரு ஆண். மனரீதியாக ஆணுக்கு என்னன்ன குணங்கள் இருக்கோ அதெல்லாம் அதெல்லாம் தேவையில்லைனு நினைக்கிறேன். இது எனக்கு நானே கண்டுபிடிச்சது இல்ல. ஆணாதிக்கம் என்பதுதான் ஆணினுடைய குணம். அது மட்டுமில்ல. ஆண்மை என்பதற்கான சில அர்த்தங்கள் இருக்கு. ஆண்மை, பெண்மை என்பதெல்லாம் கட்டமைக்கப் பட்டவை. ஆகவே எனக்கு அந்த உணர்வு அப்பப்ப வரும். அதை உடனே உடனே போராடி நான் ஒரு ஆண் இல்லைன்னு போயிட்டே இருக்கேன். நான் ஒரு மனுஷி அல்லது மனிதன் அல்லது ரெண்டும்னே வச்சுக்கலாம். அதனால எனக்கு அந்த உணர்வு இல்லை. ஒரு மனிதனா இருந்து பாக்கும் போது இதெல்லாம் அநியாயம்னு தோணுது. எதெல்லாம் அநியாயம்னு தோணுதோ அதை பத்திதான் பேசணும், எழுதணும்ங்றது என்னுடைய உயிரியல் நடவடிக்கையா நினைக்கிறேன்.

ஆண்களுக்கான சமையல் பத்தி எழுதியிருக்கிற நீங்க வீட்டுல எப்பவாவது சமைச்சிருக்கீங்களா?
நான் வீட்டுல இருக்குற எல்லா நாட்கள்லயும் சமையலறையில் என்னுடைய மனைவியை அனுமதிப்பதில்லை. திருமணமான ஓராண்டு இருவரும் சேர்ந்து சமைச்சோம். அதுக்கப்புறம் கிட்டத்தட்ட 25 வருடமா நான்தான் சமைக்கிறேன். முதல்ல அவங்க கொஞ்சம் தயங்குனாங்க. இப்ப அவங்களுக்கும் பழகிப்போச்சு. அவங்க காலை எந்திரிச்சு பேப்பர் படிப்பாங்க. வேலைக்குப் போற தயாரிப்புல இருப்பாங்க. நான் சமையல் முடிப்பேன். நானும் கிளம்புவேன். அவங்களும் கிளம்புவாங்க.

நல்ல விஷயம்தான். உங்களைப் பாத்து யாராவது மாறியிருக்காங்களா?
மனசாட்சி உள்ளவர்கள் தாங்களே மாறுவார்கள். அத நாம சொல்லணும்னு அவசியமில்ல. நிறைய ஆண்கள் இன்னைக்கு சந்தோஷமா சமைக்கத் துவங்கியிருக்காங்க. வேலைகளைப் பகிர்ந்துக்கிறாங்க. ஒருத்தரைப் பார்த்து இன்னொருத்தர் பின்பற்றுவது அவ்வளவு அதிகமா நடக்காது. என்னோட பழகுற சிலருக்கே இந்த மாதிரி இருக்குறது அவங்க மனச உறுத்துது.

ஆண்கள் சமைப்பதை விமர்சன நோக்கோடு பார்க்கிற பார்வை இருக்கே.
அது குறைஞ்சுக்கிட்டே வருது. நகர்ப்புறங்கள்ல ஏன் கிராமப்புறங்கள்லயும் கூட ரெண்டு பேரும் வேலைக்குப் போற வீடுகள்ல அந்த மாற்றம் வந்துடுச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டு வேலைகளைப் பகிர்ந்துக்கிட்டாதான் வேலைக்குப் போக முடியும்ங்ற சூழல் இருக்கு. இந்த மாற்றங்கள் காலத்தின் சந்தர்ப்பத்தால் வந்திருக்கு. நான் என்ன சொல்றேன்னா, அத ஏன் மனப்பூர்வமா செய்யக்கூடாது. பல ஆண்கள் சமையல்ல உதவி செய்றாங்க. அத உதவினு நினைச்சு செய்றாங்க. உதவினு நினைச்சாலே அது பெண்களுடைய வேலைனு வருது. அது ஆண்களுடைய வேலைனு நினைச்சாதான் மாற்றம் வரும்.

