Sunday, 25 December 2011
ஏன் இந்த கொலைவெறி - கேரளமே...
Sunday, 12 June 2011
தமிழ்சினிமாவின் போக்கு
Tuesday, 17 May 2011
விஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட்ட நூல்களின் விவரங்கள்
ஈழத்தில் தன் மகனை போரில் இழந்துவிட்ட தாயின் வேதனை ததும்பிய கவிதை நடையிலான நாவல்
முகங்கள் - தொகுப்பு ஜீவகுமாரன் - விலை 250
ஐம்பது எழுத்தாளர்களின் புலம்பெயர்வு பற்றிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு
கடவுளின் நிலம் - இளைய அப்துல்லாஹ் - விலை 100
பல்துறை பற்றி பேசும் செறிவு மிகுந்த கட்டுரை தொகுதி
தேடலே வாழ்க்கையாய் - என்.செல்வராஜா - விலை 80
ஒரு ஈழத்து நூலகரின் மனப்பதிவுகள் அடங்கிய கட்டுரை தொகுதி
வெள்ளைப் பொய்களும் கருப்பு உண்மைகளும் - இவள் பாரதி - விலை 50
நான் சொல்வதெல்லாம் - இவள் பாரதி - விலை 100
நீ மிதமாக நான் மிகையாக - இவள் பாரதி விலை 100
இவள்பாரதியின் மேற்கண்ட நூல்கள் காதலை பேசக் கூடிய கவிதைகள். காதலாக பேசும் கவிதைகள்
பின்குறிப்பு
இங்கு வாங்கப்படும் ஒவ்வொரு நூலுக்கும் இணையான நூல் ஈழத்தில் உள்ள நூலகங்களுக்கோ, பாடசாலைக்கோ இலவசமாக வழங்கப்படும் என்பது இதன் சிறப்பு
தொடர்புக்கு:
விஸ்வசேது இலக்கிய பாலம்,
visvasethu@gmail.com
cell: 95661 10745
Saturday, 14 May 2011
அறுவடை செய்
விதைப்பதும் அறுப்பதும் அல்ல..
நிலத்தை செம்மைப்படுதுவதும்
களையெடுப்பதும் கூட
நீங்கள் விதைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்
களைஎடுக்காமல்
அறுவடை செய்துதான் ஆக வேண்டும்
புற்களையும் பூண்டுகளையும்..
நீங்களே விதைத்தீர்கள்
இப்படி இடி விழுந்தது போல்
அமர்ந்திருப்பதற்கு?
உழைத்தால் தான் ஒருபிடி கவளமாவது
கை வந்து சேரும்..
பேசாமல் போய் வேலையை பாருங்கள்..
==========
நீங்களே விதைத்தீர்கள்..
விளைச்சலில்
களை வந்துவிட்டதென்று
கவலை கொண்டால் எப்படி?
ஞாபகம் வருதே
மறக்க முடியுமா என்றும்
என்னதான் கதறியும்
மறக்கக் வேண்டியதை நினைவூட்டி
நினைக்க வேண்டியதை மறக்கடித்து
தலை கீழ்விகிதங்கலாய்
கிழிந்து தொங்குகிறது
சில மாற்றங்கள்..
மறக்க முடியுமா?
சொல்லாததையும் செய்தார்கள் என்று அம்மாவும்
என்னதான் செய்கிறார்கள் என்று மக்களும்
வாழ்க தமிழகம்
*******
எல்லாவித கருத்துக் கணிப்புகளையும்
தகர்த்துவிட்டு
ஆள்கிறது மக்களின் மறதி
எந்தவித நல்ல மாற்றங்களும்
வரப்போவதில்லை
என்பது மக்களின் உறுதி
*******
பந்தயத்தில்
வெற்றி என்பது
வலிமையால் அல்ல
எதிரியின்
பலவீனத்தாலும் வாய்த்துவிடுகிறது.
*******
ஒரு கண்ணில் புரையும்
மறு கண்ணில் திரையும்
விழுந்தாகிவிட்டது
மூன்றாவது கண்ணுக்கு
இடம் தேடியநிலையில்
புரை விழுந்த கண்ணிலே
போய் குடிகொண்டது
மூன்றாவது கண்..
எந்த கண்ணும் வழிகாட்டாது
கையால் தடவியே செல்கின்றன..
கால்கள் தட்டுத் தடுமாறி..
எங்கே செல்லும்
இந்த பாதையென அறியாமல்..
*******
Wednesday, 4 May 2011
வானம் - கொஞ்சம் புதிய கோணம்
கதைச்சுருக்கம்
மதவெறி பிடித்த இந்துக்களால் தாக்கப்பட்டு கர்ப்பத்திலிருக்கும் தன் குழந்தையை இழக்கிறது பிரகாஷ்ராஜ் - சோனியா அகர்வால் தம்பதி. தன் அண்ணியின் குழந்தை இறந்து போனதால் வீட்டைவிட்டு ஓடிப்போகும் நசீர் சென்னையில் இருப்பதாக தகவல் கிடைக்க பிரகாஷ்ராஜும் சோனியாவும் சென்னை வருகின்றனர்.
வட்டிப்பணம் கொடுக்காததிற்காக தன் மகனை உப்பளத்தில் வேலைக்கு இழுத்துச் செல்லும் பண முதலையிடமிருந்து தன் மகனை மீட்க போராடும் சரண்யா தனது கிட்னியை விற்க தன் மாமனாருடன் சென்னை வருகின்றார்.
தன் பரம்பரையில் எல்லோரையும் போல தன் மகனும் ராணுவ வீரனாக வேண்டும் என்று ஆசைப்படும் தாயிடம் தான் பாடகனாக, கிடாரிஸ்டாக வேண்டும் என்று தன் குழுவோடு முயற்சிக்கும் பரத் அண்ட் க்ரூப் சென்னைக்கு ஒரு லைவ் நிகழ்ச்சிக்காக வருகிறது.
பாலியல் தொழிலை தனியாக தொடங்க வேண்டும் என ஆசைப்பட்டு தன் அக்காவுடன் அனுஷ்கா சென்னைக்கு வருகிறார்.
அறநூறு கோடிக்கு சொந்தக்காரியான பெண்ணை பொய் சொல்லி காதலிக்கும் சென்னையிலிருக்கும் குப்பத்து இளைஞன் சிம்புவின் கதை.
இப்படி ஐந்து திசைகளில் பயணிக்கும் கதையானது மருத்துவமனையில் ஒரே புள்ளியில் இணைகிறது. பெங்களூர், தூத்துக்குடி என்று வெவ்வேறு ஊர்களில் தொடந்தும் கதை சென்னைக்கு எப்படி வந்து சேர்க்கிறது? அவர்களின் நோக்கம் நிறைவேறியதா? மருத்துவமனையில் வைக்கப்பட்ட தீவிரவாத தாக்குதலில் எல்லோரும் தப்பினார்களா? என்பதே மீதி கதை.
படத்தின் பலம்
படம் ஆரம்பிக்கும் போதான டைட்டில் கார்டு அனிமேஷனை பாராட்டலாம்.
