Friday 15 June, 2012


பணி செல்லும் பெண்கள் ஜீன்ஸ் அணியத் தடையா?

அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் ஜீன்ஸ், டீசர்ட் போன்ற அநாகரிகமான உடைகளை அணியக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது அரியானா மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம். இதனால் சர்ச்சை எழுந்துள்ளது

டைகள் பெண்களை அழகுபடுத்துபவை. ஆனால் நீண்டகாலமாகவே, ஆடை அணிவது தொடர்பான உத்தரவுகள் பெண்களைப் படுத்தி எடுத்துக்கொண்டிருக்கின்றன. அப்படியொரு சமீபத்திய உத்தரவாக அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் நாகரிகமான உடைகளையே அணிய வேண்டும். ஜீன்ஸ், டீசர்ட் போன்ற அநாகரிகமான உடைகளை அணியக் கூடாது. சேலை மற்றும் துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ் அணிவது சிறப்பானதாக இருக்கும்என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது அரியானா மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம்.  அரியானா அரசின் முக்கியப் பொறுப்புகளில் பெண்களே பெருமளவு  இருக்கும் நிலையில், அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, அந்த மாநிலத்திலுள்ள அரசு பெண் ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து மத்திய சமூக நலத்துறை அமைச்சர் கீதா புக்கல், "நீதிபதிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரைப் போன்று சராசரிப் பெண்களும் குறிப்பிட்ட ஆடைகளையே அணிய வேண்டும் என்பது சரியல்ல, இதை அநாகரிகம் என்று கூறுவதும் முறையானதல்ல. பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பதற்காகத்தானே தவிர, அவர்களைக் கட்டுப்படுத்தி இயக்குவதற்கு அல்ல" என்று கருத்து தெரிவித்துள்ளார். அரியானா உத்தரவு சரிதானா என்று தமிழகத்திலுள்ள பல்வேறு தரப்புப் பெண்களிடம் கருத்துக் கேட்டோம்...பொரிந்து தள்ளிவிட்டனர்.


சுமதி, வழக்கறிஞர்
சுமதி (வழக்கறிஞர்)
"இது மிக முட்டாள்தனமான உத்தரவு. உலகம் நொடிக்கு நொடி உருமாறிக்கொண்டிருக்கும் வேளையில் ஜீன்ஸ் போடுவதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.பெண்கள்தான் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்பதுபோல பேசுவது அபத்தமானது. உடையணிவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். எனக்கு மிக வேண்டிய ஒருவருடைய திருமண வரவேற்பு. அன்று வேலையில் இருந்து சரியான நேரத்திற்குத் திரும்ப முடியவில்லை. வீட்டிற்குச் சென்று பட்டுப்புடவை கட்டி வருவதற்குள் நிகழ்ச்சியே முடிந்துவிடும். அதனால் ஜீன்ஸ் உடையிலேயே நான் நிகழ்ச்சிக்குசென்று வருகிறேன் என்றால் அதில் என்ன தவறு?சல்வாருக்குப் போடும் துப்பட்டாக்களை சில இளைஞர்கள் பிடித்து இழுப்பது, பேருந்தில் ஏறும்போது படியில் மற்றவர்கள் காலில் சிக்கி மிதிபடுவது, பைக்கில் செல்லும் போது துப்பட்டா வாகனத்தில் சிக்கி விபத்துக்குள்ளாவது போன்ற பிரச்சினைகள் எதுவும் ஜீன்ஸ் அணியும்போது ஏற்படுவதில்லை. அதேபோல் உடலை முழுவதுமாக மூடுவதோடு, மிகப் பாதுகாப்பான ஆடையாகவும் இருப்பது ஜீன்ஸ் மட்டுமே."

சூர்யா

சூர்யா (படத்தொகுப்பாளர்)
"இது சுதந்திர நாடு. இங்கு பெண்கள் எப்படி உடுத்த வேண்டும் என்று ஓர் அரசு கூறுவது ஆரோக்கியமான விஷயமல்ல. எனக்கு எது வசதியான உடையோ, அதைத்தான் அணிய முடியும் என்று அரியானா மக்கள் சொல்ல வேண்டும். அரியானாவில் ஜீன்ஸ் அநாகரிகமான உடையென்றால் மற்ற ஊர்களில் ஜீன்ஸ் அணிபவர்கள் அநாகரிகமானவர்கள் என்கிறதா அந்த அரசு? சேலையை அணிந்துகொண்டு குனியவோ, நிமிரவோ முடியாது. பேருந்தில் ஏறும்போது தடுக்கி விடுகிறது. தூக்கிப் பிடித்துக்கொண்டு ஏறினால் முழங்கால் வரை தெரிகிறது. ஆனால் ஜீன்ஸ் அப்படியல்ல, பெண்களுக்கு கௌரவம் சேர்ப்பதோடு, கம்பீரத்தையும் தருகிறது."