ஆண்டாண்டு காலமா கட்டமைக்கப்பட்ட மூளை, மரபணுக்களில் எல்லாம் திடீர்னு இந்த மாற்றங்களை கொண்டு வந்துடுமா என்ன?
மரபணுக்கள்னு சொன்னா அது இயற்கைன்னு அர்த்தம் வந்துடும். மரபணுக்கள்ங்றது உடம்புல இருக்குற ஒண்ணு. இந்த வேலைப் பிரிவினைங்றது உடல் சார்ந்ததல்ல. சமூகம் சார்ந்தது. சமூகம் திணித்தது. இது கற்பனையானது, பொய்யானது, அராஜகமானது, அறிவியலுக்கு புறம்பானது. இதுக்கு மரபணுக்கள் காரணமில்ல. பழக்கத்துல வந்ததுதான். பழக்கத்த மாத்திக்கலாம்.

பெண்ணியம் குறித்து பேசுகிற எழுத்தாளர்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க?
எல்லாரும் ஒரே குரல்ல ஒரே புரிதலோட பேசுறதில்ல. பெண்ணியத்துக்கான அர்த்தமும் நிரந்தரத்துவமுடைய ஒன்றல்ல. அதனுடைய அர்த்தமும் காலத்திற்கு காலம் மாறிட்டே வருது. ஒரு காலத்துல அதாவது 1900ல புருஷன் செத்தா அவன் கூட சேத்து வச்சு கொளுத்துனாங்க. ராஜாராம் மோகன்ராய் மாதிரியானவர்கள் போராடி உடன்கட்டை ஏறுவதை தடுத்து நிறுத்தினாங்க. வாழும் உரிமை தேவை என்பது அன்றைய பெண்ணியமா இருந்தது. அடுத்த கட்டமா கல்வி கற்கும் உரிமை வேண்டும் என்று கேட்டது பெண்ணியமா இருந்தது. அதற்கடுத்த கட்டமா பெண்ணுக்கு வாக்குரிமை வேண்டும் என்று கேட்டது அமெரிக்கா உட்பட பல நாடுகள்ல இயக்கமாவே நடந்தது. அது அன்றைய பெண்ணியமா இருந்தது. அது காலத்துக்கேற்ப மாறுபடுது. பெண்ணியம்னா என்ன ஆணுக்கு சமம் என்கிற சிந்தனையும், அதற்கான சமூக உத்திரவாதத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்கிற குரல்தான் பெண்ணியம்னு சொல்றோம். அதை உண்மையாகப் பேசுபவர்களை எப்போதும் மதிக்கிறோம்.

ஒரு படைப்பாளிக்கான சமூக அக்கறையாக எதை சொல்வீர்கள்?
எல்லா மனிதர்களுக்கான சமூக அக்கறை எதுவோ அதுதான் படைப்பாளிக்கும். படைப்பாளிக்கு எது சமூக அக்கறையாக இருக்க முடியும்னா அவன் வாழுகிற சமூகம் ஏற்றத்தாழ்வு இல்லாததாக, பால் பேதமற்றதாக, சாதி, மத பேதமில்லாததாக, சமத்துவம் நிறைந்ததாக எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதான அவா, அதை நோக்கிய பயணமும், அதற்கான உழைப்பும் செலுத்துவதுதான் சமூக அக்கறை. ஒவ்வொருத்தரும் அவங்கவங்களுக்கு சாத்தியமான வழிகள்ல செய்றாங்க. படைப்பாளிங்றவன் அதை எழுதுறான். இவன் மனசாட்சியோட தொடர்புடையவன். ஆகவே இவன் மனங்கள நோக்கிப் பேசுகிறவன். தகவமைக்கிறவன். அதனால இவனுக்குக் கூடுதலான பொறுப்பிருக்கு. மத்தவங்க பேசுற மாதிரி இவனுடைய வார்த்தைகள் இருக்க முடியாது. இன்னும் கூடுதல் பொறுப்புள்ள வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுகிற அவசியம் இவனுக்கு இருக்கிறது.

ஒரு படைப்பாளி சம்பாதிக்க வேண்டிய விஷயமா எதைப் பாக்குறீங்க?
எல்லாவிதமான அனுபவங்கள். படைப்பாளி எழுத்தாளனாக இருந்தால் மொழியின் மீதான ஆளுமை. தமிழ்ல எழுதக்கூடிய படைப்புகள் சங்க இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள்ல இருக்கக்கூடிய எல்லாவிதமான மொழி பண்பாட்டுக் கூறுகளையெல்லாம் உள்வாங்கணும். ஒரு நாட்டியக் காரராக இருந்தால் அவர் எல்லாவிதமான நாட்டிய அடவுகளையும் கற்றவனா இருக்கணும். ஏனா மொழி என்பது ஊடகம். அதனூடாகத்தான் சமூகத்திடம் பேசப் போகிறோம். உறவு கொள்ளப் போகிறோம். அதனால இதெல்லாத்தையும் சம்பாதிக்கணும்.