சிம்புவுடன் சந்தானம் வரும் காமெடிக் காட்சிகள் (செயின் திருடும் காட்சிகள், போலீஸ் ஸ்டேசனில் பேசும் காட்சிகள்)
ஆங்காங்கே நறுக்கு தெறித்த வசனங்கள்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பாத்ரூம் இருக்கு நாங்க எங்கையா போவோம்? - திருநங்கை பேசும் வசனம்
பொய் சொல்றது ஈசி. ஆனா உண்மை பேசுறது கஷ்டம் - சிம்பு பேசும் வசனம்
அப்பாவிகளை கொடுமைப்படுத்துற எல்லாருமே டெரரிஸ்ட்தான் - பிரகாஷ்ராஜ் வசனம்
போலீஷை நம்பக் கூடாது. குழந்தையைக் காணாம்னு கம்ப்ளைன்ட் கொடுத்தா பொண்டாட்டியைக் காணாம போகப் பண்ணிடுவாங்க - கணேஷ் பேசும் வசனம்
இவரு பெரிய பாரதிராஜா. ஸ்க்ரீனுக்கு பின்னால இருந்து ஒளிஞ்சு பாக்குறாரு - சந்தானம் பேசும் வசனம்
பணம் இருக்குறவன் சிரிக்க மாட்டான். விசில் அடிக்க மாட்டான். ஜாலியா அனுபவிக்க மாட்டான். போறப்ப பணத்தை எடுத்துட்டா போகப்போறான் - சந்தானம்
உங்க கனவுகளை ஆசைகளை எங்க மேல திணிக்காதீங்க - பரத் பேசும் வசனம்
நாங்க கழட்டிட்டு செய்ற வேலையை நீ யூனிபார்ம் போட்டு செய்றியே, வெக்கமா இல்லை - அனுஷ்கா பேசும் வசனம்.
இப்படியாக வசனங்களுக்கு க்ளாப்ஸ் பறக்கிறது.
யுவனின் பாடல்கள். அதிலும் குறிப்பாக 'தெய்வம் இருப்பது எங்கே' என்ற தீம் பாடல் அருமை. அதன் வரிகளும். படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள். சரண்யா, சரண்யாவின் மாமனார், பிரகாஷ்ராஜை கைது செய்யும் காவல்துறை அதிகாரி, பரத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றும் சிங் இப்படியான கதாபாத்திரங்கள் பேசப்படும் படி இருக்கின்றன. எப்போதும் காதல் செய்து திருமணத்தில் முடிந்து, அல்லது காதல் நிறைவேறுவது அல்லது தோற்று வேறு ஒரு பெண்ணை மணப்பது இப்படியான சலிப்பில் இருந்து சற்றே விலகி க்ளைமாக்சில் வித்தியாசம் காட்டி இருப்பது இவையெல்லாம் படத்துக்கு பலம்.
படத்தில் பலவீனம்
படம் ஆரம்பித்து ஒருமணி நேரம் வரை கதை எந்த திசையில் போகிறது என்பது தெளிவாக புரியாதது.
முஸ்லீம்களையே எப்போது தீவிரவாதிகளாகக் காட்டுவது. அதை ஒரு முஸ்லீமே எதிர்ப்பது போலவும் காட்டுவது. பாடல்களில் கண்ணைக் கூசச் செய்யும் ஒளிப்பதிவுக் காட்சிகள். சில கிளிஷே காட்சிகள். சினிமாவுக்கான சில பார்முலாக்கள். தேவையில்லாத கிளாமர் காட்சிகள்.
ஆனபோதும் ஆண்டனியின் எடிட்டிங் க்ளைமாக்ஸ் காட்சிகளில் பரபரப்பை அதிகப்படுத்துகிறது. படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்களுக்கு பாராட்டைப் பெற்றுத்தரும்.
வானம் - கொஞ்சம் புதிய கோணம்.
--
இவள் பாரதி
Wednesday, 27 April 2011
Wednesday, 20 April 2011
Blood on water - ''தண்ணீரில் இரத்தம்
''தண்ணீரில் இரத்தம்" ஆவணப்படம் சொல்வதென்ன? என்று பார்ப்பதை விட அது மையப்படுத்தும் செய்திகளை நாம் நோக்கலாம். ‘நாங்கள் இலங்கையில் இருக்க முடியாதவாறு சிறிலங்காப் படையினர் எம்மைத் துன்புறுத்துகின்றனர். எங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். எங்களின் சகோதரர்களை, எங்களின் மக்களை சிறிலங்காப் படையினர் சித்திரவதை செய்கின்றனர். அவர்களைக் கொல்கின்றனர். இதனால் அங்கிருக்க முடியாமல் அவுஸ்ரேலியா செல்வதற்காக நாங்கள் புறப்பட்டோம்.’ என்ற குரல் மட்டும் கேட்க அப்படியே தண்ணீரில் இரத்தம் கலப்பது போலான காட்சியுடன் தொடங்குகிறது.
ஜூலை 2009 ல் எடுக்கப்பட்ட கோப்புக் காட்சிகளுடன் விரிவடைந்து பின்னணிக் குரலிலும், பின்னணி எழுத்துக்களிலும் சில விஷயங்களை தெரிவித்தபடி நகர்கிறது தண்ணீரில் இரத்தம்.
கடந்த ஆறு மாதத்தில் மட்டும் இருபது முறை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளார்கள் தமிழீழ மக்கள். அப்படி இலங்கையிலிருந்து தப்பித்து ராமேஸ்வரம் வரும் மக்களில் இளைஞர்களை இராணுவம் பிடித்துக் கொண்டு போய் விடுவதாக முதியவர் ஒருவர் தெரிவிக்கிறார்.
‘தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் தமிழ் மக்கள் அங்கு இயல்பாக வாழ்வதற்கான எவ்வித அமைதியான சூழ்நிலையும் உருவாகவில்லை என்பதையும், தமிழ் மக்கள் இலங்கையிலிருந்து வெளியேறிவிடவே விரும்புகிறார்கள் என்பதையும் அது வெளிப்படுத்துகின்றது.
இதேபோன்றே, தமிழ்நாட்டுக்கும் இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாக வருகின்றார்கள் என்பதையும் ஆதாரத்துடன் அது வெளிப்படுத்துகின்றது. இனவெறி சிறிலங்காப் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க முடியாததாலேயே தாங்கள் இங்கே வந்ததாக ஈழத் தமிழ் மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
தன்னுடன் வந்த இரண்டு பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்கி இலங்கை ராணுவம் கொன்று விட்டதையும், ஒரு சிறுமியின் கால் மட்டும் தனியே கிடந்த கொடுமையையும் கண்ணெதிரே பார்த்த நடுக்கத்தை ஒரு பெண்மணியின் குரலில் கேட்க முடிகிறது.
இலங்கையில் கடந்த வருடம் போர் ஓய்வடைந்ததற்குப் பின்னரும் தமிழ் மக்கள் அங்கு வாழ முடியாத நிலைமை காணப்படுவதையே இத்தகைய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.
மண்டபம் கேம்பின் காட்சிகள் நகருகையில் பின்னணியில்'' கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை '' என்ற பாடல் மனதை ரணமாக்கும் விதமாக இருக்கிறது.
''இலங்கையைச் சிங்கள நாடாக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதைத் தான் செய்து வருகின்றார். மாறாக, சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் வென்றிருந்தாலும் அதனைத்தான் செய்திருப்பார். எங்களைப் பொறுத்தவரை இரண்டு பேரும் ஒரே மாதிரிதான். தமிழ் மக்களைப் பொறுத்த வரை அழிவு அழிவு தான்'' என தமிழ் இளைஞர் ஒருவர் கூறுகின்றார்.
ஒரு காட்சியில் "அவன் ஒரு கிரிக்கெட் வீரனாக விரும்புகிறான். போர் வீரனாக அல்ல" என்ற வசனத்துடன் அமைந்த காட்சி எதை சொல்கிறது நமக்கு?