சாந்தி
சாந்தி (எம்.பி.ஏ.மாணவி)
"சமீபத்தில் ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது அங்கு ஜீன்ஸ், டீசர்ட் அணிந்திருந்த பெண்களைவிட, கையில்லாத மேல்சட்டையும் சேலையும் கட்டியிருந்த ஒரு பெண்மணியின் ஒவ்வொரு அசைவும் அவர் உடுத்தியிருந்த ஆடையால் பலரது பார்வைக்கு இலக்காகி விட்டது. எந்த ஓர் உடையையும் நாகரிகமாகவோ, அநாகரிகமாகவோ உடுத்தலாம் என்பதற்கு இது ஓர் உதாரணம். மற்ற ஆடைகளை விட ஜீன்ஸ் விலையும் குறைவு. வசதியும் அதிகம். ஜீன்சுடன், லங் டாப், குர்தி போன்றவற்றை அணிவதில் கிடைக்கும் பாதுகாப்பும், திருப்தியும் வேறெந்த ஆடையிலும் இல்லை. வெளியூர் போகும்போது ஒரு ஜூன்ஸ், ரெண்டு டாப்ஸ் எடுத்து வைத்துக் கொண்டால் சுமையும் குறையும். சுகமும் கூடும்."
ஜெயகல்யாணி

ஜெயகல்யாணி (பண்பலைத் தொகுப்பாளர்)
"ஜீன்ஸும் ட்ரெண்டியான ஒரு டாப்சும் அணிந்திருக்கும்போது ஏற்படுகிற ஒரு மிடுக்கான தோற்றம் வேறெந்தவிதமான உடைகளிலும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியவில்லை. ஜீன்ஸ் அணிந்திருக்கும்போது தைரியமாக இருக்கிறது. நாகரிகம் வளர்ந்த இந்த நவீன காலத்தில் இப்படியொரு பித்துக்குளித்தனமான உத்தரவைப் போட்டிருக்கும் அரியானா அரசை என்னவென்று விமர்சிப்பது? அரியானா அரசு அலுவலகத்தில் சுடிதார் அனுமதிக்கிறார்கள். ஆனால் இத்தனை வசதியான ஜீன்ஸுக்கு மட்டும் தடை போடுவது பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடாக இருக்கிறது."



தமிழ்ச்செல்வி ( மாநிலத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்)
"பொத்தாம்பொதுவாக இந்த மாதிரி தடை விதிப்பது தவறு. ஜீன்ஸைப் பலரும் துவைக்காமல் பல நாட்களாக உடுத்துவதால் தோல் நோய்கள் உட்பட குழந்தைப் பேற்றைப் பாதிப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த மாதிரி ஆரோக்கியம் சார்ந்த காரணங்கள் ஏதும் சொல்லப்படவில்லை. அப்படியென்றால், என்ன காரணத்திற்காக அரியானாவில் அலுவலகம் செல்லும் பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாதென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது? இதுகுறித்த பின்னணித் தகவல்களை முழுமையாக அறியாமல், நாம் மேலோட்டமாக கருத்துச் சொல்வது முறையாக இருக்காது. பொது இடங்களில் பணிபுரியும்போது மற்றவர்கள் கண்ணை உறுத்தும்படியான ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை."

ஜீன்ஸ் பிறந்த கதை
1848ம் ஆண்டு கலிபோர்னியாவில் தங்கவேட்டை நடந்தது.பலர்  சுரங்கங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த லெவி ஸ்ட்ராஸ்என்ற இளைஞர் துணி வியாபாரம் செய்வதற்காக கலிபோர்னியா சென்றார். சுரங்கத்தில் வேலை பார்க்கும்  அவரது வாடிக்கையாளர்கள் சுரங்கத்தில் கடினமான வேலைகள் செய்வதால் அடிக்கடி பேண்ட் கிழிந்து விடுவதாகப் புலம்பினார்கள்.

டெண்ட் அடிக்கப் பயன்படும் கேன்வாஸ் துணியிலேயே பேண்ட் தைத்தால் என்னவென்று யோசித்த லெவி, கேன்வாஸ் துணியில் பேண்ட் தைத்தார். அந்தப் புதிய ரக கேன்வாஸ் பேண்ட்கள், சுரங்கத் தொழிலாளிகளை மிகவும் கவர, அவரது வாடிக்கையாளர்களாக மாறினர். அதன்பின் இத்தாலியிலிருந்து ஜென்னொஸ் என்ற நீல வண்ணத் துணியினை வாங்கி பேண்ட் தைத்தார். நாளடைவில் ஜீன்ஸ்என்ற பெயர் அதற்கு உருவானது. பிரான்சிலிருந்து நீம் என்றழைக்கப்பட்ட துணியை வாங்கித் தைத்ததால் டெனிம்என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவள் பாரதி 
நன்றி: புதிய தலைமுறை

1 comment:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.
நன்றி.


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?