Thursday 9 August, 2012

கலைகளின் தலைநகரம்



இவள் பாரதி

எத்திசையும் சென்று புகழ் குவித்து வரும் கலைஞர்களை உருவாக்கி வருகின்றன, சென்னையிலுள்ள பல அமைப்புகள்

ஆடல், பாடல், இசை, ஓவியம் மற்றும் சிற்பம் என அத்தனை கலைகளிலும் தலைசிறந்து விளங்கும் கலைஞர்களை தன்னகத்தே கொண்ட தனிப்பெருமைக்குரியது சென்னை. எத்திசையும் சென்று புகழ் குவித்து வரும் கலைஞர்களை வார்த்தெடுப்பதோடு, அவர்கள் வளர்ந்து செழிக்கவும், கலைகள் தழைக்கவும் எத்தனையோ மையங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் சென்னையில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாமா?

கலாஷேத்ரா
இந்திய பாரம்பரிய நடனத்தில் சிறப்புடன் திகழ்ந்த ருக்மணிதேவி அருண்டேல் அவர்களால் 1936ல் அடையாறில் கலாஷேத்ரா ஆரம்பிக்கப்பட்டது. இவரது கணவர் டாக்டர் ஜார்ஜ் அருண்டேலுடன் இணைந்து கலாஷேத்ராவை 1962ல் நூறு ஏக்கர் பரப்பளவில் பெசன்ட் நகரில் விரிவுபடுத்தினார். 1993லிருந்து கலாஷேத்ரா அகாதெமியை அரசே ஏற்று நடத்தி வருகிறது. 1994ல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக இந்திய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. நாட்டியத்திற்காக 1956ல் பத்ம பூஷண் விருது பெற்ற ருக்மணி தேவி இந்தியாவை வடிவமைத்த நூறு பேரில் ஒருவராக, ‘இந்தியா டுடே’ வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். ராதா பர்னியர், ஏ. ஜனார்த்தனன், சாரதா ஹாஃப்மேன், கமலா தேவி சாட்டோபத்யா, தனஞ்ஜெயன், ஜெயஸ்ரீ நாராயணன், கமலா ராஜகோபால் ஆகியோர் கலாஷேத்ரா மாணவர்களில் முக்கியமானவர்கள்.

தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி
1949ல் உருவாக்கப்பட்ட இந்த இசைக் கல்லூரியில் குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல், நாதஸ்வரம், தவில், கடம், கஞ்சிரா,மோர்சிங், கிராமியக் கலை, பரத நாட்டியம் ஆகிய கலைகள் கற்றுத்தரப்படுகின்றன். இவை மூன்று ஆண்டுகள் பட்டயப் படிப்புகளாகும்.

அரசு கவின் கலைக் கல்லூரி
1850ம் ஆண்டு டாக்டர் அலெக்ஸாண்டர் ஹண்டர் எனும் ஆங்கிலேயரால் தொடங்கப்பட்ட கல்லூரி இது. ஆரம்ப காலத்தில் நாற்காலி, மேஜை என ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்குத் தேவையான பொருட்களை கலையழகுடன் தயாரித்துக் கொண்டிருந்தது. பின்னர் தனியொரு பாணியை உருவாக்கிக் கொண்டது. இந்தக் கல்லூரியில் முதல்வராகப் பொறுப்பேற்ற முதல் இந்தியர் சிற்பி ராய் சௌத்ரி. சென்னையின் அடையாளங்களில் முக்கியமான உழைப்பாளர் சிலையும், காந்தி சிலையும் ராய் சௌத்ரியின் கைவண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தானராஜ், முனுசாமி, தனபால், அல்போன்சா, ஆதிமுலம், ஆர்.பி.பாஸ்கரன், தெட்சிணாமுர்த்தி, சந்துரு போன்ற தமிழகத்தின் பிரபலக் கலைஞர்கள் இக்கல்லூரியில் பயின்றவர்களே. இங்குதான் இந்தியாவிலேயே முதன் முதலாக புகைப்படக்கலை வகுப்பு தொடங்கப்பட்டது.