சீமான் பேசுகையில், ''வவுனியா தடுப்பு முகாம்களுக்குள் தமிழ் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சொல்வதற்கு எந்தவொரு அனைத்துலக ஊடகத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இத்தகைய தடுப்பு முகாம்களில் இருந்து மீளக் குடியேற்றப்பட்ட தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை அறியவும் முயலவில்லை. இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மக்களின் வாழ்விலும் எத்தகைய முன்னேற்றமும் இல்லை.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்று முடிந்து விட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு தமிழ் மக்களுக்கான சுதந்திரத்தை வழங்குவேன் என்று குறிப்பிட்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் அம் மக்களுக்கு என்ன சுதந்திரத்தை வழங்கினீர்கள் எனக் கேட்கவும் எவருமில்லை.'' என்று சொல்வது முற்றிலும் உண்மை.
இத்தகைய பிரச்சினைகளால் அதிகம் பாதிப்படைவது மீனவ மக்களே என்பதை பிற்பாதி ஆவணப்படம் விளக்குகிறது.
அதில் ஜே.சி.போஸ் (போட் அசோசியேஷேன் தலைவர்) '' இலங்கையில் போர் ஆரம்பிக்கும் 1983 க்கும் முன் இலங்கை இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு உணவு கொடுப்பதும் உதவி செய்வதும் உண்டு. இரு நாட்டு மக்களும் அன்னியோன்யமாக இருந்து வந்தோம். இப்போது நிலைமை மாறி விட்டது.'' என்றார்.
இதுவரை 4000 இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 1000 மீனவர்கள் காயமடைந்து உள்ளனர். மூன்று வருடத்தில் 500 மீனவர்கள் இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட்டுள்ளனர். என்ற செய்தி எழுத்து வடிவில் வந்து மறைகிறது.
பின்னணியில் தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை கண்ணீரில் மிதக்க விட்டான் என்ற வாலியின் பாடல் மெதுவாக எழுந்து ஒடுங்கியது.
கடல் இருக்குற வரை மீன் இருக்கும். மீன் இருக்குறவரை மீனவன் இருப்பான். கடலுக்கு எல்லை கிடையாதுங்க. இராணுவத்துக்குத்தான் எல்லை உண்டு. என்று ஒரு மீனவர் கூற, புலிகளின் பிரசினை முடிவுக்கு வந்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது 300 க்கும் மேற்பட்டகப்பல்களை இலங்கை கடற்படை சுவர் போல் நிறுத்தி எங்களை மீன் பிடிக்க விடாது தடுக்கிறது. தனுஷ் கொடியைத் தாண்டினாலே இலங்கை ராணுவம் வந்து விடுகிறது. அது இந்திய பார்டரா? இலங்கை பார்டரா? என்று கூட தெரியவில்லை.என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.
"இதனால இருட்டுக்குள்ள போய் மீன் பிடிக்கிறோம். அப்ப கூட வந்து மறிச்சு மீன எல்லாம் நாசம் பண்ணி படக உடைச்சு தள்ளிடுறாங்க. போன தடவ போட்டுள வந்து இடுச்சதுல போட்டுக்குள்ள தண்ணி இறங்கி நாங்கல்லாம் தண்ணிக்குள்ள குதிச்சு உயிர்க்கு போராடுனோம். இன்னொரு போட் வந்து எங்களை காப்பாத்தி கூட்டி போச்சு. "
"இங்க ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் இருக்கோம். எல்லாரும் தினமும் கடலுக்கு போனாதான் மீன் பிடிச்சு வயித்த கழுவ முடியும். ஒரு நாளைக்கு கடலுக்குப் போகாட்டாலும் எங்கள் நிலைமை மோசமாயிடும். இந்த நிலைமையில நாங்க உயிரோட இருக்கணும்னா இந்த இந்திய அரசு இலங்கை அரசோட பேச்சு வார்த்தை நடத்தி கச்சத் தீவுல மீன் பிடிக்க அனுமதிக்கோனும். இரண்டு நாட்டு மக்களும் கடலுக்குள்ள சந்திச்சு பேசிக்கிட்டு சாப்பாடு சாப்பிட்டுக்கிட்டு இருக்கணும்ணு விரும்புறோம்."
இப்படி ஒவ்வொருவரும் தனது எண்ணங்களை தெரிவித்துக் கொண்டிருக்க, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி மதிப்புள்ள ஆயிரம் படகுகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது..என்பதும் இதனால் ஒரு நாளைக்கு பத்து லட்சம் ரூபாய் நஷ்டம் எனவும் பின்னணி எழுத்துக்கள் தோன்றி மறைகிறது.
போர் முடிவடைந்து விட்டது என்பது சமாதானம் உருவாகி விட்டது என்று அர்த்தப்படாது என ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச கற்கை நெறிகளுக்கான பேராசிரியர் அனுருத்த செனோய் தெரிவிக்கின்றார்.
என்.டி.டி.வியின் இந்த ஆவணப்படத்தில் தமிழ் மக்கள் பேசும் போது மட்டும் ஆங்கிலத்தில் அதை பின்னணி எழுத்துக்களில் காட்டும் போது ராஜா பக்ஷே பேசும் போதும், மற்ற பத்திரிக்கையாளர்கள், வல்லுனர்கள் பேசும் போது அதை தமிழில் எழுத்துக்களாக காட்டாதது.. யாருக்காக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை எழுப்புகிறது.?
ஆன போதும் தண்ணீரில் இரத்தம் என்ற ஆவணப்படத்தின் முயற்சியை பாராட்டத்தான் வேண்டும். படம் முடிந்த நிலையில் ஒரு பெண் , எனது கணவனை இலங்கை ராணுவம் கொன்று விட்டது. அவரது உடல் கூட கிடைக்கவில்லை.
அதற்கு பின் பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளத்தேன். என் பையன் ஐந்து வருடங்களுக்கு முன்னால் குண்டடி பட்டு வீட்டில் இருக்கிறான். இனி என் இரண்டு பிள்ளைகளும் கடல் பக்கம் போக வேண்டாம். எங்களுக்கு கடல் வேண்டாம்." என்று கண்ணீருடன் சொல்லும் போது தண்ணீரில் இரத்தம் இல்லை. இரத்தமே இங்கு தண்ணீராய் ஓடுகிறது என்பதை வலியுடன் ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது.
இவள் பாரதி
(ஒரு வருடத்திற்கு முன் ஒரு இணையதளத்திற்காக எழுதப்பட்டது)
Tuesday, 19 April 2011
தமிழ் சினிமாவில் ஒப்பனை
தமிழர்களின் பழங்கலைகளில் ஒன்றான தெருவில் நிகழ்த்தப்படும் தெருக்கூத்திலே துவங்கி வீதி நாடகம் முதல் மேடை நாடகம் வரை தன் பயணத்தை மேம்படுத்திக்கொண்டே வந்த ஒப்பனைக் கலை சினிமாவில் தவிர்க்க இயலாத இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
ஒப்பனை மிகச் சிறந்த கலை. ஒப்பனை செய்பவர்கள் ரசனைத் தனமை அதிகம் கொண்டவர்கள். ஒப்பனைக் கலைஞர்கள் சினிமாவின் பல்வேறு பிரிவில் பணியாற்றுகிற இயக்குனர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், இசையமைப்பாளர், ஒலித்தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் இப்படி பலரையும் சார்ந்து இயங்கக்கூடிய மிக முக்கியமான பணியினைச் செய்பவர்கள்.
கலைகள் அறுபத்து நான்கில் கவின் கலைகள் என்பவற்றில் ஓவியம், ஒப்பனை ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. அதாவது அழகான தோற்றத்தைக் கொண்டு அமைவது என்பதாகும். சொல்லும் செய்திக்கு அழகையும், நேர்த்தியையும் கொடுப்பது மட்டும் ஒப்பனையின் நோக்கம் அல்ல. அது கதாபாத்திரத்தின் தன்மைக்கும், கதாபாத்திரம் நிகழ்த்துகிற காலத்துக்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதும் முக்கியமே.