நவீன படைப்புகள் மக்களைச் சென்று சேர்வதில் சிக்கல் இருக்கிறது. இதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க.?
மக்கள் என்பவர்கள் ஒரே தரமான கூட்டமல்ல. இப்ப பள்ளியில படிக்கிறாங்க. அதுல ஒண்ணாப்புக்கு, அஞ்சாப்புக்கு, பத்தாப்புக்குனு தனித்தனி பாடங்கள் இருக்கு. அதே மாதிரி எழுத்தாளர்கள்ல ஒண்ணாப்புக்கு எழுதுறவங்களும் இருக்காங்க. 12ம் வகுப்பு எழுதுறவங்களும் இருக்காங்க. நீங்க அஞ்சாப்பு படிச்சிட்டு 12ம் வகுப்பு புத்தகத்த வாங்கிப் படிச்சுட்டு புரியலனா அது எழுத்தாளனோட குற்றமல்ல. தன்னை வளர்த்துக் கொள்வதில் வாசகனுக்கும் பங்கு இருக்கு. அது போல எல்லாருக்கும் புரியும்படியான சென்று சேரும் படியான எழுத்துக்களும் இருக்கு. அதனால இதுல வாசகர்கள் எழுத்தாளர்கள் ரெண்டு பேருக்கும் பங்கு இருக்கு.

‘வெயிலோடு போய்’ங்ற உங்க சிறுகதை திரைப்படமாக்கப்பட்டது பற்றி..
5,6 வருஷத்துக்கு முன்னால சசி திரைப்படமாக்குறேன்னு கேட்டாரு. தயாரிப்பாளர் கிடைக்க தாமதமானதால ‘பூ’ங்ற பேர்ல 2009 வெளியானது.

அந்த சிறுகதை பற்றி சொல்லுங்களேன்.
ஒரு கரிசல் கிராமத்தில் சொந்த அத்தைப் பயன், மாமாப் பொண்ணுக்கும் இடையில ஏற்படக்கூடிய அனுபவங்கள்தான் கதை. சிறு வயசுல இருந்து ஒண்ணா விளையாடி, ஒண்ணா பேசி வரக்கூடிய கட்டத்துல அந்த குறிப்பிட்ட அன்புங்றது காதலா இருக்காது. அந்த வயசுல அது அன்பு, அக்கறையா இருக்கும். எதையும் அவனோடு இல்ல அவளோடு பகிர்ந்து கொள்ளக்கூடிய உந்துதல் இருக்கும். அது பருவ வயதில் காதலா மாறுது. அது ஒரு பக்கமா இருக்கு. அவனுக்கு இந்த காதல் இல்லை. ஆனா அவளைக் கல்யாணம் செய்யமுடியாத சூழல்ல இருப்பான். ரெண்டு பேருக்கும் வெவ்வெறு இடத்துல திருமணமாகுது. திருமணமானவுடனே காதல் கட்டாயிடணும். அது இருக்கக்கூடாது. அதான் இங்க இருக்கக்கூடிய விதி. இந்த கதை அதை மீறுது. திருமணத்துக்குப் பின்னாலும் தன்னுடைய மச்சான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறா அவ. அப்டி இருக்குறது சரியா தப்பாணு கேட்டா அவளுக்கு சரி. தப்பெல்லாம் தெரியாது. அதே சமயம் தன்னுடைய கணவனிடமும் அன்னியோன்யமா இருக்கக்கூடியவ. இதுதான் அந்த கதையின் மையம்.