லலித்கலா அகாதெமி
ஓவியம், சிற்பம், புகைப்படம் போன்ற கவின் கலைகளை வளர்த்தெடுக்கும்  நிறுவனம். இதுவொரு தன்னாட்சி அமைப்பு. இந்த அமைப்பு காட்சிக் கூடம், கலைப்பட்டறை போன்ற வசதிகளை வளரும் கலைஞர்களுக்கு செய்து தருகிறது. இது ஒரு வளரும் கலை அருங்காட்சியகம். கல், உலோகம், மரம், செப்புச் சிலைகளை வளர்ப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கித் தரும் இடமிது. ஓவியம், வரைகலை, கலப்பு ஊடகப் படைப்புகள் போன்றவையும் இங்குள்ள கருவூலத்தில் உள்ளன.

சோழமண்டல ஓவியக் கிராமம்
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ளது சோழமண்டல ஓவியக் கிராமம். தமிழ் ஓவிய சிற்பக் கலையுலகின் தலைசிறந்த கலைஞர்களான பணிக்கர், தனபால், கன்னியப்பன், ஆதிமுலம், ராமானுஜன் போன்றவர்களின் முயற்சியால் உருவானது இந்தக் கலைக் கிராமம். கலைப் படைப்பாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்தக் கிராமத்தில் கலைஞர்கள் தங்கி படைப்புகளை உருவாக்கலாம், காட்சிப்படுத்தலாம்.


சென்னையில் உருவான கலைஞர்கள் இருவரின் குரல்கள்
இசையமைப்பாளர் தேவா
"எந்தவொரு தொழிலையும் செஞ்சு பொழச்சுக்கலாம்னு வர்ற யாரையும் சென்னையோட முகத்துக்குத் தகுந்த மாதிரி ஒரு தொழிலைக் கொடுத்துடுது. இசையில இளையராஜா கோலோச்சிக்கிட்டிருந்த காலத்துல நானும் வந்திருக்கேன்னா அது சென்னை தந்த நம்பிக்கைதான்."

கிரேஸி மோகன்
"அவ்வை சண்முகி’ ஹிந்தி ரீமேக்குக்கு வசனம் எழுத ஹிந்தி ரைட்டர் குல்சார்சென்னை வந்தார். அப்போ, ‘மதராஸிகளுக்கு ஹ்யூமர் சென்ஸ் அதிகம்’னு சொன்னார். ‘எல்லாம் மதர் ஆஸிதான்’னு சொன்னேன். உண்மைய சொல்லணும்னா எனக்கு அடுத்த ஜென்மம் இருந்தா, நான் சென்னையிலேயே  பிறக்கணும்னு ஆசைப்படுறேன்."


சென்னைக்கு வந்து சாதித்த இரு கலைஞர்களின் குரல்கள்
ஓவியர் மற்றும் கலை இயக்குநர் டிராட்ஸ்கி மருது
"நான் ஏழாவது படிக்கும்போது மதுரையிலிருந்து ஒரு திருமணத்திற்காக என் சித்தியுடன் சென்னை வந்தேன். திருமணம் முடிந்த பிறகு திருவிளையாடலில் இடம்பெற்றிருந்த பழைய செட்டெல்லாம் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. சென்னை ஓவியக் கல்லூரியில்தான் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படக் காரணம் அதுதான்.

தனபால், சந்தானராஜ், ஆண்டனிதாஸ் என கிட்டதட்ட இந்தியாவின் மிக முக்கிய மூத்த கலைஞர்கள் ஓவிய ஆசிரியர்களாக இருந்தார்கள். கல்லூரியில் ஓவியம் பயில்வது தவிர உலக சினிமாக்களை அதிகம் அறிந்துகொள்ளவும் சென்னை பெரிய வாய்ப்பாக இருந்தது. சென்னை எனக்கு அற்புத வாழ்வையும், நல்ல வாப்பையுமே கொடுத்திருக்கிறது."

பாடகர் புஷ்பவனம் குப்புசாமி
"லண்டன் பிபிசி இண்டர்வியூல, ‘உங்களுக்குப் பிடிச்ச இடம் எது?’ன்னு கேட்டாங்க. ‘சென்னைதான் எனக்கு ரொம்பப் பிடிச்சது’ன்னு சொன்னேன். ஏழை, பணக்காரன், நடுத்தரமானவன் எல்லாரும் அவனவனுக்குத் தகுந்த மாதிரி இடங்கள்ல சாப்பிட முடியும். கடைசிவரை தன்னம்பிக்கையும், முயற்சியும் இருக்கிறவனை சென்னை கைவிடாதுங்கிறதுதான் நான் பார்த்த அனுபவம். என்னை வளர்த்தது சென்னைதான்."

இவள் பாரதி

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?