ஒப்பனைக் கலைஞர்களே கூட ஆடை வடிவமைப்பாளர்களாகவும், சிகையலங்கார கலைஞர்களாகவும் இருக்கலாம் அல்லது இவையனைத்தையும் தனித்தனி பிரிவினரே கூட கவனிக்கலாம்.
ஒப்பனையின் நோக்கம் என்பது கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஒப்பனையச் செய்வதே. ஒப்பனை என்பதை காட்சிப் புனைவு என்றும் கூட சொல்லலாம். மிகைப்படுத்தல் என்று பார்த்தால் தெரியாது. அப்படிச் சொல்வதும் பொருத்தமானதாக இருக்காது. ஆனால் மிகைப்படுத்தப்பட்டு இயல்பாகக் காட்சிப்படுத்தும் தன்மை ஒப்பனைக் கலைஞர்களையே சாரும்.
அந்தகால தமிழ்சினிமாவில் தொடங்கி ஒப்பனையின் பல்வேறு பரிமாணங்களை இன்று வெளிவந்திருக்கும் சினிமா வரை காண முடிகிறது. பாரதியார், வீர பாண்டிய கட்டபொம்மன், ஒளவையார் என அத்தனை பேரையும் சினிமாவில் பார்த்து அறிந்து கொண்டவர்களே அதிகம்.
இன்றைய தமிழ்சினிமாவில் ஒப்பனை குறித்து எடுத்துக் காட்டிச் சொல்லக் கூடிய பல திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. எப்போதும் நகைச்சுவை நடிகராகவே பார்த்துப் பழக்கப்பட்ட வடிவேலு சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவந்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் அரசனாக நடித்திருப்பார். அதை நாம் ஏற்றுக் கொள்ளும் விதமாக அவரது ஒப்பனையும் மிக அருமையாக அமைந்திருக்கும். இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களுக்கும் மிகச் சரியான வேறுபாட்ட வடிவேலுவின் நடிப்பு உணர்த்தியிருந்தாலும் ஒப்பனைக்கு மிக பங்கு இருக்கிறது.
ஒப்பனை பற்றி பேசும் போது உலக நாயகன் கமலின் பல்வேறு திரைப்படங்களை உதாரணமாகக் கூற முடியும். குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய படங்கள் அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, இந்தியன், தசாவதாரம் போன்றவை. இந்தியனில் வயதான தாத்தாவாக மிக அழகாகக் காட்டப்பட்டது ஒப்பனையால்தான். அதிலும் அவ்வை சண்முகியில் கமல் ஏற்று நடித்த பெண்பாத்திரமானது பெரிய வெற்றியை தேடித் தந்தது. ஒப்பனைக் கலைஞர்கள் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தசாவதாரம் படத்தில் பத்து கதாபாத்திரமும் வெவ்வேறுவிதமான ஒப்பனையைக் கொண்டிருக்கும். அதிலும் ஃபிலிட்சர் என்ற வில்லன் காதபாத்திரம் ஏற்றிருந்த ஒப்பனை தத்ரூபமாக ஒரு அமெரிக்கனை கண்முன் நிறுத்தியது. அதே போல் கமல் செய்திருந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒப்பனையின் கடும் உழைப்பில் உருவானவை என்பது ரசிகர்களைப் பரவசப்படுத்தியது.
ஒப்பனை என்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. ஒப்பனை என்பது ஆடை வடிவமைப்பு, ஆடை நிறத் தேர்வு, சிகையலங்காரம், முகப்பூச்சு ஆகியவற்றை கொண்டதாக கூறப்பட்டாலும் நிகழ்வு நடைபெறும் இடம், சூழல், வெளிச்சம், பிண்ணனி, காலகட்டம், பழக்கவழக்கம், கல்வி, நோக்கம், பணி போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது என்பது சினிமாவை உற்றுக் கவனிப்பவர்களுக்கு எளிதில் விளங்கும்.
கைலியை தொடைக்குள் மேல் ஏற்றிக் கட்டி பருத்தி வீரனில் பார்த்த கார்த்தி பையா படத்தில் இல்லை. பையா படத்தில் அவரது தோற்றம் பளிச்சென்றிருந்த்து.
பாலாவின் சேது படத்தில் விக்ரமின் கடைசி நேரக் காட்சிகள், நாடோடிகள் பட்த்தில் சசிக்குமாருக்கு கண் புருவத்திற்கருகில் வெட்டுக்காயம் ஒன்று ஏற்பட்டு மெது மெதுவாக படம் முடியும் வ்ரை காயமாறும் காட்சிகள், எந்திரனில் சிட்டியாக வரும் ரஜினியின் காட்சிகள் போன்றவை நினைவில் நிற்பவை.
ஒப்பனைக் கலைஞர்களுக்கான விருதுகளும் சமீபகாலமாகக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக தன் திரையுலக பயணத்தைத் துவங்கியவர்தான் சில்க் ஸ்மிதா. ஒப்பனைக்கென தனியாக கலைஞர்களை வைத்துக் கொள்ளாமல் தானே ஒப்பனை செய்து கொள்வாராம் நாடகத்திலும், சினிமாவிலும் தனக்கென தனி சாம்ராஜ்யம் அமைத்த டி.பி.ராஜலட்சுமி.
முதன் முதலில் அமெரிக்காவில் 1948ஆம் ஆண்டுதான் விருதுகளுக்கான பிரிவில் ஒப்பனைக்கு இடம் கிடைத்தது. இதுவரை தமிழில் கமலின் ஹே ராம்(2000) படத்திற்காக சரிகாவும், பாரதி(2001) படத்திற்காக பி.கிருஷ்ணமூர்த்தியும், சமீபத்தில் நம்மகிராமம்(2011) படத்திற்காக இந்திரன் ஜெயன்சும் ஒப்பனைக்காக தேசிய விருது பெற்றவர்களாவர்.
ஒப்பனை என்பது கறுப்பு நிறத்தவரை சிகப்பாக காட்டுவது என்பது போய் சிகப்பாக இருப்பவரை கருப்பாகக் காட்டுவதும், சண்டைக் காட்சிகளில் அடுத்தடுத்த படப்பிடிப்பின் போது முந்தைய காட்சியின்ன் தொடர்பு துண்டிக்கப்படாமல் கவனித்து ஒப்பனை செய்வதும், உயரமானோரைக் குள்ளாமாகக் காட்டுவதும், உயரம் குறைவானோரை உயரமாகக் காட்டுவதும், வயதானோரை இளையோராகக் காட்டுவதும், இளையோரை வயதான ஆளாக்க் காட்டுவதும், அழகாகக் காட்டுவதும், அழகின்றி காட்டுவதும் ஒப்பனையே.
ஒப்பனையை ஒரு ப்ரஃபஷனல் படிப்பாக எடுத்துப் படிக்கும் அளவுக்கு அதன் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் இன்னும் அவர்களை இரண்டாம் நிலை ஊழியர்களாகவே கருதுவதை தவிர்க்கலாம். விஜய் டிவி ஆண்டுதோறும் வழங்கும் திரையுலகத்திற்கான விருதுகளை நடிகை கவுதமியும், பானு யோகேஷும் பெற்றுள்ளனர்.