‘வெயிலோடு போய்’ அப்டிங்ற 4 பக்க சிறுகதைய எப்டி ரெண்டரை மணி நேர திரைப்படமா கொடுக்க முடியும்?
அதாவது ரெண்டு கதைய ஒண்ணாக்குனோம். ‘அசோக வனங்கள்‘ங்ற கதை பால்ய காலத்தையும், ‘வெயிலோடு போய்’ங்ற கதை வெவ்வேறு இடங்கள்ல திருமணமான பிறகு சந்திக்கும் போது நடக்குறதையும் சொல்றது. கதையே ஒரு நாள்ல நடக்குறதுதான். ஊருப் பொங்கலுக்கு மச்சானும், மச்சான் சம்சாரமும் வர்றாங்கன்னு கேள்விப்பட்டு பக்கத்து ஊர்ல இருந்து வந்து பாத்துட்டு போகலாம்னு வந்திருப்பா. வந்து பாத்துட்டு மச்சான் நல்லா இல்லைனு தெரிஞ்சதும் அவ மனசு உடைஞ்சு திரும்புறா. இதுல ஃப்ளாஷ் பேக்ல அவங்க பால்ய காலம் வரும்.

முழுக்க முழுக்க ‘பூ’ படத்த உங்களோட அப்டைப்புனு சொல்ல முடியுமா?
கதை என்னோடது. சினிமா அவருடையது. திரைக்கதைல கொஞ்சம் சேத்துருக்காரு.

திரைக்கதைல உங்க பங்களிப்பு இனி தொடருமா?
அது என்னோட கையில இல்லை. யாராவது நல்ல இயக்குனர் கேட்டா கொடுக்கலாம்.

ஒரு படைப்பாளிக்கான விருதுங்றது அங்கீகாரம்தானே..
எனக்கு ஒவ்வொரு வேலையும் முக்கியம். அது மாதிரி எழுதுறங்றது முக்கியமான வேலை. இத தனிச்சுப் பாக்கல. அதனால இந்த படைப்புக்கு இவ்ளோ அங்கீகாரம் வந்திருக்கணுமேனு நினைக்கல. ஒரு வாளிக்கு அங்கீகாரம் வந்திருக்கணும். ஒரு வாளி இல்லை. அரை வாளிதான் வந்திருக்குனு ஒண்ணுமே கிடையாது. நாம எழுதுறோம். நாம எழுதியிருக்குறது சரியா இருக்கா? அதான் நம்ம கவலையா இருக்கணும். நான் பெரிய எழுத்தாளர். எழுதி முடிசுட்டேன். படிக்கிறதும், படிக்காததும் அவன் வேலைன்னு விட முடியாது. மக்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு. உன் கதைய படிக்கிறது அவங்களுக்கு முக்கியமான வேலை கிடையாது. மக்கள்கிட்ட கொண்டு போய் சேக்குறது உட்பட அது எழுத்தாளர்களோட வேலைதான்.

ஒரு கட்டுரைல அக்கா கையால அடி வாங்காத ஏக்கத்தை வெளிப்படுத்துயிருப்பீங்க?
அக்கா என் காத திருகி, என் தலைல ஒரு கொட்டு வைக்கிறதுக்கு எனக்குனுவாழ்க்கைல எனக்கு வாய்ப்பு கிடைக்கல. எனக்குனு அக்கானு ஒருத்தி பொறந்தவ சின்ன வயசுலயே இறந்துட்டா. அக்கா கையால கொட்டு வாங்குறவங்க கொடுத்து வச்சவங்கனு எழுதியிருந்தேன். அக்கானு ஒருத்தி இருக்கணும்னு நினைக்கிறேன். எல்லா உறவுகளுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கு. எனக்கு ஒரு அக்கா இல்லைங்ற ஏக்கம் இருக்கு. நான் பொறக்குற முன்னாடியே அக்கா பொறந்து இறந்துட்டதா வளரும் போது சொன்னாங்க. எனக்கு அக்கா பற்றிய நினைவுகள் சின்ன வயசுல இருந்து இருக்கு. மனிதனுக்கு எத்தனையோ ஏக்கங்கள் இருக்கு. அது மாதிரி எனக்கு அக்கா இலைங்ற ஏக்கம்.

ஒரு கட்டுரை எப்படி இருக்க வேண்டும்?
ஒரு கட்டுரை எழுத்தாளன், ஒரு சிறுகதை எழுத்தாளன் அப்டினு ஒண்ணும் யோசிக்கிறதில்ல. எந்த வடிவத்துல எழுத வருதோ அந்த வடிவத்துல எழுதிட்டுப் போக வேண்டியதுதான். ஒரு விஷயத்த சொல்றதுக்கான வடிவம் சரியாயிருக்குதானு அதன் உள்ளடக்கம்தான் தீர்மானிக்கணும். எந்த ஒரு எழுத்தின் வடிவத்தைத் தீர்மானிப்பதும் அதன் உள்ளடக்கம் தான். நம்ம முகத்துல எவ்வளவு சதைகள், எவ்வளவு எலும்புகள் எந்தெந்த அளவுல இருக்குங்றத பொறுத்துத்தான் முக வடிவமிருக்கும். எழுத்தும் அதைப் போலானதுதான்.

