Friday 28 November, 2008

உனக்குள் நான்..

உனதசைவுகளில்
தொடக்கி விடுகிறது
எனக்கான இளைப்பாறல்...

*************************************

வரமும் கோபமும்
ஆளுக்கொரு திசையில்
நம்மை இழுத்துப் போடும் போதும்..
எங்கிருந்தோ
வருடி விட்டுப் போகிறது...
கண்களின் குறும்புன்னகை..

*****************************************

எந்தத் திசையிலிருந்தாலும்
நேர்க்கோட்டில்
சந்தித்துக் கொள்ளும்
கண்கள் சொல்லி விடுகின்றன...
ஒருவரை ஒருவர் தேடியதை..

**********************************************

முத்தமிடத் துடிக்கும்
உனது உதடுகளுக்கு
எப்படிச் சொல்லுவேன்...
இமைக்கும் தோறும்
மொத்தமாய் உன்னை
முத்தமிடுவதை...

**************************************

கண்களுக்குள் இதயமும்
இதயத்திற்குள் கண்களும்
சில சமயங்களில்...

உனைப் பார்த்தவுடன்
இதயம் படபடப்பதும்
கண்கள் துடிப்பதும்...

*************************************

நேரங்காலமற்ற
பணி உளைச்சலிலிருந்து
மீட்டெடுக்கும்
முயற்சியில்
புதைந்து போகிறேன்...
நானும் உளைச்சலுக்குள்...

***********************************************

சொல்லி விட்டுப்
போவதை விட
சொல்லிக் கொள்ளாமல்
போகும் தருணங்களில்
சுமையாகின்றன..
உன் நினைவுகள்..

********************************************

இமைகளும் சுமையாகின்றன...
உன்னைக் காணாத போதுகளில்
நீரும் மோராகின்றது
உன்னைக் கண்டதில்...

*********************************************

நமக்குள் நேரும்
சண்டைக்குப் பிறகு
பூக்கின்றன..
என்னிடம் கை நிறைய
கவிதைகளும்..
உன்னிடம் நேசம் வழியும்
கண்களும்...

******************************************

உயிரோடோ
மெய்யோடோ
சேராமல்
துணைக்காலாய்
தனித்திருக்கிறேன்...
பொருத்தமான
உயிர் மெய்யாய்
நீ இருந்தால்..

***********************************

நமக்கான
விஷயங்களில்
ஏற்படும் முரண்களை விட
பிறரால்
தோற்றுவிக்கப்படும் முரண்கள் ...
இமயமாய்...

**************************************************

தொடர்பு எல்லைக்கு
அப்பாலிருக்கையில்
புரட்டுகிறேன்
நமது முதல் சந்திப்பின்
பக்கங்களை....

*******************************************************

நீ அணைக்கத் தவறும்
அழைப்பினை
என்னுடையதென
அறிந்ததும்
ஒரு குறுஞ்செய்தி மூலம்
குதூகலப் படுத்துகிறாய்..

****************************************************

எதேச்சையாய்
கன்னம் கிள்ளிப் போனாய்..
ஒவ்வொரு முறை
கடக்கும் போதும்
உனக்குள் கிள்ளிப் போடுகிறேன்
சிறு நெருப்பை..

*****************************************************






No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?