ஒப்பனைக்குள்ளேயே மேக் அப், காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல் எனப் பலவாறான பிரிவுகள் வந்துவிட்டது. இவை அனைத்தும் சேர்ந்ததுதான் ஒப்பனை என்பதையும் நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை சிறிதளவும் சிதைக்காமல் அதே நேரம் சற்று மிகைப்படுத்தலுடன் கூடிய ஒப்பனைகள் சமீபகாலத்தில் வரத் துவங்கியுள்ளன. சினிமா என்பதே ஒரு ஒப்பனை சார்ந்த தொழிநுட்பம் என்பதை ஏற்றுக் கொள்ளும் நாம் ஒப்பனைக்கலைஞர்களையும் அப்படி மதிக்க வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
இவள் பாரதி
Monday, 18 April 2011
விஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட இருக்கும் நூல்களின் விவரங்கள்
இப்படிக்கு அன்புள்ள அம்மா - கலாநிதி ஜீவகுமாரன் (டெனிஷ் மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கவிதை வடிவிலான நாவல்.. )
முகங்கள் - தொகுப்பு: ஜீவகுமாரன்(ஐம்பது எழுத்தாளர்களின் புலம்பெயர்வு பற்றிய சிறுகதைகள் )
நீ மிதமாக நான் மிகையாக - இவள் பாரதி (கவிதைகள் )
நான் சொல்வதெல்லாம் - இவள் பாரதி (கவிதைகள் )
கடவுளின் நிலம் - இளைய அப்துல்லா (கட்டுரைகள் )
தேடலே வாழ்க்கையாய் - என்.செல்வராஜா (கட்டுரைகள் )
நாள் : 01-05-2011
நேரம் : காலை 10 மணி
இடம் : கன்னிமாரா நூலகம், சென்னை
அனைவரும் வருக..
மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்க..
devathaibharathi@gmail.com
Sunday, 17 April 2011
Thursday, 7 April 2011
பஞ்ச பூதங்களால் வஞ்சிக்கப்பட்ட ஜப்பான்
உறங்கா நகரம் - சமன் செய்யப்பட முடியாத இரவுகளின் துயரம்
இரவுகள் பற்றி எண்ணற்ற படைப்புகள் வெளிவந்திருக்கின்றன..
அன்றைய தஸ்தாவெஸ்கியின் வெண்ணிற இரவுகள் தொடங்கி, அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு, மையக்கிழக்கு நாடுகளிலும், தெற்காசியாவையும் சேர்ந்தஎழுத்தாளர்களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் கதைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஆயிரத்தொரு இரவுகள், ஜா.மாதவராஜின் சாலைப்பணியாளர்களின் வாழ்க்கை சாலைக்கே வந்துவிட்ட கொடுமையைச் சொல்லும் ஆவணப்படமான இரவுகள் உடையும், கவிஞர் மதுமிதாவின் படைப்பாளிகளின் இரவு அனுபவங்களை மையமாகக் கொண்டு தொகுக்கப்பட்ட கட்டுரை நூலான இரவு வரையான ஏராளமான நூல்கள் வந்திருக்கின்றன. இத்தனை படைப்புகளும் வித்தியாசமான படைப்புகள் தான். உறங்காநகரமும் வித்தியாசப்பட்டிருக்கிறது. காரணம் சக மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் விதத்தில் தனித்துவம் பெறுகிறது.
குங்குமம் வார இதழில் தூங்கா நகரம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். உடல் வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், வாக்குசொல்லிகள், ஊர்க்காவலர்கள், மருத்துவர்கள், பத்திரிக்கை போடுபவர்கள், பி.பி.ஓக்களில் வேலை செய்பவர்கள், உணவகத்தில் சமைப்பவர்கள், தபால் ஊழியர்கள், பால் வியாபாரிகள் இப்படி 27 தொழில்களின் இரவு நேரத்தை மிக இயல்பாகவும், அதே சமயம் இறுக்கமாகவும் பதிவு செய்திருக்கிறார்.
இரவு ஓய்விற்கான நேரம் என்று சொல்லிக் கொள்ளும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை இரவு உற்பத்தியின் களம். படைப்புகளின் மூலம். சற்று நேரத்தில் விழிக்க இருக்கும் விடியலுக்கு நடை பாதை அமைத்துக் கொடுக்கும் பெருஞ்சாலை.
இரவின் பனிக்குடத்தில் பிறக்கக் கூடிய ஏராளமான கருக்களை உணரத்தவறிய அல்லது கண்டு கொள்ளாது ஒதுங்கி நிற்கும் மனிதர்களை பின்னந்தலையில் அடித்து இங்கே பார்.. ’உனக்காக உறக்கத்தை தொலைத்து அலையும் மனித வாழ்க்கையை’ என்று சொல்லக் கூடியதாக இந்நூலை பார்க்கிறேன்.
விழித்து எழுந்தவுடன் எப்போதோ தாமதமாகும் ஒருநாளில் இன்னும் பேப்பர் வரவில்லையா? பால் வரவில்லையா? என்று எரிச்சல் படுமுன் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் இதற்குப் பின்னாலிருக்கும் பேருழைப்பின் விஸ்வரூபம் புரியவரும்.
நான் பண்பலையில் பணியாற்றும் போதும் சரி, பத்திரிக்கையாளராக இருக்கும் போதும் சரி சாலைகளைக் கடக்கும் போது சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளைக் காணும் போது அவர்கள் எப்படி இரவில் மட்டும் வேலை செய்கிறார்கள் என்று பலமுறை யோசித்துள்ளேன். இரவு நிகழ்ச்சி முடித்து 12 மணிக்கு தாமதமாக வீடு திரும்பும் போது ஒட்டப்பட்டிருக்கும் அறிவிப்புகள், காலை நிகழ்ச்சிக்காக ஐந்து மணிக்கே அலுவலகம் வரும் போது மாறியிருக்கும்.
எட்டுமணி நேரத் தூக்கத்தின் அவசியம் பற்றி ஆய்வுகள் வந்து கொண்டே இருக்கும் வேளையில் நின்று பேசக் கூட நேரமின்றி இரவுகளை நகர்த்திக் கொண்டு ஓடுகிற மனித வாழ்க்கையை நம் கண்முன் நிறுத்தி இருக்கிறார். இரவுகள் விற்பனைக்கு என்று சொல்லாமல் சொல்லும் இவர்களின் பெரும் துயரம் கவிந்த வார்த்தைகள் ஈரமுள்ள எந்த நெஞ்சையும் தாக்கக் கூடியவை. சிலரைத் தவிர ஏனையோர் பொருளாதாரத்தின் சிறு பகுதியைக் கூட ஈட்ட முடியாமல் படும் வேதனைகள் இந்தக் கட்டுரைகளில் உச்சமாகத் தெரிகின்றன.
நாம் கடந்து செல்கிற மனிதர்களின் வாழ்க்கைப் பதிவாக உறங்கா நகரம் இருக்கிறது. இரவுகளில் குறி சொல்லிச் செல்லும் குடுகுடுப்பைக்காரர், சாலைகளைத் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர்கள், பேப்பர் போடுபவர்கள், பால்காரர்கள், ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் பணியாளர்கள், காவல்துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், வாட்ச்மேன்கள், மீனவர்கள் இப்படி தன்னால் முடிந்தவரை அனைத்துத்துறையினரையும் பதிவு செய்திருக்கிறார்.
’கீழ்வானம் சிவக்கிறது. நகரம் தன் சுயமுகத்தை தரித்துக் கொண்டு விடியலை உணர்த்த, பச்சையம்மா முகம் இருண்டு கிடக்கிறது.’