சில நேரங்கள்ல எழுத்துக்கள் பிரச்சாரமா இருக்குங்ற விமர்சனத்த நீங்க எப்டி பாக்குறீங்க?
இப்படிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்வதே இல்லை. எழுத்துங்றது பிரச்சரத்துக்காகத்தானே. உலகத்துல எழுதப்பட்ட ஒவ்வொரு எழுத்தும் ஏதோ ஒன்றை இன்னொருவருக்குச் சொல்வதற்காக எழுதப்பட்டதுதான். பிரச்சாரம்னா என்ன? ஒரு கருத்தை இன்னொருவருக்குச் சொல்வது அல்லது இன்னும் பல பேருக்கு சொல்வது. எந்த எழுத்து யாருக்கும் சொல்லப்படாத எழுத்து. இது பிரச்சாரம், அது பிரச்சாரம்னு சொல்றவங்க அரசியல் செய்றாங்கன்னு அர்த்தம். அதெல்லாம் தூர வச்சிட்டு நாம எழுதிட்டு இருக்க வேண்டியதுதான்.

உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள்னு யாரைச் சொல்வீங்க?
நிறைய பேர் இருக்காங்க. கு.அழகிரிசாமி, புதுமைப் பித்தன், தஸ்தாவெஸ்கி, மார்க்ஸிம் கார்க்கி. ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒவ்வொருத்தர் பாதிச்சிருக்காங்க. பிரபஞ்சன், வண்ண நிலவன், வண்ணதாசன். சில எழுத்துக்கள் எல்லா வயசிலயும் பாதிச்சுட்டு இருக்கும்.

நீங்க அடிக்கடி படிக்கிற புத்தகம் பற்றி..
அது துறைசார்ந்ததா இருக்கு. ஈ.எஸ்.நம்பூதரி எழுதிய ஈன்டிஅ ஜீலன்னிங் இன் அரிசிச் அப்டினு எகனாமிக் புத்தகம். லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ இலக்கியத்துல கு.அழகிரிசாமியின் குறிப்பிட்ட சில கதைகள். இதெல்லாம் வெவ்வேறு காலகட்டத்துல நம்ம அனுபவங்கள விரிவுபடுத்தும். அந்த வாசிப்பனுவம் வேறுபடும். ஒரு சிறந்த படைப்பு ஒவ்வொரு முறையும் வித்தியாசமா இருக்கும்.

உங்க இலக்கை அடைஞ்சதா நினைக்கிறீர்களா?
இதுவரை என்ன செஞ்சுக்கிட்டேருந்தேனோ அதான் இலட்சியம்னு வச்சுக்க வேண்டியதுதான். வாழ்க்கையில் இறுதி வரை இதை தொடர்ந்து நம்முடைய மக்களுக்காக சமூக நீதிக்காக எந்தெந்த வழியில் முடியுமோ அந்தந்த வழியில் உதவுவதுதான் இலட்சியமா இருக்க முடியும்ணு நினைக்கிறேன். மக்களுக்கு சொல்ல வேண்டிய விஷயமா எதை நினைக்கிறீங்க? சொந்தமா யோசிக்கணும். சொந்த வார்த்தைகளைப் பேசணும், நமது சொந்த மரபுகளைப் பேண வேண்டும். வெளியே, நமது சொந்த மரபுகளைப் பேண வேண்டும். வெளியே இருந்து எது வந்தாலும் அதை பார்த்து வியக்கக்கூடாது. அது நல்லதா? கெட்டதானு சீர்தூக்கிப் பார்த்துதான் ஏற்கணும். வெளியே இருந்து வருவதாலயே அதை நிராகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அது நமக்கு சொந்த மரபை அபகரிக்காமல் இருக்குமாங்றத பாக்கணும். இன்றைக்கு இதுதான் அவசியம்னு நினைக்கிறேன்.

சொந்த மரபு என்பதன் அர்த்தம்?
சொந்த மரபு என்பது நமக்கான பாரம்பரியம். இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளுக்கு பாரம்பரியம் இருக்கிறது. உலகின் மிகச் சிறந்த நாடுகள்ல இந்திய நாகரீகமும் ஒண்ணு.

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?