’நின்று பேசிய நேரத்தை சமன் செய்வதற்காக மேலும் வேகம் கூட்டுகிறது சிலம்பரசனின் சைக்கிள்’
’நொடிப்பொழுதில் சைரன் சத்தம் தேய்ந்து மறைய, சோகம் தோய்ந்த கனமான நிசபதம் அசோக் நகரைக் கவ்வுகிறது’
’பனி தகிக்கிறது’
போன்ற வார்த்தை பிரயோகங்கள் நீலகண்டனின் ஆளுமையை எடுத்தியம்புகின்றன. நீலகண்டனின் மொழிநடையும், அவர் கையாண்டிருக்கும் வார்த்தைகளும் இந்த கட்டுரைகளில் உலவும் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் மேலும் வலுவைக் கொடுத்திருக்கின்றன. இதில் மக்கள் பேசும் மொழிகளும் பேச்சு வழக்கில் பதிவு செய்யப்பட்டிருப்பது அவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது. சந்தியா பதிப்பகத்தின் அழகிய வடிவமைப்பு வாசகர்களை தொடர்ந்து வாசிக்கத் தூண்டுவதாக அமைந்திருக்கிறது.
இயந்திரகதியாக, இயங்கியல் விதியாக பகல்களாக இரவுகளை மாற்றிக் கொள்ள நேர்ந்திருப்பது பெரும்பாலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கே வாய்த்திருக்கிறது. ஆனால் இவர்களுக்கு பகல்கள் இரவாகி விடுகின்றனவா என்றால் அதுவும் இல்லை. எப்போதும் இயங்கி ஆக வேண்டிய இந்த மக்களுக்கு இரவும் அதனூடான இசையுமே துணையிருக்கிறது.
இதில் இன்னொரு விடயமாக நான் பார்ப்பது என்னவெனில பெரும்பாலான இரவு நேரப் பணியிடத்திலும் பண்பலை கேட்பதைக் குறிப்பிட்டிருக்கும் ஆசிரியர் பண்பலையின் இரவு நேர தொகுப்பாளர்களை எப்படி தவறவிட்டார் என்பது தெரியவில்லை.
தூக்கத்தை விற்று காசாக்குகிற பி.பி.ஓவில் பணிபுரியும் கங்கா, தூக்கத்தைத் தொலைத்துவிடுகிற ஊர்க்காவல் படையின் ஊழியர் ரமேஷ்ராஜ், படிப்பை விலையாகக் கொடுக்கும் பத்திரிக்கை போடும் பள்ளிச் சிறுவன் சிலம்பு இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நம்மை அசைத்துப் பார்க்கின்றன.
இதற்காக நீலகண்டன் எத்தனை இரவுகளை செலவழித்திருப்பார் என்று பார்க்க முற்படுகையில் அந்த இரவுகளின் சேமிப்பாக இந்த நூலை காண்கையில் அவர் அந்த செலவினை சமன் செய்துவிடுவதாகக் கொள்ளலாம்.
இவள் பாரதி
Thursday, 10 March 2011
உலகம் வியக்கும் போராளிப் பெண்கள்
காலம் மாறும் போது போராட்டத்தின் வடிவங்களும், முறைகளும் மாறலாம். ஆனால் போராட்டக் குணமும், நோக்கமும் மாறுவதில்லை. ஒவ்வொருவரும் தன்னளவில் போராட்டத்திற்கான முன்னெடுப்புகளை செய்திருக்கிறார்கள். செய்யத்தூண்டப் பட்டிருக்கிறார்கள். சாதா ரண மக்களுக்கான அனைத்து நியாங்களும் கிடைக்க வேண்டி அசாதாரண வாழ்க்கை முறையை வாழ முன்வருகிறார்கள். அந்த போராட்டத்தின் விளைவாக கிடைக்கக்கூடிய பலனை மக்களுக்கே அளிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் போராட்டத்தின் விளைவாகப் பெற்ற உரிமைகளைத் தொடர்ந்து தக்க வைக்க முடியாமல் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு அடிகோலுகிறார்கள்.
தியாகிகளும், போராட்டக் குணமுள்ள ஆளுமைகளும் தனியே பிறப்பதில்லை. மக்களில் ஒருவராக இருந்து மக்களுக்காக குரல் கொடுத்து சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டு நிற்பவரே போராளிகள். இன்றைய காலகட்டத்தில் நம்முடன் வாழ்ந்துவருகிற, சமகாலத்தில் பேசப்பட்ட சில போராளிகள் குறித்து இக்கட்டுரையில் காணவிருக்கிறோம்.
வங்காரி மாதாய் - சுற்றுச்சூழல் பாதுகாவலர்
2004ல் உலக நாடுகள் உற்றுக் கவனித்த பெயர். நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி. நிலைத்த மேம்பாடு மற்றும் அமைதிப் பணிக்காக இவ்வுயரிய விருதைப் பெற்ற மாதாய் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, கென்யா நாட்டைச் சேர்ந்த இவர் எம்.பியாகவும் இரண்டு வருடங்கள் சேவையாற்றிருக்கிறார்.
நாற்பத்தைந்து பேருடன் பதினைந்து பிரதேசங்களுக்குச் சென்று மண் மற்றும் காலநிலைகளில் நிலைத்த மாற்றங்களை ஏற்படுத்தியவர். பல கிராமங்களில் பொருளாதார மேம்பாட்டையும் உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். முப்பது மில்லியன் மரக்கன்றுகளை நட்டு ஆப்பிரிக்க மண்ணிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நன்மை செய்திருப்பவர். பூமிக்கு புதிய சுவாசப்பையை நிர்மானித்தவர். சரியான திட்டமிடுதலும், தொலை நோக்குப்பார்வையும், எதிர்ப்புகளை சமாளிக்கும்
திறனும் இவரின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக அமைந்திருக்கின்றன.
உலகமே முட்டாள்கள் தினம் என்று கொண்டாடும் தினத்தில் தான் 1940-ல் பிறந்தார் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இந்த காடுகளின் தாய். தற்போது எழுபது வயதாகும் வங்காரி மாதாய் தன் செயல்பாடுகளால் தனக்குப் பின்னும் இயங்கக்கூடிய ஒரு வலுவான சூழலை மக்களிடம் விதைத்திருக்கிறார். பெண் பொருளாதாரச் சுதந்திரம் பெறாமல் ஆகப் பெரும் மாற்றங்கள் சாத்தியமில்லை என்பதை இவரது செயல்பாடு தெளிவாக்குகிறது.
வங்காரி மாதாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அவருக்குக் காயத்திற்கு பதிலாக இன்னும் உதவேகமாக செயலாற்றும் தன்மையை வழங்கியிருக்கிறது. ''வங்காரி மிகவும் வலிமையான பெண். இவரை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே எனக்கு விவாகரத்து கொடுக்க வேண்டுகிறேன்'' என்று வங்காரியின் கணவர் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமின்றி தனது பெயரை பின்னால் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும் வழக்கறிஞர் மூலம் தெரியப்படுத்தியவுடன் Mathai என்ற பெயரில் a சேர்த்து Maathai என்று வைத்துக் கொண்டார். மணவிலக்கு பெற்றபின் எக்கனாமிக் கமிஷனில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த வேலையில் ஆப்பிரிக்க நாடு முழுக்க பயணம் செய்ய வேண்டியிருந்ததால் தனது இரு குழந்தைகளையும் தனது முன்னாள் கணவரிடம் ஐந்து வருடங்கள் ஒப்படைத்துவிட்டு தனது பணியை தொய்வின்றி செய்ய ஆரம்பித்தார்.
கென்ய பெண்களின் பிரச்சினைகளைக் கூர்ந்து கவனித்தவர் அம்மக்களிடம் இருக்கும் படைப்பார்வத்தையும், தேவைகளையும் கண்டறிந்து மரக்கன்றுகளை நடுவதென தீர்மானித்து வனத்துறை அதிகாரிகளை நாடியிருக்கிறார். அதிகாரிகள் என்றாலே அகராதியில் காரியவாதிகள் என்று பொருள் போலும். முதலில் மரக்கன்றுகளை இலவசமாக தருவதாக ஒத்துக் கொண்டவர் பின்னர் பணம் கொடுத்து வாங்கச் சொல்லியிருக்கிறார். உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட மக்கள் பணத்தையும், நேரத்தையும் விரயமாக்க விரும்பவில்லை. தாங்களே மரக்கன்று பண்ணைகளை உருவாக்க ஆரம்பித்தனர். இரண்டு மூன்று அடி வளர்ந்ததும் அந்த மரக்கன்றுகளை நட்டு அது பிழைத்தபிறகு பசுமைப்பட்ட இயக்கம் ஒன்றை ஊருவாக்கி அதிலிருந்து சிறு தொகையை அம்மக்களுக்கு வழங்கினர். ஒரு மரக்கன்றுக்குக் கொடுக்கப்படும் தொகை சிறிதுதானெனினும் அது பல மடங்காகப் பெருகும் போது அந்த பணம் பள்ளிக் கூடங்கள் கட்டுவதற்கும், பிள்ளைகளின் கல்விக்கு செலவிடுவதற்கும் பேருதவியாக இருந்தது. இப்படி மக்களை ஈடுபடுத்தி நிலைத்த மாற்றத்திற்கான ஒரு பாதையை ஏற்படுத்தினார்.
இன்று ஆப்பிரிக்க மக்கள் அடைந்திருக்கும் வளர்ச்சி ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகக் கிடைத்தவைதானெனினும் இந்த மாற்றத்தை முன்னெடுத்த வங்காரியின் உழைப்பு பெருமைப்படுத்தப்படவும், வணங்கக்கூடியதாகவும் இருக்கிறது.
குடிநீர் இல்லை, சரியான சாலைவசதி இல்லை, கட்டுமானப் பொருட்கள் இல்லை, உணவு இல்லை, மண்வளமில்லை என்று முப்பது வருடங்களுக்கு முன் இருந்த நிலையைத் தலைகீழாக மாற்றியமைத்திருக்கின்றனர் வங்காரி மாதாவின் தலைமையிலான ஆப்பிரிக்க மக்கள். சுற்றுச் சூழலைப் பேணாத சமூகம் அல்லது நாடு எல்லாவற்றிருக்கும் கையேந்தி நிற்கும் நிலைமையைத்தான் பெறக் கூடும். இன்று தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக சாலையோர மரங்களை அழித்தெடுத்துவிட்டு சாலை நடுவினில் அழகுச் செடிகளை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்ற ஒரு வாகனத்தையும், அலுவலரையும் நியமித்து நாம் சாதித்தது கார்பன் மோனாக்சைடை அதிகப்படுத்தியதும் , சிறுவிலங்குகளையும், பறவையினங்களையும் அழித்ததுதான்தான்.
மரமின்றி மழையில்லை என்பது முதல் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கே தெரியும். ஒரு மரம் வெட்டப்படுகிறதெனில் அதற்கு பதிலாக ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும் எனும் மனப்பாங்கு நம்மிடையே வளர்ந்திருந்தால் இன்று நமது சாலைகளின் இருமருங்கும் பசுமையின் பயணிப்பு தொடர்ந்திருக்கும். இனி நாம் மழை நீர் சேகரிக்க வெறும் தொட்டிகளைக் கட்டிவிட்டு மழைக்காக காத்திருக்க வேண்டியதுதான். சுற்றுச் சூழலைப் பாதுகாக்க காடுகள் அவசியம். காடுகள் மனிதகுலத்தின் நாகரீகத்தை மேம்படுத்தும் என்பதை உலகம் மெதுவாக உணரத் துவங்கியிருக்கும் வேளையில் அதைச் செயல்முறைப்படுத்தியிருக்கும் வங்காரி மாதாய் வணங்கத்தக்கவர் மற்றும் பின்பற்றப்பட வேண்டியவர்.
இசைப்ரியா - ஊடகவியலாளர்.
உலகத் தமிழர்களிடையேயும், ஊடகத்துறையினரிடமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஊடகவியலாளர். புலிகளின் பெண் போராளியும், தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளருமான இசைப்ரியா கடைசிக்கட்ட போரில் தனது கணவரையும், ஆறு மாதக் குழந்தையையும் இழந்து சிங்கள இராணுவத்தால் கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இதை ஐ.நா.வும் போர்க்குற்ற விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
ஒரு போரளியாக தன்னை இய க்கத்தில் இணைத்துக் கொண்ட இசைப்ரியா குரல்வளமிக்கவராகவும், கலைத்துறைக்குப் பொருத்தமானவராகவும் அறியப்பட்டு செய்திவாசிப்பாளரானார். 2006-ல் கிழக்கு மாகாண கடற்புலிகளின் தளபதியான ஸ்ரீராமைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். வேலி என்ற குறும்படத்தில் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் வாழும் ஒரு பெண்ணாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ‘கட்டுமரம் மேலே ஏறி’ என்ற ஒரு மெல்லிசைப் பாடலிலும் நடித்திருக்கிறார். அந்த பாடலுக்குப் படத்தொகுப்பும் செய்திருக்கிறார். இப்படி பல கலைகளைக் கற்று செயல்படுத்தி வந்தவர்.
பெண்களை இழிவுபடுத்தவேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் சிங்கள ராணுவம் தன் கையில் ஏந்தியிருக்கும் குரூர ஆயுதம் வன்புணர்வு. இந்த ஆயுதத் தாக்குதலுக்கு இசைப்ரியாவும் இரையாகியிருக்கிறார். இதனை செல்ஃபோனில் பதிவுசெய்து வைத்திருக்கிறது சிங்கள ராணுவம். இந்த படுபாதக காட்சியை இங்கிலாந்தின் சேனல் 4 வெளியிட்டது. பார்ப்பவர்களைக் கதற வைக்கும் அளவுக்கு படுகோரமாகவும் மோசமாகவும் சிங்களப் படையினர் இசைப்பிரியாவைச் சீரழித்திருந்தனர். வாழ்க்கையில் இப்படி ஒரு கோரமான நிகழ்வைப் பார்த்ததில்லை என்றும், இந்தக் காட்சியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்றும் சேனல் 4 செய்தியாளரே மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.
நெல்லையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் அறிவரசன் இரண்டு வருடங்கள் ஈழத்தில் தமிழ் பணியாற்றியவர். அவர் (2010 ஜனவரி 6) நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் ‘மாலை ஏழு மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை மட்டுமே புலிகளின் 'தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இதில் தினமும் செய்தி வாசிப்பார் இசைப்பிரியா. நல்ல கணீர் குரல் மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு இசைப்பிரியாவிடம் இருந்தது. ஒவ்வொரு நாளும் அவரது செய்தி வாசிப்பை கவனிப்பேன்.
துவக்கத்தில் கடற்பிரிவில் பெண் போராளியாக இருந்துள்ளார். அவரிடமிருந்த கலை மற்றும் இலக்கிய ஆர்வம், குரல் வளம் அறிந்து அவரை அரசியல் துறைக்கு அழைத்துக் கொண்டனர். தமிழீழ வானொலியும் , தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியும் அரசியல் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
அதனால் அரசியல் துறைக்கு மாற்றப்பட்ட இசைப்பிரியா, தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியில் அமர்த்தப்பட்டார். வானொலி மற்றும் தொலைக்காட்சி பணியாளர்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் ஒருமுறை நான் அங்கு சென்றபோது இசைப்பிரியாவை சந்தித்தேன்.
அப்போது அவரிடம், "இசை சரி... பிரியா என்பது தமிழ்ப் பெயர் இல்லையே..." என்றேன். அதற்கு அவர், 'இயக்கத்தில் நான் சேர்ந்தபோது இசை அருவி என்றுதான் பெயரிட்டனர், ஆனால் இசைப்பிரியா.. இசைப்பிரியா.. என்று என் தோழிகளும் உறவினர்களும் அழைத்த்தால், அதுவே நிலைத்துவிட்டது' என்றார்.
இசை அருவி மிக அழகான தமிழ்ப் பெயர், ப்ரியா என்பது தமிழ் கிடையாது என்றேன். மறுநாள் தொலைக்காட்சியில் செய்தியை கவனித்தபோது செய்தி வாசிப்பவர் இசை அருவி என்றே பதிவு செய்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ப்ரியா என்பது தமிழ்ப் பெயர் என்றே நினைத்திருந்தனர். தமிழ்ப் பெயர் அல்ல என்று சொன்னதை ஏற்று உடனே அவர்கள் அதை மாற்றிக் கொண்டது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. துடிப்பான அந்த இளம்பெண் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதை நக்கீரனில் பார்த்து மிகுந்த வேதனைப்பட்டேன் என்றார் அறிவரசன்.
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அந்த இனத்தின் மொழியை அழித்தால் போதும் என்ற எண்ணத்தை வளரவிடாமல் செய்பவர்கள் கலைத்துறையினரே. கலை கலைக்காக அல்ல. மக்களுக்காக. என்று செயற்பட்டு வந்த இனப் போராளிகளில் ஒருவரான இசைப்ரியா கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. எத்தனையோ இசைப்ரியாக்கள் வெளியே தெரியாமல் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதையெல்லாம் இன்றும் கண்டும் காணாமல் இருக்கும் இனம் வரலாறு கூறும் பழிச்சொற்களில் இருந்து தப்பமுடியாது என்பது மட்டும் நிதர்சனம். போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். விதைத்தவன் உறங்கலாம். விதைகள் உறங்குவதில்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
சோமாலி மாம் - மனித உரிமைச் செயற்பாட்டாளர்.
கம்போடியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் இவர் .
சோமாலியிடம் தான் பிறந்தற்கான எந்த அத்தாட்சிப் பத்திரங்களோ, ஆதரங்களோ இருக்கவில்லை. அவளது நினைவிலும் அது பற்றி தெரியவில்லை அவள் 1970 அல்லது 1971 இல் பிறந்திருக்கலாம் என சொல்லப்படுகின்றது. எழுபதுகளின் நடுப்பகுதிலில் கம்போடியமிது Khmer Rouge கொண்ட பயங்கரவாதம் பல மக்களை கிராமப் புறங்களுக்கு தள்ளியது. அந்த நிலையில் அவள் தன் பெற்றோரை Phnong என்ற கிராமத்தில் அவள் தவற விட்டாள். அநாதை ஆகினாள். ஒரு மனிதன் அவளை அவளது தகப்பனைக் கண்டுபிடித்து தருவேன் என சொல்லி அழைத்துக் செல்லும் வரை அவள் அந்த அநாதை இல்லத்திலேயே வாழ்ந்தாள். அவள் அங்கு அவனின் அடிமை என ஒப்பந்தம் செய்யப்பட்டு அடிமையாக நடத்தப்பட்டாள். அவனை தாத்தா என அழைக்குமாறு பணிக்கப்பட்டாள்.
14 வயதிருக்கும் போது வளர்த்தவராலேயே வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டார். வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலுக்கும் தள்ளப்பட்ட சோமாலி யாரோ ஒருவனுக்கு மணம் முடித்துவைக்கப்பட்டார். அவருடைய கணவரிடமும் கொடுமை அனுபவித்த மாம் தினமும் ஆறேழு பேருடைய ஆசைக்கு இணங்க வற்புறுத்தப்பட்டார். மறுத்தால் பாம்புகளும், தேள்களும் விடப்பட்ட அறையில் அடைக்கப்படுவார். இப்படியான வன்முறைக்குள் வீழ்த்தப்பட்ட சோமாலி தெருவில் நின்று தானே ஆள் கூப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட சரியான சந்தர்ப்பம் பார்த்து அங்கிருந்து தப்பியிருக்கிறார்.
கம்போடியாவிலிருந்து தப்பித்த சோமாலி மாம் 1993ல் ஃபிரான்சுக்கு வந்தார். பின் பாரிஸ் சென்ற அவர் திருமணம் செய்து கொண்டார். அப்போது அங்கு அவர் கண்ட உண்மை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நிறைய பெண்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதைக் கண்டு 1996ல் AFESIPஅமைப்பொன்றை உருவாக்கி பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்றினார். தாய்லாந்த், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளிலும் ஹெச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதுவரை 4000 பெண்களைக் காப்பாற்றியுள்ளார். 2007ல் சோமாலி மாம் பவுண்டேஷன் ஒன்றை நிறுவி தீவிரமாகச் செயற்பட்டு வருகிறார்.
அந்த வயதில் நடந்த சம்பவங்களை ஒருநாளும் இரவுகளில் நினைக்காமலிருக்க முடியவில்லை. நினைத்துவிட்டால் என்னைக் கத்தியால் குத்துவதைப் போன்ற உணர்வும், கெட்ட கனவுகளும் வரும். இது தினமும் நிகழ்ந்தபடிதான் இருக்கிறது. என்னால் இதிலிருந்து விடுபட இயலவில்லை. பாலியல் அடிமைகளாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய ரணமாக இருக்கும். வாழ்வது பெரும் போராட்டத்திற்குறியதாகவும் இருக்கும். வலிகளோடு இந்த சமூகத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குற்றவுணர்வும், தனிமையும் சூழ்ந்திருக்கும் இந்த வேதனையிலிருந்து அவர்களை மீட்க வேண்டியது அவசியம். யாரும் அவர்களுக்கு உதவி செய்யவோ, அன்பு செலுத்தவோ முன்வர மாட்டார்கள். அவர்களை நேசிக்கவும், உதவி செய்யவும் முன் வந்து அவர்களுக்கு இந்த உலகை எதிர்கொண்டு வாழும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வழங்குவது என் நோக்கமாக இருக்கிறது.
என்னுடைய அம்மா, அப்பா யாரென்று எனக்கு தெரியாது. எனது வயது தெரியாது, சோமாலிதான் எனது பெயரா என்றும் தெரியாது. நான் தெரிந்து கொண்டதெல்லாம் வலி, வேதனை, சோகம். இதைப் போல பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் பேசாமலே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் இதயத்திலிருந்து சிரிப்பைக் கொண்டு வருவது மிகப் பெரிய சாதனையாக நான் நினைக்கிறேன். என்று சோமாலி நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். 'The Road of Lost Innocence' என்ற புத்தகத்தில் தன் வாழ்க்கை வரலாற்றோடு கம்போடிய நாட்டு அடிமைகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.
சோமாலி தனது பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் அவரது மிகப்பெரும் சாதனை ஒரு அடிமையான தன்னை மீட்டெடுத்து அதே போல பாதிக்கப்பட்ட பலரையும் மீட்டெடுத்து வருவதுதான்.
சமூகத்தில் புரையோடிப் போன சில விஷயங்களை அழித்தெடுத்து புதிய மாற்றங்களையும், உரிமைகளையும் பெற போராடும் இவர்களைப் போன்றவர்களை பார்த்தாவது, படித்தாவது நமது செயல்பாட்டையும் சமூகத்தில் முன்னெடுத்தோம் எனில் அதுவே மனிதம் இன்னும் இருப்பதற்கான அடையாளமாகும்.
- இவள் பாரதி
நன்றி - தடாகம் இணைய இதழ்
இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..
அமைதி,அழகு,தனிமை